ஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.
ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர்.
பஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து "பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் "ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களால், கோசாலைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும், 350 முதல், 500 நாட்டுப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.இவற்றிடம் இருந்து பெறப்படும் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம், குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில் உட்பட, ஏராளமான பொருட்களை தயாரிக்கின்றனர்.
"அரசு உதவ வேண்டும்':பஞ்ச கவ்யப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னோடி விவசாயிகள், கவுந்தப்பாடி பாலசுப்பிரமணியம், வெப்படை முரளி, முத்தூர் முத்துசாமி, கோபி கணேசன் கூறியதாவது:கோசாலைகள் தவிர, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பஞ்சகவ்யா, அர்க் (கோமியம்), சோப்பு, சாம்பிராணி, விபூதி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கின்றனர். காய்ச்சி வடித்த கோமியத்தை, நாள்தோறும் இருவேளையும், ஐந்து மி.லி., குடித்தால், சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. குறிப்பாக, கேன்சருக்கு சிறப்பான நிவாரணியாக உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தயாரிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சந்தைப்படுத்தவும், அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
i would like to buy soaps,shampoo, phenyole etc kindly provide seller address in erode
ReplyDelete