Showing posts with label 63 நாயன்மார்கள். Show all posts
Showing posts with label 63 நாயன்மார்கள். Show all posts

Friday, October 26, 2012

63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்!!!





1.தில்லைவாழ் அந்தணர்:தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள்
2.திருநீலகண்டர்:சிவனடியார்களுக்குத் திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர்
3.இயற்பகையார்:இல்லையென்னாது எதையும் அளித்தவர்.தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
4.இளையான்குடி மாறர்:வறுமையிலும்,நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்
5.மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டவர்.
6.விறன்மிண்ட நாயனார்:தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும்  பகைத்த வேளாளர்.
7.அமர்நீதி நாயனார்:அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி,மக்கள்,சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
8.எறிபத்த நாயனார்:கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக்(பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்.
9.ஏனாதிநாயனார்:திருநீற்றின் பொலிவைக் கண்டு அதிசூரனைக் கொல்லாமல் தாமே இறந்தவர்.
10.கண்ணப்ப நாயனார்:சிவபெருமானுக்குத் தம் கண்களையும் கொடுத்த வேடுவர்.
11.குங்கிலியக் கலய நாயனார்:நாள் தோறும் சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
12.மானக் கஞ்சாற நாயனார்:தம்மகளின் நீண்டகூந்தலைச் சிவனடியாரின் பஞ்சவடிக்காக அளித்த வேளாளர்.
13.அரிவாட்டாய நாயனார்:பூசைப் பொருட்கள் தவறித் தரையில் உள்ள நில வெடிப்பில் சிந்தியமையால் தம் ஊட்டியைத் தாமே அறுக்க முனைந்த வேளாளர்.
14.ஆனாய நாயனார்:பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
15.மூர்த்தி நாயனார்:சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்கு காப்பிட முனைந்த வணிகர்.
16.முருக நாயனார்:மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருப்பணியில் ஈடுபட்ட மறையவர்.
17.உருத்திர பசுபதி நாயனார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
18.திருநாளைப் போவார் நாயனார்: பறையர் குலத்தில் தோன்றிய நாயன்மார் இவர்.தில்லை சிதம்பரத்தில் தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
19.திருக்குறிப்புத் தொண்டர்:சிவனடியார்களின் ஆடைகளின் அழுக்கு நீக்கி உதவியவர்.
20.சண்டேசுவர நாயனார்;சிவபூசைக்கு பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் காலை வெட்டிய மறையவர்.
21.திருநாவுக்கரசு சுவாமிகள்:சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர்.புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர்.
22.குலச்சிறை நாயனார்:பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
23.பெருமிழலைக் குறும்ப நாயனார்:சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
24.காரைக்காலம்மையார்:இறைவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றவர்.
25.அப்பூதியடிகளார்:திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்ற அந்தணர்.
26.திருநீல நக்க நாயனார்:திருஞான சம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
27.நமிநந்தியடிகள் நாயனார்:சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
28.திருஞான சம்பந்தர்:ஞானப்பால் உண்டவர்;தேவாரம்பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர்.
29.ஏயர்கோன் கலிக்காம நாயனார்:சுந்தரர் சிவபெருமானைத் தூது அனுப்பியதால் அவரைப்பகைத்து,பின்னர் சூலை நோய் அடைந்து சுந்தரரின் தொடர்பைப்பெற்ற வேளாளர்.
30.திருமூல நாயனார்:திருமந்திரம் பாடிய சித்தர்.
31.தண்டியடிகள் நாயனார்:திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.
32.மூர்க்க நாயனார்:சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
33.சோமாசி மாற நாயனார்:சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
34.சாக்கிய நாயனார்:நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்.
35.சிறப்புலி நாயனார்:திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.
36.சிறுதொண்ட நாயனார்:இல்லை என்று கூறாமல் பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.
37.கழறிற்றறிவார் நாயனார்:உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளனைச் சிவவேடத்தை நினைவூட்டியதாக வணங்கியவர்.
38.கணநாத நாயனார்:திருஞான சம்பந்தரை வழிபட்டுத் திருக்கையிலையை அடைந்த மறையவர்.
39.கூற்றுவ நாயனார்:நடராசப் பெருமானின் திருவடியே தம் மணி முடியாக வழிபட்டவர்.
40.பொய்யடிமையில்லாத புலவர்:சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
41.புகழ்ச் சோழ நாயனார்:தாம் வெட்டிய பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
42.நரசிங்கமுனையரைய நாயனார்:போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டிய பெருந்தகையார்.
43.அதிபத்த நாயனார்:நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப்படைத்த மீனவர்.
44.கலிக்கம்ப நாயனார்:சிவ வேடங்கொண்ட பணியாளனையும் வழிபட்டவர்.மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
45.கலியநாயனார்: எண்ணெய்யும் விறகும் இல்லாத போது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து ஓளி உண்டாக்கிய வாணியர்.
46.சத்தி நாயனார்:சிவனடியார்களை இகழ்ந்தவர் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
47.ஐயடிகள் காடவர்கோன் நாயனார்:ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு “க்ஷேத்ரத் திருவெண்பா” என்னும் நூலை இயற்றியவர்.
48.கணம்புல்ல நாயனார்:கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபத் திருப்பணிபுரிந்தவர்.நெய் இல்லாததால் தலைமயிரையே எரித்தவர்.
49.காரி நாயனார்: “காரிக் கோவை” என்னும் நூலை இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ்ப் பணி புரிந்தவர்.
50.நின்ற சீர் நெடுமாற நாயனார்:சமண சமயத்தவராக இருந்து திருஞான சம்பந்தரால் சைவ சமயத்துக்கு மாறியவர்.
51.வாயிலார் நாயனார்: சிவபெருமானுக்கு மனத்தினாலேயே திருக்கோவில் அமைத்து திருமஞ்சனம் தூபதீபம் செய்து வந்த வேளாளர்.
52.முனையடுவார் நாயனார்:கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு வழங்கிய வேளாளர்.
53.கழற்சிங்க நாயனார்: பூமண்டலத்தின் கீழே இருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
54.இடங்கழி நாயனார்:தம் செல்வத்தையும்,அம்பாரத்தையும் சிவனடியார்கள் கொள்ளை கொள்ள விட்டுவிட்ட ஒரு குறுநில மன்னர்.
55.செருத்துணை நாயனார்:கழற்சிங்கரின் மனைவி பூமண்டலத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கையறுத்த வேளாளர்.
56.புகழ்த்துணை நாயனார்:பஞ்ச காலத்தில்,சிவபெருமானின் திருவருள் கிடைத்து அதனால் நாள் தோறும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்.
57.கோட்புலி நாயனார்:சிவபெருமானுக்குப்படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தாரைக் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
58.பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
59.பரமனையே பாடுவார்:சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள்,பிற தெய்வத்தைப் பாடாதவர்கள்(அந்த அளவுக்கு சிவபெருமான் மீது அளவற்ற பக்தி!!!ஸ்ரீராமன் மீது ஆஞ்சநேயருக்கு இருந்த பக்தியைப்போல)
60.திருவாரூர்ப்  பிறந்தார்: திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.
61.முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
62.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
63.முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.
64.அப்பாலும் அடிசார்ந்தார்:முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.
65.பூசலார் நாயனார்:மனக்கோவில் கட்டி சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.
66.மங்கையர்க்கரசியார்:நின்ற சீர் நெடுமாறனின் மனைவியாவார்.திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரை சைவராக்கினார்.
67.நேச நாயனார்:சிவனடியார்களுக்கு உடை,கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.
68.கோச்செங்கோட் சோழ நாயனார்:திருவானைக்கா திருமதில் பணிகளைச் செய்தவர்.எழுபது சிவாலயங்களைக் கட்டியவர்.
69.திருநீலகண்ட யாழ்ப்பாணர்:திருஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் அமைத்துப்பாடியவர்.
70.சடைய நாயனார்:சுந்தரரின் தந்தையார்.
71.இசை ஞானியார்:சுந்தரரின் அன்னையார்.
72.சுந்தர மூர்த்தி நாயனார்:சடையனார்.இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர்.சிவபெருமானின் தோழர்.தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.
ஆக,தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ஜாதியைச் சேர்ந்தவர்களும் சிவபக்தியில் திளைத்து 63 நாயன்மார்கள் பட்டியலில்இடம் பெற்றுள்ளனர்.

கிறிஸ்தவ ஆங்கிலேயனது வருகைக்கு முன்பு வரை ஜாதி என்பது செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே செயல்பட்டுவந்தது.கிறிஸ்தவ ஆங்கிலேயனால் நமது நாட்டில் ஜனநாயகம் என்ற முகமூடி அணிந்து அரசியல் அறிமுகப்படுத்தப்பட்டது.அரசியலோ ஜாதிகளிடையே புகுந்து வெறுப்பையும்,ஜாதி வெறியையும் உண்டாக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

கடந்த ஆயிரம் வருடங்களாக இந்தியாவை பல வெளிநாட்டினரும்,வேறு மதத்தினரும் ஆள்கிறேன் என்ற பெயரில் கொள்ளையடித்துக்கொண்டே இருந்தாலும்,நாமும்,நமது இந்தியாவும் தாக்குப்பிடித்து வாழக் காரணம் நமது ஆன்மீக வழிபாடுகள் மட்டுமே! இதையும் அழிக்கும் விதமாக வந்திருப்பதே மதமாற்றம் ஆகும்.எப்பாடு பட்டாவது மதமாற்றத்தை தடுத்து நிறுத்துவோம்;மதமாற்றத்துக்கு எதிராகச் செயல்படும் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு தருவோம்;நமது சனாதன தர்மமாகிய இந்து தர்மத்தை பாதுகாப்போம்.நமது வழி வம்சத்தில் எவரையும் மதம்மாறாமல் தடுப்போம்;
ஓம்சிவசிவஓம்
நன்றி:அறுபத்து மூவர் குருபூசை வழிபாடு,பக்கங்கள்3,4,5,6.வெளியீடு விரோதி வருடம் (கிறிஸ்தவ ஆண்டு 2009 டூ 2010)