Monday, August 31, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகளில் முக்கியமானது


விருதுநகர் மாவட்டத்தில்,மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.இந்த ஊரில் கைத்தறி நெசவாளர்கள் மூன்றில் ஒருபகுதியாக வாழ்ந்து வருகின்றனர்;ஊரை இரண்டாக மதுரை தேசிய துணை நெடுஞ்சாலை பிரிக்கிறது;அதன் குறுக்காக சிவகாசி,சாத்தூர் சாலை செல்கிறது;மதுரை சாலைக்கும்,சிவகாசி சாலைக்கும் இடைப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் கால் பங்குப் பகுதியில் 16 தெருக்களில் நெசவுத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்;இந்த 16 தெருக்களிலும் தலா ஒரு ஜீவசமாதி இருக்கிறது;


ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்குத் திசையில் சிவகாசி சாலை இருக்கிறது.இந்த சிவகாசி சாலை வழியாக நடந்து சென்றால் முதலில் ஆர்.சி.சர்ச் வரும்;அதற்கு அடுத்தபடியாக கனரா வங்கி,மெர்கண்டைல் வங்கி,கைகாட்டிகோவில் பஜாரைக் கடந்ததும் ஐந்து கடை பஜார் வரும்;அதைக் கடந்ததும்,தென்மேற்காகத் திரும்பினால் முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டித் தெருவை சென்றடையலாம்;

இந்த தெருவின் மையத்தில் வடக்கு நோக்கிய கோவில் ஆர்ச்சைப் பார்க்கலாம்;இதுதான் அன்னை பத்திரகாளி ஆலயத்தின் நுழைவாசல்;சுமார் 3000 குடும்பங்களின் குலதெய்வம் இந்த அன்னை;

ஒவ்வொரு ஆண்டும் வரும் சிவராத்திரி அன்று இரவு ஒரு பாட்டி வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவார்;அதை அன்று இரவே அன்னை பத்திரகாளிக்கு படையல் போட்டு சிவராத்திரி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்றிரவே பகிர்ந்து கொடுப்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்!

இந்த ஆண்டு சிவராத்திரி 7.3.2016 திங்கட்கிழமையன்று வர இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அன்னையின் அருளை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்றை எழுதுவதில் பெருமை கொள்கிறோம்;எமது வாழ்நாளில் 8.8.2004 முதல் பல நூறு சம்பவங்கள் மூலமாக அன்னை பத்திரகாளி அடியேனைப் பாதுகாத்து வந்தாள்;வழிநடத்தினாள்;அவளின் ஆசியில்லாமல் போயிருந்தால் அடியேன் வீணனாகப் போயிருப்பேன்;இன்றும் அன்னை பத்திரகாளி பலரது வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது உண்மை;

இந்தத் தெருவில் ஒரு பெண்ணை பக்கத்து கிராமத்தில் திருமணம் செய்து வைத்தனர்;அந்தப் பெண் கர்ப்பிணியானதும்,வளைகாப்பு வைத்து,திரும்ப தனது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்;அன்னை பத்திரகாளியின் அருளாற்றலை புரிந்து வைத்திருந்தாள்;எனவே,தனது கர்ப்ப காலம் முழுவதும் அன்னை பத்திரகாளியின் ஆலயத்திலேயே இருந்திருந்தாள்;

காலையில் உணவு உண்டதும்,அன்னை பத்திரகாளி ஆலயத்திற்கு வந்துவிடுவாள்;மதியம் கோவில் நடை சாத்தப்படும் வரை இருப்பாள்;மாலையில் கோவில் திறந்ததும் மீண்டும் கோவிலுக்கு வந்து,அன்னை பத்திரகாளியின் எதிரே அமர்ந்து அன்னை பத்திரகாளியைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்;பிரசவ தினம் வரும் வரை ஒரு நாள் கூட வராமல் இருந்ததில்லை;

பிரசவ தினத்தன்று உள்ளூரில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள்;மருத்துவரோ,இன்னும் 1 மணி நேரத்தில் சிசேரியன் செய்யப் போகிறோம் என்று தெரிவித்துவிட்டு,அடுத்த அறைக்குப்போய்விட்டார்;அந்த கர்ப்பிணிப் பெண் தனது அப்பாவை அழைத்தாள்;

உடனே,பத்திரகாளி கோவிலுக்குச் சென்று,மஞ்சள் காப்பு வாங்கி வரும் படி அனுப்பினாள்;அவரும் சில நிமிடங்களில் வாங்கிவந்துவிட்டார்;

அந்த மஞ்சள் காப்பை தனது நெற்றியில் பூசிவிட்டு,தனது வயிற்றின் மீது பூசினாள்;அப்படி வயிற்றில் பூசும் போது,
“அம்மா பத்திரகாளி,எனக்கு சுகப்பிரசவம் ஆகணும்;உன்னைத் தான் நம்பியிருக்கேன்” என்று வேண்டிக் கொண்டாள்;

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு,மருத்துவர் வந்தார்;சிசேரியனுக்குரிய பரிசோதனைகள் செய்யத்துவங்கினார்;முடிவில்,சிசேரியன் தேவையில்லை;என்பதை அறிவித்தார்;

அன்றைக்கே சுபமான லக்னத்தில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது;


அன்னை பத்திரகாளியின் கருணையே கருணை!!!


No comments:

Post a Comment