Thursday, July 26, 2012

நமது குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் பாதுகாப்போம்



உலகமயமாக்கல் என்னும் பூதம் இந்த பூமியினை விழுங்கத் துவங்கிய 1995 முதல் இன்று நாம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னால் பிசாசு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் நமது முன்னேற்றத்துக்கு காரணமாக அமையும் விதமாக இருக்கும் வேளையில், குடும்பத்தை கவனிக்க
மறந்துவிடுகிறோம்; அன்போடு பேச வேண்டிய நமது வீட்டில் வேலைப்பளுவின் காரணமாக எரிந்துவிழுகிறோம்; நமது ஆளுமை எல்லையைத் தாண்டி உள்ளே நுழையும் சக ஊழியர்/மேலதிகாரியைத் தடுப்பதற்குப்பதிலாக போலிச்சிரிப்பை உதிர்த்து வைக்கிறோம்; எப்படிப்பார்த்தாலும்,குடும்பம் என்ற அமைப்பு இன்றும் தாக்குப்பிடித்து நிற்பதற்குக் காரணம் யார் தெரியுமா?

நமது குடும்பத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆத்மாவின் ஆழ்ந்த அன்பும், அளவற்ற பொறுமையும்,விடாப்பிடியான விட்டுக்கொடுக்கும் குணமுமே இன்று நமது ஒட்டுமொத்த குடும்பத்தையே தாங்கிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலை வெகுநாட்களுக்கு நீடிக்காது போலிருக்கிறது.அந்த அளவுக்கு நமது வேலை/தொழிலின் சூழ்நிலை நம்மை மன அழுத்தம் மிக்கவர்களாகவே மாற்றிவிட்டது. இந்த மன அழுத்தத்தை நீக்கிட இன்று யாரும் இல்லை; 1970களில் கூட்டுக்குடும்பம் சிதையத் துவங்கி, 1990களில் தனிக்குடும்பங்களும் (வல்லரசு அமெரிக்காவைப் போல) அந்த தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனி அறைகளில் வசிக்கத் துவங்கினர்.தற்போது ஒரே வீட்டில் ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருமே வாரம் ஒரு நாளாவது ஒன்றாக சாப்பிடுகிறார்களா?

ஒவ்வொரு நிமிடத்தையும் மிக கவனமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ரூபாயையும் மிக ஆழ்ந்து சிந்தித்து செலவழிக்க வேண்டியிருக்கிறது. இப்படி இருந்தாலும் கூட, மக்கள் நலமில்லாத இந்தியாவின் மத்திய அரசு சராசரி இந்திய மக்களின் உழைப்பையும், ஆத்மாவையும்,சேமிப்பையும் உறிஞ்சிக்கொழுக்கவே செய்கிறது. சாதுக்கள் நாடான நமது இந்தியாவை இந்தியாவின் மன்மோகன் அரசு மேற்கு நாடுகளின் எண்ணங்களுக்கேற்ப வெறுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது தமிழ்ப் பழமொழி! சாதுக்கள் நாடான இந்தியா மிரண்டால், எத்தனை வல்லரசுகளும்,அதன் நரித்தனமான உளவுத்துறைகளும் தாங்குமா?

அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் குடும்ப அமைப்பை வலுப்படுத்தும் காரியங்களைச் செய்யத் துவங்கியிருக்கிறார். ஆனால், அதே ஒபாமா அரசு இந்தியாவின் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் வேலையை கச்சிதமாகச் செய்யத் துவங்கியிருக்கிறார் .இந்தியான்னா இவனுங்களுக்கு என்ன கேவலமாத் தெரியுதோ?

நாம் தினமும் ஒருமுறை முடியாவிட்டாலும்,வாரம் ஒருமுறை நமது குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்; மாதம் ஒருமுறை நமது குடும்பத்தோடு அருகில் இருக்கும் பழமையான கோவிலுக்குச் செல்வோம்; மாதம் ஒருமுறை நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு அனைவரது செல்போன்களையும் அணைத்துவிட்டு, நமது அலுவலகத்தில் நமக்கு உண்டான பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டோம்? என்பதை பரிமாறிக்கொள்வோம்; நமது குடும்ப உறுப்பினர்கள் எப்பேர்ப்பட்ட தவறு செய்தாலும், இந்த மாதாந்திர குடும்ப கூட்டத்தில் அதை நடுநிலையோடு ஆராய்ந்து, அந்த உறுப்பினர் மீண்டும் அந்த தவறு செய்யாதவிதமாக அவருக்கு வழிகாட்டுவோம்; அவரை மன்னிப்போம்;

நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறை குடும்பத்தோடு ஆன்மீகச் சுற்றுலா செல்லுவோம்; செல்வதற்கு முன்பு, ஆன்மிகச் சுற்றுலாத் தளங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட பின்னர்,அதை நம் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்ட பின்னர்,புறப்படுவோம்;

நமது குடும்பத்தை, குடும்ப அமைப்பை பாதுகாக்க இதுவே சிறந்த வழி! நமது குடும்பத்தை பாதுகாத்தால்,நமது தெரு சிறப்பானதாக மாறும்;நமது தெரு சிறப்பானதாக மாறினால்,நமது ஊர் பொறுப்புள்ளதாக உயரும்; நமது ஊர் பொறுப்புள்ளதாக உயர்ந்தாலே அதன் தொடர்விளைவாக நமது இந்து தர்மம் பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment