Friday, September 6, 2019

செல்வ வளத்தை தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ ஜபம்!!!


வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை ஜபிப்பது எப்படி?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து அருணாச்சலேஸ்வரரின் ஆணைப்படி இயக்கி வருபவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;ஒரு லட்சத்து எட்டுவிதமான கால பைரவ அவதாரங்கள் இருக்கின்றன;(நன்றி:காசியில் வாழும் அகோரிகள்) இவர்கள் அனைவரையும் விடவும் மிக உயர்வான சிவ அவதாரம் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;

தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 5 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்;இதனால்,கால பைரவரின் அனுக்கிரகம் நமக்குக் கிடைக்கும்;கர்மவினைகள் தீரும்;இந்த 5 ஆண்டுகளும் அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு ஜபித்து/எழுதி வந்தால் மட்டுமே பைரவரின் அருள் கிடைக்கும்; 15 முதல் 25 வயதிற்குள் இப்படி செய்து விட்டால்,இப்பிறவி முழுவதும் எந்த விதமான மாந்திரீக பாதிப்பும் நெருங்காது;
ராகு மஹாதிசை இருப்பில் இருப்பவர்கள் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று தினமும் 108 முறை வீதம் 5 ஆண்டுகள் வரை ஜபித்து வர வேண்டும் அல்லது எழுதி வர வேண்டும்;இதனால்,ராகுவால் வர வேண்டிய அவமானங்கள் வராது அல்லது சிறிய அளவில் குறைந்துவிடும்;சம்ஹார பைரவரின் அருள் கிடைத்துவிடும்;15 முதல் 25 வயதிற்குள் இப்படி செய்துவிட்டால்,அதன் பிறகு ஒரு போதும் பில்லி,சூனியத்தால் பாதிப்பு வராது பைரவரின் அருள் கவசம் பாதுகாக்கும்;
கால பைரவரையோ சம்ஹார பைரவரையோ தினமும் ஜபித்தால்,கர்மவினைகள் படிப்படியாகத் தீரும்;ஆனால்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ன  ஆகர்ஷண பைரவரை ஜபித்தால்,கர்மவினைகள் குறைந்த உடனே வருமானம் அதிகரிக்கும்;
இணைய தொழில் நுட்பம் வந்த பின்னர்,உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது;அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே எந்த நாட்டில் இருப்பவர்களையும் தொடர்பு கொள்ளும் சூழ்நிலை வந்துவிட்டது;இந்த சூழ்நிலையில்,ரகசிய வழிபாட்டு முறையான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை ஜபித்து அவரது அருளைப் பெறும் வழிமுறையை இங்கே உங்களுக்கு தெரிவிக்கிறோம்;
இரண்டு மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் பட்டுத் துண்டு
சுத்தமான பசு நெய் ஒரு கிலோ
சந்தன வாசம் தரும் பத்திக் கட்டு
தாமரை நூல் திரி 32
மண் விளக்கு இரண்டு
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் ஒன்று
தீப்பெட்டி ஒரு பாக்ஸ்
மண்டை வெல்லம்(அச்சு வெல்லம் கூடாது) அல்லது வீட்டில் தயார் செய்த தயிர்(கடையில் வாங்கியது பலன் தராது)
வாரம் ஒரு நாள் தாமரை மலர்கள் 108 அல்லது
மாதம் ஒரு நாள் தாமரை மலர்கள் 108
இரண்டு புதிய கிண்ணம் அல்லது தினமும் வாழை இலை அல்லது 32 பேப்பர் ப்ளேட்
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்;4.30க்குள் குளித்து தயாராகி விட வேண்டும்;ஒரு மஞ்சள் துண்டின் மீது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;
வீட்டின் அமைப்பு அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்கள் அல்லது பாரத நாடு (இந்தியா) அல்லாத நாட்டில் வசிப்பவர்கள் இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளலாம்; ஒரு போதும் தெற்கு நோக்கியோ,மேற்கு நோக்கியை வைக்கக் கூடாது;
இன்னொரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;உங்கள் குல தெய்வத்தையும்,வழிகாட்டும் குருவையும் எண்ணியவாறு நெய்தீபம் ஏற்ற வேண்டும்;சந்தன பத்தியை பொருத்த வேண்டும்;மஞ்சள் துண்டின் மீது அமர்ந்ததும்,உங்கள் உடலின் எந்த பகுதியும் தரையைத் தொடக் கூடாது;
ஓம் ஸ்ரீ மஹா கணபதி நமஹ என்று ஒருமுறை நினைத்துவிட்டு,சொர்ண பைரவ அஷ்டகம் 33 முறை ஜபிக்க வேண்டும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் 1008 போற்றியை 3 முறை ஜபிக்க வேண்டும்;
ஜபித்து முடித்த உடன்,நாம் அமர்ந்த மஞ்சள் துண்டினை மடித்து வைக்க வேண்டும்.
பிறகு,காலை 8 மணிக்குள் வீட்டில் சமையல் முடிந்ததும்,முதல் வேலையாக சாதத்தை எடுத்து,அதை ஒரு கிண்ணம்/வாழை இலை/பேப்பர் ப்ளேட்டில் வைக்க வேண்டும்;அத்துடன் வெல்லத்தை பொடி செய்து கலந்து கொள்ள வேண்டும்;அல்லது தாளித்த தயிரை கலந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷணா பைரவர் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பிறகு,உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் காலை உணவு சாப்பிடலாம்;இரவில் வீடு திரும்பிய பின்னர்,அந்த கிண்ணம்/வாழை இலை/பேப்பர் ப்ளேட்டில் இருப்பதை அப்படியே எடுத்து,வீட்டின் வெளிப்புறத்தில் மறைவான இடத்தில் சற்று உயரமான இடத்தில் வைக்க வேண்டும்;இப்படி 90 நாட்கள் செய்து வர வேண்டும்;இந்த 90 நாட்களும் மது,அசைவம்,போதைப் பொருட்கள் பயன்பாடு கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்;அதே போல, தாம்பத்திய சுகம்,காமரீதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தால்,91 வது நாளில் இருந்து வருமானம் அதிகரிக்கத் துவங்கும்;(இந்த விதியை எந்த ஒரு முறை மீறினாலும் பலன் கிடைக்காது)
அதன் பிறகு,ஒவ்வொரு பவுர்ணமி வீதம் 55 பவுர்ணமிகள் தோறும் இதே போல ஜபம் செய்யலாம்; அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வீதம் 108 வெள்ளிக்கிழமைகளில் ஜபம் செய்யலாம்;அல்லது 108 அனுஷம் நட்சத்திர நாட்களில் ஜபம் செய்யலாம்;
பவுர்ணமி,அனுஷம்,வெள்ளிக்கிழமை நாட்களில் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தவாறு ஜபித்து வர வேண்டும்;

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பயன்படுத்தும் எந்த ஒரு சிறு பொருளையும் வேறு தெய்வங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது;ஜாக்கிரதை!
மஞ்சள் துண்டினை எப்போதும் துவைக்கக் கூடாது;தாமரை மலர்களை அர்ச்சனைக்குப் பயன்படுத்திய பின்னர்,அவைகளை பாதுகாப்பாக ,காலடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;அது வீட்டில் இருக்க இருக்க செல்வத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கும்;
மிகவும் ரகசியமான வழிபாட்டு முறையாக இருப்பதால்,இது பற்றி நெருங்கிய நட்பு வட்டம்,நெருங்கிய உறவுகளிடம் கூட தெரிவிக்காமல் ஆரம்பிக்கவும்;செல்வ வளம் வந்த பின்னரும் கூட தெரிவிக்கக் கூடாது;


No comments:

Post a Comment