Friday, July 31, 2015

வராகி மாலை

              வம் வராஹ்யை நமஹ
                 

இந்த வராகி மாலையில் இருக்கும் 32 பாடல்களை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஒருமுறையும்,இரவு ஒருமுறையும் மனதிற்குள் பாடினாலே அன்னை வராகி(அரசாலை)யின் அருள் நமக்கு பூரணமாக கிட்டிவிடும்;அசைவம்,மது இவைகளை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே இந்த பாடல் பாடத் துவங்க வேண்டும்;
முதலில் ஒம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் (உங்கள் இஷ்ட தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் நினைத்து ஜபித்தப் பிறகு பாடத் துவங்க வேண்டும்;

1.வசீகரணம்(தியானம்)
இருகுழை கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்த்ர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறந்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப்புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர் கொண்டு தோள் மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்)
நடுங்காவகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும் காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டு
ஆடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோண்மணி வராகி நீலி தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண் தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வராகி தன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசனம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க் காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப்போக விட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்ம பூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகி என் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மது மாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறை யோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப்பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்பீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்( ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்( துட்டபந்தனம்)
பாடச் சீறாடிப்பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர்வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக்கிரை இடுவாள் கொன்றை வேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகி என் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டுப் பொரித்தத் தலை
நெரிப்பாள்தலை மண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக்காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக் கள வாழ்த்து(பத ஞானயோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண்டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26.படைநேமி வாழ்த்து(சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவார் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனைநினை யாதவரே

27.அடியார் வாழ்த்து(அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர்நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகி நற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும்
மருப்புக்குநேர்சொலும் கொங்கையும்மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்(கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப்பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
மாறிட்டவர் தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட்டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்(ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம் செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவ ஞான யோகம்)
சிவ ஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரநாயகியே

எந்த ஒரு பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகம் பாதிப்பிலிருந்து முழுமையாக மற்றும் நிரந்தரமாக மீண்டு நிம்மதியாக வாழ இந்த வராகி மாலையை காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் பாட வேண்டும்;வாலை தரிசனம் செய்ய விரும்புவோர் வாரம் தோறும்/மாதம் தோறும் இந்தப் பாடல் பாடும் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்;மனதில் யாருக்கும் தீங்கு நினைக்காதவர்களால் மட்டுமே இந்த பாடலை தினமும் பாட முடியும் என்பது அனுபவ உண்மை;


No comments:

Post a Comment