Sunday, December 2, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்-1





புதுவை என்றால் நம் அனைவருக்குமே பாண்டிச்சேரிதான் நினைவுக்கு வரும்;தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புதுவை என்ற பெயரில் ஒரு கிராமம் இருந்தது.அந்த கிராமமே பிற்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் நகரமாக மாறியது.ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி சிவகாமி அம்பாள்  கோவில் அமைந்திருக்கிறது.இந்தக்  கோவிலின் பழைய பெயரே புதுவை ஆகும்.

சிவபுராணத்தை வாசித்தால் சில ஆச்சரியங்களை உணருவீர்கள்;ஒருவன் சிவாலயம் கட்ட வேண்டும் என்ற நினைத்தாலே அவனது ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த அத்தனை பாவங்களும் நீங்கிவிடுமாம்;ஒருவன் ஒரு சிவாலயம் கட்டிவிட்டால்,அந்த சிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு கருங்கல்லுக்கும் ஆயிரம் தேவ வருடங்கள் சுவர்க்கத்தில் சகல சுகபோகங்களுடன் வாழ்வான் என்று சிவபுராணம் சொல்கிறது.அது என்ன ஆயிரம் தேவ வருடங்கள்?

பூமியில் நமக்கு ஒரு வருடம் என்பது தேவ உலகத்தில் ஒரு நாள் ஆகும்.மார்கழி மாதம் தான் தேவ உலகத்தில் அவர்களுக்கு விடிகாலை!!! ஆக,ஒரு தேவ வருடம் என்பது பூமியில் 365(பூமியில் மனிதர்களாகிய காலக் கணக்குப்படி) வருடங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
365 X 1000 = 365000(மூன்று லட்சத்து அறுபத்தைந்தாயிரம் பூமி வருடங்கள்) அளவுக்கு ஒரு கருங்கல் வீதம் எத்தனை கருங்கற்களால் அந்த சிவாலயம் கட்டப்பட்டதோ அத்தனை வருடங்கள் ஒரு சிவாலயத்தை கட்டியவர் தேவலோகத்தில் சகல சுகபோகத்தோடு வாழ்வார்.இதனால் தான் நமது ஆன்மீகபூமியான தமிழ்நாட்டில் 38,000 பழமையான ஆலயங்கள் இருக்கின்றன.இதில் விஷ்ணு ஆலயங்களும் அடங்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சிவகெங்கைத்தீர்த்தம் என்ற பெயரில் ஒரு குளம் இருக்கிறது.இங்கே சனிபகவான் தனி சன்னதியில் காட்சியளித்து வருகிறார்.ஜீரத் தேவர் என்ற துவாரபாலகர் இங்கே தான் இருக்கிறார்.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் பழமையான சிவாலயம் இது மட்டுமே! குறைந்தது ஐந்தாயிரம் ஆண்டுகள் வயதுடையதாக  இருக்கிறது.வன்னி மரமே இந்தக் கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது.ஆறு அடி உயரமுள்ள நடராஜர் இங்கே தெற்கு நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார்.மிக அழகான கால பைரவர் சன்னதிக்கு மிக அருகிலேயே நவக்கிரக சன்னதி அமைந்திருக்கிறது.தொடர்ந்து 48 நாட்கள் எந்த ஒரு சிவாலயத்துக்கும் தினசரி சென்று வந்தாலே 49 வது நாளில் அல்லது 48 வது நாளில் ஒரு சிறு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழும்;அந்த சம்பவத்திலிருந்து நாம் சிவ அம்சமாகவே கருதப்படுவோம்;

மனிதர்களாகிய நம்மை ஒவ்வொரு நொடியும் நமது பூர்வபுண்ணியம் மற்றும் பூர்வபாவங்களின் படி இயக்குவது நவக்கிரகங்கள்;இந்த  நவக்கிரகங்களுக்குள் இருந்து இவைகளைக் கட்டுப்படுத்துவது பஞ்சபூதங்கள்;இந்த நவக்கிரகங்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவது ஸ்ரீமஹாவிஷ்ணு! மும்மூர்த்திகளாக பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் =இவர்களையும்,  பஞ்சபூதங்களையும்,நவக்கிரகங்களையும்,27 நட்சத்திரங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரை உருவாக்கியவர் சதாசிவன் எனப்படும் ஆதி சிவன் ஆவார்.இந்த ஆதி சிவனை தோற்றுவித்தது பாலதிரிபுரசுந்தரி எனப்படும் மனோன்மணி என்ற வாலைப்பெண்!!! இவளே ஒட்டு மொத்த பிரபஞ்சம்,ஈரேழு பதினான்கு உலகம்,அனைத்து உயிர்கள்,தேவர்கள்,ரிஷிகள்,சித்தர்கள்,நாகங்கள்,தாவரங்கள்,மூலிகைகள்,மலைகள்,கடல்கள்,கோள்கள்,நட்சத்திரங்கள்,வால் நட்சத்திரங்கள்,நெபுலாக்கள்,கருந்துளைகள் அனைத்திற்கும் காரணகர்த்தா!! இவளுக்கு மேல் இவளை இயக்குவது என்று யாரும் கிடையாது;
இந்த வாலைப்பெண் 11 வயதுடைய சிறுமி போன்ற தோற்றத்துடன் இருப்பாள்;இவளை வாலைப்பூசை செய்து நாமும் நேரில் தரிசிக்கலாம்;இந்த மனோன்மணி இருக்கும் ஆலயமே ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி சிவகாமி அம்பாள் கோவில்!!!


இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமி சன்னதியின் இடது பக்கத்தில்  சூட்சுமரூபமாக இருந்து அருள்பாலித்து வருபவளே இந்த மனோன்மணி!!! இப்படி மனோன்மணி இருக்கும் கோவில்கள் தமிழ்நாட்டில் ஒருசில மட்டுமே இருக்கின்றன.இங்கே ஒவ்வொரு அமாவாசை,திருவாதிரை நாட்களிலும் என்றோ அல்லது தினமும் ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தாலோ நிச்சயமாக மனோன்மணி தரிசனம் கிட்டும்;


இங்கே ஒவ்வொரு புரட்டாசி1 ஆம் நாள் மற்றும் பங்குனி 1 ஆம் நாளில் சூரியனின் கதிர்கள் மூலவராகிய வைத்தியநாத சுவாமி மீது படுகின்றன.புரட்டாசி மாதத்திற்கும் முன்னோர்களின் பித்ரு வழிபாட்டிற்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதை இந்த நேரத்தில் மறக்காதீர்கள்:
இங்கே ஒரே கல்லினால் ஆன ஸ்ரீசக்கரம் திரு.சிவகாமிஅம்பாள் சன்னதிக்கு எதிரே வெளிப் பிரகாரத்தில் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் அமாவாசையும்,குரு ஓரையும் சேர்ந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வாலை தரிசனம் கிடைக்கும்;


உங்களில் யாருக்காவது நீண்டகாலமாக தீராத காய்ச்சல் அல்லது இருதய நோய்/வலி,மாரடைப்பு நோய் இருக்கிறதா?இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமி சன்னதியின் துவார பாலகராக இருக்கும் ஜீரத்தேவருக்கு( தற்போது ஸ்ரீகாளர் என்று எழுதி வைத்துள்ளார்கள்) 11 வியாழக்கிழமைகளுக்கு வால் மிளகில் பசும்பால் விட்டு கலந்து பற்றுப் போட்டு வர வேண்டும்.எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.கடந்த நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் பேர்களுக்கு குணமாகியிருக்கின்றன.


பிரம்ம கைவர்த்த புராணத்தில் இந்த புதுவைத்தலத்தை(அருள்மிகு வைத்தியநாதசுவாமித் திருகோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்) முக்தி தரும் க்ஷேத்திரம் என்று குறிப்பிட்டுள்ளது.
இங்கே வந்து பல ஆண்டுகள் தங்கி வழிபட்டு முக்திபெற்றவர்கள் பிரம்மா,இந்திரன்,சூரியன்,சந்திரன்,தேவர்கள்,திருவாசகர்,சித்தர்களின் தலைவர் அகத்தியர்.


ஆதி சித்தர் காகபுஜண்டர் தனது பாடல்களில்
1.வடவனம்
2.வன்னிவனம் அருள்மிகு வைத்தியநாத சுவாமி
3.திருக்கற்றளீசுவரர் உடையார்
4.திருக்கற்றளீசுவரம் உடைய நாயனார்
5.படிக்காசு வைத்தருளிய நாயனார் என்று பாடியுள்ளார்.


தருமபுரம் ஆதீனத்தை நிறுவியவர் ஸ்ரீலஸ்ரீகுருஞான சம்பந்தர் ஆவார்.இவர் 16 ஆம் நூற்றாண்டில் இந்த ஊரில் மீனாட்சி அம்மைக்கும்,சுப்பிரமணியம் பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தவர்.இவரது வழிகாட்டுதலால் அக்காலத்தில் அருள்மிகு வைத்தியநாதசுவாமிக்கோவில் பிரபலமடைந்தது.


சூத முனிவர், மடவார்வளாக தலபுராணத்தை சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தார்,இந்த கோவிலின் ஸ்தலபுராணத்தை பெருமாள்பட்டி வைத்தியலிங்கம் பிள்ளை அவர்கள் தொகுத்தார்;சேத்தூர் சமஸ்தான வித்வான் அருணாசல கவிராயர் அவர்களால் 1902 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது;


“அந்தணர் அன்பர் வாழி அருமறை முறைமை வாழி
செந்தமிழ் புதுமை வாழி சிவன் சிவகாமி வாழி
சந்த வெண்ணீறு வாழி சிவ சமயாதி வாழி
நந்தனலின் மன்னன் வாழி அவன் செங்கோல் நாளும் வாழி”
என்பது சூதக முனிவரின் பாடல் ஆகும்.


சனிபகவானுக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது.இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் வன்னி மரம் ஆகும்.சனி பகவானின் சமித்துவே வன்னி தான்! எனவே,இங்கே வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் சனியினால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.


யார் ஸ்ரீகால பைரவரை உள்ளன்போடு வழிபடுகிறார்களோ அவர்களை நினைத்து சனிபகவான் பெருமைப்படுவார்;அவர்களுக்கு ஏழரைச்சனித் துன்பம் ஏற்படாது.ஆனால்,தொடர்ந்து ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யவிடாமல் நமது கர்மவினைகள் தடுக்கும்.


ஓம்சிவசிவஓம் 

2 comments:

  1. கோவிலின் விரிவான சிறப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
  2. யார் ஸ்ரீகால பைரவரை உள்ளன்போடு வழிபடுகிறார்களோ அவர்களை நினைத்து சனிபகவான் பெருமைப்படுவார்;அவர்களுக்கு ஏழரைச்சனித் துன்பம் ஏற்படாது.ஆனால்,தொடர்ந்து ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யவிடாமல் நமது கர்மவினைகள் தடுக்கும்.



    So please give a solution to contiue the bairava pooja,

    ReplyDelete