Tuesday, October 18, 2011

தேய்பிறை அஷ்டமியை(19.10.11 மதியம் முதல் 20.10.11 மதியம் வரை) பயன்படுத்துவோம்




தேய்பிறை அஷ்டமியை(19.10.11 மதியம் முதல் 20.10.11 மதியம் வரை) பயன்படுத்துவோம் 


ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவரை நாம் வழிபட,நமது முன் ஜன்ம கர்மவினைகளும்,நமது முன்னோர்கள் செய்த கர்மவினைகளும் கரையத்துவங்கும்.
கலியுகமாக இருப்பதால்,மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மப்பிரச்னைகள் இருக்கவே செய்கிறது.பணம் நிறைய சம்பாதித்துவிட்டால்,எந்தப்பிரச்னையையும் தீர்த்துவிடலாம் என நம்மில் பெரும்பாலானவர்கள் நினைக்கிறோம்.இது ஓரளவுக்கே உண்மை.நிஜத்தில் ,நமக்கும்,நமது குழந்தைகளுக்கும் சொத்தையும்,புண்ணியத்தையும் நிறைய சேர்க்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகத்தின்படி,தற்போது நிகழும் திசையைப் பொறுத்து ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட வேண்டும்.அப்படிப்பார்த்தால்,ஒரு குடும்பத்தில் நான்குபேர்கள் இருந்தால்,நான்கு கோவில்களுக்குச் செல்ல வேண்டும்.இது இன்றைய வேகமான வாழ்க்கையில் சாத்தியப்படாது.இதற்குத் தீர்வுதான் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு!
சிவபெருமானின் முதல் அவதாரம் பைரவர் அவதாரம்.பைரவர்களில் 8 வித அவதாரங்கள் இருக்கின்றன.இந்த 8 பைரவர்களும் 64 வித பைரவர்களாகப் பிரிந்து இந்த பூமியையும்,நமது பிரபஞ்சத்தையும் ஆட்சிபுரிந்துவருகின்றனர்.இந்த 64 பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடத்தக்கவரே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் !!
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில் நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.இந்த சமயத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலமாக இரண்டு மகத்தான நன்மைகள் உடனடியாக நமக்குக் கிட்டுகின்றன.ஒன்று நமது முன் ஜன்ம வினைகளும்,நமது முன்னோர்கள் செய்த வினைகளும் தீரத்துவங்குகின்றன.இரண்டு அப்படி தீரும்போதே நமது பொருளாதாரப் பிரச்னைகள் தீரத்துவங்குகின்றன.(வேலைபார்ப்பவர்களுக்கு சம்பளம் உயரத்துவங்குகிறது.தொழில் பார்ப்பவர்களுக்கு பணச்சுழற்சி வேகம் அதிகரிக்கிறது.போதுமான செல்வச் செழிப்புடன் இருப்பவர்களுக்கு என்னவிதமான கஷ்டங்கள் இருக்கின்றனவோ அவை நீங்கத்துவங்குகின்றன)அல்லது நமது குடும்பத்தில் இருக்கும் குறைகள் தீரத்துவங்குகின்றன.

நவக்கிரகங்களை இயக்குபவர் பைரவரே!! சனியின் குருவாக இருப்பவரும் பைரவரே!!! எனவே அஷ்டமச்சனியை 31.11.11 வரை அனுபவிக்கும் கும்பராசிக்காரர்களும்,ஏழரைச்சனியை அனுபவித்துவரும் சிம்மம்,கன்னி,துலாம் ராசிக்காரர்களும் பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக சனியின் தாக்கத்தை நிறுத்த முடியும்.ஏனெனில்,தன்னை வழிபடுபவர்களை எந்தவித தொந்தரவும் தரக்கூடாது என சனிபகவானிடம் பைரவர் சத்தியம் வாங்கியிருக்கிறார்.
நாளை 19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மதியம் 3.39 வரை தேய்பிறை அஷ்டமி வருகிறது.இந்த திதியில் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3.00 மணி வரையிலும் இராகுகாலமும் தேய்பிறை அஷ்டமியும் அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் உங்கள் ஊர்களில் இருக்கும்(திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு,தேவக்கோட்டை அருகில் இருக்கும் தபசுமலை,திருச்சி மலைக்கோட்டை அருகில்,சிதம்பரம்,காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி,படப்பையில் இருக்கும் ஜெயதுர்காபீடம்)ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை  மூலமந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாக அவரின் அருளைப் பெறமுடியும்.


திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 10 வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் கிராமம் தாடிக்கொம்பு.இங்கிருக்கும் அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் எழுந்தருளிவருகிறார்.தாடிக்கொம்பைப் பொருத்தவரையிலும் எந்த நாளில் தேய்பிறைஅஷ்டமி ஆரம்பிக்குமோ,அன்றைக்கு ஐந்து முறை அபிஷேக ஆராதனை செய்துவருகின்றனர்.காலை 9 மணி,காலை 11 மணி,மதியம் 1 மணி,மாலை 4 மணி,மாலை 5 மணி என்று குறிப்பிட்ட நேரத்தை ஒட்டி பாலாபிஷேகம் செய்துவருகின்றனர்.அளவற்ற சக்திவாய்ந்த யந்திரம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால்,இங்கிருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தன்னை வழிபடுவோருக்கு செல்வ வளத்தை அள்ளிவீசுகிறார்.இது அனுபவ உண்மை!!! திண்டுக்கல் தாடிக்கொம்புக்கு வருகிறீர்களா?
ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை மூலமந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாக அவரின் அருளைப் பெறமுடியும். ok mula manthirathayuim sollungalen

    ReplyDelete
  2. உங்கள் அற்புதமான பதிவுக்கு நன்றி. எனக்கு மிகவும் பயனாக இருந்தது.

    ReplyDelete