Monday, July 30, 2012

இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது



 இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியதுநெருங்கிய நண்பரும், சத்தீஸ்கரின் முன்னாள் கவர்னருமான ஜெனரல் கிரிஷ் சேத் அவர்கள், "அ கேஸ் ஆஃப் இந்தியா" என்ற வில் ட்யுரண்ட் அவர்களின் புத்தகம் பற்றி ஜூலை 15, கடந்த ஞாயிறன்று இந்த வலைப்பூவில் நான் எழுதியிருந்த கட்டுரை பற்றிக் கருத்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.

சேத் கூறுகிறார்:

இந்தப் பதிவு புதிய தரிசனத்தை அளிக்கிறது. இந்தியாவின் இன்றைய தலைமுறையினர் இந்த உண்மைகள் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதிகபட்சம் இந்தியா ஒரு காலத்தில் தங்க முட்டையிடும் வாத்து என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருக்கலாம். நம்முடைய பாடப் புத்தகங்கள்கூட இந்த உண்மைகளை வெளிக்கொணரவில்லை. இதை எளிமையாக வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முயற்சி இந்தப் பதிவு.
ஜெனரல் சேத்
மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான வில் ட்யூரண்டின் கடும் உழைப்பின் ஒரு சிறு துளியைத்தான் என்னுடைய வலைப்பூ பிரதிபலிக்கிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை நடத்திய விதம் "வரலாற்றின் மாபெரும் குற்றம்" என்ற ட்யூரண்டின் தீர்ப்பை நிறுவக்கூடிய உண்மைகள் இந்தப் புத்தகத்தில் நிரம்பியிருக்கின்றன. என்னுடைய இந்த வலைப் பூவைப் படிக்கும் அனைவருக்கும் இந்த முழுப் புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன். அதே சமயம், என் எழுத்துக்களை வழக்கமாகப் படிப்பவர்களுடன் இந்தச் சிறந்த புத்தகத்தின் மற்றுமொரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கல்வி மற்றும் ஆரோக்கியம் பேணுதல் ஆகிய துறைகளில் ஒரு நாட்டின் செயல்திறன் அதன் நிலையை மதிப்பிடுவதற்கான இரண்டு அடிப்படை உரைகல்கள் என இன்றைக்கு உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த்த் துறைகளைப் புறக்கணித்த அரசாங்கங்களை இந்த அளவுகோல்களின் அடிப்படையில் உலகம் எப்போதும் குறைகூறிவந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இங்கிருந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை எப்படி வேண்டுமென்றே, திட்டமிட்ட ரீதியில் அழித்தார்கள் என வில் ட்யூரண்ட் கூறுகிறார். சமூக அழிவு எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாத்தை "அ கேஸ் ஆஃப் இந்தியா" கொண்டுள்ளது. இதில் வில் ட்யூரண்ட் எழுதுகிறார்:

பிரிட்டீஷார் இந்தியாவுக்கு வந்தபோது கிராமப்புற சமூதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்ட சமுதாயப் பள்ளிகள் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கிராமப்புற சமுதாயங்களை அழித்தனர்.....

இப்போது (100 வருடங்களுக்குப் பிறகு) இந்தியாவில் 730,000 கிராமங்களும், 162,015 தொடக்கப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. 7% சிறுவர்களும் 1 ½ % சிறுமிகளும் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள், அதாவது மொத்தமாக 4%.

"1911இல் ஹிந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான மசோதாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார், அதுவும் பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது."

இதற்குப் பின் நடந்தது இன்னமும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. டுரண்ட் கூறுகிறார்:

"கல்வியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அரசு மது அருந்துவதை ஊக்குவித்தது. பிரிட்டீஷார் வந்தபோது இந்தியா போதையில் அமிழாத நாடாக இருந்தது. எளிமையான உணவு, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்த்திருத்தல் ஆகியவற்றில் "மக்களின் எளிமை" வெளிப்பட்டதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கூறினார்."

"பிரிட்டீஷாரால் முதல் வர்த்தக மையம் நிறுவப்பட்டவுடன், ரம் விற்பனைக்கென்று மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன, இந்த வர்த்தகத்தில் கிழக்கிந்திய நிறுவனம் நல்ல லாபத்தைக் கண்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அது தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதிக்கு இந்த மதுபானக் கடைகளை சார்ந்திருந்தது; மது அருந்துவதையும் விற்பனையையும் அதிகரிக்கும் வகையில் உரிமம் வழங்கும் முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன."

"கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற உரிமங்களிலிருந்தான அரசு வருமானம் ஏழு மடங்கு அதிகரித்துவிட்டது; 1922ல் ஆண்டுக்கு 60,000,000 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்காக ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்காகும்."

கேத்தரீன் மயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவுக்கு எதிரான அவதூறான நூலைக் குறிப்பிட்டு வில் டுரண்ட் எழுதுகிறார்:

ஹிந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தை ஊட்டுகின்றனர் என்று செல்வி மயோ நமக்குக் கூறுகிறார்; இந்தியா சுயாட்சிக்கு தகுதியற்றது என முடிக்கிறார்.

அவர் கூறியது உண்மைதான். அவர் கூறாமல் விட்டது, அவர் கூறியதை ஒரு நேரடியான பொய்யைவிட மோசமானது.

தாய்மார்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தினமும் தங்கள் குழந்தைகளை தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தைப் புகட்டினர் என்பதை அவர் நமக்குக் கூறவில்லை (அவர் அறிந்திருந்தும்கூட).

ஓபியம் அரசால் பயிரிடப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. மேலும், தேசிய காங்கிரஸ், தொழில்துறை மட்டும் சமூக மாநாடுகள், மாகாண மாநாடுகள், பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனை போல ஓபியமும் அரசினால் மட்டுமே விற்கப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் முக்கியமான இடங்களில் ஏழாயிரம் ஓபியம் கடைகளை பிரிட்டீஷ் அரசு நடத்திவந்தது என்பதையும் அவர் நமக்கு கூறவில்லை. மத்திய சட்டப்பேரவை 1921ல் ஓபியம் பயிரிடுதல் அல்லது விற்பனையைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அதன்படி நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது; உணவு தானியங்களைப் பயிரிடுவதற்குத் தேவைப்படுகிற இருநூறு முதல் நானூறு ஆயிரம் ஏக்கர் நிலம் ஓபியம் பயிரிடுவதற்கு அளிக்கப்பட்டது; ஒவ்வொரு ஆண்டும் இந்த போதைப் பொருள் விற்பனை மூலம் அரசின் மொத்த வருமானத்தில் ஒன்பதில் ஒரு பங்கு வருவாய் கிடைத்தது என்பது போன்ற விவரங்களையும் அவர் நமக்குக் கூறவில்லை.

இந்த அத்தியாயத்தின் நிறைவுப் பத்தியில், 1833, ஜூலை 10 அன்று (இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) லார்ட் மெக்காலே அவர்கள் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

லார்ட் மெக்காலே கூறுவதாக ட்யுரண்ட் மேற்கோள் காட்டுகிறார்:

இந்தியாவில் உள்ள கொடுங்கோல் அரசர்கள் புகழ்பெற்ற சிலரின்  லார்ட் மெக்காலேஆற்றலைக் கண்டு அஞ்சினாலும் அவர்களைக் கொல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு தினமும் போஸ்டா என்கிற ஓபியம் தயாரிப்பை அளிப்பதை வழக்கமாக்க் கொண்டிருந்தார்கள். இந்த போதைப் பொருள் அளிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனதின் ஆற்றல் அழிக்கப்பட்டு அவர்கள் பயனற்ற முட்டாள்களாகிவிடுவார்கள். வெறுக்கத்தக்க இந்தத் தந்திரம் படுகொலையைவிடவும் பயங்கரமானது. இது பிரிட்டீஷ் தேசத்தின் வழிமுறை இல்லை. மிகச் சிறந்த மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்யவும் முடக்கவும்கூடிய போஸ்டாவை இந்தச் சமுதாயத்துக்கு அளிப்பதற்கு நாம் ஒருபோதும் ஒப்புதலளிக்கக் கூடாது.
நன்றி எல்.கே. அத்வானி
thanks:tamilthamarai.com

1 comment:

  1. அன்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட நாம் இன்றும் அவர்களால்தான் ( சோனியா) ஆளப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம் . இந்தநிலை என்று மாறுமோ .

    ReplyDelete