Friday, January 6, 2012

முற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்


அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 2

ஸ்ரீ அன்னை

கே: முற்பிறவிகள் குறித்து…

ப: கடந்த வாழ்வுகளின் நினைவு என்று சொல்லப்படுவது, உள்ளிருந்து அவ்வப்போது தற்செயலாகக் கிடைக்கும் சில குறியீடுகளை வைத்துப் புனையப்படுவதாக அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் மோசடியாகவே பெரும்பாலும் இருக்கிறது. தம் விலங்கு வாழ்வுகளைக் கூட நினைவில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலர் இருக்கிறார்கள். உலகத்தின் இந்த அல்லது அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இப்படிப்பட்ட குரங்காக இருந்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இதில் எதையாவது நிச்சயமாகச் சொல்ல முடியும் என்றால் அது இதுதான். “குரங்குக்கு தன் சைத்திய உணர்வுடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்பதால் அதன் அனுபவங்களில் இம்மியும் கூட சைத்திய புருஷனால் கிரகிக்கப்படுவதில்லை. அந்த விலங்கு உடல் அழியும்போது, புறக் குரங்கு இயல்பின் பதிவுகளும் அதனுடன் மறைந்து போகின்றன. அவற்றை நினைவில் வைத்திருப்பதாகப் பாசாங்கு செய்வது, இந்தச் சிக்கல்களின் மெய்யான தகவல்களைப் பற்றிய மிக மோசமான அறியாமையைத் தான் காட்டுகிறது.

கே: இந்த ஜென்மத்தில் செய்ய முடியாதவற்றை மறுஜென்மத்தில் செய்ய இயலுமா?

அடுத்த ஜென்மம் பற்றிய விசாரணை எல்லாம் சுத்த மடத்தனம். இந்த ஜென்மத்தில் கடைசி மூச்சிருக்கும் வரை இது நமக்களிக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இன்று செய்வதை நாளை செய்யல்லாம் என்று ஒத்திப்போடும் சோம்பலைப் போன்றது தான் இந்த ஜென்மக் கடன்களை அடுத்த ஜென்மத்திற்காய் விட்டு வைப்பது

நாம் இந்தப் பிறவியில் சாதிக்க முடியாததையோ, தன்னைத் தான் வெல்லும் சித்தியையோ மரணத்திற்குப் பின் ஒருவன் .அடையலாம் என நினைப்பது முடியவே முடியாத ஒன்றாகும்.

இம்மண்ணுலக வாழ்க்கையே வளர்ச்சிக்கும், சித்திக்கும் ஆன ஷேத்திரம்.

கே: இறையருள் பற்றி விளக்குங்கள்….

ப: இறையருள் என்பது நீ அடைய வேண்டிய இலக்கை நோக்கி உன்னைச் செலுத்தும் உந்துதல் ஆகும். அதனை வெறும் மனதால் எடை போட முடியாது.

இறையருள் செயலாற்றும் பொழுது, அதன் விளைவு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது மரணம் போன்றதாகவும் இருக்கலாம். அல்லது விபத்து, இழப்பு போன்றதாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு எப்பொழுதும் நல்லதையே மனிதனுக்குத் தரும். ஒருவன் ஆன்மிகப் பாதையில் பாய்ந்து செல்வதற்காக இறைவன் அளிக்கும் அடியாகவோ துன்பமாகவோ ஒருவன் அதனைக் கருத வேண்டும். இறையருள் சித்தியை நோக்கி மிக விரைவாக ஒருவனை முன்னேறச் செய்வதாகும்.

இறையருளால் விளைவது எதுவாக இருந்தாலும், அது மரணமோ, உயிரிழப்போ, விபத்தோ, எதுவானாலும் இறையருள் செயல்படும் பொழுது கவலைப் படத் தேவையில்லை. ஏனெனில் அது எப்பொழுதும் ஒருவனின் நன்மைக்காகவே இருக்கும்.

எது நடந்தாலும் அது நன்மைக்கே நடக்கிறது என நினைத்து இறை அருளைப் பூரணமாகச் செயலாற்றும்படி விட்டு விட வேண்டும்.

  கே: தெய்வ அருள் செயல்பாடு குறித்து...

ப: ஒரு பொழுதும் தெய்வ சக்திகளை இழுக்க முயலாதீர்கள். முன்னேற வேண்டும் என்ற ஆசையினால், ஆத்மானுபூதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒரு பொழுதும் தெய்வத்தை உங்கள் பால் இழுக்க முயலாதீர்கள். இது முக்கியமான ஒன்றாகும். தெய்வ சக்தியை உங்களை நோக்கி இழுக்க முயல்வது உங்களது அகங்காரத்தைக் குறிப்பதாகும்.

முற்றிலுமாக இறைச் சக்தி உங்களுள் நிரம்பும் படி உங்களைத் திறவுங்கள். ஆனால் தெய்வத்தை இழுக்க முற்படவேண்டாம். அது உங்கள் தகுதிக்கும், பற்றற்ற நிலைக்கும் ஏற்பத் தானே நிகழக் கூடியதாகும். உங்கள் ஏற்புத் திறனை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஆர்வமுறலாம். அர்ப்பணிக்கலாம். உங்களைத் திறக்கலாம். ஆனால் ஒரு பொழுதும் எடுத்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள். ஏதாவது தவறாக நடந்து விட்டால் அனைவரும் இறைவனையே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் தவறுகளுக்குப் பொறுப்பு தெய்வம் அன்று.

மனிதர்களின் பேராசை, தன்னலம், அஞ்ஞானம், பலவீனம், ஏற்பின்மை போன்றவையே!

நன்றி : ஸ்ரீ அன்னை, கேள்வி-பதில்கள் மற்றும் White Roses, அரவிந்தர் ஆசிரமம், புதுவை

ஸ்ரீ அன்னையின் திருவடி சரணம்
ஸ்ரீ அன்னை
ஓம் ஸ்ரீ மாத்ரே நம

No comments:

Post a Comment