Tuesday, March 1, 2016

ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய அண்ணாமலையார் அஷ்டகம்


அண்ணாமலையார் சன்னதியில் தினமும் பாடவேண்டிய அஷ்டகம் இது;அண்ணாமலைக்கு சென்று வர ஆசைப்படுபவர்கள் இதை தொடர்ந்து 108 நாட்கள் பாடி வந்தால் அண்ணாமலைக்குச் செல்லும் பாக்கியமும், அண்ணாமலையாரின் அதிசய தரிசனமும் கிட்டும்;


தவிர,நமது ஊர்களில் அமைந்திருக்கும் சிவாலயங்களில் மாலை 4.30 முதல் 6 க்குள் இப்பாடலைப் பாடுவதும் சிவனருளை அள்ளித் தரும்;


ஏனென்றால்,ஒருமுறை அண்ணாமலை என்றோ அருணாச்சலம் என்றோ கூறினால் 3,00,00,000 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அண்ணாமலை புராணத்தில் அந்த ஈசனே தெரிவித்திருக்கிறார்;

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகத்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்

பொங்கிவரு கங்கையான பொன்னி யானவன்
பொன்னுடனே பொருளளித்த பொதிகை யானவன்
தங்கிநின்ற யிங்குவந்த தந்தை யானவன்
தவமளித்த இன்பமான தருண னானவன்
சங்கெடுத்து இசையளித்த சதுர னானவன்
சத்தியத்தின் சபையளித்த சடைய னானவன்
நங்கை யுமை அன்னைமகிழ் நம்ப னானவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே         (1)


அழலெடுத்து ஆடுகின்ற அண்ணாமலையானே
அங்குமிங்கு மெங்குமாக அருகில் நின்றவா
நிழலெடுத்து நிறைவுகாட்டி நித்தம் காத்தவா
நின்றுநின்று நினைப்பளித்து நிதியும் தந்தவா
விழலிடத்து முகிலுமாகி விளைவு மானவா
விந்தையான தமிழினோடு விளக்கு மானவா
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்கண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!          (2)

வளங்களோடு வையவாழ்வு வகுத்துத் தந்தவன்
வறுமைதீரப் பொறுமையோடு வழிகள் தந்தவன்
விளங்கனியில் சுவைமடுத்த விளைவும் தந்தவன்
விண்ணுமண்ணும் ஒன்றுமான வேதம் தந்தவன்
அளங்களெங்கும் நெற்குவித்து அளந்து தந்தவன்
அன்பர் வாழ மண் நடந்து அருளும் தந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (3)


காட்சிதந்து காத்துநிற்கக் கயிலை விட்டவன்
காலமெல்லாம் காவலாகக் காக்க வந்தவன்
மாட்சிபொங்கக் கொன்றையான மாலை யிட்டவன்
மாதவத்தர் உள்ளம்பாட மயங்கி வந்தவன்
ஆச்சியான காளியோடு ஆட்ட மிட்டவன்
ஆறுமுகன் யானையோடு ஆக்க வந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (4)


செண்டு கொண்ட சாத்தனையும் செகத்திற்க் கீந்தவன்
சென்மபாபம் யாவுந்தீரச் செபமும் சொன்னவன்
கண்டுகொள்ள வந்தபேர்க்குக் கண்கள் ஈந்தவன்
கவலைதீரக் கடுமைபோகக் கவிதை சொன்னவன்
தண்டெடுத்துத் தொல்லையோட்டி தண்மை ஈந்தவன்
தயவுசெய்து தலங்கள் தோறும் தங்கி நின்றவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்கண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!             (5)


மறைகளான தமிழில்பாட மகிழ்வு கொண்டவன்
மங்கலத்து வாழ்வு ஆன மன்னர் மன்னவன்
நிறைவுகொண்டு கோயில் தங்க நெஞ்சம் கொண்டவன்
நியமமான நந்திமகிழ நிருத்தம் செய்தவன்
இறைவனென்ற பெயருக்கேற்ற இனிமை கொண்டவன்
இன்றுபோல என்றுமென்றும் இளமை யானவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!            (6)


அரவெடுத்துக் கங்கணமாய் அணிந்து பார்த்தவன்
அய்யனாகி அண்ணாமலை அமர்ந்து பார்த்தவன்
துறவு போன்ற வறுமை நோயைத் துடைத்துப் பார்த்தவன்
துதிக்கை கொண்ட தும்பி தோலைத் துணித்துப் பார்த்தவன்
உறவு கொண்டு நஞ்சையுண்டு உலகைப் பார்த்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!           (7)

பூதநாதன் வேதநாதன் பூமிநாதனே
பூழிசூடி புன்மைதீர்த்த பூவை பாகனே
தாதனாகித் தாபம் போக்கு தாயுநாதனே
தாரகத்தின் பொருள்மடுத்த தாணு நாதனே
நாதநாத நாதநாத நாத நாதனே
தாதமோடு நாடுபாடு நாக நாதனே
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்

எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!!!            (8)

No comments:

Post a Comment