Thursday, April 27, 2017

நமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு!!!




“அனுபவத்தால் பராமரிக்கப்படும் அறிவே வாழ்க்கைச் சூழலில் வெற்றி பெறுகிறது” என்பது தத்துவ ஞானிகளின் பகிர்தலாகும்.அத்தகைய அறிவு தெளிவான சிந்தனையையும்,தன்னம்பிக்கையையும் தர வல்லது;மற்றும் (நமது)தேவையற்ற அச்சம்,(தினசரி)கவலைகளையும் களைய வல்லது"

மிகவும் அபாயகரமான ‘வலை’ க ‘வலை’யே..!ஏழையாக இருந்தாலும் சரி,செல்வந்தராக இருந்தாலும் சரி. . . அனைவருமே சிக்குகிற வலை க வலையாகும்.வளரும் நாடான இந்தியாவில் மட்டுமல்ல;அமெரிக்கா போன்ற பெரும் பணக்காரநாடுகள் என உலகம் முழுவதுமே கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.அதன் முடிவில்
கவலைகளில் 40% கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை;
30% கவலைகள் கடந்த காலம் பற்றியது;
12% கவலைகள்  பிறர் பற்றியது;
10% கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை;அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமல் இருக்கலாம்;மீதி இறுதியாக இருக்கும்
8% கவலைகள் மட்டுமே உண்மைக் கவலைகள் என கண்டறியப்பட்டுள்ளது.

தடைகளும்,தோல்விகளும் தன்னுள் ஒரு வெற்றியையும்,நல்லதொரு வாய்ப்பையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே ஞானிகளின் கருத்தாகும்.தோல்வி என்கின்ற பின்னடைவு நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய முன் அறிவிப்பு என்று சொல்லலாம்.பொருட்செல்வத்தை இழப்பது பேரிழப்பு அல்ல;உடல் நலம் சீர்கெடுவதை இழப்பு என்று கருதலாம்.ஆனால்,நம்பிக்கையை இழப்பது மட்டுமே அனைத்தையும் இழந்ததற்குச் சமமாகும். . !
தடைகளை வெற்றிகரமாய் எதிர்கொள்வது எப்படி? என்பதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப்பொருளைச் சுமந்து கொண்டு சென்றது.தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென நின்றுவிட்டது.மேலே செல்ல முடியாமல் தவித்தது.சிறிது நேரம் கழித்து,தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல்(பிளவின் மீது) வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்து பின்பு மீண்டும் அந்த இரையைக் கவ்விக்கொண்டு சென்றது.இதைக் கவனித்த அந்த எறும்பு ஆராய்ச்சி நிபுணர்,எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என்று எழுதியிருக்கிறார்.

துன்பம் ஏற்பட்டால்,அத்துன்பம் ஏற்படுத்துகின்ற பள்ளத்தையே அடித்தளமாக வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே எறும்பிடம் இருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.
ஒரு மிகச் சிறிய உயிரான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் சமாளித்து அதனை நாம் கடந்து ஆக்கபூர்வமான மாற்றங்களுடன் வெற்றி பெற இயலும். .!பல சிறிய செயல்கள்- முயற்சிகள் ஒன்றிணைகின்ற பொழுதுதான் ஓர் பெரும் மாற்றம் என்பதே நிகழும்.

சிறுவன் ஒருவன் கடல் அலைகளால் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நட்சத்திரமீன்களை ஒவ்வொன்றாய் பிடித்துக் கடலில் விட்டுக் கொண்டிருந்தான்.அதிலும் சில மீன்கள் அலைகளால் மீண்டும் கரையில் ஒதுங்கின.அவனும் சளைக்காமல் அப்பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் ‘ஏன் இந்த வீண்வேலை? எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் உன்னால் காப்பாற்ற முடியாது.இதனால் ஒரு பயனும் கிடையாது’என்றார்.

“இதன் பயன் என்ன என்பதை  உயிர் தப்பி கடலுக்குள் சென்ற மீன்களைக் கேளுங்கள்”என்று அந்தச் சிறுவன் சொன்னான்.இத்தகைய செம்மையான மனதினைப் பெறுவதற்காகத்  தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் ஓரு பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர்.

பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி(காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது.இது ஆத்ம பலத்தினை தரவல்லது.இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் வெகுவாய் பல அடைந்து- தற்போது மாசடைந்து வரும் இயற்கைச் சூழலிலிருந்து மிகவும் எளிதாய் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ALZEIMER என்று சொல்லப்படும் ஞாபக மறதி நோய் பிடியிலிருந்து(அதிகமாய் செல்போன் பயன்படுத்துவதன் மூலமும் ஏற்படும்) வெகு சுலபமாய் தப்பிவிடலாம்.நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கிக் கொள்வதற்கும்,
எதையும் எதிர்கொள்ளும் வல்லமையான எண்ணங்கள் பெறுவதற்கும்,உறுதியான மனம்,உடல் தனை பெறுவதற்கும் திருக்கோவில் வழிபாடே ஒரே தீர்வாகும்.மூலஸ்தானத்தில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தகடுகளும் அபரிதமான சக்தியை தந்துகொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு கால பூஜையின் போதும் திரை விலக்கி ஆரத்தி நிகழும் தருணத்தில் எல்லையில்லா சக்தி மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும்.அதனால் தான் மூலஸ்தானத்தில் ஒரு பக்கம் மட்டுமே திறந்தபடி உள்ளது.(அதன் வாயிலாய் அரும்பெரும் சக்தி வெளிப்படுகின்றது).மேலும்-கொடி மரமும் கோபுரக்கலசமும்  அளப்பரிய (ENERGY)காந்த சக்தியை கட்டுக்கோப்பாய் (CIRCULATE)பரிமாறிக்கொண்டிருக்கிறது.எனவே தான் பிரசாதத்தினை உண்பதும் அபரிதமான நன்மைகளைத் தருகிறது.தந்திடும் என்பது திண்ணம்..! அத்தகைய பழமையான திருக்கோவில்களில்/ஜீவசமாதிகளில் அன்னதானம் செய்வதும்,உண்பதும் பெரும் பரிகாரம் என்பதை முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

“நீ சுமக்கின்ற இறைநம்பிக்கை,நீ கீழே விழ நேரிட்டால் உன்னைச் சுமக்கும்” என்பதன் உள்ளார்த்தமும் இதுதான்.இறை சக்தி என்பதும்,பிரபஞ்ச சக்தி என்பதும் ஒன்றே..!!! பிரார்த்தனையே ஒருவகை தியானம் தான்.அத்தகைய தியானமே மனதிற்கு ஓய்வு தரவல்லது.

நமது மனமானது இருவகைப்படும்.ஒன்று மேல் மனம்.இன்னொன்று ஆழ்மனம்.(மனதின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொண்டால்,நமது மனதையே நாம் கட்டுப்படுத்தலாம்;மனதின் செயல்பாடுகளை விவரிக்கும் நூலே ஆழ்மனதின் சக்திகள்!!!.இதை ஒரு வருடத்திற்கு திரும்பத் திரும்ப வாசிக்கும்போது நமது மனம் எப்படிப்பட்டது? அது எப்படி இயங்குகிறது? அதை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை நாமே உணரமுடியும்)நமது மேல் மனதில் விநாடிக்கு இரண்டாயிரம் எண்ணங்களும்,நம்மையறியாமல் நமது ஆழ்மனதில் ஆழ்மனதில்(அடிமனதில்) விநாடிக்கு(குறைந்த பட்சம்) நான்கு கோடி எண்ணங்களும் பரிசீலிக்கப்படுகிறது என்று மனம் பற்றிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இதன் ‘மதிப்பை’ உணர்ந்து கொள்வது நமது  கடமை.அதனை நமக்குப் புரிய வைத்து உணர வைப்பதே ஆன்மீகப் பெரியவர்களின் நோக்கமும் ஆகும்.(சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்,ஜேம்ஸ் ஆலன் எழுதி தமிழில் வெளி வந்திருக்கும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்,ஷிவ் கெரா எழுதி தமிழில் மெக் க்ரோஹில் வெளியிட்டிருக்கும் உங்களால் வெல்ல முடியும்)

இந்த மனதத்துவக் கட்டுரையை எழுதியவர்:டாக்டர்.பி.எஸ்.பி.விஜய்பாலா அவர்கள்,யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி,சென்னை.

தகவல் ஆதாரம்:ஜோதிடர்களுக்கான ஜோதிட மாத இதழ்: பி.எஸ்.பி.யின் விடியல்,பக்கங்கள் 5,6.வெளியீடு:ஐப்பசி 2012 & 25.10.12 

No comments:

Post a Comment