Wednesday, October 31, 2012

கலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தராக மாறிட அறிந்துகொள்ள வேண்டிய வித்தைகளும்!!!





துறந்திட்டார் உலகரென்று சித்தரெல்லாம்
  தோற்றாமல் உருமாற்றிக் கொண்டு போனார்
கறந்திட்டார் மதியமுர்தம் உண்ணவேண்டிக்
  கயிலையிலும் மலைதோறும் சமாதி சார்ந்தார்
 இறந்திட்டார் லோகத்தைச் சேர்ந்தோரெல்லாம்
  இறவாமல் வரைகோடி ஏறினார்கள்
பறந்திட்டார் இதையறிந்து ஞானம் பார்த்துப்
  பதிநில்லு அட்டகர்மப் பாசைகேளே
கருவூரார் பாடல் எண்;175


விளக்கம்: உலக மக்களின் இந் நிலையைக் கண்ட சித்தர்கள் எல்லாம் சூக்கும உடலை எடுத்துக்கொண்டு மதி அமுர்தம் உண்ணுவதற்குக் கயிலாசம் முதல் மலைகளிலும் சமாதி இருந்தார்கள்.உலக மாய்கையில் மூழ்கினவர்கள் இறந்து போனார்கள்.சித்தர்கள் இறக்காமல் மேல்நிலையை அடைந்தார்கள்.

உண்மை நிலையை அறிந்து ஞானத்தைப் பார்த்து ஓர் நிலையாய் நிற்பாயாக! அப்படி ஓர் நிலையாய் நிற்பதற்கு உதவும் அஷ்ட கர்ம வித்தைகளை நீ கற்றுக்கொள்வாயாக!அவைகளின் பெயர்கள்:வசியம்,மோகனம்,தம்பனம்,வித்வேதனம்,பேதனம்,    உச்சாடனம்,ஆகர்ஷணம்,மாரணம்.
நன்றி: கருவூரார் பலதிரட்டு,பக்கம் 79.


ஆன்மீகக் கடலின் கருத்து: கலியுகத்தில் ஜோதிடப்படி நான்கே நான்கு கிரகங்கள் கடுமையாக உழைத்து நம்மை இறைவனருளில்/ஆன்மீகமுயற்சியில்  ஈடுபடாமல் தடுக்கும்.அவை சனி,செவ்வாய்,இராகு,கேது.இருந்தபோதிலும்,யாருக்கு தகுந்த ஆன்மீக குரு அமைகிறார்களோ,அவர்களால் இந்த நவக்கிரகங்களின் செயல்பாடுகளையும் மீறி தம்மை சித்தராக்கிக்  கொள்ள முடியும்.


மேலே கூறப்பட்டுள்ள அஷ்டகர்மங்களையும் ஒரே பிறவியில்(நாம் வாழும் கலியுகத்தில்) தேர்ச்சி பெற முடியாது.ஏதாவது ஒரு கலையில் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.இந்த  அஷ்ட கர்மங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக நாம் சித்தராகலாம்;பணமும் சம்பாதிக்கலாம்;இன்றைக்கு ஜோதிட மாத இதழ்களை வாங்கி பார்த்தால் இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களே உங்களது பிரச்னைகளைத் தீர்க்கிறேன் என்று விளம்பரம் செய்திருப்பார்கள்.

இந்த அஷ்டகர்மாக்களையும் கற்க நமக்குத் தேவையான முதல் தகுதி:பூர்வ புண்ணியம்ஆகும்.இந்த பூர்வ புண்ணியத்தை ஒருவரது பிறந்த ஜாதகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


இரண்டாவது தகுதி:மனத்தைக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியம்.(இந்தத் தகுதியைப் பெற தினமும் ஒரு மணி நேரம் வீதம்  குறைந்தது 3 மூன்று ஆண்டுகளுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவது);


மூன்றாவது தகுதி: நமது பூர்வ கர்மவினைகளை இந்தப் பிறவியிலேயே கரைத்துவிட வேண்டும்.இது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஆகும்.இதற்கு குறைந்தது 60 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஏதாவது ஒரு ஸ்ரீசொர்ண பைரவர் சன்னதியில் இராகு காலத்தில் அவரை வழிபாடு செய்திருக்க வேண்டும்.அதுவும் பழமையான சன்னதியாக இருக்க வேண்டும்.


நான்காவது தகுதி: இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.ஏனெனில்,தமிழ்நாட்டில்  பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே! பக்கத்து மாநிலங்கள் அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட  இப்பேர்ப்பட்ட ஆன்மீகக் கருவூலங்கள் கிடைக்கவில்லை;வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத் தேடல் மிகக் குறைவே!
நாம் தமிழராகப்பிறந்து,சிந்திக்கும் திறன் நமது பருவ வயதில் உருவாகி,இணையம் என்னும் தொழில் நுட்பத்தை புரிந்து,ஆன்மீகக்கடலுக்குள் புகுந்ததால் இவ்வ்வளவு தெய்வீக ரகசியம் நம்மைத் தேடி வந்திருக்கிறது.இல்லையா?
ஓம்சிவசிவஓம்

கருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் மகிமை!!!




எதிரில்லா அஞ்செழுத்தும் அஞ்சுமுகமாக
  ஏகமாய் ஒரு நூற்று இருபத்தஞ்சாய்
எதிரில்லா விஞ்சையாய்க் கலைக்கியானமாகி
  இதமதிதம் இரண்டுக்கும் முன்னேயாகி
எதிரில்லாத் தோற்றுவித்து எழுவகையுமாகி
  எழுவகையின் தோற்றத்தில் லோகமாகி
எதிரில்லா மந்திரத்தின் மகிமைதன்னை
  எண்ணுகிறேன் ஒவ்வொன்று இருபத்தஞ்சே

கருவூராரின் பாடல் எண்:252
விளக்கம்: “நமச்சிவாய” என்ற ஐந்து எழுத்தை ஐந்து முகமாகப் பிரித்துப் பார்க்க இருபத்தைந்தாம்.இதை ஐந்து முகமாகப் பார்க்க(25 X 5) நூற்று இருபத்தைந்தாகும்.இதற்குச் சமமான மந்திரங்கள் இல்லை எனலாம்.

ஏழுவகைத் தோற்றமும்,ஏழு வகைத் தோற்றத்தில் உருவான  உலகமும் இதனுள் அடங்கும்.கலைக்கியானம் என்பதும் ஐந்தெழுத்தில் அடங்கும்.
அஞ்சுமுகம் ஒவ்வொன்றும் இருபத்தஞ்சும்
  அறுபத்து நாலுசித்தும் ஆடிநிற்கும்
பஞ்சமுக மாயிருந்த பூரணத்தைச் சேர்க்கும்
  பராபரனாம் வாழ்நாளும் ஆறுதலம்பாயும்
துஞ்சாது ஒருநாளும் வளர்ந்து தோன்றும்
  சுத்தருக்கு இந்தமுறை தொடர்ச்சியாகும்
பிஞ்சாகும் காயாகும் பூவுமாகும்
  பேசரிய பலகோடி அண்டமாமே
கருவூரார் பாடல் எண்:253
விளக்கம்:ஐந்து முகம் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து அட்சரமாகும்.(அட்சரம் என்றால் ஆதார எழுத்து என்று பெயர்).இதனால், அறுபத்து நான்கு சித்துக்களுமுண்டாகும்.இதுவே பூரணம் என்ற முழுமையை உண்டாக்கும்.பராபரனான வாழ்நாளில் ஆறுதலமும் பாயும்.ஒவ்வொரு நாளும் வளர்ச்சியே  அன்றிக் குறை வராது.

சுத்தமான மனது உடையவர்க்கு இந்த முறை நன்மையை அடையச் செய்யும்.பிஞ்சாகி,காயாகிப் பூவுமாகும்.பலகோடி அண்டத்திற்கும் மேலானது “நமச்சிவாய” என்ற ஐந்தெழுத்து.

ஆமப்பா அச்சரங்கள் அஞ்சுபின்னை
  அய்ம்பத்தோர் அட்சரமாய் விரிந்துநிற்கும்
ஓமப்பா ஒவ்வொன்றாய் வழுத்தவென்றால்
  உரையேது கரையேது உரைப்பராரோ
வேமப்பா கருவுடனே சேர்ந்துதானால்
  வேரேது தூறேது வெல்வாரேது
நாமப்பா அறிந்தமட்டுஞ் சொல்லோங்கேளு
  நாதாக்கள் தவறாமல் பார்த்திட்டாரே
கருவூரார் பாடல் எண்:254
விளக்கம்:ஐந்து எழுத்தே ஐம்பத்தோரு எழுத்தாக விரிந்து நிற்கும்.ஒவ்வொன்றாக விரித்துச் சொல்ல முடியாது.அதற்கு எல்லை என்பது இல்லை;கடைசிவரை சொல்பவர் யாருமில்லை.இவ்வாறான எழுத்தின் முறை,முறையான கருவுடன் சேர்ந்தால் அதற்கும் எல்லை என்பது இல்லை;யாரும் வெற்றி கொள்ள முடியாது.
நான் தெரிந்து கொண்டவரைச் சொல்லுகிறேன்.மேல்நிலையை அடைந்த நாதாக்கள் இவ்வாறான முறைகளைத் தவறாமல் பார்த்தார்கள்.
கலியுகம் பற்றி கருவூராரின் பாடல் இது;பாடல் எண்:174

காணிந்த கலியுகத்தின் மகிமை சொல்வோம்
  கற்றவரைத் தூஷணித்துத் தாந்தானென்று
பூணிந்த பெண்ணாசை வலையிற் சிக்கிப்
  புலையர் முதல் மறையோரைப் புணர்ச்சி செய்து
வீணென்ற ஆணவத்தால் கள்ளையுண்டு
  மேல்வரம்பு கீழ்வரம்பு இரண்டுமின்றி
நாணென்ற சொல்லத்துத் தெருக்கள் தோறும்
  நாதாந்தப் பொருளெல்லாந் துறந்திட்டாரே

விளக்கம்:கலியுகத்தின் மகிமைகளைக் கூறுகிறேன்.கற்று உணர்ந்த பெரியவரை மதிக்காமலும்,இகழ்வாய்ப் பேசியும்,தான் என்ற ஆணவம்,கர்வம் கொண்டு பெண் மோகம் என்னும் பெருவலையில் சிக்கிப் புணர்ச்சியில் ஈடுபட்டு,அறிவை மயக்கக்கூடிய கள்ளைக்  குடித்தும் மேல் நிலையை அடையாமலும்,கீழ்நிலை என்ற சாமானியனைப் போல் இல்லாமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் தெருவில் சுற்றித்திரிந்து உண்மைப்பொருளான நாதாந்தப் பொருளை இழந்தார்கள்.
ஓம் கருவூர் தேவாய நமஹ

பாடல் ஆதாரம்:நன்றிகள் கோடி=                    கருவூரார் பலதிரட்டு(கருத்துரையுடன்),
பதிப்பாசிரியர்: ஆர்.சி.மோகன்
வெளியீடு:தாமரை நூலகம்,7,என்.ஜி.ஓ.காலனி,
3 வது தெரு,வடபழனி,சென்னை-26.

நாம் நமது நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் நமது குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு தினமும் 108 வீதம் ஓம்நமச்சிவாய ஜபிக்க வேண்டும்.இளவயதான இப்போதே தினமும் 108 முறை ஓம்நமசிவாய ஜபித்துவந்தால்,ஒரு சில மாதங்களில் காட்டுக்குச் செல்லும் மனநிலைக்கு ஆளாகிவிடுவோம்.அப்பேர்ப்பட்ட ஓம்நமசிவாய மந்திரத்தை அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஜபிக்க நம்மை = நமது பிறவியை=நமது ஆத்மாவை இப்போதிருந்தே தயார் செய்ய வேண்டும்.அப்படித் தயார் செய்ய நாம் செய்ய வேண்டியது தினமும் குறைந்தது 108 முறை அதிகபட்சம் 1ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பது மட்டுமே!!!

சுமார் 10 வருடங்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் விடாமல்(சில பல காரணங்களால் விட்டு விட்டு ஜபித்தாலும்) ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,நமது ஜப எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துவிடும்.அப்படிக் கடந்து விட்டால்,18 சித்தர்களும் நம்மை நேரடியாக வந்து ஆசிர்வாதிப்பார்கள் என்பது நாடி ஜோதிடத்தில் கிடைத்த உண்மை ஆகும்.

                                                    ஒரு குடும்பஸ்தனை/இல்லத்தரசியை 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக வருகை தந்து ஆசி கொடுக்க அவன்/ள் தமது வாழ்நாளில் 1,00,00,000 ஒருகோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டுமாம்.

ஓம்சிவசிவஓம்

சிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக்குகிறது!!!



"நான் நல்லா சம்பாதிக்கிறேன்; ஒன்னுமே மிஞ்சமாட்டேங்குது...' என பலர் சொல்லக் கேட்டிருப்போம். இதற்கு காரணம், அவர்களிடம் சேமிப்பு பழக்கம் இல்லாததே. வருமானத்துக்கு ஏற்ப, செலவு செய்தால் இந்த பிரச்னையே இருக்காது.

1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், சிக்கன தினம் கொண்டாட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அக்.31ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
என்ன பயன்:


சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். இது, வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதையே குறிக்கும். அதாவது, அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது என அர்த்தம். சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழிலுக்கும் மூலதனம். 

நீங்கள் எவ்வகை:


செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களை குறிக்கும். இது வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சிக்கனம் என்பது, தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி. 

ஆடம்பரம் என்பது, வசதியானவன் என அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தும் தகுதியை மீறி செலவு செய்வது. நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது கண்மூடித்தனமாக, தேவையில்லாத செலவுகள் செய்வது. இது அழிவுப்பாதைக்குத் தான் அழைத்துச் செல்லும். 

என்ன செய்யலாம்:


சேமிப்பு பழக்கத்தை எறும்பு, தேனீக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள், பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும் போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே சிக்கனமாக இருப்பதில் பயன் இல்லை. அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான், சேமிப்பு உருவாகும். இன்று வரை, "சிக்கனம் என்றால் என்ன" என கேட்பவராக இருந்தாலும் பராவாயில்லை. உடனே சேமிக்க தொடங்குவோம். எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்போம். 

Monday, October 29, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்!!!




.விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில் அமைந்திருப்பது முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டித் தெரு.இந்த தெருவின் மையத்தில் நெசவாளர்களின் குடியிருப்புகள் புடைசூழ அமைந்திருக்கும் கோவிலே அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியன்று ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் கரண்டியே இல்லாமல் கையாலேயே அப்பங்களைச் சுடுவார்;அப்படிச் சுட்டு அவைகளை பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு,பிறகு அங்கே வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக விநியோகம் செய்வார்கள்.இது காலங்காலமாக நடைபெறும் ஒரு அதிசய நிகழ்வு ஆகும்.சுமார் 2000 குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருக்கும் பத்திரகாளியம்மனை மாதம் ஒரு பவுர்ணமி வீதம் 12 பவுர்ணமிகளுக்கு தொடர்ந்து வழிபட்டு வந்தால்,நமது கடுமையான சிக்கல்களும்,கஷ்டங்களும் விலகும் என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை ஆகும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பூஜை இரவு 10 மணிக்குத் துவங்கி 12 மணிக்கு நிறைவடைகிறது;பிறகு ஒரு மணி நேரத்துக்கு அன்னதானம் நடைபெற்றுவருகிறது.பூசாரியிடம் செல்லில் கேட்டுவிட்டு நீங்களும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளலாம்.கோவிலில் தங்கும் வசதி மட்டும் இருக்கிறது.


ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி சாலையில் ஒரு கி.மீ.தூரத்தில்  ஊருக்குள்ளேயே கோவில் அமைந்திருக்கிறது.பூசாரி சுந்தரமகாலிங்கத்தின் செல் எண்:9003353286.நேற்றுமுன் தினம் இரவு நேர பூஜையைக் காண இங்கே சொடுக்கவும்.
ஓம்சிவசிவஓம்

மகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற




எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த நன்னாளானது இந்த வருடம் 6.11.201நவம்பர்6,2012 செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கிறது.இந்த நன்னாளனது சக்தி வழிபாடு செய்பவர்களுக்கும்,முருகக் கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கும் ஒரு பொன்னான நாளாக அமைந்திருக்கிறது.இந்த நன்னாளில் நமது ஊரில் நவக்கிரகசன்னதியில்  இருக்கும் செவ்வாய் பகவானுக்கு மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிகப்புப்பட்டு அணிவிக்க வேண்டும்;செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;படையலாக எலுமிச்சை சாதத்தை சாம்பாருடன் கலந்து வைக்க வேண்டும்;குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.(சந்தர்ப்பம் இருந்தால் குடும்பத்தோடு சென்று இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்)
பிறகு,படையலை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு பாதியை விநியோகம் செய்ய வேண்டும்.மீதியை நமது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு செய்த ஓரிரு நாட்களில்/வாரங்களில் நமது சுபாவத்துக்கு ஏற்ற மகான் அல்லது சித்தரின் அருளாற்றல் நம்மை வந்து சேரும்.

ஓம்சிவசிவஓம்

சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்?


அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரணசக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு  உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

மழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்!
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய பொருட்களால் வழிபடுவது விசேஷம். சித்திரையில் மருக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசு நெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசு நெய் மற்றும் தாமரை தீபம், தை மாதத்தில் கருப்பஞ் சாறு, மார்கழியில் பசு நெய் மற்றும் நறுமண பன்னீர் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதேபோல், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்பார்கள். அதாவது, அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்றும் சொல்வது உண்டு.
சிவலிங்க பாணத்தின் நீள்வட்ட வடிவமானது, எல்லையற்ற ஒன்றைக் குறிக்கும். அதாவது, பிரபஞ்ச சக்தியை உணர்த்துவது. அரிசியின் வடிவமும் நீள்வட்டம்தான். ஆகாயத்தில் தோன்றும் காற்றின் துணையுடன் நெருப்பு எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. ஆக, அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாதவனை போதும் என்று சொல்ல வைப்பதும் அன்னம் மட்டுமே! ஆக, உன்னதமானவருக்கு உன்னதமானதைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைத் தருவது ஐப்பசி அன்னாபிஷேகம்.
அன்னாபிஷேக தினத்தில் ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடிலிங்க தரிசனத்துக்குச் சமம். அன்று லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னம் வீரியம் மிக்க கதிர்வீச்சு கொண்டதாக இருக்கும் என்பது ஐதீகம். அன்று, பாண லிங்கத்தின் மேலுள்ள அன்னம் தவிர்த்து, ஆவுடை மற்றும் பிரம்ம பாகத்தின் மேலுள்ள அன்னம், மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தயிர் கலந்து கொடுப்பதும் வழக்கத்தில் உண்டு. பிறகு, அந்தப் பிரசாதத்தில் ஒரு பாகம், அருகிலுள்ள திருக்குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்
யாவருக்கும்
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது.

Sunday, October 28, 2012

ஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!





அசுபதி நட்சத்திரம் வரும் நாளில் ரவி என்ற சூரியனும்,மதி என்ற சந்திரனும் 180 டிகிரியில் நிற்கும் நாளே ஐப்பசி மாதத்துபவுர்ணமி ஆகும்.ரவி துலாம் ராசியிலும்,மதி மேஷராசியிலும் நிற்கும் போது ஆத்மக் காரகனாகிய ரவியும்,மனக் காரகனாகிய மதியும் முழு பலம் பெறுகிறார்கள்.நமது பிறந்த ஜாதகப்படி,நமது ஆத்மாக்காரகன் நமது லக்னாதிபதியாக இருந்தாலும்,அந்த லக்னாதிபதிக்கு ஆத்ம பலத்தை வழங்குவது ரவி என்ற சூரியனே! நமது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடத்து கிரகமே நமது மனோபலத்தை(பூர்வ புண்ணியத்தால்) வழங்குகிறது;அந்த ஐந்தாமிடத்து அதிபதிக்கு மனசக்தியை வழங்குவது மதி என்ற சந்திரனே! எனவே,ரவியும்,மதியும் பலம் பெறுவது ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாளன்றுதான்!!!


ரவி என்ற சூரியனே நவக்கிரகங்களுக்கும் ஆத்ம சக்தியை ஒவ்வொரு நொடியும் அளித்து வருகிறார்.அதனால் தான் அவருக்கு ஆத்மாக் காரகன் என்று நாம் (ஜோதிடப்படி) அழைக்கிறோம்.ஆனால்,அந்த ஆத்மாக் காரகனுக்கே ஆத்ம சக்தியை வழங்குவது (ப்ராணதேவதையாக இருப்பவர்) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவர் ஆவார்.


இந்த ஐப்பசி மாதத்து பவுர்ணமியானது 28.10.12 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.04க்குத் துவங்கி,மறுநாள் 29.10.12 திங்கட்கிழமை நள்ளிரவு 1.32 வரை இருக்கிறது.ஆக,பலருக்கு எந்த நாள் பவுர்ணமி என்று குழப்பம் வருவதுண்டு;இரண்டு நாட்களிலும் பவுர்ணமியைக்கொண்டாடலாம்.


இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நேரங்கள் வருமாறு:29.10.12 திங்கட்கிழமை  காலை 8 முதல் 9 மணி வரை;மதியம் 3 முதல் 4 மணி வரை;இரவு 10 முதல் 12 மணி வரை;இதில் இரவு நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது மிகவும் நன்று.


ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை பல்வேறு காரணங்களால் இடையில் ஜபிக்க முடியாமல் கைவிட்டவர்கள்,இந்த நாளில் ஜபிக்கத் துவங்கலாம்;


புதிதாக ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்புபவர்கள் இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.


அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாளில் அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியத்தைத் தரும்;பலவிதமான பிரச்னைகளை இவ்வாறு அன்னதானம் செய்த ஓரிரு நாட்களிலேயே தீர்த்துவைத்துவிடும்.பழமையான சிவாலயங்களிலோ அல்லது பவுர்ணமி பூஜை நடைபெறும் அம்மன்கோவில்களிலோ அன்னதானம் செய்வது நன்று.


ஓம்சிவசிவஓம்

Friday, October 26, 2012

மது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு!!!







விளையாட்டுக்கு என்றோ,ஜாலிக்காக என்றோ,நண்பனுக்காக என்றோ டீன் ஏஜ் வயதில் ஆரம்பிக்கும் பீர் பழக்கம் சில வருடங்களில் பிராந்தி நிறைய குடித்தாலும் போதையில்லை;என்று பந்தா பண்ண வைக்கிறது;கூடவே,இரண்டு தலைமுறையை சீர்குலைக்கிறது;

மதுபான தயாரிப்பாளர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் புதிய, மிகப் பிரம்மாண்டமான சந்தை உருவாகியிருக்கிறது.அப்படி உருவான சந்தையோ விரிவடைந்துகொண்டே செல்கிறது.அவர்களின் லாபமும் பெருகிக் கொண்டே செல்கிறது.மேலும் மேலும்புதிய மதுபான தொழிற்சாலைகளை துவக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

யார் தான் குடிக்காமல் இருக்காங்க? உன் கையில் தான் இருக்கு என்று சம்மதிக்க வைத்து பெற்று வளர்த்த மகளை திருமணம் என்ற பெயரில் தள்ளுவது,இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி வால்மார்ட்டை வரவழைப்பதற்குச் சமமாக இருக்கிறது.ஏனெனில்,நிம்மதியாக வாழ விரும்பும் ஒரு புதிய மனைவியும்,இந்திய மக்களின் சகிப்புத் தன்மையும் ஒன்றுதான்.முடிவில் அல்ல;ஆரம்பத்தில் இருந்தே குடிக்கும் கணவனை மணம்புரிந்த பெண்ணின் நிலை என்ன தெரியுமா? இந்தியாவை நேசிக்கத் தெரியாதவர்கள்,இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்தால் என்ன ஆகுமோ அந்த நிலைதான்!

இந்த சூழ்நிலையில் குடியினால் நாசமாகும்  குடும்பங்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடத் துவங்கியிருக்கிறது.மாநகரங்களில் பிறந்தும்,வளர்ந்தும்,படித்தும் வரும் மாணவ மாணவிகளில் பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிவருவதும் சகஜமாகிவருகிறது.இதை தீர்க்க நமது ஆன்மீக குரு  அவர்கள்  நமக்கு ஓர் அரிய உபதேசத்தை  விஜயதசமியன்று அளித்திருக்கிறார்.


உங்களின் மகன் அல்லது கணவர் குடிகாரராகி,அதற்கு அடிமையாகிவிட்டாரா?

அந்தக் குடி/போதையிலிருந்து மீள வேண்டும் என்பது உங்களின் விருப்பமா?


அதற்காக தாங்கள் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடத் தயாரா?

ஆம் எனில்,

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

ரோஜாப்பூக்களால் மட்டுமே கட்டப்பட்ட ஒரு மாலை,ஒரு கிலோ டயமண்டுகல்கண்டு, அரைக்கிலோ விதையில்லாத கறுப்புதிராட்சைப்பழங்கள்,விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழபாக்கெட் ஒன்று,வெற்றிலைப்பாக்கு,பத்தி பாக்கெட்,    ஆறு நாட்டு வாழைப்பழங்கள்(மஞ்சள் நிற பழங்கள்),பத்தி,தேங்காய் இவைகளுடன் வீட்டில் சமைக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணி!!!


இந்தப் பொருட்களுடன் உங்கள் ஊரில் இருக்கும் அல்லது ஊருக்கு அருகில் இருக்கும் 18 ஆம் படிக் கருப்பசாமி இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

எப்படி வழிபட வேண்டும்?

சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேற்கூறிய பொருட்களுடன் சென்று பூசாரியிடம் கொடுத்து ரோஜா மாலையை 18 ஆம் படி கருப்பசாமிக்கு அணிவிக்க வேண்டும்.நெய்தீபத்தை ஏற்ற வேண்டும்.(அகல் விளக்கு என்பதால் அங்கேயே விட்டுவிடவேண்டும்).கொண்டு வந்திருக்கும் வெற்றிலைப்பாக்கு,ஆறு நாட்டு வாழைப்பழங்களை பரப்பி வைக்க வேண்டும்.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட்டையும்,பேரீட்சைபழ பாக்கெட்டையும் கிழித்து வைக்க வேண்டும்.வெஜிடபுள் பிரியாணி பாத்திரத்தை திறந்து வைக்க வேண்டும்.வாழைப்பழத்தில் நாம் வாங்கிக் கொண்டு வந்த பத்தியை மொத்தமாக பொருத்தி வைக்க வேண்டும்;குறைந்தது அரை மணி நேரம் வரையிலும் எனது மகன்/கணவனது குடிப்பழக்கம்/போதைப்பழக்கம் அடியோடு விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.பிரார்த்தனை முடித்தப்பின்னர்,கோவில் பூசாரிக்கு உங்களால் முடிந்த வரையிலான ரூபாய்களை தட்சிணையாகத் தர வேண்டும்.பிறகு,பாதி வெஜிடபிள் பிரியாணி,              மூன்று வாழைப்பழங்கள்,பாதி டையமண்டு கல்கண்டு,பாதி பேரீட்சைப்பழம்,பாதி கறுப்பு திராட்சைப்பழம் போன்றவைகளை எடுத்து நமது பையில் வைக்க வேண்டும்.நாம் எடுத்த பாதியில் பாதியை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.மீதியை நமது வீட்டிற்குக் கொண்டு சென்று நமது ரத்த உறவுகளுக்கு(நமது வீட்டில் இருக்கும் அனைவருக்கும்) தர வேண்டும்.குடிக்கும் மகன்/கணவருக்கும் தரலாம்.அதை அவர் (ஒருவேளை)சாப்பிடாமல் இருந்தாலும் பாதகமில்லை;


இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி எட்டு சனிக்கிழமைகள் வரை மட்டும் செய்து முடித்த 100 நாட்களுக்குள் ஏதாவது ஒரு அதிசய சம்பவத்தால் குடிப்பழக்கம்/போதைப்பழக்கம் முழுமையாக விலகும்.
தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு ஒரே கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும்.வேறு வேறு 18 ஆம் படி கருப்பசாமியை வழிபடக்கூடாது.


தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய துவங்கும் போது,நல்லது கெட்டதுகளுக்குச் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும்.அப்படி உருவானால் ஒரு மாதம் வரை எந்த ஒரு இறைவழிபாடும் செய்ய முடியாத சூழ்நிலை வரத்தான் செய்யும்.அப்படி குறுக்கீடு வந்தாலும்,மீதி சனிக்கிழமைகளுக்கு வழிபாட்டை முடித்துவிடவேண்டும்.உதாரணமாக,தொடர்ந்து 5 சனிக்கிழமைகளுக்கு இவ்வாறு வழிபாடு முடித்ததும்,ஏதாவது ஒரு துக்கத்துக்கோ,தீட்டுக்கோ கலந்து கொள்ளும் சூழ்நிலை வரத்தான் செய்யும்.அப்படி கலந்து கொண்டப்பின்னர்,ஒரு மாதம் வரை இறைவழிபாடு செய்ய முடியாது.ஒரு மாதத்திற்குப்பின்னர், மீதி 3 சனிக்கிழமைகளுக்கு வழிபாட்டை முடித்துவிட வேண்டும்.


குடி குடியை மட்டுமல்ல;தலைமுறையையும் கெடுக்கும்.இறைவழிபாட்டின் மூலமாக,18 ஆம் படி கருப்பசாமி வழிபாட்டின் மூலமாக குடிப்பழக்கத்தை நிறுத்திவிட முடியும்.


ஓம்சிவசிவஓம்

63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்!!!





1.தில்லைவாழ் அந்தணர்:தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள்
2.திருநீலகண்டர்:சிவனடியார்களுக்குத் திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர்
3.இயற்பகையார்:இல்லையென்னாது எதையும் அளித்தவர்.தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
4.இளையான்குடி மாறர்:வறுமையிலும்,நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்
5.மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டவர்.
6.விறன்மிண்ட நாயனார்:தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும்  பகைத்த வேளாளர்.
7.அமர்நீதி நாயனார்:அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி,மக்கள்,சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
8.எறிபத்த நாயனார்:கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக்(பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்.
9.ஏனாதிநாயனார்:திருநீற்றின் பொலிவைக் கண்டு அதிசூரனைக் கொல்லாமல் தாமே இறந்தவர்.
10.கண்ணப்ப நாயனார்:சிவபெருமானுக்குத் தம் கண்களையும் கொடுத்த வேடுவர்.
11.குங்கிலியக் கலய நாயனார்:நாள் தோறும் சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
12.மானக் கஞ்சாற நாயனார்:தம்மகளின் நீண்டகூந்தலைச் சிவனடியாரின் பஞ்சவடிக்காக அளித்த வேளாளர்.
13.அரிவாட்டாய நாயனார்:பூசைப் பொருட்கள் தவறித் தரையில் உள்ள நில வெடிப்பில் சிந்தியமையால் தம் ஊட்டியைத் தாமே அறுக்க முனைந்த வேளாளர்.
14.ஆனாய நாயனார்:பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
15.மூர்த்தி நாயனார்:சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்கு காப்பிட முனைந்த வணிகர்.
16.முருக நாயனார்:மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருப்பணியில் ஈடுபட்ட மறையவர்.
17.உருத்திர பசுபதி நாயனார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
18.திருநாளைப் போவார் நாயனார்: பறையர் குலத்தில் தோன்றிய நாயன்மார் இவர்.தில்லை சிதம்பரத்தில் தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
19.திருக்குறிப்புத் தொண்டர்:சிவனடியார்களின் ஆடைகளின் அழுக்கு நீக்கி உதவியவர்.
20.சண்டேசுவர நாயனார்;சிவபூசைக்கு பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் காலை வெட்டிய மறையவர்.
21.திருநாவுக்கரசு சுவாமிகள்:சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர்.புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர்.
22.குலச்சிறை நாயனார்:பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
23.பெருமிழலைக் குறும்ப நாயனார்:சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
24.காரைக்காலம்மையார்:இறைவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றவர்.
25.அப்பூதியடிகளார்:திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்ற அந்தணர்.
26.திருநீல நக்க நாயனார்:திருஞான சம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
27.நமிநந்தியடிகள் நாயனார்:சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
28.திருஞான சம்பந்தர்:ஞானப்பால் உண்டவர்;தேவாரம்பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர்.
29.ஏயர்கோன் கலிக்காம நாயனார்:சுந்தரர் சிவபெருமானைத் தூது அனுப்பியதால் அவரைப்பகைத்து,பின்னர் சூலை நோய் அடைந்து சுந்தரரின் தொடர்பைப்பெற்ற வேளாளர்.
30.திருமூல நாயனார்:திருமந்திரம் பாடிய சித்தர்.
31.தண்டியடிகள் நாயனார்:திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.
32.மூர்க்க நாயனார்:சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
33.சோமாசி மாற நாயனார்:சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
34.சாக்கிய நாயனார்:நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்.
35.சிறப்புலி நாயனார்:திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.
36.சிறுதொண்ட நாயனார்:இல்லை என்று கூறாமல் பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.
37.கழறிற்றறிவார் நாயனார்:உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளனைச் சிவவேடத்தை நினைவூட்டியதாக வணங்கியவர்.
38.கணநாத நாயனார்:திருஞான சம்பந்தரை வழிபட்டுத் திருக்கையிலையை அடைந்த மறையவர்.
39.கூற்றுவ நாயனார்:நடராசப் பெருமானின் திருவடியே தம் மணி முடியாக வழிபட்டவர்.
40.பொய்யடிமையில்லாத புலவர்:சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
41.புகழ்ச் சோழ நாயனார்:தாம் வெட்டிய பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
42.நரசிங்கமுனையரைய நாயனார்:போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டிய பெருந்தகையார்.
43.அதிபத்த நாயனார்:நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப்படைத்த மீனவர்.
44.கலிக்கம்ப நாயனார்:சிவ வேடங்கொண்ட பணியாளனையும் வழிபட்டவர்.மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
45.கலியநாயனார்: எண்ணெய்யும் விறகும் இல்லாத போது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து ஓளி உண்டாக்கிய வாணியர்.
46.சத்தி நாயனார்:சிவனடியார்களை இகழ்ந்தவர் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
47.ஐயடிகள் காடவர்கோன் நாயனார்:ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு “க்ஷேத்ரத் திருவெண்பா” என்னும் நூலை இயற்றியவர்.
48.கணம்புல்ல நாயனார்:கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபத் திருப்பணிபுரிந்தவர்.நெய் இல்லாததால் தலைமயிரையே எரித்தவர்.
49.காரி நாயனார்: “காரிக் கோவை” என்னும் நூலை இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ்ப் பணி புரிந்தவர்.
50.நின்ற சீர் நெடுமாற நாயனார்:சமண சமயத்தவராக இருந்து திருஞான சம்பந்தரால் சைவ சமயத்துக்கு மாறியவர்.
51.வாயிலார் நாயனார்: சிவபெருமானுக்கு மனத்தினாலேயே திருக்கோவில் அமைத்து திருமஞ்சனம் தூபதீபம் செய்து வந்த வேளாளர்.
52.முனையடுவார் நாயனார்:கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு வழங்கிய வேளாளர்.
53.கழற்சிங்க நாயனார்: பூமண்டலத்தின் கீழே இருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
54.இடங்கழி நாயனார்:தம் செல்வத்தையும்,அம்பாரத்தையும் சிவனடியார்கள் கொள்ளை கொள்ள விட்டுவிட்ட ஒரு குறுநில மன்னர்.
55.செருத்துணை நாயனார்:கழற்சிங்கரின் மனைவி பூமண்டலத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கையறுத்த வேளாளர்.
56.புகழ்த்துணை நாயனார்:பஞ்ச காலத்தில்,சிவபெருமானின் திருவருள் கிடைத்து அதனால் நாள் தோறும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்.
57.கோட்புலி நாயனார்:சிவபெருமானுக்குப்படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தாரைக் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
58.பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
59.பரமனையே பாடுவார்:சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள்,பிற தெய்வத்தைப் பாடாதவர்கள்(அந்த அளவுக்கு சிவபெருமான் மீது அளவற்ற பக்தி!!!ஸ்ரீராமன் மீது ஆஞ்சநேயருக்கு இருந்த பக்தியைப்போல)
60.திருவாரூர்ப்  பிறந்தார்: திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.
61.முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
62.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
63.முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.
64.அப்பாலும் அடிசார்ந்தார்:முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.
65.பூசலார் நாயனார்:மனக்கோவில் கட்டி சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.
66.மங்கையர்க்கரசியார்:நின்ற சீர் நெடுமாறனின் மனைவியாவார்.திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரை சைவராக்கினார்.
67.நேச நாயனார்:சிவனடியார்களுக்கு உடை,கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.
68.கோச்செங்கோட் சோழ நாயனார்:திருவானைக்கா திருமதில் பணிகளைச் செய்தவர்.எழுபது சிவாலயங்களைக் கட்டியவர்.
69.திருநீலகண்ட யாழ்ப்பாணர்:திருஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் அமைத்துப்பாடியவர்.
70.சடைய நாயனார்:சுந்தரரின் தந்தையார்.
71.இசை ஞானியார்:சுந்தரரின் அன்னையார்.
72.சுந்தர மூர்த்தி நாயனார்:சடையனார்.இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர்.சிவபெருமானின் தோழர்.தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.
ஆக,தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ஜாதியைச் சேர்ந்தவர்களும் சிவபக்தியில் திளைத்து 63 நாயன்மார்கள் பட்டியலில்இடம் பெற்றுள்ளனர்.

கிறிஸ்தவ ஆங்கிலேயனது வருகைக்கு முன்பு வரை ஜாதி என்பது செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே செயல்பட்டுவந்தது.கிறிஸ்தவ ஆங்கிலேயனால் நமது நாட்டில் ஜனநாயகம் என்ற முகமூடி அணிந்து அரசியல் அறிமுகப்படுத்தப்பட்டது.அரசியலோ ஜாதிகளிடையே புகுந்து வெறுப்பையும்,ஜாதி வெறியையும் உண்டாக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

கடந்த ஆயிரம் வருடங்களாக இந்தியாவை பல வெளிநாட்டினரும்,வேறு மதத்தினரும் ஆள்கிறேன் என்ற பெயரில் கொள்ளையடித்துக்கொண்டே இருந்தாலும்,நாமும்,நமது இந்தியாவும் தாக்குப்பிடித்து வாழக் காரணம் நமது ஆன்மீக வழிபாடுகள் மட்டுமே! இதையும் அழிக்கும் விதமாக வந்திருப்பதே மதமாற்றம் ஆகும்.எப்பாடு பட்டாவது மதமாற்றத்தை தடுத்து நிறுத்துவோம்;மதமாற்றத்துக்கு எதிராகச் செயல்படும் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு தருவோம்;நமது சனாதன தர்மமாகிய இந்து தர்மத்தை பாதுகாப்போம்.நமது வழி வம்சத்தில் எவரையும் மதம்மாறாமல் தடுப்போம்;
ஓம்சிவசிவஓம்
நன்றி:அறுபத்து மூவர் குருபூசை வழிபாடு,பக்கங்கள்3,4,5,6.வெளியீடு விரோதி வருடம் (கிறிஸ்தவ ஆண்டு 2009 டூ 2010)

Tuesday, October 23, 2012

ஜோதிடம் பார்க்க விரும்புவோர்களுக்கு!!!




நேரடியாக ஜோதிடம் பார்க்க விரும்புவோர்,தங்களுடைய பிறந்த ஜாதகம்,போட்டோ,செல் எண்ணை e-mail க்கு அனுப்பி வைத்து முன் பதிவு செய்துவிட்டு வருகையை உறுதி படுத்தவும்.சனி,ஞாயிறு தவிர பிற நாட்களில் ஜோதிட ஆலோசனை கேட்கலாம்;ஜாதகம் இல்லாதவர்கள் அவரவரின் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் =இவைகளைக் குறிப்பிட்டு அனுப்பி முன் பதிவு செய்து கொள்ளவும்.(நேரில் வர இயலாதவர்களுக்கு மின் அஞ்சல் /செல் வழியாகவும் பலன் சொல்லப்படும்)ஜோதிடம் பார்க்க தட்சிணை உண்டு;தாங்கள் தரும் தட்சிணையில் பெரும் பங்கு ஆன்மீகக்கடல் ஆன்மீகச் சேவைகளுக்கு செலவிடப்படுகிறது.(நேரடியாக ஜாதகம் பார்க்க வருபவர்களில் கடுமையான நெருக்கடியில் இருப்பவர்களுக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ/ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டுமுறை/ஸ்ரீதோஷம் விளக்க சிற்றேடு போன்றவைகளை மிகக் குறைந்த விலையிலோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுத்துவருகிறோம்.அதைப் பின்பற்றுபவர்கள்,அடுத்த சில மாதங்களில் தமது கர்மவினைகளிலிருந்து மீண்டுவிடுகிறார்கள்.தவிர,ஒரு கோடி தமிழர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க துண்டுப்பிரசுரங்களை அச்சடித்தும்,விநியோகித்தும் வருகிறோம்)ஒரு வாரத்துக்குள் பதில் வராவிட்டால்,மீண்டும் மின் அஞ்சல் அனுப்புவது நன்று.

ஜோதிடம் நேரடியாகக் கற்றுக் கொள்ள விரும்புவோர்  குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு ராஜபாளையம் வரவும்.இந்த 30 நாட்களுக்குள் நீங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடராக ஆகிவிடுவீர்கள்.நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புவோர் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பிறந்த ஜாதகத்தை அனுப்பி ஆலோசித்துவிட்டு வரவும்.

ஓம்சிவசிவஓம்

Monday, October 22, 2012

அகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாறு







பொள்ளாச்சியிலிருந்து 28 வது கி.மீ.தூரத்தில் அப்புப்பிள்ளையூர் என்னும் கிராமம் கேரளாவில் இருக்கிறது.அங்கே பல ஆண்டுகளாக தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த அகத்திய மகரிஷியின் சீடரே வெள்ளாடைச் சித்தர் ஆவார்.
முந்தைய பிறவியில் தஞ்சாவூரில் இருந்த மன்னர் ஒருவரது ஆன்மீக குருவாக வாழ்ந்து வந்த இந்த வெள்ளாடை சித்தருக்கு இப்பிறவியில் சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷியின் தரிசனம் கிடைத்திருக்கிறது.


சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு பல ஆன்மீகத்தலைவர்களை சந்தித்து வெள்ளாடைச் சித்தர் தமது உள்ளார்ந்த ஆன்மீக சந்தேகங்களை கேட்டிருக்கிறார்.பலர் பதிலளிக்கவில்லை;வடகரை சிவானந்த பரமஹம்ச சுவாமிகள் இவரது சந்தேகங்களுக்கு  பதிலளிக்கும் விதமாக  வாசியோகத்தை  தீட்சையாக அளித்திருக்கிறார்.அதன்பிறகு,சில வருடங்களில்  குறிப்பிட்ட ஆன்மீக தவநிலையை எட்டியப்பின்னர்,பழனிக்குச் சென்று ஒரு பட்சம் வரையிலும்(14 நாட்கள்) அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கிறார்.அப்போது இவருக்கு போக சித்தரின் தரிசனமும்,நேரடிதீட்சையும் கிடைத்திருக்கிறது.அவரது தீட்சைக்குப்பின் தவத்தின் அடுத்த நிலையை எட்டியிருக்கிறார்.அந்த நிலையில் பல்லாண்டுகள் தவம் செய்தபின்னர்,இந்த உலகம் முழுவதையும் நடந்தே மூன்று முறை சுற்றியிருக்கிறார்.(இந்தத் தகவலை அவரே சொல்லியிருக்கிறார்!)


ஒரு கட்டத்தை எட்டியதும்,அகத்திய மகரிஷி இருப்பதாக நம்பப்படும் பொதிகை மலைக்குச் சென்றிருக்கிறார்.அங்கே கல்யாணி அருவி என்ற ஒன்று இருக்கிறது.தமது தவ ஆற்றலாலும் தமது குரு அகத்தியரை தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையாலும் சரியான பாதையை அங்கே கண்டறிந்திருக்கிறார்.அந்தப் பாதையை சாதாரண மனிதர்களாகிய நம்மால் கண்டறிய முடியாது.(வீண் முயற்சி செய்ய வேண்டாம்)சுமாராக இரண்டு கி.மீ.தூரத்துக்கு ஒரு இருண்ட குகை வழியாக ஊர்ந்தே பயணித்திருக்கிறார்;அதன்பிறகு ஒரு கி.மீ.தூரத்துக்கு தவழ்ந்தே பயணித்திருக்கிறார்.அந்த பயணத்தின் முடிவில் ஒரு பெரிய நீர்த்தடாகம் இருந்திருக்கிறது.அந்த நீர்த்தடாகத்தில் முதலை,பாம்பு முதலியன இருந்திருக்கின்றன.அந்த நீர்த்தடாகத்தின் மறுகரையில் அகத்திய மகரிஷி தமது சீடர்களுடன் தவம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.அந்த நீர்த்தடாகத்தை கடந்தால் தமது குருவை சந்தித்து ஆசி பெறலாம்.

அந்த கணத்தில் தமக்கு அருளிய அகத்தியரின் சீடரும்,தமது இரண்டாவது குருவுமாகிய போகரை நினைத்து வேண்டியிருக்கிறார்.மறு கணமே வெள்ளாடைச் சித்தர்,அந்த நீர்த்தடாகத்தின் மறுமுனைக்கு வந்துவிட்டார்;எப்படி வந்தார்? என்பது அவருக்கே ஆச்சரியளிக்கும் ரகசியம் ஆகும்.அங்கே அகத்தியரின் சீடர் ஒருவர் இவரிடம் 1000 கேள்விகளை கேட்க,அதற்கு பதிலளித்திருக்கிறார்.பிறகு,அந்த சீடர்,அகத்திய மகரிஷி கண்விழித்துப்பார்க்கும் ஒரு மந்திரத்தை உபதேசித்திருக்கிறார்.அந்த மந்திரத்தை வெள்ளாடை சித்தர் ஜபித்ததுமே,அகத்திய மகரிஷியின் அருட்பார்வை கிடைத்திருக்கிறது.பொன்னிற தேகத்தோடு,மிக நீண்ட தாடியோடு அகத்திய மகரிஷி,வெள்ளாடை சித்தரிடம்,
“நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டிருக்கிறார்.
“உங்களது அருளாசியால் வர முடிந்தது”என்று பணிவாக தெரிவித்திருக்கிறார்.

பிறகு,உங்களோடு இருந்துவிடவே வந்திருக்கிறேன்;தாங்கள் அருள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அகத்திய மகரிஷி “உனக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன.நீ உனது பூர்வீகத்துக்கே செல்வாயாக! யாமே அங்கே வருவோம்” என்று வரமளித்து வெள்ளாடை சித்தரை அனுப்பி வைத்திருக்கிறார்.இந்த சம்பவம் 1935களின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்கிறது.அவர் திரும்பி 
வந்த இடமே இந்த அப்புப் பிள்ளையூர் ஆகும்.திரும்பி வந்த வெள்ளாடை சித்தர் தமது குடும்பக் கடமைகளை நிறவேற்றிவிட்டு,இங்கேயே தமது 108 வது வயதில் ஜீவசமாதியாகியிருக்கிறார்.தற்போது ஒரு குடும்பத்தார் நிர்வகித்து வருகின்றனர்.அந்த குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.இவர்கள் அனைவரும் வெள்ளாடைச்சித்தருடன் பல ஆண்டுகள் பழகி,ஆசி பெற்றவர்கள்;


ஓம் அகத்தீசாய நமஹ என்று அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்று நாம் தினமும்  108 முறை எழுத வேண்டும்.ஓய்வு நேரம் அதிகம் இருப்பவர்கள் காலையில் 108 முறையும்,மாலை அல்லது இரவு 108 முறையும் எழுதி வர வேண்டும்.இவ்வாறு தினமும் எழுதி 15.12.2012க்குள் இவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.நாம் அனுப்பும் மந்திரங்களை அஸ்திவாரமாக வைத்து சிவலிங்கம் நிறுவ இருக்கிறார்கள்.இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்றோ அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்றோ ஒரு கோடி மந்திர லிகிதங்கள் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.மிகவும் புண்ணியம் தரும் இந்த சித்தர் சேவையில் நாமும் பங்கெடுப்போம்;ஏனெனில்,இவ்வாறு மந்திரங்களை எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே பலருக்கு அவர்களுடைய நீண்டகால பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன;நீண்டகால நியாயமான ஏக்கங்கள் நிறைவேறியிருக்கின்றன;பலருக்கு அகத்திய மகரிஷியின் ஆசி கனவில் கிடைத்திருக்கிறது.

வெள்ளாடை சித்தரின் ஜீவசமாதியில் இவரது வரலாற்றை படம்பிடித்திருக்கிறோம்.திரு.கே.முரளிதரன்என்பவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்து வருகிறார்.

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அகத்தியாய நமஹ

ஓம்சிவசிவஓம்

Saturday, October 20, 2012

ஜோதிடர்களுக்கான ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டுமுறை!!!






காலச் சக்கரத்தை இயக்குவதால் சதாசிவனின் நெற்றியிலிருந்து உருவான பைரவருக்கு ஸ்ரீகால பைரவர் என்று பெயர்.ஸ்ரீகால பைரவரின் சுவாசமே வாக்கியக் கணிதப் பஞ்சாங்கம்,திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு விரிவடைகிறது.எந்த வித டெலஸ்கோப்பும் இல்லாத அந்தக்காலத்திலேயே ஆர்ய பட்டாவும்,பாஸ்கராவும் இன்னும் பல ஜோதிட வல்லுநர்களும் எழுதிய வானவியல் மற்றும் பஞ்சாங்கம் சார்ந்த நூல்களை வாசிக்கும் போது நமது தொழில் நுட்ப வளர்ச்சியெல்லாம் வெறும் அடாசு என்றே தோன்றும்.
இந்த பஞ்சாங்கங்களின் அடிப்படையில் மனிதர்களுக்கு வழிகாட்டிட இறைவனால் அனுப்பப்படும் புண்ணிய ஆத்மாக்களே ஜோதிடர்களும்,அருள்வாக்கு சொல்பவர்களும்,எதிர்காலத்தைச் சொல்பவர்களும்! இவர்கள் அனைவருமே நவக்கிரகங்களின் பிரதிநிதிகள் ஆவர்.(ஜோதிட மார்த்தாண்ட் ஓம் உலக நாதன் சொன்னபடி,ஒரு ஊரில் நவக்கிரகம் இல்லையெனில்,அந்த ஊரில் வசிப்பவர்கள் ஜோதிடரை ஒன்பது முறை வலம் வந்தாலே நவக்கிரகங்களை வழிபட்டதாக அர்த்தம்!)
மனிதர்களில் கொஞ்சம் மாமனிதர்களே ஜோதிடர்கள்.ஒவ்வொரு ஜோதிடருமே ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது.ஆனால், தேவைப்படும் போது உண்மையைச் சொல்லலாம்.அது வரையிலும் உண்மையை மறைக்கலாம்.(அதுதானே  குருதத்துவம் என்பது)


ஏனெனில்,மனம் என்ற ஒன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருப்பதால்,இந்த நிமிடத்தில் ஒரு விஷயம் சரி என்று தோன்றும்;அதே விஷயம் இன்னும் சில நிமிடம்/மணி நேரம்/நாள்/வாரம் கழித்து தவறு என்று தோன்றும்.ஆக,ஒவ்வொரு மனிதனின் சுபாவம்,சந்தர்ப்ப சூழ்நிலை,கவனிக்கும் திறன்,நாம் சொல்வதைப் பின்பற்றும் முறை இவைகளைப்பொறுத்தே உண்மையைச் சொல்ல வேண்டும்.முதல் சந்திப்பிலேயே மொத்த உண்மையையும் சொல்லிவிடக் கூடாது.எதற்காக ஒரு மனிதன்/மனுஷி நம்மிடம் ஜோதிடம் பார்க்க வந்திருக்கிறார்களோ அதை மட்டும் சொல்லி அனுப்பி விட வேண்டும்.நாம் வெறும் வழிகாட்டி மட்டுமே!


நாம் வழிகாட்டியதை செய்து முடித்தப்பின்னர்,அந்த வழிமுறைக்கான(பரிக்காரத்திற்கான) பலனைத் தருவது அந்த மனிதர்களின் பூர்வ  ஜன்ம கர்மாவும்,குல தெய்வத்தின் ஆசியுமே!இவ்வாறு சில பலமுறைகள் வழிகாட்டியப்பின்னரே அவர்களது கடுமையான பிரச்னையையோ / மகத்தான யோகத்தினைப்பற்றியோ முழுமையாகச் சொல்ல வேண்டும்.இது ஒரு தொடர் செயல்களின் விளைவுகள் ஆகும்.இப்படிச் செய்வதால் தான் நம்மிடம் ஜோதிடம் கேட்க வருபவர்களும் நல்ல நிலையை எட்டுவர்;நாமும் அவர்களின் மனமார்ந்த பாராட்டுக்கு ஆளாவோம்;புண்ணியம் சேர்ப்பதற்கும் வழிகிடைக்கும்.(ஆனால்,பலர் எல்லோரிடம் தமது ஜாதகத்தை தினமும் காட்டிக்கொண்டே இருப்பார்கள்;இவர்களை நிரந்தரமாகத் தவிர்ப்பது அவசியம்)

எப்போது தேவையோ அப்போது மட்டுமே பணம் சார்ந்த விஷயங்களில் கறார் காட்ட வேண்டும்.எதற்கெடுத்தாலும் பணம் என்று பிடுங்கினால் அந்த கர்மாவை தீர்க்கவே நாம் 49 மனிதப்பிறவிகள் எடுத்து ஏமாற வேண்டும்.இன்று பெரும்பாலான ஜோதிடர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.நாமே பிறரின் கர்ம ரகசியத்தைக் கண்டறிந்து அவர்களைக் காப்பாற்றுகிறோம்.நோக்கம் போல வாக்குறுதிகளை அள்ளிவீசி எறிந்து பரிகாரத்துக்கு பணம் பிடுங்கினால்,நம்மிடம் பணம் கொடுக்கும் நமது ஜோதிட வாடிக்கையாளர் பரிபூரணமாக ‘இவர் நமது குரு.இவரிடம் பணம் கொடுத்தால் நமது பிரச்னைகளுக்கு பரிகாரம் நமக்காக செய்வார்’ என்று நம்பியே கொடுப்பார்.அந்தப் பணத்தை வாங்கியதுமே அந்த ஜாதகரின் தோஷம் நம்மை பிடித்துவிடும்.இந்த தோஷங்களின் அளவு நம்மை ஒரு அளவுக்கு மேலே பிடித்துவிட்டால்,அது நமது குடும்பத்தில் வினோதமான சிக்கல்களை உருவாக்கிவிடும்.வசதியாக வாழ்வதை விட,நிம்மதியாக வாழ்வதே மேல்!

அப்படி நிம்மதியாகவும்,நேர்மையாகவும் வாழ்வதற்கே ஸ்ரீகால பைரவர் வழிபாட்டுமுறையை இந்தப்பதிவின் மூலமாக ஜோதிடர்களுக்கும்,அருள்வாக்குச் சொல்பவர்களுக்கும்,எண்கணித மேதைகளான நியூமராலஜிஸ்டுகளுக்கும் அறிமுகப்படுத்துகிறோம்.மற்றவர்கள் இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை;

ஜோதிடர்கள் அசைவம் ஒரு போதும் சாப்பிடக்கூடாது;       மது  அருந்தக்கூடாது;                             போதைப் பொருட்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.  ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும்.போனிலோ,நேரிலோ ஒருவருக்கு ஜோதிடம் கணித்துப்பலன் சொல்லும் போது நமது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.ஏதாவது ஒரு தெய்வத்தை தினமும் மனப்பூர்வமாக வழிபட வேண்டும்.யாரிடமும் எப்போதும்,எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் இருக்க வேண்டும்.இவையெல்லாம் நமது வாக்குபலத்தை அதிகரிக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை;நமது திசையின் அதிதேவதையை வழிபடலாம்;அல்லது அனைத்துக்கிரகங்களின் தலைவனான ஸ்ரீகாலபைரவரை வழிபடத் துவங்கலாம்.

மாதம் ஒருமுறை வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் (அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறையாவது)                   திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல வேண்டும்.அவ்வாறு கிரிவலம் செல்லும் போது மஞ்சள் ஆடை அணிந்து மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் அனாவசியமாகப்பேசக் கூடாது.தனிமை கிரிவலம் நல்ல பலன்களைத் தரும்.அல்லது கூட ஒருசிலரை அழைத்துச் செல்லலாம்;அந்த ஒருசிலர் நமது ஜோதிட சீடர்களாக இருப்பது இன்னும் சிறப்பு.

அல்லது


மாதம் ஒருமுறை(அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது) திருச்செந்தூருக்குச் சென்று கடலில் குளிக்க வேண்டும்.அதுவும் எப்படி? முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்.பிறகு கடலில் குளிக்க வேண்டும்.பிறகு கடற்கரையில் இருக்கும் மூவர் ஜீவசமாதியில் வழிபாடு செய்ய வேண்டும்.அந்த மூவர்(சைவம்) ஜீவசமாதியில் உறைந்திருக்கும் மகான்களே  திருச்செந்தூரின் கடலோரக்கோவிலை கட்டுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்! அவர்களது சன்னதியில் 15 நிமிடம் வரையிலும் மஞ்சள் துண்டில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.அதன்பிறகே திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபட வேண்டும்.அன்று முழுவதும் வேறு நீரில் குளிக்கக் கூடாது.இவ்வாறு செய்தால் மட்டுமே பிறரது ஜாதகங்களை பார்த்து,பார்த்து நம்மைப் பீடித்திருக்கும் நவக்கிரக தோஷச் சுமைகள் நம்மை விட்டு விலகும்.

வீட்டில் தினமும் பின்வரும் ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை உடல் மற்றும் மன சுத்தத்தோடு ஜபிக்க வேண்டும்.ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து மனதுக்குள்(மானசீகமாக) ஸ்ரீகாலபைரவரை(உங்கள் ஊரில் இருக்கும் கால பைரவரை நினைத்தால் போதும்.இதற்காக சிலபல முறை உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஸ்ரீகால பைரவரை உற்று நோக்கி மனதுக்குள் படம்பிடித்துக் கொள்ளவும்)உங்களுடைய புருவ மத்திக்கு கொண்டு வந்து பின்வரும் மூலமந்திரத்தை 27 முறை மட்டும் ஜபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய போற்றி


இப்படி 27 முறை ஜபித்தப்பின்னர்,கண்விழித்து,மனக்கண்ணால் ஸ்ரீகாலபைரவரின் பாதத்தை நினைக்க வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் 100 நாட்களுக்குப்பிறகு நமது வாக்குப் பலிதம் அதிகரிக்கும்.உங்களுடைய நேர்மைக்கு பாதுகாப்பையும்,பக்கபலத்தையும் அதிகரிக்கும்.

காலத்தை இயக்கும் கடவுளாக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் நிஜத்தில் ஒவ்வொரு ஜோதிடரும் நவக்கிரகப் பிரதிநிதி என்பது எந்த அளவுக்கு உண்மையோ,அதே போல ஸ்ரீகாலபைரவரின் பிரதிநிதி என்பதும் உண்மை.(மேலே கூறிய விதிமுறைகளை விடாப்பிடியாக பின்பற்றினால்!!!)
ஸ்ரீகால பைரவரின் ஆசியாலும்,ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் ஆசிர்வாதத்தாலும், வழிகாட்டுதலாலும் இந்த பதிவினை உங்களுக்கு அனுப்பியிருக்கிறோம்.வாழ்க வளர்க உயர்க ஜோதிடர்கள் அனைவரும்!!!

நன்றி:பைரவ ரகசியம்,பக்கம்57.

ஓம்சிவசிவஓம்