Saturday, July 14, 2012

டூத்பேஸ்ட்டெல்லாம் வேஸ்டு;உமிக்கரியும்,உப்பும்தான் பெஸ்ட்!!!




எப்பொழுதும் ஏதாவது ஒரு எழுத்தாளரை,புத்தகத்தைப் பற்றிப் பேசும் பெங்களூரு நண்பன் சுந்தரம் இந்தமுறை, “உமிக்கரி வாங்கி அனுப்ப முடியுமா?” என்று கேட்டான். “அயோடின் கலக்காத உப்பு கிடைக்குமா?”என்றான்.

“எதுக்கடா உமிக்கரியும்,உப்பும்?”

“பல் தேய்க்கறதுக்கு”

“ஏன்,டூத் பேஸ்டெல்லாம் என்னாச்சு?”

“ஒரு நாள் உட்கார்ந்து டிவியில வர்ற டூத்பேஸ்ட் விளம்பரத்தையெல்லாம் பாரு.அப்புறம் நீயும் என்னை மாதிரி  உமிக்கரியும் உப்பும்தான் கேட்பாய்.அவ்வளவு குழப்பமாக இருக்கு.ஒரு டூத்பேஸ்ட்ல உப்பு கலந்திருக்குங்கறாங்க;இன்னொண்ணுல ஆக்டிவேட் கார்பன் கலந்துருக்குங்கறாங்க; கிராம்பு,புதினா இப்படி புதுசு புதுசா கலந்து கலந்து,உண்மையிலேயே எந்த டூத்பேஸ்டைப் பயன்படுத்துனா நம்ம பல்லைப் பாதுகாக்க முடியும்னு தெரியல.

எங்க தாத்தா பாட்டியெல்லாம் உமிக்கரியும் உப்பும் வச்சுத்தான் பல் தேய்ச்சாங்க; பல்லுல கறையில்லை;பேசுனா துர்நாற்றமும் வரல;கரியும் உப்பும் வச்சுத் தேச்சா பல்லு தேஞ்சுரும்னு சொல்லி டூத்பேஸ்டை அறிமுகப்படுத்தினாங்க;நம்ம தாத்தா பாட்டி தப்பிச்சுட்டாங்க;இப்ப என்னடான்னா,கரியும் உப்பும் பல்லுக்கு ரொம்ப முக்கியம்னு தாத்தா சொன்னதை விளம்பரக்காரங்களும் சொல்றாங்க!”

“நீ ஒருத்தன் தாண்டா இப்படியெல்லாம் யோசிக்கிற?!!”

“இல்ல. . .இல்ல. . . டூத்பேஸ்ட் மட்டுமில்லை;நாம குடிக்கிற குளிர்பானம்,நாம பயன்படுத்தற வெளிநாட்டுப்பொருட்கள் பத்தியெல்லாம் நிறைய யோசிச்சு,ஆராஞ்சு அதில் இருக்கும் விஷங்களைப் பத்தியும்,அது எப்படியெல்லாம் நமது பணத்தைக்கொள்ளையடித்து,நமது ஆரோக்கியத்தை நாசமாக்குதுங்கறதை ஒரு மனிதர் தொகுத்து இணையதளமாக ஆக்கியிருக்கிறார்.அவர் பெயர் ராஜீவ்திட்சித்.1961இல் உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகாரில் பிறந்தவர்;கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த அவர்,அலகாபாத் என்.ஐ.ஐ.டியில் பி.டெக்.,கான்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக்., பிரான்ஸில் பி.ஹெச்,டி முடித்தார்.எல்லாமே தொலைத் தொடர்புக்கல்வியில் பயின்றவர்.ஒரு விஞ்ஞானியாக பிரான்ஸிலும்,இங்கே அப்துல்கலாமோடும் கூட பணியாற்றியிருக்கிறார்.
திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு,பல விழிப்புணர்வுப் போராட்டங்களுக்கு விதையாக இருக்கத் துவங்கினார்.நமது இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை அதிகரிக்க,அதிகரிக்க,இங்கே வறுமை வளர்ந்து கொண்டே செல்வதை ஆதாரத்துடன் விளக்கினார்.வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக நமக்கு ஏற்படும் விபரீதங்களையும் விளக்கத் துவங்கினார்.


டூத்பேஸ்ட்டில் புற்றுநோயை உருவாக்கும் அணுக்கள் இருப்பதையும்,வெளிநாட்டுக் குளிர்பானங்களில் மெல்ல மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை இருப்பதையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து அவர் நடத்திய போராட்டங்கள்  பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின.(இன்று இந்தியா நெடுக பல லட்சக்கணக்கான பேர்களுக்கு தொண்டைப்புற்றுநோய் உருவாகி வருகிறது; வளர்ந்து வருகிறது; காரணத்தை அவர்களின் உணவுப்பழக்கத்தில் தேடுகின்றனர்;டூத்பேஸ்ட் தான் காரணம் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?)கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்காக ‘சுதேசி பொது அங்காடி’களை அவர் உத்திரப்பிரதேசம் முழுவதும் அமைத்துவருகிறார்.சுதேசி இயக்கம்,இந்தியர்களின் ஒவ்வொரு சுயமரியாதை,ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் இயக்கம் என ஓர் இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்.இவரது இணையதளம்:www.rajivdixit.com


மதராஸ் மாகாணம் என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.தமிழ்நாடு,வட கேரளம்,லட்சத்தீவுகள்,கடலோர ஆந்திரமான ராயலசீமா,கர்நாடகத்தின் பெரும்பகுதி,தெற்கு ஒரிசாவும் இதில் அடக்கம்.இந்த மதராஸ் மாகாணத்தில் 1,50,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்துள்ளன.
ஒரு கிராமத்துக்கு ஓர் உயர்நிலைப்பள்ளிக்கூடம்,பத்து கிராமங்களுக்கு ஓர் அறுவை சிகிச்சை மருத்துவக்கல்லூரி என லட்சக்கணக்கான கல்விக்கூடங்களும்,ஆயிரக்கணக்கான மருத்துவக்கல்லூரிகளும் இருந்திருக்கின்றன.அத்தகைய மாணவர்களும்,ஆசிரியர்களுமான ஒரு சிறந்த சமுதாயம் இங்கே கி.பி.1850 வரை வாழ்ந்திருக்கிறார்கள்.இப்படி கற்பிக்கப்பட்ட கல்விதான் நம்மிடையே விஞ்ஞானபூர்வமான பழக்கவழக்கங்களுடன் கூடிய ஒரு நேர்மைமிக்க,மனித நேயம் மிகுந்த,உலகிலேயே மிகச் சிறந்த பண்பாட்டை நிலையாகக் கட்டி வைத்திருந்தது.பருவங்களுக்கேற்ற உடைகள்,தட்பவெப்பத்துக்கேற்ப உணவுகள் அனைத்தையும் ஆராய்ந்தறிந்த ஒரு இந்துப்பண்பாடு இங்கே விரிந்திருந்தது.ஒவ்வொரு இந்தியக் கிராமமும் சுயச்சார்புள்ள சிறிய மற்றும் நேர்மையான இந்துக்குடியரசாக இருந்திருக்கிறது.


மெக்கலே பிரபு என்ற கிறிஸ்தவன் இந்தியாவுக்கு வந்து இவற்றையெல்லாம் ஆராய்ந்து தெளிந்து கிறிஸ்தவ ஆங்கிலேய அரசுக்கு எழுதினான்.அதன் பிறகுதான் மேற்கத்திய கல்விமுறையாலும்,பழக்கவழக்கங்களாலும்  நமது இந்துக்கலாச்சாரம் சிதையத்துவங்கியிருக்கிறது.கிறிஸ்தவ ஆங்கிலேயன் இந்தியாவுக்கு சுதந்திரம் தந்துவிட்டுப் போனப்பின்னரும் நாம் நமது நாட்டின் உண்மையான வரலாற்றையும்,நமது முன்னோர்களின் பெருமைகளையும் அறியாமல் நமது மூளைகளை மெக்காலே கல்வித்திட்டத்துக்குள்ளிருந்து மீட்கவே இல்லை;இன்றைய மெக்காலே கல்வித்திட்டமானது நான்,எனது என்ற அகங்காரத்தையே உருவாக்கியிருக்கிறது.பட்டப்படிப்பு படிக்கும் இந்திய/தமிழ்நாட்டு மாணவிகளை ஓடிப்போய் திருமணம் செய்ய வைத்துக்கொண்டிருக்கிறது.யாரும் யாரையும் மதிப்பதும் இல்லை;நம்புவதும் இல்லை;



இதைப் பற்றியெல்லாம் ராஜீவ் தீட்சித் நிறைய சிந்தித்திருக்கிறார்.பேசியிருக்கிறார்;போராடியிருக்கிறார்;பிறகு அவருடைய போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டனர்.ராஜீவ்தீட்சித் மீதும் பல நிறங்கள் பூசப்பட்டன;இந்த நிறங்களின் பின்னால் பன்னாட்டு நிறுவனங்களும்,உளவாளிகளும் இருந்தனர்;பகத்சிங்கை தனது ஆதர்ஷ குருவாகக் கொண்டு செயல்பட்ட ராஜீவ்தீட்சித் 30.11.2010 அன்று தனது இறுதி மூச்சை விட்டார்;அவரது உடல் நீலம் பாரித்துக்கிடந்தது.அப்போது அவருக்கு வயது 43தான்!


இன்று தண்ணீர் இல்லாத கிராமங்களால் ,கழிவறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களால்,வறுமை வாட்டி வதைத்த மக்களால் நிறைந்திருக்கிறது இந்தியா!!! மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி இல்லை;விவசாயத்துக்கு நிலம் இல்லை;இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களிலும் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை;நிலத்தையும் மனித வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு, “உணவுப்பொருள் பணவீக்க உயர்வு பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது” என்று நமது தலைவர்கள் பேசுவது,குழந்தையையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டும் கதைதான்.


ராஜீவ் தீட்சித் முன் வைத்து எனக்கும் சில கேள்விகள் எழுகின்றன:


1.பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு முன்பு நாம் பல் தேய்த்ததில்லையா?


2.இந்த நிறுவனங்களின் சோப்புகளும்,ஷாம்புகளும் வருவதற்கு முன்புநாம் சுத்தமாக குளித்ததில்லையா? துவைத்ததில்லையா?


நமது திருப்பூரிலிருந்து தயாரித்து ஏற்றுமதியாகும் ஆடைகள்,ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்குப்போன பின்னர், அங்கே உள்ள நிறுவனங்களின் அடையாளப்பெயரோடு மீண்டும் நம்மிடம் பலமடங்கு விலைகளோடு விற்பனையாகின்றன.நாமும் ‘இந்த பிராண்டு ஜீன்ஸ் தான் அணிவேன்;இந்த பிராண்டு ஜட்டி,பனியன் தான் அணிவேன்’ என்று அதிகமாக செலவழித்து பெருமையடித்துக்கொள்கிறோம்.


நமது நிலம்,நீர்,காற்று,சிந்தனை அனைத்தையும் அடகு வைத்துவிட்டோம்.பன்னாட்டு நிறுவனங்களின் தொப்பியையும் ஷீவையும் போட்டுக்கொண்டு நிர்வாணத்தோடும் பசியோடும் நிற்கிறது இந்தியா.அதை விடப்பெரியதாக நிற்கிறது ஒரு கேள்வி:

இந்தியா-
வல்லரசு நாடா?
நல்லரசு நாடா?
கொல்லரசு நாடா?


உமிக்கரி கேட்ட நண்பந்தான் என்னை இந்தியாவைப்  பார்த்து இவ்வளவு பெரிய கேள்வி கேட்க வைத்துவிட்டான்.ஆனால்,அவன் கேட்ட உமிக்கரியும்,அயோடின் கலக்காத உப்பும் கிடைக்குமா என்று தெரியவில்லை.

இது தொடர்புடைய இன்னொரு தளம்:சுதேசிதமிழ்நாடு
நன்றி:குங்குமம் பக்கம் 122,வெளியீடு14.11.2011

No comments:

Post a Comment