Monday, September 17, 2012

மஹாளயபட்சத்தினுள் ஒளிந்திருக்கும் இந்துதர்ம(ஜோதிட)விஞ்ஞான ரகசியம்:அவசியமான மறுபதிவு









பல ஆண்டுகளாக எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது.இறந்த நமது தாத்தாக்கள்,பாட்டிகள்,முப்பாட்டன்கள்,முப்பாட்டிகள்,பூட்டன்கள்(தாத்தாவின் தாத்தா),பூட்டிகள்(பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? ஆவணி மாத அமாவாசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?ஏனெனில்,ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார்.இதற்கான விடை நேற்றுதான் எனக்கே தெரிந்தது.அப்படித் தெரிந்த உடனே,எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்தே ஆக வேண்டும் என்று துடித்தேன்.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுகளில் ஒன்று கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை! இந்த அமைப்பிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவருகிறது.அந்த மாத இதழின் பெயரே பூஜாரி முரசு.இதன் செப்டம்பர் 2011 ஆம் வெளியீட்டில் 4,5ஆம் பக்கங்களில் விரிவான விளக்கம் வந்திருக்கிறது.(இந்து இயக்கங்களை பத்திரிகைகள் பிற்போக்கானவர்கள் என எழுதித் தள்ளிவருகின்றன.ஆனால்,இந்து இயக்கங்கள் இந்து தர்மம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை ஆராய்வதோடு,ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுவருகிறது)



நாம் மெக்காலே கல்விமுறைப்படி படித்தவர்கள்.எந்த ஒரு இந்துதர்ம நடைமுறையையும்,நமது பகுத்தறிவுக்கு உட்பட்டு அது நிஜம் என நம்பினால் மட்டுமே அதைப் பின்பற்றுவோம்;ஆனால்,ஜீன்ஸ் அணிவது,சிறிதும் சத்து இல்லாத கார்ன் பிளக்ஸ் மெல்லுவது,ஈ மொய்த்தாலும் கெண்டகி சிக்கன் சாப்பிடுவது,குடித்த உடனே தாகம் எடுக்கும் கோக்,பெப்ஸியைப் பற்றி நமது பகுத்தறிவு சந்தேகப்படாது!?! இல்லையா?சரி,விஷயத்துக்கு வருவோம்.



புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள்,தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன.வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம்.



புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார்.கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.நம்மையும் சேர்த்து,சூரிய மண்டலம்,நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு(அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்;ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் பல கோடி பெறுமானமுள்ள டெலஸ்கோப்கள் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.



பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது.பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின.அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன.இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும்.அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது.எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகி,சூரியனால் வாழ்விக்கப்படுகிறதோ,அப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகி,அதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.



ஒரு மையத்திலிருந்து உண்டானது,பிரளயகாலத்தின்போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும்.நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்;சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்;அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்;



மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம்(பித்ருக்களின் வழி)என்பார்கள்.



இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது.இங்கு ஒரு கேள்வி எழலாம்? பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன.பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்,ஏது திசை?முடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாண்டமான பிரபஞ்சத்திற்கு ஏது திசை?



இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது.துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும்.அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும்.இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும்.பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டு,எது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும்.இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.



கன்னிராசியானது ,பூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது.அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது.அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது.நாம் உண்டான மையம் தெற்கு திசையில்,கன்னிராசியில் இருக்கவே,இறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள்.எனவே,அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம்.அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம்.



இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம்.இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம்.அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது.அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.



சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம்(சந்திரமானம்) என்பது உண்டு.அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது.இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அதன் விளக்கம்:



ஒரு பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)

2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)



30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்



12 பித்ரு மாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்===இதை திதியாக மாற்றினால்,

ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி



ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள் இருக்கவே,



10,800 திதி/360 திதி =30 வருடம்



அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும்.



ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்,பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும்.அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம்.அதனால்,பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும்(15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.



தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்,அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும்.அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம்.



இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு,சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது.இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.



அது மட்டுமல்ல,ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம்,நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு.



இதனால்தான் நமது மிஸ்டிக் செல்வம் ஐயா,ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று(15.10.2012 திங்கள்) அன்னதானம் செய்தால்,12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான் என தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு:படத்தில் இருப்பது கன்னி ராசி மண்டலம்.உற்றுப்பாருங்கள் நமது முன்னோர்கள் தெரிகிறார்களா?

No comments:

Post a Comment