Wednesday, August 18, 2010

இந்தியா சிலிர்த்தெழுகிறது சம்பவம் 1

ஹெச்1 பி விசா கட்டண உயர்வு:அமெரிக்காவுக்கு எதிராக வரிந்துகட்டுகிறது இந்தியா!

வாஷிங்டன், செவ்வாய், 17 ஆகஸ்ட் 2010:தமிழ்வெப்துனியாவிலிருந்து

                        அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்களை பாதிக்கச் செய்யும் வகையில், ஹெச் 1 பி வேலை விசாவுக்கான கட்டணத்தை உயர்த்திய பிரச்சனையை, உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organisation - WTO) கொண்டு செல்ல இந்தியா முடிவு செய்துள்ளது.

                         அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள்தான், ஹெச் 1 பி வேலை விசாக்களை அதிக அளவில் பெறுவதாகவும், இவற்றின் மூலம் இந்தியர்களை அதிக அளவில் வரவழைத்து தங்களது நிறுவனங்களில் பணியில் அமர்த்துவதாகவும், இதனால் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோவதாகவும் அமெரிக்கர்களில் ஒருதரப்பினர் குற்றம்சாற்றி வருகின்றனர்.

                          இந்நிலையில் அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், ஹெச் 1 பி வேலை விசா மூலம் தங்கள் நாட்டவரை வரவழைத்து பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில், ஹெச் 1 பி வேலை விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்கா சமீபத்தில் உயத்தியது.

                      ஆனால் அந்த காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல், " எல்லை பாதுகாப்பு நடவடிக்கை" என்ற பெயரில் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியது அமெரிக்கா.

                     இந்த கட்டண உயர்வு காரணமாக இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பாக ஐடி அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்கள் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

                   இந்நிலையில், அமெரிக்காவின் இந்த செயல் உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளுக்கு மாறானது என்பதால், இவ்விவகாரத்தை அங்கு கொண்டு செல்வது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருவதாக இந்திய வர்த்தக துறை அமைச்சக செயலர் ராகுல் குல்லார் இன்று தெரிவித்தார்.

                       அவர் மேலும் கூறுகையில்,தனது வர்த்தக நலன்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனையை,இந்தியாவால் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.

                        இதனிடையே அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை இந்தியா தட்டிப்பறிக்கவில்லை என்றும், அமெரிக்காவில் இயங்கும் இந்திய நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய குற்றச்சாற்றுக்கள் மிகையானது என்றும் அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

                     ஆன்மீகக் கடலின் கருத்து: அட! அமெரிக்கா தனது சுயநலத்துக்கு என்ன செய்தாலும் இந்தியாவாகிய நாம் கைகட்டி வாய்பொத்தி இருப்போமே? இப்போ என்ன அதிசயம். . .இந்தியாவின் சுயவிழிப்புணர்வு சிலிர்த்தெழுந்துவிட்டதா? இல்லை இதுவும் வெறும் அரசியல் அறிக்கையோடு முடிந்துவிடும் பம்மாத்து வேலையா? ஜோதிடப்படி, கடக ராசியில் பிறந்த இந்தியா தனது சுயபலத்தை உணரும் காலம் இதுதான்.விரைவில் இந்தியாவின் இந்துத்தன்மை சிலிர்த்தெழும்போது இன்னும் என்னென்ன அதிசயங்களோ நடக்கும்.


No comments:

Post a Comment