Tuesday, January 22, 2013

குருவைத்தேடிச் சென்றதால்,பைரவரின் அருள் கிட்டியது!!!



இந்த பதிவினை எமது ஆன்மீக  குருவுக்கு சமர்ப்பிக்கிறேன்.கி.பி.2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆன்மீகத் தேடல் துவங்குகிறது;8.8.2004 அன்று எனது சொந்த ஊரில் நான் வசித்து வந்த தெருவுக்கு அருகில் ஸ்ரீபத்திரகாளியம்மனின் கோவிலுக்கு வருகை தந்தேன்;அப்போதும்,இப்போதும் எப்போதும் ஜோதிடராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.இருந்தும்கூட, எம்மை திருமணத் தரகராக ஆக்கிட பலர் முயன்றும் தோற்றுப்போயினர்;
அன்றும் அதே போலத்  தான்! அன்று காலை பதினோரு மணி வாக்கில் எனது நண்பனின் வீட்டிற்குச் சென்றேன்.அவனுக்கு இரண்டு தம்பிகள்;ஒரு தங்கை இருக்கிறார்கள்:தினமும் கைத்தறி நெசவு நெய்தால் மட்டுமே அந்த வீட்டில் அடுப்பெரியும்;அவனது அப்பா சிவப்பதவியடைந்து இரண்டு வருடமே ஆகியிருந்தது;
ஜோதிடத்தில் உண்மையை மட்டுமே சொல்லி வந்ததால்,அவனது அம்மா என்னை தனது மூத்தமகனாக எண்ணி,தனது இரண்டாவது மகனுக்கு வரன் பார்க்கச் சொல்லி ஜாதக நகலைக் கொடுத்தார்;கொடுத்து தெற்குப்பட்டியில் வரன் பார்க்கச் சொன்னார்;நானும் அவரது மனது புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜாதகநகலை வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்;ஒவ்வொரு தெருவிலும் வேண்டியவர்களை பார்த்துவிட்டு,மதியம் இரண்டு மணியளவில் தெற்குப்பட்டி என்ற முதலியார்ப் பட்டித் தெருவை அடைந்தேன்;அதுவரையிலும் பத்திரகாளியம்மன்  கோவிலுக்கு சிவராத்திரியன்று மட்டுமே வருவதுண்டு;சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் கையாலேயே=கரண்டி இல்லாமலேயே ஒரு பாட்டி அப்பம் சுடுவார்;அதைப் பார்ப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி,ராஜபாளையம்  ஊர்களிருந்து அவ்வளவு சிறிய கோவிலில்,அவ்வளவு மலைக்க வைக்கும் கூட்டம் அலைமோதும்;பக்கத்து வீட்டு மாடிகளில் இருந்தெல்லாம் அதைப் பார்க்க வருவார்கள்;அந்த நாளைத் தவிர,வேறு எந்த நாளுக்கும் அந்தக் கோவிலுக்குச் சென்றதேயில்லை;நல்ல வெயில்;இந்த பையனின் ஜாதக நகலோடு அந்த பத்திரகாளிகோவிலின் வாசலில் நின்று கொண்டிருக்க,மனதில் ஒரு எண்ணம்.சரி,கல்யாண காரியத்தை ஆரம்பிக்கிறோமே,இந்த கோவிலுக்குள் போய்விட்டு ஆரம்பிப்போமே என்று பத்திரகாளியின் கோவிலுக்குள் சென்றேன்.
கோவிலுக்குள் மூலஸ்தான திறந்தே இருந்தது;பூசாரி இல்லை;பக்தர்கள் வழிபடும் இடத்தில் சந்தனமும்,குங்குமம் இருந்தது;சந்தனத்தை எடுத்து அந்த ஜாதக நகலின் நான்கு முனைகளிலும் தடவினேன்;வெயிலின் உக்கிரத்தால் அங்கே இருந்த மின் விசிறியைச் சுழலவிட்டு சில நிமிடங்கள் அமர்ந்தேன்;கொஞ்ச நேரத்தில் அசதி போனது;மின் விசிறியை அணைத்துவிட்டு,மீண்டும் தெருவுக்கு வந்தேன்;எதிரே எனது பள்ளித்  தோழன் ஒருவனும்,அவனுடன் இன்னொருவரும் வந்தனர்;

எனது பள்ளித் தோழனிடம்,இந்த தெருவில் திருமணத் தரகர் யாராவது உனக்குத் தெரியுமா? என்று கேட்டேன்.
அவனோ,இதோ இவரும்  ஒரு திருமணத்தரகர் என்று சுட்டிக் காட்டினான்.எனக்கோ அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! அதெப்படி ஒரே ஒரு நொடியில் நாம் நினைத்தது நடக்கிறது;இது யதார்த்தமாக நிகழ்ந்ததா? இல்லை இந்த பத்திரகாளி கோவிலுக்குச் சென்றதால் நிகழ்ந்ததா? என்று எனது மனம் துணுக்குற்றது.
அவரிடம் அந்த பையனின் ஜாதக நகலை ஒப்படைத்துவிட்டு,அன்று மாலை ஐந்து மணிக்கு நானே அந்த தரகரை எனது நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன்.
ஒரே ஒரு வாரம் மட்டும் தினமும் இந்த பத்திரகாளி கோவிலுக்கு வந்தால் என்ன? என்ற எண்ணம் ஓடியது;அதன்படி,ஒரு வாரத்துக்கு தினமும் பத்திரகாளியை வழிபட்ட பின்னரே,நான் வேலைக்குப் புறப்பட்டேன்.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்ததால்,எனது முன்கோபம் குறையத் துவங்கியதை உணர முடிந்தது;எனது இந்த பலவீனத்தை தனது பலமாக்கிக் கொண்டு என்னோடு பழகியவர்களின் சுயநலமும் புரியத் துவங்கியது;எனது ரத்த உறவுகளின் உள்நோக்கமும்,அதற்கு ஏற்றாற் போல என்னிடம் அவர்கள் எப்படியெல்லாம் நடிக்கிறார்கள்? என்பதும் புரியத் துவங்கியது;எனக்கு ஒரு உளவுப்படை இருந்து அந்த உளவுப்படையின் ஒவ்வொரு வீரர்களும் என்னைச் சுற்றியிருப்பவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உடனுக்குடன் தெரிவித்தால் எப்படியிருக்கும்? அதை தெய்வத்தின் வடிவில் பத்திரகாளி செய்து வந்ததைக் கண்டு மிரண்டே போனேன்.தமிழ்நாடு அரசு முதல் அமெரிக்காவரை ஆளும் அரசுகளின் பலமே இந்த உளவுப் படைகளின் பலம்தான் காரணம்.உலகமயமாக்கலினால்,இன்று ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் தனக்கென்று ஒரு பொருளாதார உளவுப்படையை(டிடெக்டிவ் ஏஜன்ஸியை) வைத்திருக்கிறது;அவ்வளவு ஏன்? பில்கேட்ஸின் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் சர்வதேச நிறுவனமாக வளரக் காரணமே, உலகில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கென்று ஒரு பொருளாதார உளவு நிறுவனத்தை வைத்து,ரகசிய சர்வே எடுத்ததால் தான்!

அமெரிக்கா இந்த விஷயத்தில் படு கில்லாடியான நாடு ஆகும்.ஒவ்வொரு நாட்டிலும் தனக்கு ஆதரவான லாபியைக் கொண்டு அந்தந்த நாடுகளின் அரசியல் கண்ணோட்டத்தையே தனக்கு ஆதரவாக மாற்றிவிடும்;எதிரான லாபியை எந்த விலை கொடுத்தாவது விலைக்கு வாங்கிவிடும்;நடுநிலையாளர்களை தமது பக்கம் இழுத்துவிடவும் செய்யும்;இவை அத்தனையையும் நிழலாகவும்,வெளியே சிறிதும் கண்டுபிடிக்க முடியாமலும் செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும்;இதனால் தான் இந்தியாவை நேசிப்பவர்களால் இந்தியப் பிரதமர் ஆக முடிவதில்லை; நீங்கள் இதை நம்பாவிட்டாலும்,நிஜம் இதுதான்.சரி நம்ம விஷயத்துக்குள் செல்வோம்;

ஒரு வாரம் தினமும் பத்திரகாளி கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்த நான்,தினமும் பத்திரகாளியின் கோவிலுக்குச் சென்றப் பின்னரே வேலைக்குச் செல்வதை கடமையாக்கிக் கொண்டேன்.அப்போது வேறு ஒரு பூசாரி இருந்தார்;அவர் எப்போதாவது மட்டுமே கோவிலுக்கு வருவார்;பூஜையைச் செய்வதும் அரிது;அடுத்த சில மாதங்களில் எனது வாழ்க்கையில் இருந்து வந்த வேதனைகளும்,சோதனைகளும் குறையத்  துவங்கின;எப்படி என்று பார்ப்போம்:

பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பக்கத்துத் தெருவில் குடியிருந்த நான்,தினமும் காலை எட்டு மணி வாக்கில் வேலைக்குப் புறப்படுவேன்;சில நாட்களில் எனது வீட்டை விட்டுப் புறப்பட்டதும்,எனது மனதுக்குள் ஒரு செய்தி வரும்:இன்று கோவிலுக்கு வர வேண்டாம்=இதுவே அந்த செய்தி.இருப்பினும்,நாம் தான் பகுத்தறிவுக் கொழுந்தல்லவா? அந்த அளவுக்கு ஒவ்வொரு தமிழரையும்,பகுத்தறிவுப் பிரச்சாரமும்,கம்யூனிஸப்பிரச்சாரமும் அவநம்பிக்கையை நமக்குள் புதைத்திருக்கிறது; நம்மை ,நமது பக்தியை பத்திரகாளியே சோதித்துப் பார்க்கிறாள் என்றுதான் நினைத்தேன்.விடாப்பிடியாக அன்றும் பத்திரகாளி கோவிலுக்குச் சென்றேன்.கோவில் பூட்டியிருந்தது;வழக்கமாக,நான் கோவிலின் பின்புறத்தில் ஒரு சந்து வழியாக  தினமும் வருவதுண்டு;கோவில் வாசலுக்கு நேராக சென்று மெயின் தெருவை அடைந்தால்,அன்று அந்தத் தெருவில் யாராவது ஒரு முதியவர் சிவலோகப்பதவி அடைந்திருப்பார்;அவரை தெருவிலிருந்து கொண்டு செல்லும் வரையிலும் கோவிலை பூசாரியே பூட்டியிருப்பார்;இம்மாதிரியான சம்பவம் பலமுறை,பலநாட்களுக்கு நடைபெற்றிருக்கிறது;ஆனாலும்,கோவில் வாசலுக்கு வந்து,வாசலில்  இருந்தே பத்திரகாளி அன்னையை மானசீகமாக தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம்.
ஒரு வருடம் ஆனப்பின்னர்,அதாவது 8.8.2005க்குள் பத்திரகாளியிடம் எனது வேண்டுதல் முறையே மாறிப்போனது;அதுவரையிலும்,ஒவ்வொரு நாளும் , ‘தாயே,எனக்கு இன்று இந்தப் பிரச்னையைத்  தீர்த்துவை;இன்று எனக்கு இது வேண்டும்’என்று தான் வேண்டிக்கொண்டிருந்தேன்;நாட்கள் செல்லச் செல்ல,எனக்கு எதைத் தரணுமோ,அதைக் கொடு;எப்போ தரணுமோ அப்போ கொடு;எப்படி தரணுமோ,அப்படி தா என்று மட்டும் வேண்டத் துவங்கினேன்.இரண்டாம் ஆண்டு முடிந்து,மூன்றாம் ஆண்டு துவங்கும் முன்பு,8.8.2006 வரும் முன்பே இன்னும் பக்குவமாகிப் போனேன்.
அம்மா,எனக்கு எதுவும் வேண்டாம்;உனது அருட்பார்வை மட்டும் போதும் என்ற அளவுக்கு மனநிலை மாறிப்போனது;அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தார்களே இந்தக் காலத்தில் நிம்மதியில்லாமல் இருக்கும் போது,நமது அனைத்துத் தேவைகளையும் கவனித்து கொள்ளும் அன்னையிடமா இது வேண்டும்,அது வேண்டும் என்று கேட்பது என்ற அளவில் மனமுதிர்ச்சி உண்டானது;இந்த மனநிலையே சரணாகதி தத்துவத்தின் விளக்கம் ஆகும்.
8.8.2005 வந்தது;8.8.2006ஐ நெருங்கும் போது ஸ்போக்கன் இங்கிலீஷை  கற்க முடிவெடுத்தேன்;அவ்வாறு கற்று ஒரு வருடம் வரை ஒரு நிறுவனத்தின் ராஜபாளையம் கிளையின் ஸ்போகன் இங்கிலீஷ் கிளையின் பயிற்சியாளராக பணியாற்றினேன்.
அப்போது புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள்;அவர்களில் ஒருவர் தான் ஜவஹர்லால் நேரு ஆவார்.இவர் சித்த வைத்தியம்,ஜோதிடம் சார்ந்த புத்தகங்கள் மட்டும் சுமார் நான்கு லட்ச ரூபாய்கள் வரை வைத்திருந்தார்;ஒரு நாள் எனது உறவினரும்,நானும் அவரது வீட்டிற்குச் சென்றோம்;அதற்கு முன்பே அறிமுகமாகியிருந்ததால்,அவர் தனது வீட்டு நூலகத்திற்குள் செல்ல அனுமதியளித்தார்;உடன் வந்த எனது உறவினரோ அவரிடம் கதை பேசிக் கொண்டிருக்க,நானோ புதையல் கிடைத்த சந்தோஷத்தில் அனைத்து புத்தகங்களையும் அதன் உள்ளடக்கத்தையும் விரைவாக வாசித்தேன்.சுமார் மூன்று மணி நேரமாக தேடியதில் அவரிடம் இருந்த புத்தகங்களிலேயே தலைசிறந்த புத்தகமாக  ஒரு ஜெராக்ஸ் போட்ட ஸ்பைரல் புத்தகமே சிறந்ததாகத் தெரிந்தது.

அதில் முதல் பக்கத்தில் மிஸ்டிக் செல்வம் என்பவர் சிரித்த முகத்தோடு இருந்தார்;அடுத்த பக்கத்தில் ஆன்மீகத் திறவுகோல் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது;சில நிமிடங்களிலேயே இதைத்தவிர ,அவரிடம் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் என்னிடமும் இருக்கின்றன;என்பதும் மற்ற சில புத்தகங்களை என்னால் அடுத்தமுறை புத்தகக் கண்காட்சிக்கோ அல்லது புத்தகக் கடைக்கோ செல்லும்போது வாங்கிவிட முடியும் என்று தெரிந்தது;உடனே,பிற புத்தகங்களை எனது மனக்கண்ணால் படம் பிடித்துக் கொண்டேன்.

ஜவஹர்லால் நேருவிடம்,எனக்கு இந்த புத்தகம் வேண்டும் என்றேன்.அவர் ஆச்சரியமும்,பொறாமையும் கொண்ட கண்களோடு அதுக்கென்ன நாளைக்கே வாங்கிக்குங்க என்றார்.மறு நாள் அவரை சந்தித்தேன்;நேற்று கேட்டேனே? அந்த புத்தகத்தை ஜெராக்ஸ் போட்டுட்டீங்களா? என்றேன்.அடுத்த வாரம் வாங்கிக்குங்க என்றார்.அன்று புதன் கிழமை! அடுத்த புதன் கிழமை எப்படா வரும்னு காத்திருந்து,அவரிடம் நேரு சார்,அந்த புத்தகத்தை ஜெராக்ஸ் போட்டுட்டீங்களா? என்று மீண்டும் கேட்டதும் தான் அவருக்கு உறைத்தது;
அதிர்ச்சியும்,பெருமையும் கலந்த குரலில் நேரு, அந்த புத்தகத்தை வாங்காமல் விட மாட்டீங்களோ? என்றார்.
நீங்க தானே ஒரு வாரம் கழித்து தருவதாகச் சொன்னீங்க;இதோ அடுத்த புதன் கிழமை வந்துடுச்சு;அதான் கேட்டேன் என்றவாறு வழிந்தேன்.அவரோ,அதை நானே ஜெராக்ஸ் போட்டுத்தாரேன். என்றார்.
எவ்வளவு ஆகும் சொன்னீங்கன்னா அந்த பணத்தை இப்பவே தாரேன் என்றேன் படபடப்புடன்!
அவரோ,வேண்டாவெறுப்பாக, ஜெராக்ஸ் போட்டுட்டு எவ்வளவு ஆகும்னு நானே சொல்றேன் என்றார்.
நானோ விடாப்பிடியாக, ‘நீங்க கஷ்டப் பட வேண்டாம்;இந்தாங்க ரூ.நூறு.’என்று அவர் கையில் நூறு ரூபாய்த் தாளை திணித்தேன்.அவரே,அதை திருப்பிக்கொடுத்துவிட்டார்.
ஒரு வாரம் பொறுங்க என்றார்.அந்தக் குரலில் பெருமிதம் தெரிந்தது.
அடுத்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்றேன்.மதுரைக்குப் போயிருப்பதாக தகவல் வந்தது;மறுநாள் காலையிலேயே அவரை அவர் வீட்டில் சந்தித்தேன்.அவர் எரிச்சல் பட்டார்.
அந்த புத்தகத்தில் என்ன இருக்கு? இப்படி காலங்காத்தால அதக் கேட்டு வந்துட்டீங்க? என்று இரைந்தார்.
அதற்கு அவரிடம்,அன்னைக்கு அந்த புத்தகத்தை கேட்டதுக்கு நாளைக்குத் தாரேன்னு நீங்கதான் சொன்னீங்க;தரமுடியாதுனு சொல்லியிருந்தா நான் எதுக்கு இப்படி உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கப்போறேன்?! என்றேன்.
சரி,நாளைக்கு ஜெராக்ஸ் போட்டுத் தாரேன். என்றார்.நான் சிலவிநாடிகள் அவரை உற்றுநோக்கினேன்;
அவர் சட்டென தனது கோபமுகத்தை மாற்றிவிட்டு,சட்டென சிரித்தார்;நாளைக்கு கண்டிப்பாக ஜெராக்ஸ் எடுத்து தாரேன் சார் என்றார்.
நான் புறப்பட்டு போய்விட்டேன்.மறு நாள் ரூ.78/-க்கு ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தார்;அப்போது மதியம் இரண்டு மணி!
அன்று மதியத்திற்குள்ளாகவே,ஆன்மீகத் திறவுகோல் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.மாலையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்பே வாசித்து முடித்துவிட்டேன்;மாலையில் நான்கு  மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடங்களை கவனமாக நடத்திட முடியவில்லை; ஒருவழியாக இரவு எட்டு மணிக்கு இராஜபாளையத்திலிருந்து சொந்த ஊருக்குப் பயணித்தேன்;அப்படி பயணிக்கும்போது, அதில் பாதியை மனப்பாடம் செய்துவிடமுடிந்தது;
வீட்டுக்குப் போய் நள்ளிரவு ஒரு மணி வரையிலும் திரும்ப திரும்ப வாசித்தேன்;அவ்வாறு வாசித்து முடித்துவிட்டு,ஒரு  பட்டியல் தயார் செய்தேன்.இவர்கள் அனைவரும் எனது நலம் விரும்பிகள் ஆவர்.
மறுநாள்,எனது நட்புவட்டத்தில் ஒருவர் பணிபுரியும் கடையில் ஆன்மீகத் திறவுகோலைக் கொடுத்து,முப்பது பிரதிகள் எடுக்கச் சொன்னேன்.அன்று இரவே எம்மிடம் அந்த முப்பதுபிரதிகளும் வந்தடைந்தன;
அடுத்த ஒரு வாரத்தில் எமது நட்புவட்டத்தில் இருந்த அந்த முப்பதுபேர்களுக்கும் இலவசமாக அந்த பிரதிகளைக் கொடுத்தேன்.இன்றும் இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அந்த முப்பது பேர்களில் மூன்றே மூன்று பேர்கள் கூட ஆன்மீகத் திறவுகோலை ஒருமுறை கூட வாசிக்கவில்லை;அவரவர்களின் பரணில் தூங்கிக் கொண்டிருக்கிறது.பெரும்பாலானவர்கள் அப்படித்தான்; நமது ஆஸ்தான ஜோதிடர் கொடுக்கிறாரே! அதுவும் இவ்வளவு பெரிய புத்தகத்தைக் கொடுக்கிறாரே? என்ற எண்ணமெல்லாம் கிடையாது;மரியாதையும் கிடையாது;இதுபோல பல அரிய பொக்கிஷ புத்தகங்கள் தமிழ்நாட்டில் சீந்துவாரின்றி கிடக்கின்றன; ஒரு குடும்பத்தில் ஆசிரியராகப்பணிபுரிபவர்,தமிழ் ஆர்வத்தோடு(அரசியலில் தமிழ் ஆர்வம் அல்ல) இருப்பவர்கள்,ஜோதிடத்தை தொழிலாக கொள்ளாமல் ஒரு யாகமாக செய்பவர்கள்,சித்த வைத்தியத்தை தனது உயிர் மூச்சாக கொள்பவர்கள்,புத்தகப் புழுக்கள்,புத்தகத்தை சேகரிப்பவர்கள்,இறை சிந்தனையோடு  இருப்பவர்கள் என்று ஒரு பெரிய வட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது;ஆனால்,அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்த புத்தகங்களின் முக்கியத்துவமும்,பெருமைகளையும் பயிற்றுவிக்க நேரமில்லாமல் இருப்பார்கள்;எனவே,அடுத்த தலைமுறையானது அந்த பொக்கிஷ புத்தகங்களை “எடைக்கு கடையில்” போட்டுவிடுவார்கள்;இதே போல,ஒருமுக ருத்ராட்சத்தை வைத்து வழிபட்டவர்களில் பெரும்பாலானவர்களும் அதை கடைக்கு போட்டு வருவதும் நடைபெற்றுவருகிறது.

ஒருவேளை அந்த ஆன்மீகத் திறவுகோலை அந்தமூன்றுபேர்கள் மட்டுமாவது வாசித்திருந்தால்,அவர்களின் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கும்;மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் எழுதிய ஒவ்வொரு புத்தகத்துக்கும் அப்பேர்ப்பட்ட சக்தியுண்டு;என்ன செய்வது? தகுதியுள்ளவர்களுக்கே தகுதி வாய்ந்த தகவல்கள் போய்ச் சேரும்;தயாராக இருக்கும் சீடனுக்கே குரு தேடி வருவார் என்பது அனுபவ மொழி!!!
ஆன்மீகத்திறவுகோல் மூலமாக தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினேன்.மூன்று மாதங்களில் ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் சக்தியை உணரமுடிந்தது.இது தொடர்பாக ஏற்கனவே இன்னொரு பதிவு எழுதி உள்ளோம்;கடுமையான சிக்கல்கள் இருந்தபோதும்,தினமும் பத்திரகாளியை வழிபட்டு வந்ததால், மனம் நிம்மதியாக இருந்தது;ஆனால்,எதிர்பார்த்த வருமானம் இல்லை;எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை;இந்த காலகட்டத்தில் மட்டுமல்ல;எனது பதினைந்தாவது வயது முதல் யாரையும் எப்போதும் ஏமாற்றியதில்லை;தான் உண்டு;தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தும் கூட சுயநல ஓநாய்களின் பசப்பு வார்த்தைகளால் எனது முழுத் திறமையை ஜோதிடத்தின் மூலமாக வெளிப்படுத்தினேன்.இருந்தும் ஒருவித ஏக்கமும் தவிப்பும் இருந்தன; நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி மையம் நடத்துவதை எனது சொந்த ஊரில் ஒருசிலரிடம் மட்டுமே காட்டிக்கொண்டேன்;ஆனால்,அது எப்படியோ பரவி, என்னைப்போன்றே ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி மையம் ஆரம்பித்தார்கள்;அப்படி ஆரம்பித்தவர்களின் மனதில் ‘இவனே ஸ்போகன் நடத்தும் போது என்னால் நடத்த முடியாதா?’ என்ற உயர்ந்த எண்ணமே காரணம் ஆகும்.என்னைப் பார்த்து ஸ்போகன் இங்கிலீஷ் ஆரம்பித்தவர்களெல்லாம் மாதம் ரூ.75,000/-முதல் ரூ.1,25,000/-வரை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள்;ஆனால்,என்னாலோ மாதம் ரூ.10,000/-த் தாண்டிட முடியவில்லை;ஏன் இப்படி என்று பல நாட்கள் சிந்தித்ததுண்டு;நமது ஆன்மீக குரு அவர்களின் ஆசியாலும்,ஆதரவாலும் விஜயாபதியில் நவகலசயாகம் செய்தப்பின்னரே இந்த வருமான அளவு அதிகரிக்கத் துவங்கியது;குடும்பம்,நட்புவட்டம்,ஜோதிட வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் மரியாதை உருவாகத் துவங்கியது;கடுமையான கர்மாக்கள் கரைந்துவிட்டன;


இந்த சூழ்நிலையில் எனது உறவினருக்கும் எனக்கும் மனக்கசப்பு ஆறே மாதங்களில் ஏற்பட,அவரிடமிருந்தும் ஒரு வருடத்தில் பிரிந்து அற்புதமான பெயரில் தனியாக ஸ்போகன் இங்கிலீஷ் செண்டர் துவக்கினேன்.துவக்கிய சில மாதங்களில் எனது மனைவி என்னைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்தாள்;பிரிந்த கையோடு என் மீது வழக்கு தொடர்ந்தாள்;எனக்கு அரசியல் கட்சிகள் அல்லது காவல்நிலைய செல்வாக்கு அல்லது ஆன்மீகச் செல்வாக்கு என்று எதுவும் இருந்ததில்லை;எனவே,நானாகவே காவல் நிலையத்துக்குச் சென்று என் மீதான பிரச்னைகளை சந்திக்க ஆரம்பித்தேன்;இந்த சூழ்நிலையில்,அடிக்கடி அண்ணாமலைக்குச் செல்லத் துவங்கினேன்;அப்போது ஓம்சிவசிவஓம் கிரிவல மந்திரம் என்று ஆன்மீகத் திறவுகோல் புத்தகத்தில் வாசித்தது நினைவுக்கு வந்தது;கூடவே,மஞ்சள் நிற ஆடை அணிந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,அந்த மந்திர ஜபம் அந்த மஞ்சள் நிற ஆடையில் சேமிப்பாகிக் கொண்டே வரும் என்பதையும் அதே புத்தகத்தில் வேறு ஒரு இடத்தில் வாசித்தது நினைவுக்கு வந்தது;இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,விரைவான மந்திர ஜப பலன்கள் கைகூடும் என்பதும் அதே புத்தகத்தில் எழுதப்பட்டது நினைவுக்கு வந்தது;இந்த மூன்றையும் ஒன்றாக்கி அண்ணாமலை கிரிவலத்தின் போது செயல்படுத்தத் துவங்கினேன்;எனது கடுமையான சிக்கல்கள் தீரத்  துவங்கின;ஒருசில முறை அவ்வாறு செய்தப் பின்பே,ஷீர்டி சாய்பாபாவின் அருள் எனக்குக் கிடைக்கத் துவங்கியது;


இந்த ஆன்மீக வழிமுறையை எல்லோருக்கும் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிட,ஓம்சிவசிவஓம் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் பிறந்தது;அதே சமயம்,கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் என்ற ஜோதிட ஆராய்ச்சியில் இறங்கினேன்;அது மிகச் சிறிய ஜோதிட ஆராய்ச்சி! அசுபதி மற்றும் அனுஷம் நட்சத்திரம் நிற்கும் நாளில் லக்னத்தில் சந்திரன் இருக்கும் நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை ஒரே ஒருமுறை திருப்பித் தந்தாலும் அது எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அந்தக் கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும் என்பதே மைத்ர முகூர்த்தத்தின் சாராம்சம் ஆகும்.இந்த உண்மையை காலப் பிரகாசிகை என்ற புத்தகத்திலிருந்து அறிந்து கொண்டேன்.தஞ்சாவூர் சரபோஜி மஹால் நூலக வெளியீடு இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.


இன்றைய கலியுகத்தில் லக்னத்தில் சந்திரன் என்றால் பெரும்பாலான ஜோதிடர்களுக்கே தெரியாது;எனவே, அந்த நேரத்தை தேதி வாரியாக கணித்து,அதை ஒரு வாரம் கழித்து பரிசோதித்தேன்.அப்படி பரிசோதித்தவைகளை சுமார் இரண்டாயிரம் நோட்டீஸ்களாக எனது ஸ்போகன் இங்கிலீஷ் வருமானத்திலிருந்து அச்சடித்தேன்;என்னிடம் ஆங்கிலம் பயிலும் பட்டதாரி மாணவர்களையும் அழைத்துக்  கொண்டு ஒரு சனிப்பிரதோஷ நாளன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்துக்கு மாலை ஐந்து மணிக்கு வந்தடைந்தேன்;சனிப்பிரதோஷம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சிவகாசியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள்;அவர்களுக்கு எனது மாணவர்களோடு சேர்ந்து நானும் இருந்து விநியோகம் செய்தேன்.இரண்டாயிரம் நோட்டீஸ்களில் ஒன்று கூட கீழே விழவில்லை; அதே சமயம்,நோட்டீஸ்களின் எண்ணிக்கையை விடவும் சனிப்பிரதோஷத்துக்கு வருகை தந்திருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது;எனவே, எனக்கு வருத்தம் உண்டானது;இவர்களின் எத்தனை பேர்களுக்கு இந்த செய்தி போகவில்லையோ? என்ற வருத்தமே அது!!!

இந்த மைத்ரமுகூர்த்த நோட்டீஸானது  பல ஊர்களுக்குப்பரவியது;அதை பலர் ஜெராக்ஸ் எடுத்துப்பயன்படுத்தத் துவங்கினர்;அப்படி ஜெராக்ஸ் எடுத்து பரவியதில்,ஒரு காப்பி சென்னைக்குச் சென்றது;அந்த சென்னைப் பிரதியின் ஒரு நகல் எனது ஆன்மீக குருவாக வந்தடைந்தது;அவர் வாழ்ந்து வருவதோ திருநெல்வேலி மாவட்டத்தில்! ஆமாம்,சென்னையிலிருந்து திருநெல்வேலிமாவட்டத்துக்கு மைத்ர முகூர்த்த நகல் வந்து சேர்ந்தது;நாம் செய்யும் ஒரே ஒரு சிறு நல்ல செயல் கூட நம்மை நமக்குப் பொருத்தமான ஆன்மீக குருவிடம் ஒப்படைத்துவிடும் என்பதற்கு இந்த ஒரு சிறு சம்பவமே சாட்சி ஆகும்.


ஒரு வருடத்தில் சுமார் பதினைந்துமுறை நமது ஆன்மீக குருவை சந்தித்து, பேசி,விவாதித்து,இவரே நமது வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி என்பதை உணர்ந்தேன்;இவரை சந்திக்கும் முன்பு,இவரைப் போல பலரை கடந்த பத்து ஆண்டுகளில் சந்தித்து இருக்கிறேன்;அவர்களைப்பற்றி பலருக்கு பரிந்துரைத்தும் கூட,அவர்கள் என்னிடமிருந்து அல்லது என் மூலமாக பணம் சம்பாதிக்கவே பார்த்தார்கள்;அதே சமயம்,எனக்கு பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசினார்கள்;எனக்கு நான் வாழும் பகுதியில் கெட்டபெயரே ஏற்பட்டது;அந்த ஆன்மீக குருக்கள் எனக்கு ஒரு சிறு உதவியும் செய்யவில்லை; எனது பிரச்னைதீர முயற்சி செய்ய வில்லை; என்பதே உண்மை;ஆனால்,எந்த வித பண எதிர்பார்ப்பும் இல்லாமலும்,எந்த வித மறைமுக எதிர்பார்ப்பும் இல்லாமலும் எனது பிரச்னைகளை செவிமடுத்து கேட்டு,அதற்கு உரிய ஆன்மீகம் கலந்த ஜோதிட வழிகாட்டுதல்களை காட்டிக் கொண்டே இருந்தார்;விளைவு? ஓரே ஆண்டில் நிரந்தரப் பிரிவின் வாசலில் நின்று கொண்டிருந்த நானும்,என் மனைவியும் ஒன்று சேர்ந்தோம்;இதன் மூலமாக அப்பா பாசத்திலும்,கட்டுப்பாட்டிலும் வளரும் ஒரு அவசியமான சந்தர்ப்பம் எனது குழந்தைகளுக்கு உண்டானது;

எனது ஐந்து தலைமுறை முன்னோர்கள் செய்த கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத கர்மவினைகளை தீர்க்க வழிமுறையை சொல்லிக்  கொடுத்தார்;அதுமட்டுமல்லாமல்,அந்த வழிமுறையை முறையாகவும்,சிரத்தையாகவும் செய்கிறேனா? என்பதையும் கண்காணித்து என்னை நெறிப்படுத்தினார்;தேவைப்படும் போது கன்னாபின்னாவென்று திட்டித் தீர்க்கவும் செய்தார்;அந்த வழிமுறைகளைச் செயல்படுத்தியப் பின்னர்,எனது மன உளைச்சல் மட்டுமல்ல;ஆத்ம உளைச்சல்களும் முழுமையாகத் தீர்ந்தன;ஒரு பரிபூரண ஆத்மார்த்த நிம்மதியை உணரத் துவங்கினேன்;இவரை,இவரது ஆன்மீக வழிகாட்டுதல்களை இன்னும் பல ஆயிரம் பேர்கள் பின்பற்ற வேண்டும் என்ற வேட்கை எனக்குள் உருவானது;


தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பைரவ சன்னதிகள்,ஆலயங்களைத் தேடி எனது பயணங்கள் ஆரம்பமாகின;அதற்கு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் எழுதிய பைரவ விஜயம் என்ற சிறு புத்தகமே தூண்டுகோலாக இருந்தது;மிஸ்டிக் செல்வம் ஐயாவின் எழுத்துக்களால்,அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் பதிமூன்று கி.மீ.தூரத்தில் இருக்கும் காகா ஆஸ்ரமத்துக்கு அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தேன்;காகா ஆஸ்ரமத்தின் அதிபதி கொல்லிமலை சித்தர் காகபுஜண்டர் தருமலிங்கசுவாமிகள் ஆவார்;அவர் எழுதிய பைரவ ரகசியம் என்ற புத்தகத்தை இதுவரை சுமார் நூறு பேர்களுக்கு வாங்கி பரிசளித்திருப்பேன்;அதே சமயம் அந்த புத்தகம் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியது;இது வரை அந்த சிறு புத்தகத்தை இருநூறு முறை வாசித்திருப்பேன்;அதன் விளைவாக ஸ்ரீகால பைரவர் சிவலிங்க வடிவத்தில் இருந்து அருள்பாலித்து வரும் அஷ்டவீரட்டானங்களுக்குச் செல்ல முடிவெடுத்தேன்;


மயிலாடுதுறைக்குச் சென்று,அங்கிருந்து மூன்று நாட்கள் தங்கி,வழுவூர்,கொறுக்கை,பரசலூர்,திருவிடைமருதூர் என்று நான்கு வீரட்டானங்களை தரிசித்தேன்;ஒவ்வொரு ஆலயத்தினுள்ளும் நுழையும் போது என்னை ஸ்ரீகால பைரவர் மறைந்திருந்து கவனிக்கிறாரோ? என்று பயந்தேன்;அது உண்மைதான் என்பதை உணர்ந்தேன்;இந்த நான்கு ஊர்களில் ஒரே ஒரு ஊரில் இருக்கும் வீரட்டானத்துக்குள் நுழைந்ததும்,எனக்குள் ஒரு பயங்கரமான மின்னல் தாக்கிய உணர்வு ஏற்பட்டது;சில நொடிகள் மயக்கமாகிவிட்டேன்;சுயநினைவுக்கு வந்தப் பின்னர்,இதுவரை அதற்கான காரணம் தெரியவில்லை;முனைவர் சிவப்பிரியா அவர்கள் சிவாலயங்கள் பற்றியும்,சைவ சமயம் பற்றிய பல உண்மைகளையும் அவரது புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்;அவரது அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிட்டு,மீதி வீரட்டானங்களுக்கும் சென்று தரிசிப்பது என்பதை முடிவெடுத்தேன்.

அவ்வாறு வீரட்டானங்கள் அனனத்திற்கும் சென்றுவந்ததும்,பிரிந்திருந்த எனது சகோதரி என்னிடம் மனப்பூர்வமாகப் பேசத் துவங்கினாள்;பெரும்பாலான புத்தகங்களில் அட்டவீரட்டானங்கள் எட்டையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால்,பைரவர் அருள் கிட்டும் என்று பலர் தமது புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள்.ஆனால்,நடைமுறையில் ஒரு நாள் அல்ல;இரண்டு நாட்களில் கூட அட்டவீரட்டானங்கள் எட்டையும் சுற்றிப் பார்க்க முடியாது என்பதுதான் நிஜம்.ஒருநாளுக்கு இரண்டு வீதம் நான்கு நாட்களில் அட்டவீரட்டானங்களையும் சுற்றிப் பார்த்துவிட முடியும் என்பதே நிஜம்.அப்படியே சுற்றிப் பார்த்து அட்டவீரட்டானங்களின் வீரட்டேஸ்வரர்களைத் தரிசிக்க நிச்சயமாக  காரில் தான் பயணிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அட்டவீரட்டானங்களுக்குப் புறப்பட வேண்டும்;அவ்வாறு புறப்பட்டால் தான் ஒரு நாளுக்கு இரண்டு வீரட்டானங்களுக்குச் செல்ல முடியும்!


தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இருக்கும் முதல் வீரட்டானம் திருக்கண்டியூர் ஆகும்.இங்கிருந்து இரண்டாவது வீரட்டானமாகிய திருக்கோவிலூருக்குச் செல்ல ஒரு  நாள் ஆகிவிடும்.இங்கிருந்து சாலை வழியே அடிக்கடி போக்குவரத்து வசதிகள் இல்லை;ஆனால்,சாலை வசதி இருக்கிறது.காலை ஆறு மணிக்கு திருக்கண்டியூர் சென்றால்,மாலை ஏழு மணிக்கு வாகனவசதி  இருந்தால் மட்டும் திருக்கோவிலூருக்குச் சென்று விடலாம்.


மூன்றாவது வீரட்டானமாகிய திருவதிகையானது பண்ருட்டியில் அமைந்திருக்கிறது.இங்கே இரண்டாம் நாள் அதிகாலையில் வந்தடைந்தால்,இங்கிருந்து மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் பரசலூர் எனப்படும் திருப்பறியலூருக்குச் செல்ல அன்று இரவு ஆகிவிடும்.திருப்பறியலூர் என்ற பரசலூர் நான்காவது வீரட்டானம் ஆகும்.


மயிலாடுதுறையில் தங்கி,மறுநாள் அதிகாலையில் திருவாரூருக்குச் செல்ல வேண்டும்;திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் பயணித்தால்,ஒரு கிராமத்துப் பாதையை கவனமாக விசாரித்துச் சென்றடைந்தால் ஐந்தாவது வீரட்டனமாகிய திருவிற்குடி என்ற விற்குடியை அடையலாம்;அங்கிருந்து மீண்டும் மயிலாடுதுறைக்குத் திரும்பி வந்தால்,மயிலாடுதுறைக்கு எட்டு கி.மீ.தூரத்தில் ஒரு கிராமத்துச் சாலையில் திரும்பி உள்ளே சென்றால் ஆறாவது வீரட்டனாமான வழுவூரைச் சென்றடையலாம்.அவ்வாறு வந்து சேரும்போது இரவு அல்லது மாலை நேரமாகிவிடும்.


அன்று இரவும் மயிலாடுதுறை என்ற மாயவரத்துக்கு வந்து தங்கிவிட்டு,மறுநாள் அதிகாலையில் புறப்பட்டால் அருகில் இருக்கும் ஏழாவது வீரட்டானமாகிய திருக்குறுக்கை என்ற கொறுக்கையை அடையலாம்;அங்கிருந்து புறப்பட்டால்,திருக்கடவூர் என்ற திருக்கடையூரை(எட்டாவது வீரட்டானம்) மதியம் அல்லது மாலை நேரத்தில் வந்தடையலாம்.


ஒரே ஒரு முறை இந்த அட்டவீரட்டானங்களுக்கும் ஒருவர் சென்று வந்துவிட்டால்,அவர் இதுவரை எத்தனை மனிதப்பிறவி எடுத்திருக்கிறார்? எந்ததெந்த மனிதப்பிறவியில் என்னென்ன புண்ணியச் செயல்கள் மற்றும் பாவச் செயல்கள் செய்தார்? என்பதையும் தாமாகவே அறிந்து கொள்வார்.தனது மனிதப்பிறப்புகளின் ஒட்டுமொத்த ரகசியத்தையும் அவர் அறிந்துகொள்வார்;இதன் மூலமாக அவரால் இந்த பிறவியிலேயே சித்தராக முடியும் என்பது குருவாக்கு ஆகும்.


மேலும்,நாம் ஏன் இன்னும் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேறாமல் இருக்கிறோம்? அதற்கு நமது எந்த முன்வினை தடுக்கிறது? என்பதையும் இந்த அட்டவீரட்டானப்பயணத்தின் போது உணர்ந்து கொள்ளலாம்.மேலும்,நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களும்,இந்த பிறவியோடு முக்தியை அடைந்துவிடவேண்டும் என்ற  வேட்கையோடு இருப்பவர்களும்,தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்தவர்களும் மட்டுமே இந்த அட்டவீரட்டானங்கள் அனைத்திற்கும் பயணிக்க முடியும்.அவ்வாறு பயணிக்கும்போது,ஏதாவது ஒரு வீரட்டானத்திற்குள் நுழைந்ததும்,உங்களை மறந்துவிடுவீர்கள்;உங்களது மனதிற்குள்/ஆத்மாவிற்குள் ஒரு வித தெய்வீகத் திருப்புமுனையை  உணருவீர்கள்.அந்த திருப்புமுனையை ஒருபோதும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாது;ஏனெனில் ,அது உங்களது பல பிறவிகளின் தொகுப்பிலிருந்து உருவாக்கப்பட்ட இறுதியான பூர்வபுண்ணிய ஆசிர்வாதம் ஆகும்.இந்த ஆசிர்வாதத்தை அப்படியே பைரவ வழிபாட்டிற்கு திருப்பிவிட்டால்,இந்த ஜன்மத்திலேயே நீங்கள் சித்தர்தான்!


ஸ்ரீகாலபைரவரின் அருள் இருந்தால்,ஒரேநாளில் அட்ட கர்மாக்களிலும் தேர்ச்சி பெறமுடியும்.இந்த நிலையை எட்டியவர்  கொங்கணசித்தர் ஆவார்.நாமும் ஸ்ரீபைரவர் வழிபாட்டை பின்பற்றி மறு பிறவியில்லாத  முக்தியை அடைவோம்.

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் காலபைரவாய போற்றி
ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. அத்தனையும் அனுபவ முத்துக்கள் அண்ணா...
    அம்முத்துக்களை எங்கள் நல்வாழ்விற்காக மாலையாக தொடுத்துருக்கிறீர்கள்...
    ஆத்மார்த்தமான நன்றிகள்...

    ReplyDelete
  2. dear sir

    supper thanks for your advice and articles

    please puplish aanmiga thiravukol and bairava vijayam books

    ReplyDelete
  3. அய்யா,
    வணக்கம் மிஸ்டிக் செல்வம் அய்யாவின் புத்தகங்களை வாங்க விரும்புகிறேன் , சென்னையில் வசிக்கிறேன் எங்கு வாங்கமுடியும் என்று கூறவும் .
    நன்றிகளுடன் , பாலாஜி

    ReplyDelete