Saturday, April 16, 2016

ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருப்பாண்டிக் கொடுமுடி பதிகம்




இறுதிச்சடங்குகள்,தகனக் கிரியை,ஈமச்சடங்குகள் ஆகியவற்றின் போது சத்சங்கமாகப் பலரும் கூடி இதை ஒதினால் இறந்தவருக்குத் தக்க ஆன்ம சாந்தி கிடைக்கும் என்பது சித்தர்களின் வாக்கு!!!


மற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப்
 பாதமேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந்தேன் இனிப்பிற
  வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
  யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினும்
  சொல்லும் நாநமச் சிவாயவே          1

இட்ட லும்அடி ஏத்து வார் இகழ்ந்
   திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள் இவை என்ற லாற்கரு
  தேன் கிளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
   தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வா உனை நான் மறக்கினும்
   சொல்லும் நாநமச் சிவாயவே         2

ஓவு நாள் உணர் வழியும் நாள் உயிர்
   போகும் நாள் உயர் பாடைமேல்
காவும் நாள் இவை என்ற லாற்கரு
   தேன் கிளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிப்பரஞ்
   சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லா உனை நான் மறக்கினும்
  சொல்லும் நாநமச் சிவாயவே       3

எல்லை யில்புகழ் எம்பி ரான் எந்தை
  தம்பி ரான் என் பொன் மாமணி
கல்லை உந்தி வளம்பொ ழிந்திழி
  காவிரி யதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
   யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினும்
  சொல்லும் நாநமச்சி வாயவே          4

அஞ்சி நார்க்கரண் ஆதி என்றடி
   யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்சல் என்றடித் தொண்ட னேற்கருள்
   நல்கி நாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
  தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினும்
   சொல்லும் நாநமச்சி வாயவே        5

ஏடு வான் இளந் திங்கள் சூடினை
   என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
   அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிப்பரஞ்
   சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னே உனை நான்ம றக்கினும்
   சொல்லும் நாநமச்சி வாயவே       6

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
   தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
   நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
   தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினும்
   சொல்லும் நாநமச்சி வாயவே      7

சொம்பொ னேர்சடை யாய்திரிபுரம்
   தீயெழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம்
   அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
   ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான்மறக்கினும்
   சொல்லும் நாநமச்சிவாயவே        8

சாரணன் தந்தை எம்பி ரான் எந்தை
   தம்பிரான் என்பொன் மாமணியென்று
பேரெணாயிர கோடி தேவர்
   பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழுங்கறை
  யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
காரணாஉனை நான்மறக்கினும்
  சொல்லும் நாநமச்சிவாயவே          9

கோணிய பிறை சூடி யைக்கறை
   யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
   பித்தனைப் பிறப் பில்லியைப்
பாணுலாவரி வண்ட றைகொன்றைத்
   தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல் இவை
  சொல்லு வார்க்கில்லை துன்பமே       10

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!

No comments:

Post a Comment