Tuesday, August 28, 2012

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு முன்யோசனை!!!







ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவரவரது ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பது சனிபகவானே! ஏழரைச்சனி முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானே தருகிறார் என்பது எழுதப்பட்ட விதியாகும்.ஏழரைச்சனிகாலத்திற்கும் அஷ்டமச்சனி காலத்திற்கும் இடைப்பட்ட கால அளவு 15 ஆண்டுகள் ஆகும்.அஷ்டமச்சனியின் காலத்தில் (இரண்டரை ஆண்டுகள்) ஏழரைச்சனி காலமான ஏழரை ஆண்டுகளாக பட்ட சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்;மேலும் ஏழரை முடிந்து 15 ஆண்டுகளாக நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கவே அஷ்டமச்சனி வருகிறது என்பது ஜோதிட உண்மை ஆகும்.
1996 முதல் ஏழரை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு ஏழரைச்சனி வந்தது;2003 முதல் 2006 வரை விருச்சிக ராசிக்கு அஷ்டமச்சனி வந்தது;2005 இல் இருந்துதான் மேஷ ராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானின் அருளால் பெற்றார்கள்;2009 லிருந்துதான் விருச்சிக ராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை அடைந்தார்கள்.21.12.2011 முதல் 14.12.2014 வரை சனிபகவான் துலாம் ராசியைக் கடக்கிறார்.இந்த இரண்டரை ஆண்டுகளும் மேஷ ராசிக்கு ஏழாமிடத்து சனியான கண்டகச்சனியாகவும்,விருச்சிக ராசியினருக்கு ஏழரைச்சனியில் முதல் பகுதியான விரையச் சனியாகவும் பரிணமித்திருக்கிறது;

12 ராசிகளிலும் கோபக்காரர்கள் அதிகம் பிறப்பது மேஷ மற்றும் விருச்சிக ராசிகளில் தான்;பிறரை அளவுக்கதிகமாக கேலி செய்வது;தன்னை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களுக்காக எப்பேர்ப்பட்ட உதவிகளையும் செய்பவர்கள் இந்த இரு ராசிக்காரர்களும்! எப்போதும் தம்மோடு பழகுபவர்களுடைய நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்! பண லாபத்தோடு பழகும் ஒரு சில ராசிக்காரர்களைப் போல இவர்கள் இருப்பதில்லை;யோசித்து எந்த ஒரு காரியத்தையும் செய்வது இவர்களுக்கு 25 வயது வரை வராது;30 வயது முதல் திட்டமிட்டும்,சிந்தித்தும் உழைப்பதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது;அளவுக்கு அதிகமாக பேசியே பலரது வெறுப்பை சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்;இவை அனைத்தும் செவ்வாயின் சுபாவங்கள் ஆகும்.
மேஷ ராசிக்காரர்கள் 15.12.2014 முதல் வர இருக்கும் அஷ்டமச்சனியை எதிர்கொள்ளவும்,விருச்சிக ராசிக்காரர்கள் இதே நாளில் இருந்து வர இருக்கும் ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் செய்ய வேண்டியது என்ன?
இன்றிலிருந்தே அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;தேவையில்லாத நட்புக்களையும்,உங்களை கெடுக்கும் உறவுகளையும் விட்டு படிப்படியாக விலகுவது நல்லது;நியாயமான வழியில் வாழ்க்கையை அமைக்கவும்;ஒருபோதும் பிறரை மனதால்,உடலால் புண்படுத்தக்கூடாது;ஏமாற்றக்கூடாது(பெரும்பாலான மேஷ,விருச்சிக ராசியினர் ஏமாற்றுவதில்லை;)

தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை வீட்டில் இருந்து வழிபடத் துவங்க வேண்டும்;தவிர ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்;
இந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று முறையாவது ஸ்ரீகால பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்டவீரட்டானங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த இரண்டரை வருடங்களில் தாங்கள் தர வேண்டிய கடன்களை 1.1.2014க்குள்ளாகவே தீர்த்துவிட முயல வேண்டும்;
அட்டவீரட்டானங்கள் :தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் இருப்பது திருக்கண்டியூர்.இங்கே ஸ்ரீகாலபைரவர் பிரமசிர கண்டீஸ்வரர் என்ற பெயரில் சிவனாக இருந்து அருள்பாலித்துவருகிறார்.இது முதல் வீரட்டானம்ஆகும்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்.இது திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது;இங்கே அந்தஹாசுர சம்ஹார மூர்த்தியாக காட்சியளித்துவருகிறார்.
மூன்றாவது வீரட்டானம் திருவதிகை ஆகும்.பண்ருட்டியிலிருந்து ஒரு  கி.மீ.தூரத்தில் வீரட்டானேஸ்வரர் என்னும் பெயரில் இருந்து அருளாட்சி  புரிந்து வருகிறார்.
நான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் ஆகும்.இது மாயவரம் திருக்கடையூர் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து விசாரித்து சென்றால்,இரண்டு கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்ற தம்பதியராக இருந்து அருள்புரிந்து வருகிறார்கள்.
ஐந்தாவது வீரட்டானத்தின் பெயர் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூர் நாகூர் சாலையில் இருக்கும் திருப்பயந்தங்குடிக்கு வர வேண்டும்.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே மேற்கு நோக்கிய திருக்கோவிலில் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவனாக காட்சியளித்துவருகிறார்.
வழுவூர்  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டு கி.மீ.பயணித்தால் வலதுபுறம் ஒரு சாலை திரும்பும்.அந்த சாலை வழியாக அரை கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது ஆறாவது வீரட்டானமாகிய வழுவூர் ஆகும்.இங்கே கிருத்திவாஸர் என்னும் பெயர் ஸ்ரீகாலபைரவ பெருமான் சிவபெருமானாக அருளாட்சிபுரிந்து வருகிறார்.அட்டவீரட்டானங்களுக்கும் சென்று வழிபட இயலாதவர்கள் இந்த வழுவூருக்கு மட்டும் வந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது;எட்டு சனிக்கிழமைகளுக்கு இங்கே காலையிலேயே வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அர்ச்சனை செய்தாலும் போதுமானது;
மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்னும் இடத்தை வந்தடைய வேண்டும்;இங்கிருந்து திருக்குறுக்கை செல்லும் சாலையை விசாரித்து 3 கி.மீ.பயணித்தால் சென்றடையலாம்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகையாக ஸ்ரீகாலபைரவர் அருளாட்சி புரிந்துவருகிறார்.இதுவேஏழாவது வீரட்டானம் ஆகும்.
எட்டாவது வீரட்டானம் திருக்கடவூர் ஆகும்.இதன் தற்போதைய பெயர் திருக்கடையூர் என்றழைக்கப்படுகிறது.இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமியாக ஸ்ரீகாலபைரவர் வாழ்ந்து வருகிறார்.

அயல் தேசத்தில் இருக்கும் இந்த ராசியினர் தமது குடும்பப் பொறுப்புகளை(வீடு கட்ட விரும்புவது;தங்கை/அக்காவின் திருமண ஏற்பாடுகள்/தம்பியின் படிப்பு/அம்மா அல்லது அப்பாவின் மருத்துவச் செலவுகள்/மகன் அல்லது மகளின் படிப்புச்செலவு) இப்போதே நிறைவேற்றிவிட வேண்டும்;குடும்பத்தில் எவருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட தாமதப்படுத்த வேண்டாம்;
இந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 30 மாதங்கள் இருக்கின்றன;நாட்கள் கணக்கில் சொல்வதாக இருந்தால் 900 நாட்கள் இருக்கின்றன;இந்த 900 நாட்களில் குறைந்தது 500 நாட்களுக்கு தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு முடித்திருந்தால்,குறைந்தது 15 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிக்குச் சென்று வழிபட்டிருந்தால்,சனிபகவானின் தாக்குதல் அவ்வளவாக இராது.
நிம்மதியான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் எவரும் இதை முயற்சி செய்யலாம்.
களத்தில் இறங்குவோமா?                                 வீரட்டானங்கள் பற்றிய தகவல் ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,வெளியீடு காகா ஆஸ்ரமம்,பெரியகுளம்,திருவண்ணாமலை

No comments:

Post a Comment