Tuesday, May 1, 2012

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும் சூட்சும விருட்ச வழிபாட்டு முறை


சந்திரனுடைய ராசியான கடகத்தில் இருக்கும் புத்தியின் (புதனின்)நட்சத்திரம் ஆயில்யம்.மனதுக்கு அதிபதி சந்திரன்;மனதையும் புத்தியையும் சரிசமமாக பயன்படுத்தத் தெரிந்த முதல் நட்சத்திரக்காரர்கள் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் ஆவர்.ஆயில்யத்தில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில்,யோக சாதனையில்,தியானத்தில் வெகுவேகமாக முன்னேறப்பிறந்தவர்கள் ஆவர்.இருப்பினும்,இவர்களுக்கு ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.அப்பா அல்லது அம்மா இருப்பது அரிது;அல்லது இருவரில் யாராவது ஒருவரின் அன்பு மட்டுமே ஆயுள் முழுக்க கிடைக்கும்;ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் திருமணம் ஆகாமல் தவித்துவரும் ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் பல லட்சம் பேர்கள்!!!

இவர்களுடைய குறையைத் தீர்க்க நமது ஆன்மீக குரு அவர்கள் ஒரு அரிய ஆன்மீக ஆலோசனையைத் தெரிவித்திருக்கிறார்.இந்த ஆலோசனையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.நமது வாசகி,வாசகர்களின் சார்பாக கூகுள் நன்றிகளை பக்திபூர்வமாக நமது குருவுக்குத் தெரிவித்துக்கொள்கிறது!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.இங்கே அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் அய்யனார் கோவிலுக்கு அருகே சென்றதும் வலைகட்டு கருப்பசாமி கோயில் ஒன்று இருக்கிறது.கோவிலின் உள்ளே விநாயகர்,பெருமாளுடன் கருப்பசாமி,சப்த கன்னியர்கள்,வலைகட்டு கருப்பசாமி,லாடதவசி எனப்படும் லாடசன்னாசி சன்னதிகள் இருக்கின்றன.இந்த கோவிலின் வாசலில் ஒரு சிறு கிளை முறியாமல் கூட ஒரு  மரம் இருக்கிறது.இந்த மரமே ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்குரிய விருட்சம் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்யம் நட்சத்திரநாளாக தேர்ந்தெடுத்து இங்கே வரவேண்டும்;இப்படி எட்டு ஆயில்யம் நட்சத்திரம் நிற்கும் நாட்களுக்கு வர வேண்டும்;தொடர்ந்து வர நாம் நினைத்தாலும்,சகுனத்தடைகள் வரத் தான் செய்யும்.இப்படி இருந்தாலும்,விட்டு விட்டு வரலாம்;  வெகுதொலைவில் இருந்து வருபவர்கள் அல்லது சீக்கிரமாக தனது பிரச்னைகள் தீர விரும்புவோர் எட்டு வெள்ளிக்கிழமைகளுக்கு வரலாம்;
முதல் முறை வரும்போது முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை,வெஜிடபிள் பிரியாணி,கோதுமை ரவையில் செய்யப்பட்ட பாயாசம்(ஜீனி சேர்க்கக் கூடாது;மண்டை வெல்லம் எனப்படும் நாட்டுச்சர்க்கரை சேர்த்துத் தயாரிக்க வேண்டும்.இந்தக் கோவிலுக்கு வந்தும் இந்த இரண்டு பிரசாதங்களை தயார் செய்யலாம்);விதையில்லாத கறுப்பு திராட்சை அரைக்கிலோ,விதையில்லாத பேரீட்சைபழம் போன்றவைகளுடன் வந்து வலைகட்டு கருப்பசாமி கோவில் பூசாரியிடம் கொடுத்து,பூஜை செய்ய வேண்டும்;செய்த பின்னர்,பூசாரிக்கு குரு தட்சிணை குறைந்தது ரூ.51/- தரவேண்டும்.


பிறகு கொண்டு வந்திருக்கும் மஞ்சள்தூள்,50 கிராம் சந்தனம்,50 கிராம் குங்குமம் கொண்டு அந்த மரத்தினை வழிபட வேண்டும்;அதாவது மஞ்சள் குங்குமம்,சந்தனத்தை அந்த மரத்தில் ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தனது கையால் திலகமிட வேண்டும்;பிறகு ஒரு லிட்டர் பசும்பாலை அந்த மரத்தின் வேரில் தனது உள்ளங்கை வழியாக விட வேண்டும்.பிறகு ,அந்த விருட்சத்தை மிக மெதுவாக 16 முறை சுற்றி வர வேண்டும்.வந்தபிறகு,கோவிலுக்குள் சென்று படையிலிட்டு பெறப்பட்ட டயமண்டு கல்கண்டு,வெஜிடபிள் பிரியாணி,கோதுமை ரவை பாயாசம்,கறுப்பு விதையில்லாத திராட்சை,பேரீட்சைகளை அங்கிருப்போருக்கு விநியோகிக்க வேண்டும்;கொஞ்சம் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் சாப்பிட்டுவிட்டு,மீதியை வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இரண்டாவது முறை வரும்போது,வலைகட்டி கருப்பசாமியை சூடன்,பத்தி,தேங்காய் உடைத்து(மணமாகாதவர்களும்,வீட்டில் கர்ப்பிணியாக இருப்பவர்களும் தேங்காய் உடைக்கக் கூடாது)விட்டு, விருட்ச வழிபாடு செய்தால் போதுமானது.
இவ்வாறு எட்டு வெள்ளிக்கிழமைகள்(காலை 10.30 முதல் 12க்குள்) அல்லது எட்டு ஆயில்யம் நட்சத்திர நாட்களில் (காலை 10.30 முதல் 12க்குள்) வழிபாடு செய்து முடித்த 90 நாட்களுக்குள் நீண்டகால பிரச்னைகள் தீர்ந்துவிடும்.சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட வழிபாட்டு முறையே நம் தமிழ்நாட்டிலும்,தமிழ்நாடு வழியாக இந்தியா முழுவதும் பரவியது.இந்த எளிய வழிபாடு மிகுந்த பலன்களைத் தரக் கூடியது.

பல ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் ஏராளமான பரிகாரங்கள்,பூஜைகள்,விரதங்கள் இருந்தும் கூட பிரச்னை தீராமல் தவித்துக்கொண்டிருப்பார்கள்;அவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் உடனடியான நன்மைகளைத் தந்துவிடும்.அபூர்வமாக சில ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு நான்கு அல்லது ஐந்தாவது முறை விருட்ச வழிபாடு செய்ததும்,அவர்களின் ஏக்கங்கள் தீர்ந்துவிடும்;உடனே இந்த விருட்ச வழிபாட்டை நிறுத்திவிடக் கூடாது.எட்டு வெள்ளி அல்லது எட்டு ஆயில்ய நாளை நிறைவேற்றிவிட வேண்டும்.இது ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

இந்த 8 வெள்ளி அல்லது 8 ஆயில்ய நாட்கள் நிறைவடையும் வரையிலும் அசைவம் கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்போதுதான் இந்த வழிபாட்டுக்கான பலன்கள் முழுமையாக வந்தடையும்.

நந்தன ஆண்டின் ஆயில்ய நட்சத்திர நாட்களின் பட்டியல் வருமாறு:

27.5.2012 ஞாயிறு

23.6.2012 சனி

20.7.2012 வெள்ளி மதியம் 12.36 முதல் 21.7.2012 சனி மதியம் 12.58 வரை(சனிக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவும்)

17.8.2012 வெள்ளி(ஆவணி மாத அமாவாசை)

13.9.2012 வியாழன்

10.10.2012 புதன்  காலை 11.10 முதல் 11.10.2012 வியாழன் காலை 11.51 வரை(வியாழன் காலை 11.51க்குள் வழிபாடு முடித்துவிடவும்)

7.11.2012 புதன்

4.12.2012 செவ்வாய்

31.12.2012 திங்கள் காலை 9.18 முதல் 1.1.2013 செவ்வாய் காலை 10.21 வரை(திங்கட்கிழமையைப் பயன்படுத்தவும்)

28.1.2013 திங்கள்

24.2.2013 ஞாயிறு

23.3.2013 சனி காலை 7.46 முதல் 24.3.2013 ஞாயிறு காலை 9.10 வரை

ஆயில்ய நட்சத்திரக்காரர்களே,இந்த ஒருமுறையாவது நம்புங்கள்;உங்களின்   சிரமங்கள்,கஷ்டங்கள்,வேதனைகள் அனைத்தும் இந்த விருட்ச வழிபாட்டின் மூலமாக காணாமல் போகும்;நீங்கள் எதிர்பார்த்த நிம்மதியும்,செல்வ வளமும்,நல்ல வரனும்,சிறந்த மணவாழ்க்கையும்,நல்ல வேலை/தொழிலும் இந்த வழிபாட்டைச் செய்தன் மூலமாக உங்களுக்குக்  கிடைத்துவிடும்.

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் 

No comments:

Post a Comment