Tuesday, October 25, 2011

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்



எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.

ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.

நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்  மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.

ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.

பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.

ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;

கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்றடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகிறான்.

ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.

மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன.
ஆன்மீகக்கடலின் கருத்து:
இந்த கலியுகத்தில்,ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது.ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும்,தேவையில்லாமல் மிரட்டவுமே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால்,பல நூறுபிறவிகளில் பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே இந்த பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்;தாம்பத்தியம் இதற்குத் தடை அல்ல;
ஆனால்,ருத்ராட்ச மாலை அணிபவர்களுக்குத்தான் ஏராளமான சிவநெறிகள் பின்பற்ற வேண்டியிருக்கிறது.இதை பலர் புரிந்துகொள்வதில்லை;

ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. ருத்ராட்சம் பற்றி மிகவும் அற்புதமான கருத்துக்கள், நன்றி. ஒரு சந்தேகம் மாமிசம் உண்ணுபவர்கள்
    ருத்ராட்சம் அணியலாமா? எனது மகன் 19 வயது ருத்ராட்சம் கழுத்தில் அணிய விரும்புகிறார்?
    மாமிசம் உண்ணாத போது அணியலாமா? எத்தனை முகம் அணியலாம்? இங்கு இலங்கையில்
    5 முகம் கிடைக்கிறது.

    ReplyDelete
  2. மாமிசம் உண்பவர்கள் ருத்ராட்சம் அணிவது மகா பாவம்.பொதுவாக ஐந்துமுகம் அணிவது நன்று.ருத்ராட்சமாலை அணிவதற்குத் தான் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.ருத்ராட்சம் அணிந்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதைக் கைவிடுவது நல்லது.

    ReplyDelete
  3. ருத்ராட்சம் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், ஆன்மிககடல் வாசகர்களுக்கும்,
    எனதும் எனது குடும்பத்தார் சார்பிலும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete