Monday, January 30, 2017

ஈசன் அருளை விரைவாகத் தரும் பதிகம்!


திருவாரூர் தியாகராஜப் பெருமானை திருநாவுக்கரசர் இந்த பதிகம் பாடி அருள் பெற்றார்;இந்தப் பதிகத்தில் 108 முறை போற்றி வருவதால்,ஈசனின் அருள் கடாட்சம் நமக்கு விரைவில் கிடைக்கும் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக,பல லட்சம் சிவனடியார்களால் உணர்ந்த அனுபவ உண்மை!

திருச்சிற்றம்பலம்

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லல் அறுத்தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி
கொங்கு அலரும் நறும் கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி
ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக் குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழ விடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றி மேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி
இலை ஆர்ந்த மூவிலை வேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

பொன் இயலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படை உடையாய் போற்றி போற்றி
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
மறி ஏந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண் பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின் பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி
வெண்மதி அம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின் பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா நின் பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்பும் அவர்க்கு அரும் பொருளே போற்றி போற்றி
நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர் கோன் தோள் துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

பூ ஆர்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல் கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
பெண் உருவோடாண் உருவாய் நின்றாய் போற்றி
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
சிரம் நெறித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

திருச்சிற்றம்பலம்.




ஆரோக்கிய ஆன்மீகம் பகுதி 2


மனித இனம் நாகரீகமடைந்து 20,00,000 ஆண்டுகள் ஓடிவிட்டன;நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாம் வாழ்ந்து வரும் தகவல் தொழில் நுட்பக் காலத்தில் தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இப்படி அதிகரித்துக் கொண்டே செல்வதற்குக் காரணம்,மெக்காலே கல்வித் திட்டமும்;நமது பாரம்பரிய உணவுகளின் பெருமைகளை நாம் அறியாமல் இருப்பதுமே! இதற்குப் பின்னால் சர்வதேச உணவு அரசியல் இருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் ஏராளமான வெடிமருந்துகள் மீதம் இருந்தன;லட்சக்கணக்கான போர் வீரர்கள் படுகாயமடைந்திருந்தனர்;இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையே இன்றைய அலோபதி மருத்துவம்.இந்த மருத்துவமுறையானது இன்று விபத்துக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே அருமருந்தாக இருக்கிறது.


எந்த ஒரு நோயாக இருந்தாலும்,அந்த நோய்க்கிருமிகளை மேலும் வளரவிடாமல் செய்யும் விதமாகவே அலோபதி மருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன;அதேசமயம்,அந்த அலோபதிமருந்துகளால் நோய்கள் குணமடைவது மிகக் குறைவு;அப்படியே குணமானாலும் நோய்க்கிருமிகளை வெளியேற்றுவதில்லை;இதனால் தான் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன;


மனித உடலுக்கு ஒரு இயல்பு சுபாவம் உண்டு;எந்த ஒரு நோய் வந்தாலும் அதை நீக்கி,தன்னைத் தானே பாதுகாக்கும் சக்தி உண்டு;இந்த கருத்தின் அடிப்படையில் தோன்றியவையே நமது பாரம்பரிய மருத்துவமுறைகளாக ஆயுர்வேதம்,சித்தமருத்துவம்;இன்றும் ஆயுர்வேதமும்,சித்த மருத்துவமும் மனிதர்களை நோய்களில் இருந்து காப்பாற்றுவதோடு முழு ஆரோக்கியத்தையும் வழங்கிவருகிறது.

ஒரு நோய் வந்தால் அந்த நோயின் தீவிரத் தன்மையை அறிய நாடி பார்த்தப் பின்னரே உரிய மருந்துகளைத் தயார் செய்வது சித்த மருத்துவம்.பெரும்பாலான சித்த மருந்துகளை சாப்பிடும் காலங்களில் பத்தியம் இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் தான் சித்த மருந்து உடலில் செயல்பட்டு,நோயைக் குணப்படுத்தும்;பத்தியம் இருப்பதன் மூலமாக சித்த மருந்துகள் உடலுக்குள் செயல்பட நாம் வழிவகுக்கிறோம்.


ஆயுர்வேத மருத்துவமுறையில் அப்படி இல்லை;பத்தியம் இல்லாமலேயே மருந்து சாப்பிட்டு வந்தாலும் நோய்களைக்  குணப்படுத்திவிட முடியும்;
இயற்கை நலவாழ்வு மருத்துவமுறையில் அதுவும் இல்லை; உணவுகளை தினமும் முறையாகச் சாப்பிட்டு வந்தாலே முற்றிய நோய்களைக் கூட குணப்படுத்த முடியும்.சமைத்த உணவை விடவும் இயற்கை உணவு நமது உடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது;ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நோய்களை உடலில் இருந்தே வெளியேற்றுகிறது;உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது;

  இயற்கை நலவாழ்வு முறைகளை முறையாக பின்பற்றி குணமானவர்கள் நமது பாரத நாட்டில் ஏராளமானவர்கள் இன்றும்  வாழ்ந்து வருகிறார்கள்;இங்கிருந்து ஜெர்மனியில் குடியேறிய இந்தியர்களின் சைவ உணவுப்பழக்கத்தை அறிந்த ஜெர்மன்  ஆராய்ச்சியாளர்கள்  1987 முதல் 1997 வரை ஆய்வுகள் மேற்கொண்டனர்;அதன்படி வெஜ்ஜி க்யூர் என்ற மருத்துவமுறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்;அது நமது மருத்துவமுறையின் ஜெர்மன் வடிவம் ஆகும்;ஆதாரம்:கல்கண்டு பக்கம் 34,35;வெளியீடு 12.2.1998


வெஜ்ஜிக் க்யூரை ஜெர்மனியில் உள்ள பேராசிரியர் ரெச் ஹெம்மர் தலைமையிலான சத்துணவு ஆய்வு நிலையத்தினர் கார்ல்ஸ்ரு பகுதியில் இருந்தவாறு ஆராய்ந்து கண்டறிந்தனர்.காய்கறிகளிலும்,பழங்களிலும் மிக முக்கியமான பீட்டா கரோட்டினாய்ட்ஸ் என்னும் வண்ணப் பொருள் இருக்கிறது.இந்தப் பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாக உருமாறுகிறது என்பதை கண்டறிந்தனர்;இது உடலின் எந்தப்பாகத்திலும் இருக்கும்/உருவாகும் நோய்க்கிருமிகளைக்கண்டறிந்து வெளியேற்றுகிறது;இந்த மஞ்சள் நிறப் பொருள் காரட்,தக்காளி,மிளகு,பச்சைக்கீரை,முட்டைக்கோஸ்க் கீரை, போன்றவற்றில் நிறையக் காணப்படுகிறது.


இந்த உண்மையை நிரூபிக்க தினமும் இரண்டு கோப்பை தக்காளிச் சாறு அருந்தவைத்தார்கள்;இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்தது;காய்கறிகளை பச்சையாக அல்லது குறைவான அளவில் வேக வைத்துச் சாப்பிடுவதன் மூலமாக இந்த நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கிறது என்பதையும் கண்டார்கள்.


மறுபுறம் இரண்டாம் உலகப் போரில் மீந்து போன வெடிமருந்துகளை ரசாயன உரங்களாக மாற்றினர் ஐரோப்பிய நாட்டினர்.விவசாய நாடான நமது பாரத நாட்டிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர்;அந்தத் திட்டத்திற்குப் பெயர்தான் பசுமை புரட்சி.அதன் விளைவாக நமது நாட்டில் விவசாய உற்பத்தி அபரிதமாகப் பெருகினாலும்,அடுத்த 30 ஆண்டுகளில் பாரத நாட்டு ஆண்களின் ஆண்மைத் தன்மை குறையத் துவங்கியது;பெண்களின் தாய்ப்பாலில் கூட ரசாயன உரங்களின் தாக்கம் பலமடங்கு அதிகரித்து,தாய்ப்பால் கூட நஞ்சாகியது;


தற்போதுதான் இயற்கை விவசாயம் மெல்ல மெல்ல நமது நாட்டில் மீண்டும் உயிர்ப் பெறத் துவங்கியிருக்கிறது.வடகிழக்கு மாநிலங்களில் அரசாங்கமே இயற்கை விவசாயத்தை அங்கீகரிக்கத்  துவங்கியிருக்கிறது.பூடான் நாடும் இதை உணர்ந்திருக்கிறது.தமிழ்நாட்டில் கோ.நம்மாழ்வர் என்ற விவசாய சித்தர் இயற்கை விவசாயத்தின் அருமை பெருமைகளை பரப்பத் துவங்கி,நாம் ஒவ்வொருவருமே இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணரத் துவங்கியிருக்கிறோம்;ரசாயன உரங்களின் கொடூரங்களையும் புரியத் துவங்கியிருக்கிறோம்.கி.பி.1700 முதல் கி.பி.2014 வரையிலான கால கட்டத்தில் மட்டுமே நமது நாட்டின் பாரம்பரிய விவசாய முறையான இயற்கை விவசாயம் மேல்நாட்டு வியாபாரத் தரகர்களால் மறக்கடிக்கப்பட்டது;

எப்படி நமது ஆரோக்கியத்தைப் பராமரிப்பது?

நாம் சாப்பிடும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது?என்பதை உணர்ந்து கொண்டாலே நமது ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும்.
நாம் சாப்பிடும் உணவு பற்களால் நன்றாக அரைக்கப்படுவதன் மூலமாக வயிற்றில் சுலபமாக ஜீரணமாகிவிடும்;அள்ளி அள்ளிச்  சாப்பிட்டு பற்களால் அரைக்கப்படாத போது வயிற்றுக்கு அதிகமான வேலைப்பளுவை நாம் தருகிறோம்;நாம் சாப்பிடும் உணவானது சீரணிப்பதற்கு வாய் வழியாக இரைப்பைக்கு வருகிறது.இரைப்பையில் உள்ள ஹைட்ரோகுளோரிக் ஆசிட் அதை கூழாக்குகிறது;பிறகு,சிறுகுடலுக்கு அனுப்புகிறது;இரைப்பையில் கூழானப்பின்னரும் ஏதாவது ஒரு உணவுப்பொருள் சீரணமாகாமல் இருந்தால்,அதை சிறுகுடல் சீரணிக்கிறது.அவ்வாறு சீரணிக்க கணையம்,பித்தப்பை,கல்லீரல் உதவுகிறது.தினமும் குளித்து முடித்து குறைந்தது 30 நிமிடம் கழித்தே சாப்பிட வேண்டும்;அதே போல சாப்பிட்டு விட்டு குளிக்க விரும்பினால் இரண்டரை மணி நேரம் கடந்தப்  பின்னரே குளிக்க வேண்டும்;

ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது உணவுடன் உமிழ்நீர் கலக்க வேண்டும்;அப்படி கலந்து அதன் சுவையை நாம் உணர வேண்டும்;அப்படிச் சாப்பிட்டால் மட்டுமே தொண்டையில் இருக்கும் டான்சில் வேலை செய்யும்;உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் நமது நாடு முதலாளித்துவ நாடாக மாறிவருகிறது.இதன் தாக்கம் நமது ஒவ்வொரு வேளை உணவு உண்பதையும் பாதிக்கிறது;எனவே,நம்மில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு வேளை உணவையும் ‘வேகவேகமாக’ சாப்பிடுகிறோம்;இதனால் என்ன சுவையைச்  சாப்பிடுகிறோம்? என்பதை நாம் உணர்வதில்லை;நமது நாக்கும் அறிவதில்லை:இந்தப் பழக்கம் சில ஆண்டுகள் தொடர்ந்தாலே டான்சில் செயலிழந்து விடுகிறது.பிறகு ஆங்கில மருத்துவர் ஆலோசனைப்படி டான்சில்லை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கிவிடுகிறோம்;வெகுவேகமாக செத்தும் போகிறோம்;ருசியறியாமல்!

நாம் உண்ணும் உணவை நாக்கு,இரைப்பை,சிறுகுடல் இம்மூன்றுமே ‘சக்தி’யாக மாற்றுகிறது.70 நாட்களுக்கு முன்பு நாம் சாப்பிட்ட உணவு, 7 விதமான தாது நிலைகளாக உருமாறி,உருமாறி இன்று சுக்கிலமாக(ஆண்களுக்கும்)வும்,சுரோணிதமா(பெண்களுக்கும்)வும் மாறுகிறது.இவற்றின் கெட்டித்தன்மை மற்றும் துடிப்புத் தன்மையே நம்மை ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஆறு விஷயங்களில் கவனிக்கும் திறனைத் தருகிறது.உடலின் நோய் எதிர்ப்புத் திறனாகச்  செயல்படுகிறது.திடீர் அதிர்ச்சிகரமான சம்பவங்களின் போது தாக்குப்பிடிக்கும் திறனாக வெளிப்படுகிறது.உடலின் இளமைத் தன்மை,கவர்ச்சி,வசீகரிக்கும் காந்தசக்தியாக இயங்குகிறது.பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நமது உடலில் உருவாகும் இயல்பான “ரொமான்டிக்” உணர்ச்சிக்கு தாம்பத்தியம் மட்டுமே தீனியாக இருக்கிறது.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் நம் நாடு முழுக்க பரவிவிட்ட “டிஸ்பிளே மோகினி” 18 வயது முதல்  58 வயது வரை படிப்படியாக வாழ்ந்து அனுபவிக்க வேண்டியதை ஒரே ஆண்டில் ஆடித் தீர்ப்பதால் 21 வயதிற்குள்ளாகவே “தேஜஸ்”ஸை இழந்துவிடுகிறோம்;ஆரோக்கியத்தை நாமே சீரழித்தும் கொள்கிறோம்.


வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி    அருளுடன்!!!


ஆரோக்கிய ஆன்மீகம் பகுதி 1


நாம் வாழும் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;செவ்வாய்க்கிரகத்திற்குக் கூட விண்கலம் அனுப்புமளவுக்கு முன்னேறிவிட்டோம்;இருந்தும் கூட நாம் ஏன் இன்னும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்?
நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் செல்போன் இல்லை;டிவி இல்லை;இணையம் இல்லை;மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இல்லை;காது மூக்கு தொண்டைக்கு என்று நமது உடல் உறுப்புக்களுக்கு என்று தனித்தனி மருத்துவர்களோ,தனித்தனி மருத்துவப் படிப்போ இல்லை;இருந்தும் கூட நமது தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்து வந்தவர்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார்கள்;நாமோ நாற்பது ஆண்டுகள் வரை நோய் நொடி இன்றி வாழமுடியாமல் தவிக்கிறோமே ஏன்?

இதற்கான முழுக்காரணங்களையும் நாம் இந்தத் தொடரில் உணரப் போகிறோம்?


நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உண்டார்கள்;காலையில் நீராகாரம் அருந்திவிட்டு விவசாய வேலைக்குச் செல்வர்;காலை 11 மணி முதல் 1 மணிக்குள் காலை உணவும்,மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இரவு உணவும் சாப்பிடுவதோடு சரி;இடையிடையே ஆரோக்கியம் தரும் இயற்கை தின்பண்டங்கள் சாப்பிடுவதும் உண்டு;இவர்கள் சாப்பிட்டதில் தற்போது மிஞ்சியிருப்பது இளநீரும்,தேங்காயும் மட்டுமே.மாற்றம் என்பதே நிலையானது;என்ற பழமொழியை நாம் படிப்படியாகவா அனுபவிக்கிறோம்?

இயற்கை நலவாழ்வு விழிப்புணர்வாளர்கள் சொல்லும் ஆரோக்கியக் கருத்துக்களை கவனிக்கும் போது நமது சமகாலத்தவர்களுக்கு நோய்கள் வருவதற்குக் காரணகர்த்தா கருமவினை அல்ல;கவனக்குறைவும்,நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவமுமே!


அந்த ஆடிட்டருக்கு வயது 41 தான்;பசித்தால் என்ன சாப்பிடுவார் தெரியுமா? ஹால்ஸ் ஐ மெல்லுவார்;வேறு எதையும் சாப்பிட மாட்டார்;இரவில் மட்டும் இரண்டு பரோட்டா சாப்பிடுவார்;அதையும் முழுசாக அல்ல;சந்தோஷமாக இருந்தால் ஒரு புரோட்டா அல்லது அதில் பாதிதான்;எப்போதும் வேலை;வேலை;வேலை தான்;வெறும் ஒன்பது ஆண்டுகளில் சில பத்து லட்சங்கள் சம்பாதித்தார்;ஆனால்,உணவு மண்டலம் கெட்டுப்போய் 240 நாட்களாக ஐ.சி.யூவில் இருக்கிறார்;


இன்னொருவர் நமது தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்;காலை உணவு இரண்டு டீ,மதிய உணவு கொஞ்சம் பிஸ்ஸா;இரவு உணவு மதுபானம்;இந்தப் பழக்கத்தால் இன்று இவர் இல்லை;இந்தப் பழக்கம் இவரை 21 வயதில் தொற்றியது;31 வது வயதைத் தொடவில்லை;


இவர்களைப் போல் ஏராளமானவர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்;ஒடி ஒடி உழைத்து,மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கட்டணத்தை 20 அல்லது 30 ஆண்டுகளில் சம்பாதிக்கிறார்கள்;இதைப் போன்ற நிலை இனி ஒருபோதும் நம்மவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தொடர்.


ஒருபோதும் சாப்பிடும் போது பேசக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக் கூடாது;சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தக் கூடாது;சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது அவசர அவசரமாக உணவை அள்ளி வாய்க்குள் போட்டு விழுங்கக் கூடாது;காலை உணவு சாப்பிட்டுவிட்டு,மதிய உணவு நேரம் வந்ததும் சாப்பிடக் கூடாது;மதிய உணவு நேரம் வந்தாலும்,பசித்தால் மட்டுமே அடுத்தவேளை உணவைச் சாப்பிட வேண்டும்; எப்போதும் எதையாவது மென்று கொண்டே இருக்கக் கூடாது.


இவைகளையெல்லாம் ஏன் செய்யக் கூடாது?


நமது உணவு மண்டலம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால் மேலே சொல்லப்பட்டிருக்கும் “கூடாது”களை விடாப்பிடியாக பின்பற்றத்துவங்குவோம்;

நாம் சாப்பிடும் பழங்கள் அல்லது அது சார்ந்த உணவுகளை நமது உணவு மண்டலம் இரண்டு மணி நேரத்தில் சீரணிக்கிறது;

சைவ உணவு சாப்பிட்டால் அது சீரணமாக மூன்று மணி ஆகிறது. அசைவ உணவு சாப்பிட்டால் அதை உணவு மண்டலம் சீரணிக்க ஐந்து மணி நேரம் எடுத்துக் கொள்கிறது;

நாம் சாப்பிடும் உணவை சீரணிப்பதற்காகவே வயிற்றில் ஹைட் ரோ குளோரிக் அமிலம் சுரந்து காத்துக் கொண்டிருக்கிறது;இந்த அமிலமானது நமது வயிற்றைத் தவிர வேறு எந்த இடத்தில் பட்டாலும் அந்த இடத்தையே ஓட்டை போட்டுவிடும்;

தினமும் நாம் தாமதமாகவே தூங்கப் போகிறோம்;அதனால் தாமதமாக தூங்கி எழுகிறோம்;காலைக் கடமைகளை முடித்துவிட்டு வீட்டைவிட்டுப் புறப்படும் போது நேரமாகிவிட்டதே என்று நாம் தவிர்ப்பது காலை உணவு உண்பதை! சில மாதங்கள் தொடர்ந்து இப்படி காலை உணவு சாப்பிடாமல் இருப்பதால் வயிற்றில் சீரணத்திற்காக காத்திருக்கும் ஹைட் ரோகுளோரிக் அமிலம் தனது வேலையைச் செய்யமுடியாமல் “ஆவி”யாகிவிடுகிறது;அப்படி ஆவியாவதால் தான் நமது வயிறு தொப்பையாகிறது;தொந்தி மரணத்தின் தந்தி என்ற பழமொழியை இப்போதாவது உணருவோமா?

வருடக்கணக்கில் காலை உணவு உண்பதைத் தவிர்த்தவர்களுக்கு அது அல்சராக வடிவம் எடுத்து,குடலை அரித்துவிடுகிறது;நேரமின்மையைத் தவிர்க்க நாம் காலையில் எளிய உணவுகளை உண்ணலாம்;பழங்கள்,தேங்காய்ச்சில்,பழச்சாறுகள்(இதில் ஐஸ் கலக்காமல் இருப்பது அவசியம்),வேர்க்கடலை,உண்ணக்கூடிய காய்கள்,பச்சைக் காய்கறிகள்,ஒருபோதும் டீ,காபி,குளிர்பானங்களை காலை உணவாக சாப்பிடக் கூடாது.


சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதாலும்,சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவதாலும் உணவை சீரணிக்கக் காத்திருக்கும் அமிலம் நீர்த்துப் போகிறது;இதனால் சீரணம் சிலருக்குத் தாமதமாகிறது;பலருக்கு சீரணமே ஆவதில்லை;

மதிய உணவு நேரத்தில் புளித்த ஏப்பம் வருகிறது;புளித்த ஏப்பம் வந்தால் மதிய உணவை(அடுத்த வேளை உணவை) தவிர்ப்பது அவசியம்; ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டப் பின்னர் சரியாக 30 நிமிடம் கழித்தப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும்;

சாப்பிடும் போது டிவி பார்த்தால் நமது மனமும்,உடலும் உணவின் மீது கவனம் இராது;சாப்பிடும் போது இயங்க வேண்டிய சுரப்பிகள் இயங்காமல் போய்விடும்;நமது உடலில் 112 ஹார்மோன் சுரப்பு மையங்கள் இயங்குகின்றன;டிவியில் அழுகைக் காட்சி வந்தால் அதற்குரிய சுரப்பிகள் இயங்கும்;சிரிப்புக் காட்சிகள் ஒளிபரப்பானால் உரிய சுரப்பிகள் செயல்படும்;

அதிர்ச்சிகரமான காட்சிகள் தெரிந்தால் தற்காப்பு சுரப்பிகள் சுரக்கும்;ஆனால்,ஒருபோதும் ஜீரணத்துக்குரிய சுரப்பிகள் செயல்படாது;சாப்பிடும் போது செல்போனை அணைத்து வைப்பது பிரான்ஸ் நாட்டினரின் வழக்கம்;ஏன் எனில்,சாப்பிடும் போது பேசினால் உமிழ்நீர் உணவுடன் கலக்காமல் போய்விடும்;இவை அனைத்தையும் நாம் நாகரீக முன்னேற்றம் என்று நாம் நம்புகிறோம்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ





   


அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் முறைகளில் ஒன்று!


எந்த ஊரில் இருந்து அண்ணாமலைக்கு வந்தாலும்,அண்ணாமலையில் தங்கி குளிக்க வேண்டும்;ஏனெனில்,அப்படிக் குளித்தால் தான் சோணாநதியில் நீராடிய பலன் கிட்டும்;அண்ணாமலை இருக்கும் திரு அண்ணாமலை நகரின் தரைக்கு அடியில் சோணா நதி ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த தண்ணீரில் நமது உடல் முழுமையாக நனைக்கப்படவேண்டும்;அப்படி நனைக்கப்பட்டதும்,பல பிறவிகளாக சேமித்திருந்த கர்மவினைகள் கரையத் தயார் ஆகிவிட்டது(இளக்கம் என்பார்களே,அதுதான்!)


பிறகு,மஞ்சள் நிற ஆடை(பெண்கள் எனில் சேலை/சுடிதார்,ஆண்கள் எனில் மஞ்சள் வேட்டி;ஆண்கள் மேலாடை அணியக்கூடாது)அணிந்து கொண்டு,இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சம் வைத்துக் கொண்டு,கிரிவலம் புறப்பட வேண்டும்;ஒவ்வொரு லிங்கத்தின் வாசலை அடையும் போதும் இந்த ருத்ராட்சங்களை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டு லிங்கதரிசனம் செய்ய வேண்டும்;இடுப்பில் ஒரு மஞ்சள் துண்டு கட்டிக் கொண்டு,அந்த துண்டுக்குள் குறைந்தது மூன்று எலுமிச்சைம்பழங்கள் இருக்க வேண்டும்;


இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இரண்டு தேங்காய்களை சிதறு தேங்காயாக எறிய வேண்டும்;பிறகு,ஓம் ஸ்ரீமஹா கணபதி நமஹ என்று மனதுக்குள் சில நிமிடங்கள் வரை ஜபித்துவிட்டு,சிறப்பாக இந்த அண்ணாமலை கிரிவலம் நிறைவடைய அருள்வீராக! என்று அவரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்;


அங்கிருந்து புறப்பட்டு,தேரடி முனீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும்;அவரிடம், “அண்ணாமலை கிரிவலம் செல்லப் போகிறோம்;தாங்கள் வழித்துணைக்கு வாருங்கள் எங்கள் முனீஸ்வரா”  என்று வேண்டிட வேண்டும்;முனீஸ்வரர் என்பவர் காலபைரவப் பெருமானின் ஒரு வடிவமே!


அங்கிருந்து சிறிது தூரம் நடந்தாலே கிழக்கு கோபுரவாசலுக்கு எதிரான சாலை வந்துவிடும்;அந்த சாலை வடக்குத் தெற்காக செல்கிறது;கிழக்கு கோபுர வாசலுக்கு நேராக சாலையில் இருந்தவாறே அண்ணாமலையாரை நினைத்துக் கொண்டு,நமது கோரிக்கைகளை எண்ணி வேண்டிக் கொள்ள வேண்டும்;இங்கே நாம் எதை நினைத்து வேண்டுகிறோமோ,அந்த கோரிக்கையை கிரிவலபுண்ணியம் நிறைவேற்றும்;கடந்த 11 ஆண்டுகளில் உணர்ந்த அண்ணாமலை ரகசியம் இது!!!


இங்கிருந்துதான் கிரிவலம் துவங்குகிறது;

மிகச் சிறந்த கிரிவல மந்திரம்: ஓம்சிவசிவஓம்

வேறு சில சிவ மந்திரங்கள்:ஓம் அருணாச்சலாய நமஹ(ஒருமுறை அருணாச்சலாய நமஹ என்று சொன்னால் 3,00,00,000 தடவை ஓம் நமசிவாய சொன்னதற்குச் சமம் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது)

ஓம் ரீங் அருணகிரி அருணகிரி

ஓம் ரீங் அண்ணாமலை அண்ணாமலை

அண்ணாமலையானே போற்றி

மிக மெதுவாக கிரிவலம் செல்லத் துவங்க வேண்டும்;சிறிது தூரத்திலேயே இந்திர லிங்கம் வந்துவிடும்;

அடுத்து அக்னிலிங்கம் வரும்;அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,ஊரின் எல்லை ஆரம்பமாகிவிடும்;வனப்பகுதி ஆரம்பமாகிவிடும்;100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இப்போது அண்ணாமலை கிரிவலப்பாதை கடினமாக இல்லை;தார்ச்சாலையில் தான் நாம் கிரிவலம் செல்கிறோம்;
அடுத்து எமலிங்கம் வரும்;பூமியில் எவரது ஆயுள் முடிந்தாலும்,அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரிக்க எம லோகத்தில் இருந்து எமதூதர்கள் இங்கே வந்து இறங்குவர்;இறங்கி,எமலிங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கியப் பின்னரே,பூமியில் அந்த மனிதனின் இருப்பிடம் நோக்கிச் செல்வர்;இதை அகத்திய மகரிஷி விவரித்திருக்கிறார்;

அடுத்து நிருதிலிங்கம் வரும்;அடுத்தபடியாக அடி அண்ணாமலை எனப்படும் பாதி தூரம் கடந்தமைக்கான ஆலயங்கள் வரும்;பிறகு,வாயுலிங்கம்,சூரியலிங்கம்,சந்திரலிங்கம்,
குபேரலிங்கம் வரும்;
அடுத்தடுத்ததாக லிங்கங்களை வழிபட்டு இறுதியில் ஈசானலிங்கம் வரும்;அங்கிருந்து ஒரு கி.மீ.தொலைவில் திருஅண்ணாமலையின் பேருந்து நிலையம் வரும்;அதையும் கடந்து சென்று,பூதநாராயணப் பெருமாள் கோவிலைச் சென்றடைய வேண்டும்;இதுதான் கிரிவலம் நிறைவடையும் இடம்;


கிரிவலப் பாதை முழுவதும் ஒரு போதும் பேசாமல் சிவ மந்திரம் ஜபித்தவாறு செல்ல வேண்டும்;தேவைப்படும் போது தண்ணீர்,குளிர்பானம்,சுடுபானங்கள் அருந்தலாம்;


உள்ளங்கையில் ஐந்து முக ருத்ராட்சங்கள் வைத்துக் கொண்டு சிவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்;சிலருக்கு ருத்ராட்சம் மீனைப் போல துடிக்கும்;அவர்கள் ஜபிக்கும் மந்திரம் ருத்ராட்சத்தில் பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே அடையாளம்;இவையெல்லாம் உணரவேண்டியவை;பெருமையாக இதையும் பிறரிடம் சொல்லி தன்னைப் பற்றி உயர்வாக நினைப்பதற்காக வெளிப்படுத்துவது தவறு;


கிரிவலம் நிறைவடைந்ததும்,தங்கியிருக்கும் இடத்தைச் சென்றடைந்துவிட்டு,வழக்கமான ஆடையை அணிந்து கொண்டு,மூன்று எலுமிச்சைபழங்களை வீட்டுக்கு கொண்டு சென்றுவிடவேண்டும்;வீட்டில் இருக்கும் அனைவரும் அதை பிழிந்து சாப்பிட்டால்,அண்ணாமலையாரின் அருள் கிட்டும்;
ஒருவர் இடுப்பில் மஞ்சள் துண்டுக்குள் எலுமிச்சை பழங்களை வைத்துக் கொண்டு சிவ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்வதால்,அந்த மந்திரம் அந்த எலுமிச்சை பழங்களில் அந்த சிவமந்திர ஜபம் பதிவாகி,நிறைந்துவிடும்;ஆமாம்!

எலுமிச்சைபழத்தில் இருக்கும் சாறு முழுவதும் சிவமந்திரமும்,அண்ணாமலையின் கதிர்வீச்சும் நிரம்பியிருக்கும்;
கிரிவலம் நிறைவடையும் நேரம் நள்ளிரவு எனில்,அண்ணாமலையாரை தரிசிக்காமலேயே வீடு திரும்பலாம்;


கிரிவலம் நிறைவடையும் நேரம் கோவில் திறந்திருக்கும் நேரம் எனில்,அண்ணாமலையார்+உண்ணாமுலையம்மனை தரிசித்துவிட்டு வீடு திரும்பலாம்;

அண்ணாமலை புராணத்தில் கூறப்பட்டிருப்பது என்னவெனில்,கிரிவலம் முடித்துவிட்டு கோவிலுக்குள் சென்று தரிசிக்காமலேயே கூட வீடு திரும்பலாம் என்பதுதான்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் நன்றியுணர்ச்சி,பக்தி உணர்ச்சி,பாச உணர்ச்சி,விசுவாச உணர்ச்சி,பொறுப்பு உணர்ச்சி,தேசபக்தி உணர்ச்சி,தெய்வபக்தி உணர்ச்சி போன்றவைகள் குறைந்து கொண்டே வருகின்றன;(மிஞ்சியிருப்பது காம உணர்ச்சி மட்டுமே! அதைப் போய் காதல் உணர்ச்சி என்று பலர் நினைக்கின்றனர்)

தற்போது கிரிவலப்பாதை 14 கி.மீ.தூரமாக இருக்கின்றது;200 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதை 54 கி.மீ.தூரமாக இருந்தது;1000 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதை 300 கி.மீ.தூரமாக இருந்தது;
கிரிவலம் ஆரம்பித்தது முதல் நிறைவடையும் வரை எங்கும் அமராமல் கிரிவலம் வரவேண்டும்;கிரிவலப்பாதை முழுவதும் எக்காரணம் கொண்டும் பேசக் கூடாது என்பதும்,கிரிவலம் நிறைவடையும் வரையிலும் எதுவும் சாப்பிடக்கூடாது;தண்ணீர் மட்டும் அருந்தலாம் என்று விதிகள் இருந்தன;தற்காலத்தில் இவைகள் அனைத்தையும் அப்படியே பின்பற்றுவது கடினம்;


எந்த ஒரு பக்தி உணர்ச்சியும் இல்லாமலேயே அண்ணாமலை கிரிவலம் சென்றால் நமது அனைத்து முற்பிறப்பு கர்மாக்கள் கரைந்து காணாமல் போய்விடும்;


நம்மில் பலர் எந்த பிக்கல்,பிடுங்கலும் வேண்டாம்;நிம்மதியாக,கடன் இன்றி,நோய் இன்றி,மாந்தீரீகத் தொல்லையின்றி,வேதனை இன்றி வாழ்ந்தால் போதும் என்பதையே விரும்புகின்றனர்;அவர்களின் விருப்பம் நிறைவேற அண்ணாமலை கிரிவலமே எளிமையானது;


ஓம் அருணாச்சலாய நமஹ

சர்ப்பதோஷம் நீங்கிட பாடவேண்டிய பதிகம்!

தினமும் ஒருமுறை பாடினால் போதும்;வீட்டில் ஜபிப்பது நன்று;அருகிலுள்ள சிவாலயத்தில் ஜபிப்பது மிக நன்று;

திருவாழ்கொளிபுத்தூர் 

தக்கேசி

திருச்சிற்றம்பலம்
1 தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை நினைக்கத் தருவானை,
கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த(க்) குரை சேர் கழலானை,
அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடிநாயேன்-
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

2 படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை, காமன் ஆகம்தனைக் கட்டு அழித்தானை,
சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை, தண்ணீர்மண்ணிக் கரையானை, தக்கானை,
மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, -மறந்து என் நினைக்கேனே? .
3 வெந்த நீறு மெய் பூச வல்லானை, வேத மால்விடை ஏற வல்லானை,
அந்தம் ஆதி(ய்) அறிதற்கு அரியானை, ஆறு அலைத்த(ச்) சடையானை, அம்மானை,
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை, தேவதேவன், என் சொல் முனியாதே
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
4 தடங்கையால் மலர் தூய்த் தொழுவாரைத் தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை,
படம் கொள் நாகம்(ம்) அரை ஆர்த்து உகந்தானை, பல் இல் வெள்ளைத் தலை ஊண் உடையானை,
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை, நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை,
மடந்தை பாகனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
5 வளைக்கை முன்கை மலை மங்கை மணாளன்; மாரனார் உடல் நீறு எழச் செற்று,
துளைத்த அங்கத்தொடு மலர்க் கொன்றை தோலும் நாலும் துதைந்த(வ்) வரை மார்பன்;
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை; வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை; மறந்து என் நினைக்கேனே? .
6 திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை,
உருவினானை, ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை, விசயற்கு அருள் செய்வான்
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவினான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
7 எந்தையை, எந்தை தந்தை பிரானை, ஏதம் ஆய(வ்) இடர் தீர்க்க வல்லானை,
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை, முதல் காண்பு அரியானை,
கந்தின் மிக்க(க்) கரியின் மருப்போடு, கார் அகில், கவரி(ம்)மயிர், மண்ணி
வந்து வந்து இழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?
8 தேனை ஆடிய கொன்றையினானை, தேவர் கைதொழும் தேவர் பிரானை,
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை, ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானை,
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய
வானநாடனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
9 காளை ஆகி வரை எடுத்தான் தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம்
மூளை போத, ஒருவிரல் வைத்த மூர்த்தியை, முதல் காண்பு அரியானை,
பாளை தெங்கு பழம் விழ மண்டி, செங்கண் மேதிகள் சேடு எறிந்து, எங்கும்
வாளை பாய் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
10 திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும் தெரிதற்கு அரியானை,
பொருந்த மால்விடை ஏற வல்லானை, பூதிப்பை புலித்தோல் உடையானை,
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன், ஆர் உயிர்க்கு எல்லாம்
மருந்து அனான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
11 மெய்யனை, மெய்யில் நின்று உணர்வானை, மெய் இலாதவர் தங்களுக்கு எல்லாம்
பொய்யனை, புரம் மூன்று எரித்தானை, புனிதனை, புலித்தோல் உடையானை,
செய்யனை, வெளிய(த்) திருநீற்றில்-திகழும் மேனியன், மான்மறி ஏந்தும்
மை கொள் கண்டனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
12 “வளம் கிளர் பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன்?” என்று
உளம் குளிர் தமிழ், ஊரன்-வன்தொண்டன், சடையன் காதலன், வனப்பகை அப்பன்,
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன், நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம், செய்த பாவங்கள் தானே .
திருச்சிற்றம்பலம்

கால்நடைகள் வளம் பெற தினமும் விவசாயிகளும்,இயற்கை ஆர்வலர்களும் பாடவேண்டிய பதிகம்

திருவான்மியூர் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

1. விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

2. இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்!
கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
3. கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!
மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா!—உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
4. பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே!
மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!
தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்
அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
5. கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில்
சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
6. நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்;
ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்
ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
7. வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
8. பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும்,
நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே!
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
9. குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்!
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
10. கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.

திருச்சிற்றம்பலம்

Saturday, January 21, 2017

அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்


மனிதர்களாகிய நாம் செய்யும் செயல்களை எட்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டு செயல்களை மையமாகக் கொண்டே மாந்திரீகம் உருவானது;மாந்திரீகத்திற்கு அஷ்டகர்மா என்று பெயர்;இந்த அஷ்டகர்மாக்களை இயக்குவது அஷ்ட பைரவப் பெருமான் களே! இந்த எட்டு செயல்களைக் கொண்டு 64 விதமான பாவச் செயல்களைச் செய்ய முடியும்;அதனால்,அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவரும் அஷ்டாஷ்ட வடிவங்கள் எடுத்து 64 பேர்களாக தோன்றினர்;இந்த 64 பைரவர்களுக்கும் 64 தெய்வீக பெண் சக்திகள் துணை புரிகின்றனர்;இந்த 64 பைரவ தம்பதிகளில் முதன்மையானவர் உன்மத்த பைரவர்;இவரது துணையே வராகி!


வராகியின் வடிவங்களும் 64 ஆக இருக்கின்றன;இந்த 64 வடிவங்களில் முதன்மையானவர்கள் எட்டு வராகிகளே! 

அஷ்டவராகிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்;

பஞ்சமீ

அன்னை அராசாலை என்ற வராகியைப் பற்றி வராகி கல்பம் என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது;நாத்திகப் பிரச்சாரம்,இந்தி எதிர்ப்பினால் தமிழுக்கும்,சமஸ்க்ருதத்திற்கும் இடையிலான 20,000 ஆண்டு மொழிபெயர்ப்பு தகர்ந்துவிட்டது;இதனால் பல அரிய நூல்கள் இன்று சமஸ்க்ருதத்திலேயே தங்கிவிட்டன;அண்டைமாநிலமான கேரளா கூட நம்மைவிட 120 ஆண்டுகள் முன்னேறிவிட்டது;ஆமாம்! ஏராளமான சமஸ்க்ருத நூல்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளனர்;


வராகி கல்பத்தில்,வராகியின் பெயர்களில் ஒன்று பஞ்சமீ ஆகும்;ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள் அன்னை வராகி;பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி,ஸ்திதி,சம்காரம்,திரோதானம்,அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமீ ஆகும்;சதாசிவனின் அனுக்கிரக சக்தியே மகாவராகி தத்துவம் ஆகும்;இதனால் தான் இவளுக்கு பஞ்சமீ என்ற பெயர் உண்டானது;


பஞ்சமீயை இரவு நேரம் வழிபடுவதே சிறப்பு;இரவு 11 மணி வரை வழிபட வேண்டும்;


வராகி என்ற வாராகி


சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் இம்மூன்று சமயங்களிலும் சிறப்பான இடத்தில் மக்களால் வழிபடப்படுவது வராகியைத்தான்! பரமரகசியமான இந்த வழிபாட்டுமுறையால் தான் இந்த பாரத தேசத்துடன் மோதவே மற்ற நாட்டினர் பயந்தனர்;இடையில் வந்த புறசமய தாக்குதல்களால் இந்த வராகி வழிபாடு அருகிவிட்டது;இப்போது மீண்டும் அன்னை வராகியின் அருள்பார்வை நமது தேசத்தின் மீது விழுந்திருக்கிறது;


மஞ்சள் பட்டாடை அணிவதை விரும்புபவள்;மோளமுகம் கொண்டவள்;இவளது திருப்பாதத்தில் நூபுரம் விளங்கும்;நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;சைவ சமய வாராகியின் திருக்கரங்களில் கலப்பை,முசலம்,வரதம்,அபயம் விளங்கும்;கருநிறத்திருமேனியைக் கொண்டவள்;


படைப்பின் ஆரம்பத்தில் நீரில் மூழ்கியை பூமியை வராக உருவம் ஏற்று மேலே கொண்டு வந்து பூமியைக் காத்த ஸ்ரீவராக மூர்த்தியின் உருவத்தை ஏற்று எதிரிகளைப் பொடியாக்கியவள்;
ஸ்ரீவராகி சக்தி வாய்ந்தவள்;ஒரு முகம்,இருகண்கள்,நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;கருநீல நிற ஆடையை விரும்பி அணிபவள்;கைகளில் கலப்பை,உலக்கை போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பாள்;மற்ற இருகரங்களில் அபய வரத முத்திரைகளைக் கொண்டிருப்பாள்;இவளின் தலையலங்காரம் கிரீட மகுடம் போன்று இருக்கும்;வராகச் சக்கரத்தின் மீது அமர்ந்து எழுந்தருளுவாள்;சிம்மவாகனத்திலும் வீற்றிருப்பாள்;


ஸ்ரீவராகி எலும்பின் தேவதை;இவள் கோபம் கொண்டால் நாட்டில் வாத,பித்த நோய்கள் அதிகமாகும்;
மயில் தோகையைக் கொண்டு ஸ்ரீவராகிக்கு விசிறி வேண்டிக் கொண்டு வெள்ளரிக்காயும்,முறுக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும்;அதன் பின் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;இவ்வாறு இவளை வேண்டினால் வளம் பல தருவாள்;


பக்தர்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் அள்ளித் தருவதில் வள்ளல்களின் தலைமைக் கடவுளாகவே திகழுகிறாள்;இவளது பக்தர்கள் பணத்திற்கு அடிமையாக மாட்டார்கள்;பொன்,பொருள் காட்டி இவர்களை ஏமாற்றிட முடியாது;ஆனால்,அன்புக்கு பணியக்கூடியவர்கள்;இவளது அடியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விளங்குவர்;துன்பம் இவர்கள் இருக்கும் திசையில் கூட எட்டிப்பார்க்காது;மனநோயாளிகள் கூட இவர்கள் இருக்கும் பக்கம் வரமாட்டார்கள்;


வராகி பக்தர்களுடன் அன்புடன்(நயவஞ்சகமின்றி) பழகுபவர்களுக்கு மனத் தெளிவும்,வீட்டில் மகிழ்ச்சியும் ஏற்படும்;


ப்ரத்யட்ச வாராகி


கண்முன்னே தோன்றி அருள்புரிபவள் என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் ப்ரத்யட்ச வாராகி என்று அர்த்தம்;சில இடங்களில் இந்த அன்னை அருளாட்சி புரிந்துவருகிறாள்;யாராவது உங்கள் ஊரில் இந்த அன்னை இருந்தால் தெரிவிக்கவும்;தன் பக்தர்களின் மனக்குறையை உடனே போக்கும் அருட்குணம் உடையவள்;எல்லாவிதத் தடைகளையும் தகர்த்து நல்வழி காட்டுபவள்;இவளது சன்னதியில் தேங்காயில் நெய்விட்டு தீபம் ஏற்றுவது நல்லது;பஞ்சமி திதியன்று இவளுக்கு புது ஆடைகளை அணிவித்து,புது மலர்மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த அன்னையை தினமும் வழிபட முடியும்;அப்படி வழிபடுவது போல நடிப்பவர்களுக்கு இவளின் அருள் சிறிதும் கிட்டாது;


தண்டினி


ஸ்ரீவாராகிதேவி ஒரு திருக்கரத்தில் தண்டு ஏந்தி காட்சி தந்ததால் இவளை தண்டினி என்று அழைப்பது வழக்கம்;


அஸ்வாரூட வாராகி


இவள் அம்பிகையின் குதிரைப்படைத் தலைவியாவாள்;இவள் தனது திருக்கரங்களில் பாசம்,அங்குசம்,பிரம்பு ஆகியவைகளை ஏந்தி மிகவும் கம்பீரமாகக் குதிரை மீது அமர்ந்திருப்பாள்;இவளது குதிரையின் பெயர் அபராஜிதா ஆகும்;இவளை வணங்கினால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உருவாகும்;(ஆன்மீகத்தில் முன்னேற முதல் படியாக இருப்பது காம இச்சையே! இதைக் கடக்கவே பல பிறவிகள் எடுக்க வேண்டும்;இரண்டாவது தடையாக இருப்பது நான் என்ற அகங்காரம்;புராணங்கள்,கடவுள்களின் வரலாறு படித்தால் நெடுக அகங்காரத்தால் தான் பலர் சாபம் பெற்றிருப்பர்; அல்லது முறை தவறிய காம இச்சையால் சாபம் பெற்றிருப்பர்;நாம் தான் கர்ம உலகமாகிய பூமியில் வசிக்கிறோம் இல்லையா? இவளை வணங்கி,பிறப்பற்ற முக்தியைப் பெற்றுவிடுவோம்;)

சம்பத்கரி வாராகி

இவள் அம்பிகையின் யானைப்படையின் தலைவி! இவள் அங்குசத்தின் அதிஷ்டான தேவதை ஆவாள்;இந்த அங்குசத்தைத் தியானிப்பவர்கள் எதிரிகளை அடக்கும் வல்லமையைப் பெறுவார்கள்;

வாழ்க்கையில் மங்களமான இடத்தைப் பெற இவளை வழிபட வேண்டும்;இவளை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்;

தண்டினி வாராகி

அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் படைத்தலைவியாக இவள் விளங்குகிறாள்;இவள் ஆஷாட என்னும் ஆடி மாத நவராத்திரியில் வழிபடப்படுகிறாள்;தன் பக்தர்களின் எதிரிகளைத் தண்டித்து அடக்கும் சக்தி கொண்டவள்;எனவே தண்டினி எனப் பெயர் பெற்றவள்;இவள் எதிரிகளைத் தண்டிக்க பயன்படுத்தும் கருவியே தண்டம் ஆகும்;இவளுக்கு இன்னொரு பெயர் வார்த்தாளி!

சொப்பன வாராகி

கரிய நீல வண்ணத்திருமேனி உடையவள்;மூன்று கண்களும்,பன்றி முகமும் கொண்ட கன்னித்தாய்;சந்திரனைத் தலையில் சூடியிருப்பாள்;அழகிய குதிரை மீது அமர்ந்து பவனி வருவாள்;பிரபஞ்சம் எங்கும்!

நல்ல அழகும்,அருளும்,வெற்றியும் உடைய இந்த சிறப்பான பெண் தெய்வத்தை அளவற்ற புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வணங்கிட முடியும்;

சொப்பன வாராகி வழிபாட்டுமுறை மிகுந்த பாதுகாப்பானது;ஸ்ரீசொப்பன வாராகி நேரில் வரமாட்டாள்;நம் சொப்பனத்தில் வந்து நம் சந்தேகங்களுக்குப் பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பதில் இவளது தாய்மையை உணரலாம்;


வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!


அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற


ஆடியில் வரும் மஹாவராஹி நவராத்திரி



புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி



மாசியில் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி



பங்குனியில் வரும் லலிதா நவராத்திரி என்று ஒவ்வொரு ஆண்டும் நான்கு நவராத்திரி விரதத்தை யார் மேற்கொள்ளுகிறார்களோ,அவர்களுக்கே அன்னை அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்;


ஒரு தமிழ் வருடத்தில் நான்கே நான்கு நவராத்திரிகள் தான் இருக்கின்றன என்று எண்ணுவது தவறு;தமிழ் வருடங்கள் 60லும்,ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான நவராத்திரி விரதங்கள் இருக்கவேண்டும்;மொத்தம் 720 விதமான நவராத்திரி விரதங்கள் இருக்கின்றன;


தற்காலத்தில் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விரதத்தை மட்டுமே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்;

பூமியில் பிறக்கும் புல்,பூண்டு,பாக்டீரியா,வைரஸ்ஸில் இருந்து மனிதன் வரையிலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒன்பதுவிதமான உடல்கள் உண்டு;ஒன்பது சரீரங்களில் தான் நாம் மாறி மாறி உயிர் வாழ்ந்து வருகிறோம்;இதைக் குறிக்கும் விதமாகத்தான் நவராத்திரியில் ஒன்பதுவிதமான அலங்காரங்கள் அம்பிகைக்கு செய்து வழிபடுகிறோம்;


ஓம் அகத்தீசாய நமஹ

அரிய சிவலிங்க வழிபாடு!


பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்ய வேண்டும்;
இந்த சிவலிங்கத்தைக் கொண்டு பகலில் தினமும் பூஜை செய்ய வேண்டும்;
தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்து வர,சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;


2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பலாமரசிவலிங்கம் செய்யும் முறை உலகம் முழுக்கவும் இந்த அரிய சிவலிங்க வழிபாடு மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்தது;
1000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நமது பாரத நாடு முழுவதும் (காஷ்மீர் முதல் குமரிக்கண்டம் வரை;குஜராத் முதல் இன்றைய தாய்லாந்து வரை) இந்த அரிய சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது;
தற்போது கேரளமாநிலத்தில் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றது;


சிவமந்திர ஜபம் + அண்ணாமலை கிரிவலம் + அன்னதானம்+ ருத்ராட்ச தானம் = முக்திக்கு ஒரு சுலபவழியாக சித்தர் பெருமக்கள் உபதேசித்துள்ளனர்;

16,000 கோடி சிவ மந்திரங்கள் உள்ளன;ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை;


உதாரணமாக, 28 கோடி முறை சிவாய நம என்று ஜபித்துவிட்டு,செம்பைப்பார்த்தால்,அது தங்கமாக மாறிவிடும்;


1 கோடி முறை ஓம்சிவசிவஓம் என்று ஜபித்து முடித்தால்,ஜபித்து முடித்தவரை ஆசிர்வதிக்க 18 சித்தர்களும் ஒன்றாக வருவர் என்று நாடி கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;

சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உருவாகும்;யாரெல்லாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் ஜபித்தார்களோ,அவர்களே இப்பிறவியில் கைராசி டாக்டர்களாக வாழ்ந்து வருகின்றனர்;

சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,ஈசனே குருவாக அமைவார்;அப்படிப் பட்டவர்களே இன்று பழமையான சிவாலயத்தில் சிவாச்சாரியார்களாக இருக்கின்றனர்;

சில சிவமந்திரங்களை தொடர்ந்து(சில பல பிறவிகளாக) ஜபித்து வந்தால்,தமது 18 வயது முதல் வாழ்நாளின் கடைசி நாள் வரை அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவி(தலைமைச் செயலகத்தில் சாதாரண பதவியில் பணி சேர்ந்து,துறைச் செயலாளர் ஆன பின்னர்,பணி ஓய்வு வயதை அடைகின்றனர்)யில் பணிபுரிந்து வருகின்றனர்;

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;


ஓம் அருணாச்சலாய நமஹ