Sunday, August 4, 2019

மீண்டும் பூமியில் தோன்றும் வராகி யுகம்!!!


உதயமாகிக் கொண்டு இருக்கும் வராகி யுகம்!

உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் இம்மூன்றையும் ஆதி காலத்தில் ஈசனாகிய அருணாச்சலேஸ்வரர் நேரடியாக நிர்வகித்து வந்தார்;காலச் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு,அவரே மஹா கால பைரவர் என்ற கால தேவனை தோற்றுவித்தார்;அவரிடம்,இம்மூன்றையும் நிர்வகிக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார்;ஒவ்வொரு தெய்வீக அவதாரத்திற்கும் ஒரு துணை தேவை என்பதை உணர்ந்தே,எந்த தெய்வீக அவதாரத்தையும் தனியாக உருவாக்காமல்,அதற்கு என்று ஒரு துணையையும் படைத்தார் ஈசன்!

கணபதிக்கு சித்தி,புத்தி என்று இரண்டு துணை சக்திகள்!

முருகக் கடவுளுக்கு வள்ளி,தேவயானி என்ற தெய்வானை என்ற இரண்டு துணை சக்திகள்!

மஹாவிஷ்ணுவின் அவதாரமான க்ருஷ்ண பகவானுக்கு பாமா,ருக்மணி என்று இரண்டு துணை சக்திகள்!

இரண்டு துணை சக்திகளை இழிவாக கேலி செய்யும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது;அது தவறு;தத்துவார்த்தமாக, இச்சா சக்தி,க்ரியா சக்தி,ஞான சக்தி என்று மூன்று விதமான சக்திகளின் அடிப்படையில் அவதாரங்கள் இயங்குகின்றன;இதில்,க்ரியா சக்தியாக ஆண் தெய்வ அவதாரம்   இயங்கும் போது,அதற்கு உறுதுணையாக ஒரு இச்சா சக்தியும்,ஒரு ஞான சக்தியும் தேவை;இந்த இச்சா சக்தி,ஞான சக்தியும் தான் அந்த இரண்டு பெண் தெய்வீக சக்திகளாக பரிணமிக்கின்றன;


கலியுகத்தின் முதல் 1000 ஆண்டுகள் வரையிலும் கூட,மனிதர்கள் தெய்வீக வாழ்க்கையோடு வாழ்ந்து வந்தார்கள்:அடுத்தடுத்து வந்த இரண்டாவது 1000 ஆண்டுகள்,மூன்றாவது 1000 ஆண்டுகள்,நான்காவது 1000 ஆண்டுகளில் ஆன்மீக அடிப்படை ஞானம் பூமியில் மறையத் துவங்கியது;இப்போது ஐந்தாவது 1000 ஆண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்;இப்போது 5120 ஆம் ஆண்டு(கி பி 2019) நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது;
துரோகமும்,பித்தலாட்டமும்,மாந்திரீகத்தால் கடுமையான பாதிப்பும் அடையாத மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் வெகு சிலர் மட்டுமே இருக்கிறார்கள்;


துரோகம் உங்களை நெருங்காமல் இருக்க வேண்டுமா?
ஒரு போதும் நீங்கள் எவரிடமும் எப்போதும் ஏமாறாமல் இருக்க வேண்டுமா?
மாந்திரீகத்தால் ஒரு போதும் நீங்கள் மற்றும் உங்களுடைய குடும்பத்தார்,தொழில்/வேலை பாதிப்பு உள்ளாகாமல் இருக்க வேண்டுமா?
ப்ரபஞ்சத்தின் அன்னை,லலிதா பரமேஸ்வரியின் தோழி,ஸ்ரீவித்யா உபாசனையில் முக்கிய இடத்தில் இருக்கும் தெய்வீக பெண் சக்திகளில் ஒருவரான மஹாவராகியை தினமும் ஜபியுங்கள்!


ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி  தான் மஹாவராகியின் பிறந்த நாள்!

பல கோடி யுகங்களுக்கு முன்பு,ஆடி மாதம்,வளர்பிறை பஞ்சமியும்,ஆயில்யம் நட்சத்திரமும் கூடிய சுப யோக சுப ஓரையில் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரநாயகியின் புருவ மத்தியில் இருந்து உதயமானவள் தான் மஹாவராகி!


இந்து மதம் என்பது ஆறு பெரும் பிரிவுகளையும்,ஏராளமான சிறுபிரிவுகளையும் கொண்டது;இதில் காணபத்தியம்,கெளமாரம்,சைவம்,வைஷ்ணவம்,சாக்தம்,சவுரம் என்ற ஆறு பெரும் பிரிவுகளில் சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் என்ற மூன்றுபிரிவுகளிலும் தொடர்புடைய வழிபாடு தான் வராகி வழிபாடு ஆகும்;


108 பைரவ அவதாரங்கள் உண்டு என்று இதுவரை நாம் அறிந்திருக்கிறோம்;உண்மையில் 1,00,008 விதமான பைரவ அவதாரங்கள் இருக்கின்றன;பைரவ உலகம் என்ற பெயரில் உலகங்கள் இருக்கின்றன;எந்த ஒரு மனிதன் தனது வாழ்நாளில் குறைந்தது 3 ஆண்டுகள்,அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை பைரவ ஜபம் செய்கிறார்களோ,அவர்களது ஆயுள் முடிந்த பிறகு,அவரது ஆத்மா நேரடியாக பைரவ உலகத்தைச் சென்றடைகிறது என்று நாடி ஜோதிடம் தெரிவிக்கின்றது;ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் அதை பல முறை உறுதிபடுத்தியுள்ளார்கள்:அகத்திய மகரிஷியின் பரம்பரையைச் சேர்ந்த சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் ஆன்மீக உபதேசமும் உறுதி படுத்தியிருக்கின்றது;

மூன்று வகையான வராகி அவதாரங்களும்,108 விதமான வராகி அவதாரங்களும் இருக்கின்றன;இதில் ஒன்பது விதமான வராகி அவதாரங்களைப் பற்றிய விபரங்களே நமக்கு கிட்டியிருக்கின்றன;


முதல் வகை வராகி மஹா வராகி ஆவாள்;இவளது அருளைப் பெற ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்க வேண்டும்;இப்படி 3 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்;


இரண்டாம் வகை வராகி புதன் கிரகத்தின் ப்ராண தேவதையான உன்மத்த பைரவரின் துணை சக்தியான உன்மத்த வராகி ஆவாள்;இவளுக்கு என்று காயத்ரி மந்திரம் இருக்கிறது;இதை தினமும் 108 முறை ஜபித்து வர,ஜோதிடத் திறமையும்,கணிதத் திறமையும் கைகூடும்;

உன்மத்த பைரவர் காயத்ரி:

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்


உன்மத்த வராகி காய்த்ரி:

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்


மூன்றாம் வகை வராகி,ஈசனின் ஐந்து முகங்களில் ஒன்றான சதாசிவம் என்ற முகத்தின் துணை சக்தி ஆவார்;இந்த அன்னை பற்றிய மந்திரம் இதுவரை கிடைக்கவில்லை;


இன்றைய கால கட்டத்தில் வராகி உபாசனை செய்ய யாரும் இல்லை;இமய மலைப் பகுதி,அசாம் மாநிலத்தின் காமாக்யா,ஒரிசா மாநிலத்தின் தண்டக ஆரண்யம் போன்ற இடங்களில் வராகி உபாசகர்கள் இருக்கிறார்கள்;தமிழ்நாட்டில் முழு துறவுடன் கூடிய வராகி உபாசகர்கள் இருப்பதாகத் தெரியவில்லை;


தொல்காப்பியத்தில் “மாநிலத்தின் காவல் தெய்வம் மஹாவராகி” என்று ஒரு பாடல் இருக்கின்றது;மாநிலம் என்றால் இமயம் முதல் குமரிக் கண்டம் வரையிலான பரந்த நிலப்பரப்புக்கு மாநிலம் என்று பெயர்;


அந்த அடிப்படையில் பாரத நாட்டின் காவல் தெய்வம்(பாரத மாதா) மஹாவராகி தான்;இந்து நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் தினமும் 1 மணி நேரம் ஜபிக்க வேண்டிய அன்னை மஹாவராகி!


மிகவும் கொடூரமான மாந்திரீகம் தான் ஜின் மாந்திரீகம் ஆகும்;விக்கிரமாதித்த மஹாராஜா காலத்தில் இருந்து ஜின் மாந்திரீகம் அரேபியாவில் இருந்து நமது ஆன்மீக பூமியில் பரவியிருக்கிறது;இன்று தமிழ்நாட்டில் ஊருக்கு ஒரு ஜின் மந்திரவாதி இருப்பது உண்மை;ஜின் மாந்திரீகத்தின் தாக்கம் தீரவும்,ஒரு போதும் ஜின் மாந்திரீகம் உங்களிடம் செயலிழந்து போகவும் பாரத மாதா மஹாவராகியை தினமும் ஜபியுங்கள்;
தினமும் இரவில் ஒரு முறை வராகி மாலை என்ற வராகி பரணியை ஜபித்து வாருங்கள்;


கடுமையான வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து மீண்டு,சுகமான,நிம்மதியான வாழ்க்கை வாழ ஒரு நாளுக்கு ஐந்து முறை வராகி மாலையை ஜபிக்க வேண்டும்;இப்படி 90 நாட்கள் ஜபிக்க வேண்டும்;சிலருக்கு போன 4 பிறவிகள் கர்மாவும்,முன்னோர்கள் செய்த கர்மாக்களும்  மிக அதிகமாக இருக்கும்;அதில்இருந்து  மீள அன்னை மஹாவராகியை சரணடையுங்கள்:


ப்ராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்று மூன்று விதமான கர்மாக்கள் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன;
இதில் ஒரு கர்மச் சுமையை மட்டும் நாம் அன்னதானம்,கோவில் புனர் நிர்மாணம்,உழவாரப் பணி,ஆன்மீகப் பிரச்சாரம் மூலமாக கரைக்க முடியும்;


மீதி இரண்டு கர்மாக்களை நீக்கிட அன்னை மஹாவராகியைச் சரணடைய வேண்டும்;அவளை ஜபிப்பதன் மூலமாக மூன்று கர்மாக்களையும் ஒரே நொடியில் ஊதித் தள்ளிவிடுவாள்:அப்படி நமது கர்மவினைகளை அழிக்கும் அளவுக்கு நாம் தினமும் அவளை ஜபித்து,அவள் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்;


5.8.2019 திங்கள் அன்று அன்னை மஹாவராகியின் பிறந்த நாள்!!!


No comments:

Post a Comment