Wednesday, January 23, 2013

மூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.சுந்தர்ராஜன்,ஸ்ரீவி)



இன்றைய கால சூழ்நிலையில் மூட்டுவலி அநேக நபர்களை அவதிக்குள்ளாக்குகிறது;நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரை இந்த வலி தாக்க ஆரம்பித்துவிட்டது.பல இளைஞர்களுக்கும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இது ஒரு வியாதியே அல்ல;உடலில் கால்சிய சத்து ஏற்கும் நிலை குறைய ஆரம்பித்தால் மூட்டுக்களில் வலி வர ஆரம்பிக்கிறது;எலும்புகளின் வலிமைக்கு சுண்ணாம்புச்சத்து அவசியம்;நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கால்சிய சத்தை தங்களுக்கு வேண்டிய சத்தை கிரகித்து, மீதி அதிகமாக உள்ளவைகளை எலும்புகள் சிறுநீரிலிருந்து வெளியேற்றிவிடுகிறது.அப்பொழுது நம் உடம்பிலுள்ள எலும்புகள் வலு இழக்க ஆரம்பிக்கின்றன;எலும்பின் வலு குறைய ஆரம்பிக்கின்றன;எலும்பின் வலு குறைய ஆரம்பித்த உடன்,அநேகருக்கு லேசாக தடுக்கினாலும் எலும்புமுறிவு ஏற்பட காரணமாகிறது.எலும்பின் சக்தி குறைந்தவுடன் எழுந்து நிற்கும் நிலையிலும், நடக்கும் நிலையிலும் நம் உடலின் எடையைத் தாங்க முடிவதில்லை;வலி ஏற்படுகிறது.நம் உடலின் பாரத்தை பாதமும்,முட்டியும் தான் தாங்குகின்றன;உட்காரும் பொழுதும்,எழுந்து நிற்கும் பொழுதும் கால் முட்டியின் பாரம் தாங்காமல் வலிக்க ஆரம்பிக்கின்றன.நீண்ட நேரம் நிற்பதால் பாதங்கள் வலிமை இழந்து தாங்க முடியாத வலியை உண்டாக்குகின்றன.ஆறு அடி உயரத்திற்குள் இருப்பவர்கள் , அறுபது கிலோ எடைக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.ஆறு உயரத்திற்கு மேல் இருப்பவர்கள் ஐந்து கிலோ எடை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம்.அறுபது கிலோ எடைதான் சதாரணமாக எல்லோருக்கும் இருக்க வேண்டிய சராசரியாக இருக்கும் எடை. இந்த எடைதான் நம் எலும்புகள் தாங்கும் சக்தி உள்ள எடை.இதற்கு மேல் போனால் நிச்சயம் உட்காருவதில்,எழுந்திருப்பதில் வலி ஏற்படும்.மூட்டுவலி வருவதற்கு உடல் எடை அதிகமும் ஒரு காரணமே.உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமான வேலையாக இருக்கிறது.உடல் எடையை எவ்வாறுதான் குறைப்பது என்று கேட்பது எனக்குத் தெரிகிறது! அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன;உணவுப் பயிற்சி,லேசான உடல் பயிற்சி,வெந்நீரில் நல்ல தேனை விட்டு,காலையும் மாலையும் அருந்துவது,மாவுப்பொருட்கள்,நெய்,வெண்ணெய்,ஐஸ்க்ரீம் போன்ற பொருட்களை ஒதுக்குவது தான்.உணவுக் கட்டுப்பாடு,தியானம் முதலியவைகளால் குறைத்து விட முடியும்.


மூட்டுவலி வருவதற்கு நாம்தான் முக்கியமான காரணமாக இருக்கிறோம்.மூட்டுவலி ஒரே நாளில் வந்துவிடுவதில்லை;
சரித்திர காலத்தை அளவிடுவதற்கு கி,மு; கி.பி. என்று குறிப்பிடுவார்கள் வரலாற்று ஆசிரியர்கள்;அது போல் மூ.மு., மு.பி., என்று இரண்டு நிலைகளை மூட்டுவலிகளிலும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. மூட்டுவலிக்கு வருவதற்கு முன், மூட்டுவலி வந்தப்பின் என்று இந்த இரண்டு நிலையிலும்,மூட்டுவலி வந்தபிறகு சிகிச்சை செய்து கொள்வது சிறிது கால தாமதம் ஏற்படும் காலதாமதாமானாலும் முறையான வழிகளை கடைபிடித்தால் வெகு விரைவில் மூட்டுவலியிலிருந்து நிவாரணமடையலாம்.
கடந்த காலத்தில் நான் பள்ளியில் படித்த பொழுது வகுப்பிற்கு காலதாமதமாக வந்த மாணவனை,அந்த வகுப்பு ஆசிரியர் இருபது தடவை தோப்புக் கரணம் போட்டுவிட்டு வகுப்பிற்குள்ளே போ என்று கூறுவார்.வகுப்பில் குறும்பு செய்த மாணவனை, பத்துநிமிடம் முட்டிக்கால் போடு என்று கூறுவார்.மாணவர்களுக்கு அது தண்டனையாக இருந்தாலும் அது உடலுக்கு உரமூட்டும் நல்ல பயிற்சிதான்.அதே போல் நீங்களும் காலையிலும், மாலையிலும் பத்து தோப்புக்கரணமும்,இரண்டு நிமிட நேரம் வஜ்ரா ஆசனமும்( முட்டி மடக்கிப் போடுதல்) போட்டு வந்தால் முட்டிவலி ஏன் வரப்போகிறது?

நமக்குத்தான் லேசாக மூட்டுவலி ஆரம்பித்த உடனேயே தரையில் உட்காருவதில்லை;நாற்காலியில் உட்கார ஆரம்பித்துவிடுகிறோம்.மேஜையில் உணவருந்துதல், கட்டிலில் படுத்தல்,மேடைக் கழிப்பறையைப் பயன்படுத்துதல் என்று கால்களை முழுவதும் மடக்கி விரியாத நிலைக்குச் செய்து விடுகிறோம்.நீண்ட நாட்களாக மூடாத கதவு ஒரு நாள் மூடும்பொழுது எவ்வளவு சிக்கல் ஏற்படுமோ,அதே சிக்கல் நம் முட்டிக்காலுக்கும் ஏற்படுகிறது.வலி அதிகமாகிவிடுகிறது.பிறகு ஏகப்பட்ட வைத்தியம் செய்கிறோம்.ஒன்றும் கேட்பதில்லை;அவதிப்படுகிறோம்.
முன்பெல்லாம் காலையிலும்,மாலையிலும் கோவிலுக்குச் சென்றால் மூன்று தோப்புக்கரணமாவது போடுவோம்;தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வோம்;நமது உடலின் முன்புறம் உள்ள எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து மூன்று முறை வணங்குவோம்;இதெல்லாம் நமது மூட்டுவலியாக இருப்பதற்கு மறைமுகமாகத் தடையாக இருந்தது.தற்காலத்தில் நாம் கோவிலுக்குப் போவதில்லை;பிள்ளையாருக்குத் தோப்புக்கரணமும் போடுவதில்லை;கீழே விழுந்து வணங்குவதும் இல்லை;அப்படியே கோவிலுக்குப்  போனாலும் தலையை மட்டும் முன்னால் ஆட்டி, தோப்புக்கரணம் போடுவதாக பாவனை செய்கிறோம்.கீழே விழுந்தும் நமஸ்காரம் செய்வதில்லை;அதற்குப் பதிலாக இரு கன்னங்களிலும்,நின்றபடி லேசாக விரல்களால் தொட்டுக் கொள்கிறோம்.


டாக்டர் சுஸ்லர் என்பவர் உடல் உறுதிப்பாட்டிற்கும்,நன்கு செயல்படுவதற்கும்,பனிரெண்டு விதமான தாது உப்புக்களே காரணம் என்று கண்டறிந்துள்ளார்.இந்த பனிரெண்டு விதமான தாது உப்புக்களில் ஏதாவது ஒன்று உடலில் குறைந்தாலும் அது சம்பந்தமான வியாதி ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.அந்த தாது உப்பை உடலுக்கு கொடுத்து,ஏற்றுக்கொண்டவுடன் அந்த வியாதி நீங்குகிறது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தார்.தாது உப்புக்கள் ஆறு எக்ஸ் என்ற அளவில் தான் உடலால் உட்கிரகிக்கப்படுகிறது.இந்த பனிரெண்டு தாது உப்புக்களும் பயோகெமிஸ்ட்ரி என்ற பெயரில் உள்ளன.கல்கேரியா பாஸ்பாரிகம் ஆறு எக்ஸ் என்ற தாது உப்பு எலும்புகள் வலுவடைய பயன்படுகிறது.காலை,மதியம் இரவு வேளைக்கு நான்கு மாத்திரைகளை வாயில் இட்டுச் சுவைத்தால் உமிழ்நீரில் கலந்து உட்சென்று எலும்புகளால் உட்கிரகிக்கப்படுகிறது.பதினைந்து நாட்கள் உட்கொண்டால் போதுமானது.எலும்பினால் உட்கிரகிக்கப்பட்டால்,எலும்புகள் வலிமையடைந்து வலிகள் குறைய ஆரம்பிக்கும்.பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஆகாரத்தில் உள்ள கால்சியம் சத்தை கிரகிக்க ஆரம்பித்து வலி குறைந்துவிடும்.


மேலும் நீங்கள் லேசான உடற்பயிற்சி செய்துவந்தால் உடலில் வலு ஏற்படும்.இரவில் படுக்கும் முன் கால்களை நீட்டிய நிலையில் வைத்துக் கொண்டு,உங்கள் வலது  கையின் கட்டைவிரல்,நடுவிரலால்,வலது கால் முட்டியின் மேல்பகுதி,கீழ்ப்பகுதி,பக்கவாட்டில் விரல்களால் இரண்டு நிமிடநேரம் முன்னும்பின்னும், மேலும் கீழும் அழுத்தம் கொடுங்கள்;வலிவரும்படியாக அழுத்தமாக அழுத்தக் கூடாது.
இதே மாதிரி காலையில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, இரவு செய்த மாதிரியே செய்து, கால்களை மேலும் கீழும்,பக்கவாட்டில் லேசாக அசைத்துவிட்டு படுக்கையை விட்டு எழுந்து நடங்கள்;ஒரு மாதத்திற்குள்ளாகவே உங்கள் மூட்டுவலி குறைந்து பழைய நல்ல நிலைக்கு வந்துவிடுவீர்கள்.நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்;நம்பிக்கை நம்மை வாழ வைக்கும்.


நல்லாசிரியர் வி.சுந்தரராஜன் அவர்கள் சொல்லியிருக்கும் இந்த மருத்துவக்குறிப்பு பல லட்சம் ஆண்டுகளாக நமது முன்னோர்களின் அனுபவ உண்மை ஆகும்.இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிங்கமாடத்தெருவில் வசித்து வருகிறார்.இவர் ஆசிரியராக இருந்த போதும்,தற்போதும் இதுபோன்ற மருத்துவக்  குறிப்புக்களை சொந்தச் செலவில் அச்சடித்தும்,பல மருத்துவ மாத இதழ்களில்(ஹானிமன்,மாற்றுமருத்துவம்) எழுதியும் மக்கள் சேவை செய்து வருகிறார்.பலருக்கு நோய்களைத் தீர்த்தும் வருகிறார்.ஆனால்,எதற்கும் பணம் வாங்குவதில்லை;இவரைப் போன்ற சேவையாளர்கள் இருப்பதால்தான் நமது நாட்டில் கொஞ்சமாவது தர்மம் நீதி நியாயம் இருக்கிறது;ஓரளவாவது மழை பெய்கிறது.இவரது சேவைக்கு தலைவணங்கி,இந்த அனுபவக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிப்பதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.முடிந்தால் இவரது பேட்டிகள் விரைவில் நமது யூ ட்யூப் சேனலில் எதிர்பார்க்கலாம்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment