Monday, April 18, 2016

சதுரகிரியில் நிகழ்ந்த அதிசயம்


கல்லூரியில் படிக்கும் மாணவர் கூட்டம் ஒன்று ஒருமுறை சதுரகிரிக்குப் பயணித்தது;ஜீன்ஸ்,ரேபேன் கண்ணாடி,டீ ஷர்ட் என்று அணிந்திருந்தாலும்,சித்தர்களை நேரில் சந்திக்கும் நோக்கோடு ஒரு இளைஞர் தமது நட்புவட்டத்தையும் அழைத்துக் கொண்டு வந்தார்;

தாணிப்பாறையில் இருந்து புறப்பட்ட அவர்கள்,தம்மை மறந்து தமது காதல் அனுபவங்கள்,தேர்வு அனுபவங்களை உரக்கப் பேசியவாறு எண்ணெய்க்குடம் பாறைப் பகுதியை வந்தடைந்தனர்;அப்போது அதில் ஒருவன்,ஒரு திரைப்படப் பாடலைப் பாடத் துவங்கினான்;அது காம உணர்ச்சியைத் தூண்டும் விதமான பாடல்! சித்தர்களை நேரில் சந்திக்கும் நோக்கோடு அழைத்து வந்த அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளன்,அந்தப் பாடலைப் பாடியவனைக் கண்டித்தான்;இனிமேலும் இங்கே இப்படிப் பாடாதே என்று அறிவுறுத்தினான்;

இளமை எப்படிப் பட்டது? எதையும் எதிர்க்கும்;எதிர்ப்பதில் தான் இளமையின் வேகமே இருக்கின்றது என்பதால் அந்தப் பாடலை திரும்பவும் பாடத் துவங்கினான்;அப்படிப் பாடும்போது அதில் இருக்கும் சில வார்த்தைகளை மாற்றிப் போட்டு மேலும் வக்கிரமாகப் பாடினான்;

சில நிமிடங்களில் அவனுக்குக் கண்பார்வை போய்விட்டது;அவனால்,ஒரு அடிகூட நகர முடியவில்லை;கண் பார்வை தெரியாத போது எப்படி நகர முடியும்? திரும்பத் திரும்ப கண்களைக் கசக்கினான்;ம்ஹீம்! கண்பார்வை போனது போனதுதான்!!

எவ்வளவு உரத்துப் பாடினானோ,அதை விடவும் உரக்க அழத் துவங்கினான்;உடன் வந்த இளைஞர்க் கூட்டம் ஸ்தம்பித்துவிட்டனர்;அது ஒரு அமாவாசை என்பதால்,பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர்கள் கூட்டம் என்ன ஏது என்று விசாரித்தனர்;

நடந்த விபரத்தை விவரித்ததும்,அந்த பெரியவர்கள் ஒருமித்த குரலில் கூறியது;

சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா
சந்தனமஹாலிங்கத்துக்கு அரோகரா

என்று அந்த பார்வையிழந்த இளைஞனை உரத்துக் கூறச் சொன்னார்கள்;அவனும் சுமாராக 12 நிமிடம் வரை விடாமல் உரத்து மலைகளில் எதிரொலிக்கும் அளவுக்கு கத்தி,சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்தை எண்ணி வேண்டினான்;


அடுத்த கணமே,இழந்த பார்வை அவனுக்கு திரும்பக் கிடைத்தது;ஆமாம்! அவனுக்கு படிப்படியாக எதிரில் இருக்கும் அனைத்தும் தெரிய ஆரம்பித்தது;

ஆலயங்கள்,சித்தர்களின் இருப்பிடங்கள்,சித்தர்கள் தவம் செய்யும் இடங்கள்,புனிதமான மலைப்பகுதிகளில் பயணிக்கும் போது மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்;இச்சம்பவம் நிகழ்ந்து 7 ஆண்டு ஆகின்றது;



ஓம் சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா

No comments:

Post a Comment