Monday, September 21, 2009

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்




மகாவிஷ்ணுவின் பத்துஅவதாரங்களில் 3வது அவதாரமான வராக அவதாரம்(பன்றி) இந்த ஊரில்தான் நிகழ்ந்தது.முற்காலத்தில் இந்த ஊருக்கு வில்லிபுத்தூர் என்றபெயர் இருந்தது.
108 வைணவத்திருத்தலங்களில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே ஊர் இதுமட்டுமே! ஒருவர் பெரியாழ்வார்,மற்றவர் நாச்சியாரம்மன் என்ற ஸ்ரீஆண்டாள்.ஸ்ரீஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது.
வராக க்ஷேத்திரம் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பழையபெயர்களில் ஒன்று
கி.பி.முதலாம்நூற்றாண்டில் ஸ்ரீஆண்டாள் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.
மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் இங்குபிறந்ததால் இந்த ஊரில் வற்றாத பால்வளம் உண்டு.இந்த ஊரின் பாலின்சுவை மட்டுமேதனித்தன்மை வாய்ந்தது.இதிலிருந்து செய்யப்படும் பால்கோவா மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது.
ஸ்ரீஆண்டாள் கோவிலுடன் சேர்ந்தே இருக்கும் ஒரே ஒரு தனிக்கடையில் கிடைக்கும் பால்கோவா மிகவும் ருசி மிக்கது என்பது இந்தியா முழுக்க வாழும் ஆண்டாள்பக்தர்களும்,பக்தைகளும் நன்கு அறிந்த விஷயம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 3 கி.மீ.தொலைவில் வடக்கே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலின் பெயர் திருவண்ணாமலை.இங்கு மலைமீது அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீஆண்டாள் கோவிலை நோக்கிய வாறு அருள்பாலிக்கிறார்.இந்தகோவில் புரட்டாசிமாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வெளிமாவட்டம்,வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தகோடிகள் வருகைதருகின்றனர்.
அதுவும் புரட்டாசி மாதம் வரும் 3வது சனிக்கிழமை மிகவும் விஷேசம் நிறைந்தது.திருப்பதிக்கு நிகராக ஏராளமான பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றுபவர் அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள்.இந்த நாளில்விடிகாலை 2 மணியிலிருந்தே ஸ்ரீநிவாசப்பெருமாளைத் தரிசிப்பதற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருப்பர்.இந்த நாளில், இவரைத் தரிசிப்பவருக்கு செல்வ வளம்பெருகியிருக்கிறது.பெரும் கடனாளிகள்,இந்த புரட்டாசி 3 வது சனிக்கிழமையன்று இவரை தரிசித்த ஒரு வருடத்துக்குள் தனது மொத்தகடனையும் அடைத்துவிட்டவர்கள் ஏராளம்.தொழில்பார்ப்பவர்கள் இதே நாளில்தரிசித்தால்,அடுத்த ஒராண்டுக்குள் தொழிலில் பெரும் சாதனை செய்திருக்கிறார்கள்.




இந்தக்கோவிலுக்கு மிக அருகில் நரிப்பாறை என்ற இடம் இருக்கிறது.அதிகப்பிரபலமில்லாத கோவில் ஒன்று இங்கு இருக்கிறது.இங்கு,முற்காலத்தில் ஆதிசங்கரர் வந்திருக்கிறார்.இங்கு சுமார் 10 பேர் அமரக்கூடிய குகை ஒன்று இருக்கிறது.அந்த குகையின் உள்ளே ஒரு சுரங்கம் செல்கிறது.அந்த சுரங்கத்தின் வழியாக ஊர்ந்துகொண்டே சென்றால் சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ள சதுரகிரி(சித்தரின் பூமி)க்குச் சென்றுவிடலாம்.கி.பி.1979 வாக்கில் கூட சில ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்கள் இந்த சுரங்கம் வழியாக சதுரகிரிக்குச் சென்று வந்துள்ளனர்.


அமெரிக்காவின் சதியால் கி.பி.1969 ஆம் வருடத்துடன் பால்கோவா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது.(அதன்பிறகு வந்த எந்த அரசுமே நம்மைப்பற்றியும் நமது பாரம்பரியப்பெருமைகள் பற்றியும்,அதை உலகளவில் பிரபலப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாகத் தெரியவில்லை)

இங்கு,அருள்மிகு ஸ்ரீவைத்தியநாதசுவாமி சிவகாமி அம்மாள் கோவில் ராஜபாளையம் சாலையில் இருக்கிறது.இந்த கோவிலின் பெயரான ‘புதுவைத்தலம்’ என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர்களில் ஒன்று.
இங்கு,முற்காலத்தில் துர்வாசமகரிஷி வருகைதந்திருக்கிறார்.இவரது வயிற்றுவலி ஸ்ரீவைத்தியநாத சுவாமியை வழிபட்டப்பின்னர் தான் தீர்ந்தது.
இங்குள்ள ஜீரத்தேவருக்கு மிளகுப்பற்றுப்போட்டால் தீராத நாள்பட்ட ஜீரம் நீங்கும்.
இங்கு சனிபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் இங்குதான் இருக்கிறது.இதன்பெயர் பெரிய குளம்.சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பின்புறமாக அமைந்துள்ளது.முற்காலத்தில்,பெரியகுளத்தின் நீரலைகள் இக்கோவிலின் பின்பக்கமுள்ள சுவரில் மோதுவது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையானது இந்த நிலையை மாற்றி பெரியகுளத்துக்கும், ஸ்ரீவைத்தியநாதசுவாமிகோவிலுக்கும் நடுவில் மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையை உருவாக்கிவிட்டனர்.
ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயர் மடவார்வளாகம் ஆகும்.முற்காலத்தில் இங்கு தேவரடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைமையான சிவாலயமாக இது இருப்பதால் இங்கு ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் கோவிலே கொள்ளாதபடி பக்தகோடிகள் வருகைதருகிறார்கள்.
கி.பி.1875 ஆம் வருடம் பென்னிங்டன் என்ற ஆங்கிலேய கலெக்டர் தன்னுடைய பெயரால் ஒரு நூலகத்தைத்தொடங்கினார்.அது தற்போது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாக விஸ்வரூபமெடுத்து வளர்ந்துள்ளது.இங்கு,ஐ.ஏ.எஸ்.படிப்பவர்களுக்கு என தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது.இதன் இணையதளமுகவரி:www.penningtonlibrary.com
தென் தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகம் அருள்மிகு கலசலிங்கம்பல்கலைக்கழகம் இங்கிருந்து 10 கி.மீ.தொலைவில் செயல்பட்டுவருகிறது.இதன் இணையதளமுகவரி:www.kalasaling.ac.in
விருதுநகர் மாவட்டத்தின் மாவட்டநீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கிவருகின்றன.இவை சிவகாசி சாலையில் அரசு பொதுப்பணித்துறையின் மாளிகைக்கு எதிராக இருக்கின்றன.
கோவை தமிழ்நாடு அரசு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பிரிவான பருத்தி ஆராய்ச்சிமையம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகில் செயல்பட்டுவருகிறது.இங்கு எஸ்.வி.பி.ஆர்.என்ற ரகநெல்கள்கண்டுபிடிக்கப்பட்டன.
உலகிலேயே சாம்பல்நிற அணில்கள் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியில்தான் காணப்படுகிறது.இதனால்,அரசு சாம்பல்நிற சரணாலயம் இங்குள்ள செண்பகத்தோப்புப்பகுதியில் அமைத்துள்ளது.
இங்கு பனைமரங்கள் அதிகம் இருப்பதால் பனை ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.இது தற்போது செயல்படவில்லை.

தமிழ்நாடு அரசு சின்னமாக இருக்கும் கோபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் கோபுரமாகும்.இதன் உயரம்192 அடி.இந்த கோபுரத்தில் எந்த வித இந்துதெய்வங்களும் இல்லாததால் தான் இந்த கோபுரத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக்க ‘நாத்திகக்கொள்கை’கொண்ட ஜவஹர்லால் நேரு சம்மதித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மக்களின் பிரதான தொழில்களாக கைத்தறி நெசவு, தங்க நகை தயாரித்தல் மற்றும் விற்பனை,விவசாயம் இருக்கின்றன.

கி.பி.1700 களின் இறுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கோட்டை இருந்தது.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீனை ஆண்டு வந்தவர் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சங்கரன்கோவில் பகுதியில் அரசாண்ட மாவீரர் புலித்தேவன் அவர்கள் இந்த கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைத்தலைவாசல் என்ற இடமும்,கோட்டாங்கரை என்ற இடமும் தற்போது புழக்கத்தில் உள்ளதே இதற்குச் சான்று.

அரசு மருத்துவமனை,காய்கறி மார்க்கெட்,பேருந்து நிலையம் இம்மூன்றும் ஒரே இடத்தில் (விருதுநகர் மாவட்டத்திலேயே)இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே!

இதுதவிர,சிவகாசி ரோட்டில் கைகாட்டிசுவாமிகள் என்ற மகான் வாழ்ந்த இடம் தற்போது கோவிலாக இருக்கிறது.மாவட்ட நீதிமன்றம் செல்லும் சாலையில் பாம்புதின்னி சுவாமிகள் வாழ்ந்த இடம் ஆறுமுகச்சாமிகோவிலாக இருக்கின்றது.இந்த இடத்தின் இன்னொரு பெயர் பணியாரத்தோப்பு.இங்கிருந்துதான்,ஸ்ரீஆண்டாள்கோவில் கோபுரத்துக்கான சாரம் கட்டமைக்கப்பட்டிருந்தது.இன்றைய பேன் டா 1 1/2 லிட்டர் கேன் தடிமனும்,சுமார் 3 கனஅடி கொண்ட ஒரு செங்கலை இங்கிருந்து,கோபுரம் கட்டும் இடம்வரை சாரத்தின் வழியே 1 கி.மீ.தூரத்தில் கொண்டுபோய் கொடுத்தால் ஒரு பணியாரம் சம்பளமாகக்கிடைக்குமாம்.அந்த பணியாரம் தற்காலத்தில் உள்ளதுபோல சிறிதாக இல்லாமல்,மிகப்பெரியதாக இருந்ததாம்.
ஊரணிப்பட்டித்தெருவில் பொன்னாயிரசுவாமிகள் என்ற மகானும்,வெள்ளைச்சாமி என்ற மகானும் வாழ்ந்திருந்தனர்.

பணியாரத்தோப்பின் அருகே ஒரு சுடுகாடு தற்போது புழக்கத்தில் உள்ளது.இங்கு கி.பி.2002 வரை மாணிக்கம் சுவாமிகள் என்பவர் வாழ்ந்திருக்கிறார்.


முதலியார்பட்டித்தெருவில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் இருக்கிற்து.ஒவ்வொரு சிவராத்திரியன்றும் இங்கு ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் தனது கைகளால் அப்பம் சுடுகிறார்.கையில் ஒரு சிறு காயமும் ஏற்படுவதில்லை.இந்தபத்திரகாளி ஏராளமான மக்களின் வேதனைகளைத் தீர்த்துவருகிறாள்.அப்படித்தீர்ந்த வரலாற்றைத் திரட்டிவருகிறேன்.விரைவில் அதற்கென்றே,இருக்கும் தனிவலைப்பூவான(global-guardian-angel.blogspot.com)இல் படிப்படியாக வெளியிடப்படும்.இங்கு,நடைபெறும் பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டால்,மறுநாளே நமது பிரச்னைகளில் ஒன்று அல்லது இரண்டு உடனே தீர்ந்துவிடுகிறது.இது அனுபவ உண்மை.ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியன்று இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது.நிறைவாக அன்னதானமும் நடைபெறுகிறது.

தவிர,தாசில்தார் அலுவலகம் அருகே(பெட்ரோல் குடோன் அருகில்) ஒரு அம்மன்கோவில் இருக்கிறது.இங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4 மணி முதல் 7மணி வரை ஒரு பாட்டி அருள்வாக்கு சொல்கிறார்.பணம் எதுவும் வாங்குவதில்லை.
கிபி.1970 வரை 30 வருடங்களுக்கு இந்த கோவிலில் ஒரு முஸ்லீம் தாத்தா இதேபோல அருள்வாக்கு சொல்லிவந்திருக்கிறார்.

1 comment:

  1. அருமை, கல்கியை தவிர மற்ற அவதாரங்கள் எந்தெந்த ஊரில் நடைபெற்றது என்பதை கூறவும், நன்றி.

    ReplyDelete