Tuesday, January 4, 2011

wikkileaks-2 thanks to tamilwebdunia

“ஆட்சியமைப்புகளின் போக்கை தற்போதுள்ள போக்கிற்கு மாறாக மாற்றியமைக்க வேண்டுமென்று நாம் நினைப்போமானால், அவைகள் மாற்றத்திற்கு தங்களை சற்றும் உட்படுத்திக்கொள்ள தாயாரக இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் துணிவாக செயலாற்ற வேண்டும்” என்றும் அசான்ஞ் கூறியதாக ராஃப்பி தெரிவிக்கிறார்.




இப்போது புரிகிறதா, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் நோக்கம் என்னவென்பதை? அமெரிக்காவின் செனட்டரும், அவரை வழிமொழிந்த அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவரும், ஜூலியன் அசான்ஞ் ஒரு உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி என்று கூறியது சற்றும் பொருந்தாக விமரிசனம் என்பது?



அசான்ஞ் மொழியில் தெளிவாக கூறுதெனின், அமெரிக்காவோ அல்லது இன்றைய உலக நாடுகளின் அரசுகளோ இப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த போக்கில் இருந்து சற்றும் மாறப்போவதில்லை. இவைகளின் செயல்பாட்டை தலைகீழாக மாற்ற வேண்டுமெனில், அவைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் போராட வேண்டும் என்கிறார். அதற்கு தற்போதுள்ள அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும். அதற்குத்தான் இப்படிப்பட்ட வெளியீடுகள். அவைகள் அதன் பிடிமானத்தை பலமிழக்கச் செய்கின்றன.



இந்த முடிவிற்கு ஜூலியன் அசான்ஞ் வரக் காரணமேதுமுண்டோ? தான் மாற்ற நினைக்கும் இன்றுள்ள அரசியலை ஆங்கல மொழிக் கவிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பாடலை மேற்கோள் காட்டி புரிய வைக்கிறார் அசான்ஞ்.

“பொய்யை உண்மையைப் போல் ஒலிக்கவும், கொலையை மரியாதைக்குரியதாகக் காட்டவும், தூய காற்றிற்குக் கூட நிலைத்தன்மை உண்டு என்று நிரூபிக்கவுமே அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிற ஜார்ஜ் ஆர்வெல்லின் மொழியை இன்றைய அரசியலின் போக்கை சித்தரிப்பதாக அப்பாச்சி வீடியோவிற்கு அளித்த பேட்டியில் அசான்ஞ் கூறியுள்ளார்.



எவ்வளவு ஆழமான உண்மை! விடுதலைப் போராளிகை ‘பயங்கரவாதிகள்’ என்பது, பழங்குடிகளுக்காக போராடுவோரை, அந்த மக்களின் போராட்டங்களை ஆதரிப்போரை, அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுப்போரை ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்பது, தங்களின் அன்றாட வாழ்விற்காக கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் அத்துமீறி வந்து தாக்கப்படும் போது, அவர்கள் ‘சில பேராசை பிடித்த மீனவர்களால் பிரச்சனை ஏற்படுகிறது’ என்று பேசுவது என்று இவை யாவும் ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் அந்த அரசியல் மொழிகள்தானே?



இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களை உலகின் தலைசிறந்த நாளிதழ்களான தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லீ மாண்ட், எல் பாரிஸ், டெர் ஸ்பீகல் ஆகியன முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன! இந்த ஏடுகளின் வரிசையில் ஒரு இந்திய நாளிதழ் கூட இடம்பெறவில்லையே என்பது வருத்தம்தான். ஆனால் இங்குதான், அரசின் குரல்களாக இருந்து பத்ம ஸ்ரீ முதல் சிறிலங்க ரத்னா வரை பட்டங்கள் பெற்ற முதன்மை இதழாளர்களை ஆசிரியர்களாக கொண்ட ஊடகங்களும் நாளிதழ்களும் அல்லவா கோலேச்சுகின்றன? அதனால் அந்தப் பட்டியலில் இந்தியா நாளிதழ் ஒன்று இடம்பெறாததில் ஆச்சரியமேது்மில்லை.



ஒரு தனி மனிதராய், உறுதியுடன் நிற்கும் சில தொழில் திறமை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து இன்றுள்ள அரசுகளுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட ஜூலியன் அசான்ஞ், உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுகிறார். எனவே, எவ்வித ஐயமுமின்றி, அவரே இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதரே.



விக்கிலீக்ஸ் இணையத் தளம் செய்துவரும் தகவல் புரட்சி தொடரட்டும்... 2011இலும்.

No comments:

Post a Comment