Tuesday, May 15, 2012

சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்






அகில பாரத அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (சுதேசி ஜாக்ரன் மஞ்ச்) சார்பாக மாபெரும் பாதயாத்திரை ஒன்று வரும் மார்ச் மாதம் முதல் வாரம் கோயம்புத்தூரில் துவங்கி ஏப்ரல் மாதம் சென்னையில் முடிவடையுமாறு நிகழ உள்ளது. இச்சமயத்தில் இந்த இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், யாத்திரைக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. இராம. நம்பி நாராயணன்அவர்களை கண்டு உரையாடினோம். சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் பாதயாத்திரை பற்றி மட்டும் அல்லாது சுதேசிப் பொருளாதாரம், கம்யூனிசம், ஹிந்துத்துவம் என்று பல சுவாரசியமான தகவல்களை இக்கட்டுரையில் தருகிறோம்.
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இயக்கத்தின் குறிக்கோள் பற்றி சிறிது விளக்கமாக சொல்லுங்களேன்?
1991 ல் புதிய பொருளாதார கொள்கை செயலாக்கத்திற்கு வந்த பொழுது அதனால் வரும் ஆபத்துகளை எதிர் நோக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த அதே சுதேசிய உணர்வை துண்ட வேண்டும் என்ற சிந்தனையில் சிறந்த சிந்தனைவாதியும் தேசபக்தருமான திரு தேங்கடி அவர்களினால் உருவாக்கப்பட்டது தான் சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.
1947 க்கு முன்பு நமது பொருளாதாரத்தை இங்கிலாந்து முடிவு செய்தது. 1947 க்கு பின் சுதந்திரம் பெற்று இருந்தாலும் கூட நமது ஆட்சி காலங்களில் சோஸலிச பித்தின் காரணமாக நமது பொருளாதாரத்தை ரஷ்யா முடிவு செய்ய நாம் அனுமதித்தோம். USSR என்ற ரஷ்யா 15 நாடுகளாக சிதறுண்ட பொழுது கூட நாம் நமது வேர்களை தேடாமல் மீண்டும் நமது பொருளாதாரத்தை முடிவு செய்யும் பணியை முதலாளித்துவ நாடுகளிடம் ஒப்படைத்து விட்டோம். ஆக இன்று வரை இந்திய பொருளாதாரத்தை இந்தியர்கள் முடிவு செய்யவில்லை. இந்த இழிவான நிலையை அகற்ற வேண்டும். நமது பொருளாதாரத்தை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் சுதேசி விழிப்புணர்வு இயத்தின் முக்கியமான குறிக்கோள்.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்ன?
சுதேசி இயக்கம் மக்களிடையே சுதேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லா துறைகளிலும் இந்தியர்கள் தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்து வருகிறது. இந்தியர்களால் உற்பத்தியில் உலகத்தோடு போட்டி போட முடியும் என்பதை ஆதாரத்தோடு எடுத்து காட்டி வருகிறது. இன்று இருக்கும் சூழலில் பொருளாதார முன்னேற்றம் என்றால் மேற்கத்திய நாடுகள் தான் என்ற அடிமை சிந்தனையை மாற்றி சுய தர்மம், சுய மரியாதை, சுய தொழில், சுய பாஷை, சுய ராஷ்ட்ரம், சுய ராஜ்யம் என்று சுய சார்ப்பான ஆறு கருத்துகளை மக்களிடையே எடுத்து செல்கிறது. இதற்கு அவசியம் என்ன என்று கேட்டால் சுதர்மத்தை எடுத்து செல்வதும் சுய மரியாதையை மீட்பதும் தான்.
சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. தனியான பொருளாதார கோட்பாடு அல்ல. சமூக பொருளாதார கோட்பாடு தான் சுதேசி. ஆகவே சமூகங்களிடையே ஒருங்கிணைப்பையும் செய்து வருகிறது. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம்.
தமிழ் நாட்டில், இந்தியாவில் உங்கள் இயக்கத்தினால் விளைந்த  நல்ல பலன்கள் என்ன?
1991 ல் புதிய பொருளாதார கொள்கை வந்த பொழுது இந்திய உற்பத்தியாளர்களிடம் எல்லாம் உங்களுக்கு உற்பத்தி தெரியாது உற்பத்தியை மேற்கத்திய நாடுகளிடம் விட்டு விடுங்கள். வியாபாரத்தை மற்றும் கவனியுங்கள் என்று மத்திய அரசாங்கமும் பல்வேறு தொழில் அமைப்புகளால் அமர்த்தப்பட்ட ’வழிக்காட்டும் குழுக்களும்’ கூறின. அப்படி அல்ல என்பதை இந்திய கம்பெனிகள் மூலம் நிருபிக்க வைத்த அமைப்பு சுதேசி இயக்கம். உதாரணமாக டாடா மோட்டாரை சொல்லலாம். இந்திய கடல்களில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு வெளி நாட்டு கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த பொழுது இந்தியாவில் கல்கத்தாவில் தொடங்கி கொச்சி வரையிலும் குஜராத்தில் தொடங்கி கொச்சி வரையிலும் கப்பல் யாத்திரை நடத்தி அதன் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் மத்திய அரசின் இந்த திட்டத்தை முடக்கி அதனை ரத்து செய்ய வைத்தது சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சாதானை.
என்ரான் என்ற கம்பெனி இந்தியாவிற்கு மின்சாரம் தயாரிக்கிறேன் என்ற வந்த பொழுது அதனை ஆதாரங்களுடன் எதிர்த்து உண்மையை மக்களுக்கு புரிய வைத்தது சுதேசி இயக்கம். தொடக்கத்தில் மத்திய மாநில அரசு இதை ஏற்று கொள்ளவில்லை. என்ராட் கம்பெனியே திவால் நோட்டிஸ் கொடுத்த பின்பு தான் மத்திய மாநில அரசுகளுக்கு சுதேசி விழிப்புணர்வு இயக்கதின் போராட்டத்திற்கான காரணம் புரிந்தது. அயோடின் உப்பு, பெரிய கம்பெனிகள் தீ பெட்டி தயாரிப்பு போன்றவற்றை எல்லாம் மாற்றி அமைத்து சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தியது சுதேசி இயக்கம் .இந்த பட்டியல் நீளும். அதற்கும் மேலாக இந்திய உற்பத்தியாளர்களிடம் நம்பிக்கை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரத நாட்டின் 80க்கும் மேற்பட்ட நகரங்களில் ” SWADASHI INDUSTRIAL FAIR ‘ என்ற பெயரில் சுதேசி தொழில் கண்காட்சிகள் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 2001 பிப்ரவரி 6 முதல் 11 வரை கோவையில் நடைபெற்ற சுதேசி தொழிற் கண்காட்சி அப்பொழுது கோவை குண்டு வெடிப்பால் சோர்ந்து போயிருந்த கோவை தொழில் முனைவோர்களிடம் ஊக்கத்தையும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்பது இன்று வரை தொழில் முனைவோர்கள் சொல்லபடும் ஒன்று. தமிழகத்தில் சுதேசி இயக்கம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தி கல்வி நிறுவனங்கள் மூலம் தொழிற் நிறுவனங்களுக்கான ஆய்வுகளை மேற் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறது. இதனால் அதிக அளவில் கல்வி நிறுவனங்களும் சிறு தொழிற் நிறுவனங்களும் சுதேசி இயக்கத்தோடு தங்களை இணைத்து கொண்டு உள்ளன. சுதேசி இயக்கம் நடத்தும் சுதேசி செய்தி என்ற மாதந்திர பத்திரிக்கை இவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இப்போதைய பாதயாத்திரை எதற்காக?
சுதேசி இயக்கம் ஒரு பாத யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பாத யாத்திரை எதற்காக வென்றால்
  1. பன்முக சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும்
  2. பல்வேறு திட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலமாக பாரத நாட்டின் விவசாயத்தை அன்னிய நாட்டு கம்பெனிகளுக்கு விற்கும் தனது மேற்கத்திய சார்பு விவசாய கொள்கைகளை கை விட வேண்டும்.
  3. வெளி நாடுகளில் இருப்பதாக கணக்கிடப்படும் 70 இலட்சம் கோடி கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்.
அது மட்டும் அல்லாது மத்திய அரசு கொண்டு வர முனைந்து இருக்கும் அனைத்து சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் யாத்திரையில் மேற்கொள்ளபடும்.
குறிப்பாக இது விஷயமாக அதிக அளவில் ஊடங்களால் விவாதிக்கப்பட்டதால் இந்த நேர்காணலில் அவை பற்றி எதுவும் குறிப்பிட நான் விரும்பவில்லை. குறிப்பாக ஒபாமா போன்றவர்கள், “இந்தியாவின் கல்வி சிறந்து இருக்கிறது. நாம் சோம்பேறிகளாக இருந்தால் நமது குழந்தைகளின் எதிர் காலம் பறி கொடுக்க நேரிடும்” என்று சொல்லிவரும் வேளையில், நமது மத்திய கல்வி அமைச்சர் நமது கல்வி நிலையங்களை வெளி நாடுகளுக்கு விற்க வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.
வெளி நாட்டு கம்பெனிகள் தங்கள் சரக்குகளை இந்தியாவில் எளிதாக எல்லா பகுதிகளிலும் கொண்டு செல்லும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளில் சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
விவசாயத்தில் பல்வேறு சட்ட மசோதாக்கள், வரி விதிப்பில் பல்வேறு சட்ட மசோதக்கள், கல்வி துறையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் மட்டும் இல்லாமல் இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் வகையில் மத வன்முறை தடுப்பு சட்டம் என்ற பெயரில் மத வன்முறையை துண்ட கூடிய சட்ட மசோதக்களை மத்திய அரசாங்கம் கொண்டு வருவது இந்தியாவை யாரோ ஒரு சிலருக்கு அடமானமாக வைக்க கொண்டு வரப்படும் சட்ட மசோதாக்களாக சுதேசி இயக்கம் பார்க்கிறது.
  • Bio Technology Regulatory Authoritative Bill
  • Mines and Mineral Bill
  • Seed Bill 2010 (modified)
  • Goods and Service tax amendment Bill
  • Pension fund regulatory and authority Bill
  • Land acquisition Rehabilitation and Resettlement Bill
  • Foreign University Bill
ஆகிய மசோதாக்கள் பற்றியும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம், ( Food safety and Standard act ) தேசிய நீர் கொள்கை ( National Water policy ) ஆகியன பற்றியும் யாத்திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.
இந்த மசோதாக்களை எதிர்த்து இந்த பிரச்சாரம் செய்யபடுகிறது. யாத்திரையின் நோக்கம் இதோடு நின்று விடவில்லை. பிரச்சாரத்திலேயே ஒரு ஆய்வு குழுவும் செல்கிறது. பிரச்சாரம் செல்லும் பகுதிகளில் உள்ள இடங்களில் பாரம்பரிய வளங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பற்றிய தகவல்களையும் சேகரிக்கிறது.
கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் என்ன வித்தியாசம்?
கம்யூனிஸ்டுகள் தனது மைய புள்ளியை வேறு தேசத்தில் வைத்து ஒரு வட்டத்தை வரைகிறது. இவ்வாறு வரையப்படும் வட்டம் இந்தியாவின் பல பகுதிகளை வெட்டுகிறது. ஆனால் சுதேசி இயக்கம் தனது வட்டத்தை இந்தியாவை மைய புள்ளியாக கொண்டு வரைகிறது. கம்யூனிஸ்டுகளின் கொள்கை அனைத்தும் பாரம்பரிய எதிர்ப்பாகவும் இயற்கையோடு இணைந்த மண்ணின் மணம் கூடிய தொழில் நுட்ப விசயங்களை புறம் தள்ளி விட்டு குடும்ப வாழ்வியல் ஊழியங்களை உடைப்பதாகவும் தான் இருக்கிறது. சமுதாயத்தனிடையே வர்க்க பேதங்களை உருவாக்கி அமைதிக்கு பதிலாக அமைதியின்மையை தோற்றுவிக்கிறது. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது.
இந்த நாட்டில் இருக்க கூடிய பாரம்பரிய தொழில் அறிவையும் அந்தந்த பகுதிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ள தொழில் நுட்பங்களை பாதுகாத்து அதை வெளி கொண்டு வரும் பணியை சுதேசி இயக்கம் செய்து வருகிறது. கம்யூனிஸ வரலாறே அழிப்பது தான். இதன் காரணமாக சோவியத் ரஷ்யா 15 நாடுகளாக சிதறுண்டு போனது. கம்யூனிஸம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த சீனா தனது பாரம்பரிய செல்வங்களை எல்லாம் அழித்து விட்டு இன்று பரிதாபமாக முதலாளித்துவத்தை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறது. மியன்மார் என்று அழைக்கபடும் பர்மா வளர்ச்சி ஒன்றும் இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அழித்தல் கம்யூனிசம் என்றால் ஆக்கல் சுதேசி இயக்கமாக இருக்கும்.
கம்யூனிச முழக்கங்களில் மயங்கி அதன் பின் செல்லும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?
கம்யூனிஸம் ஒரு மாய மான் என்பது நிருபிக்கப்பட்டு உள்ளது. 90 களின் துவக்கத்தில் எந்தந்த கம்யூனிஸ்டு நாடுகள் கம்யூனிஸ நிலையை தூக்கி எறிந்து விட்டு தங்கள் இயல்புக்கு திரும்பின என்பது ஒரு பெரிய விவாதமாகவே இருந்தது. கம்யூனிஸ சிந்தாந்தை தூக்கி எறிந்த நாடுகள் ஏறாலம். இன்று முதாலிதுவத்தை எதிர்த்து போராடும் வால் ஸ்ட்ரீட் போராட்டத்தில் கூட சொஸ்லிசத்தின் குரலோ அல்லது கம்யூனிஸத்தின் குரலோ ஒலிக்கவில்லை. அவர்கள் எல்லாம் முதலாளித்துவத்திற்கு எதிராக இருக்கிறார்களே தவிர கம்யூனிஸத்திற்கு ஆதரவாக இல்லை. கம்யூனிஸம் இளைஞர்களை ஈர்க்க கூடியது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அந்த சிந்தாந்தத்தின் வறட்சி பசுமை காலங்கள் மறைந்தவுடன் கண்ணுக்கு தெரிந்து விடும். இது தான் உலகத்தின் அனுபவம். இளைஞர்கள் குறிப்பாக தேசபக்தி கொண்ட இளைஞர்கள் சர்வ தேசியத்தின் பின் போகாமல் இந்திய தேசியத்தின் அதாவது சுதேசி இயக்கத்தோடு இணைந்து கொள்ள வேண்டும். இது தான் சரியான அணுமுறையாக இருக்கும்.
சுதேசி இயக்கத்துடன் கம்யூனிஸ்டுகளும் இணைந்து செயல்படுவது பற்றி?
நம்மை பொருத்த வரை ஒரு கொடையின் கீழ் உலகத்தை கொண்டு வர முயற்சிக்கும் எந்த ஒரு தத்துவமும் வெற்றி பெறாது. அது பொருளாதார தத்துவமாக இருந்தாலும் சரி மத அடிப்படையிலான தத்துவமாக இருந்தாலும் (கிறித்துவம், இஸ்லாம் முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம்) ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தத்துவங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து இருக்கின்றன என்பது தான் உண்மை. அந்தந்த பகுதிகளுக்கு என்று உள்ள சிறப்பு அதை சார்ந்த வாழ்க்கை முறை, பொருளாதாரம் என்பது கூட ஒரு தனிப்பட்ட விசயம் அல்ல. அது அந்த நாட்டின் சமூக கலாச்சாரத்தோடு இணைந்த ஒன்றாக தான் பொருளாதாரம் இருக்க முடியும். எனவே இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் வாழ்வியல் மூலியங்களையும் ஏற்று கொள்ளும் ஒருவர் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தாலும் கூட சுதேசியுடன் இணைந்து போராடுவது தான் நாட்டுக்கு உகந்ததாக இருக்கும்.
நவீன யுகத்தில் சுதேசி கோட்பாடுகள் சாத்தியமா?
கண்டிப்பாக சாத்தியமே, நவீன யுகத்தில் சுதேசி என்பது ஒரு சர்வதேச கோட்பாடு (universal phenomena). ஒவ்வொரு நாடும் தனது சொந்த வளத்தில் சொந்த தொழில் நுட்பத்தில் சுய சார்போடு இருக்க தான் முயற்சி செய்யும். எந்த நாடும் தனது இறையாண்மையை அடுத்த நாட்டிற்கு அடமானம் வைக்காது. சர்வதேசம் பேசிய ரஷ்யா கூட உலக போரின் போது தேசியம் பேசி தான் தனது மக்களை இணைக்க முடிந்தது. ஆக தேசியம் இல்லாமல் சர்வ தேசியம் உருவாக முடியாது. ஆகவே எந்த யுகம் ஆனாலும் சுதேசி மட்டும் தான் எந்த நாட்டுக்கு ஆக்கபூர்வமான பொருளாதார கொள்கையாக இருக்க முடியும்.
நவீன காலத்தில் இந்துத்துவம் தரும் மாற்றுகள் என்ன?
உலக மதங்களுக்கு இல்லாத உலக வாழ்வியலுக்கு இல்லாத சிறப்பு இந்து துவ வாழ்வியல் முறைக்கு இருக்கிறது. குறிப்பாக இருபாலர் கடவுள் கொண்ட மதம் இந்து மதம். கடவுள்களையே குடும்பமாக பார்க்க கூடிய மதம் இந்து மதம். ஹிந்து தர்மத்தில் தான் மீனாட்சி கல்யாணம், ஸ்ரீனிவாஸ கல்யாணம், சீதா கல்யாணம், ராதா கல்யாணம், வள்ளி திருமணம் என்று இறைவனுக்கே திருமணம் செய்து வைக்கும் முறை உள்ளது. எனவே குடும்பம் தான் இந்த நாட்டுடைய பொருளாதாரத்தின் ஆணி வேர். குடும்பங்களின் சீரழிவால் தான் மேற்கத்திய நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் மிக பெரிய பொருளாதார சீரழிவை சந்திக்க நேரிட்டது. அப்பேற்பட்ட குடும்பங்களை பாதுகாக்கும் ஹிந்து மதம் தான் இன்றைக்கு இருக்க கூடிய பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வாக இருக்க முடியும். இதை நான் மாற்று என்று கூற வில்லை. இது தான் அடிப்படை. கடந்த சில காலமாக மேற்கத்திய தாக்கத்தால் அடிப்படையில் இருந்து மாறி வருகிறோம். நாம் அடிப்படையை நோக்கி தற்பொழுது திரும்ப வேண்டும். கேள்வி மாற்று என்று இருந்தாலும் கூட மாற்று என்று சொல்லாமல் அடிப்படைக்கு திரும்புகிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.
எனவே தான் சுதேசி இயக்கும் மாற்றத்தை எற்றிடும் பாரம்பரியம், பாரமரியத்தை கை விடாத மாற்றம், காலத்தால் அழியாத பாரதிய பாரம்பரியம் என்பதை அடிப்படை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது.
வளம்குன்றா வளர்ச்சி எனும் இந்துத்துவக் கோரிக்கை சாத்தியம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டா?
வளம் குன்றா வளர்ச்சி என்பதை ஆங்கிலத்தில் sustainable development என்று சொல்கிறார்கள். அதாவது இயற்கை அழிக்காமல் இயற்கையோடு ஒன்றி வாழ்வது தான் வளம் குன்றா வளர்ச்சி. ஹிந்து தர்மம அதை தான் போதிக்கிறது. இந்த நாட்டின் நாகரீகமும் கலாச்சாரமும் இயற்கையை ஒட்டி தான் வளர்ந்து வந்து இருக்கின்றன. இதுவே இந்துவத்தின் மைய கருத்து இதை கோரிக்கை என்று கருத முடியாது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையில் மட்டுமே வளம் குன்றா வளர்ச்சி சாத்தியம்.
சுதேசி பொருளாதாரம் என்றால் என்ன? அதை வைத்து மக்கள் செல்வ செழிப்பு அடைய முடியுமா?
NATRUE HAS GIVEN WEALTH TO EVERYBODYS NEED NOT GREED என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மக்களுக்கு தேவையான விசயத்தை சுதேசியால் கண்டிப்பாக கொடுக்க முடியும். ஆனால் பேராசைகாரர்களுக்கு தேவையானதை சுதேசியால் கொடுக்க முடியாது. இன்றைய பொருளாதாரம் என்பது பேராசைகாரர்களின் பொருளாதாரமாக மாறி இருக்கிறது. குறிப்பாக செலவு செய்வதை மையமாக பொருளாதாரம் (spending driven economy) என்பது மற்றும் செலிப்ரெடி பின்னாள் போகும் வாழ்வியல் என்பதும் பேராசைகாரர்களின் பொருளாதார குறியீடுகள். வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் சுதேசியால் தர இயலும். ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. Everybody would become rich if nobody wants to become rich. என்று சொல்வார்கள்.
“அளவுக்கு மீறி பணம் வைத்து இருந்தால் அவனும் திருடனும் ஒன்று “ என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் அளவுக்கு மீறி பணம் வைத்து கொள்வதில்லை என்று முடிவு செய்தாலே செல்வ செழிப்பு பரவலாக்கப்பட்டு விடும்.சுதேசி அதை தான் சொல்கிறது.
காந்தியின் சுதேசி கொள்கையைத் தான்  இந்துத்துவர்களான நீங்கள் எடுத்து உங்களுடைய கொள்கை என்று கூறுகிறீர்கள் என்று கூறப் படுவது பற்றி ?
தாகூர் என்ற மாமனிதனுக்கு கீதாஞ்சலி என்ற படைப்புக்கு நோபல் பரிசு கிடைத்தது. அந்த கீதாஞ்சலியில்…
Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.
என்று கூறியுள்ளார். பாரத மண்ணில் பிறந்ததால் தான் ‘ where the knowledge is free’ என்று அவரால் எழுத முடிந்தது. நமது ரிஷிகளின் முனிகளின் சிந்தனை தாக்கம் என்பது மனத்தின் ஆழத்தில் இருந்த உண்மையில் (Where words come out from the depth of truth) இருந்து வந்தது. அவர்கள் அவற்றை எதையும் காப்புரிமை செய்யவில்லை. அவர்களே சொன்னதை தான் காந்தியும் சொன்னர். இந்திய ஞான மரபில் கருத்து செறிவு என்பது திருடப்படுவது அல்ல. வளங்கப்படுவது. முனிவர்கள் வழங்கியதை அவர்கள் பின் வந்த நவீன தலைவர்கள் வழங்கினர். அதை நாம் தற்பொழுது வழங்குகின்றோம். காந்தியிடம் இருந்து திருடி விட்டீர்களா என்று கேள்வியே மேற்கத்திய சிந்தனையின் தாக்கதால் எழுந்த கேள்வி என்று தான் நான் பார்க்கிறேன்.
மகாத்மா காந்தி அவர்கள் ஹிந்த் சுவராஜ் என்ற புத்தகம் எழுதியிறுக்கிறார். வரலாற்று ஆய்வாளர்கள் அவர் இலண்டன் சென்று மதன்லால் திங்கராவை சந்தித்து விட்டு ஆப்பிரிக்கா திரும்பும் போது, திங்கரா ஏற்பத்திய தாக்கதினால் தான் ஹிந்த் சுவராஜ் புத்தகத்தை எழுதியதாக கூறுகிறார்கள்.
தமிழ்ஹிந்து.காம் மகாத்மா காந்தி அவர்களின் ஹிந்த்சுவராஜ் புத்தகத்தை தனது வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்பது எனது கோரிக்கை. காந்தி அற்புதமாக நமது முன்னோர்கள் கற்பித்த பாரம்பரிய முறையை எப்படி காப்பாற்ற வேண்டும், இந்த நவீனதுவம் எந்த மாதிரியான கேடுகளை விளைவிக்கும் என்பதை பற்றி விரிவாக எடுத்து சொல்லி இருக்கிறார். ஆனால் அது அவர் கருத்து அல்ல. நமது முன்னோர்கள் சொன்னதை காந்தி சொல்கிறார். நமது முன்னோர்கள் சொன்னதை நாமும் சொல்கிறோம். இதை காந்தியோடும் இணைக்கலாம். அல்லது முன்னோர்களுடனும் இணைக்கலாம். கேட்பவரின் பார்வையை பொருத்தது.
அதே நேரத்தில் முக்கியமான ஒரு விசயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஹிந்து துவ இயக்கங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் காந்தி சொன்ன கருத்துகளில் முஸ்லீம்களை தாஜா செய்வதை மட்டும் வைத்து கொண்டு மற்ற எல்லா விசயத்தையும் கைவிட்ட அமைப்பு காங்கிரஸ் கட்சி. மாறாக காந்தி சொன்ன கருத்துகளில் முஸ்லீம்களை தாஜா செய்வதை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா கருத்துகளையும் ஏற்று கொண்டது இந்துதுவ இயக்கங்கள். ஆகவே காந்தியின் ஹிந்து சுவராஜ்யத்தை நேரு ஏற்று கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் ஏற்று கொள்ளவில்லை. காந்தி கிராம பொருளாதாரத்தை பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று சொன்ன பிறகும் கடைசி நாள் வரை நேரு தவிர்த்து கொண்டு தான் வந்து இருக்கிறார்.
ஆகவே தொடர்ந்து காங்கிரஸ் அரசுகள் காந்தியை ரூபாய் நோட்டில் மட்டும் அச்சடித்து வைத்து விட்டு அவரது கொள்கைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டார்கள். இன்றைக்கு தேவை காந்திய பொருளாதார கொள்கை என்று சொல்லப்படும் நமது முன்னோர்களின் கொள்கை. அதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. அதை எந்த பெயரில் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment