Tuesday, December 24, 2019

வழிகாட்டும் குருமார்கள்: (பல புதிய மகான்களின் ஆசியோடு) பகுதி 7

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு,வழிகாட்டும் குரு என்று இரண்டு குருவின் அருள் தேவை;



வழிகாட்டும் குரு என்பவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
பின்வரும் பட்டியலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்;
அசுபதியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வீட்டில் போட்டோ வைத்து சில நிமிடங்களாவது வழிபட வேண்டும்;
சுவாதியில் ஐக்கியமானவர்கள்:சுந்தரமூர்த்தி (சைவ சமய அடியார்களில் ஒருவர்!)

அல்லது

ஒடுக்கத்தூர் சுவாமிகள் ஜீவசமாதி,அல்சூர் ஏரி அருகில்,பெங்களூர் அவர்களை வழிபடலாம்;இவர் 1915 ஆம் ஆண்டு,தை மாதம் சுவாதி நட்சத்திரம்  அன்று ஐக்கியமானார்;

மனதில் அடிக்கடி தோன்றும் விகாரமான காம எண்ணங்களை நீக்கும் ஆற்றல் உள்ள மஹான் இவர்;விகாரமான  காம எண்ணங்கள் அடியோடு நீங்க வேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் யார் வேண்டுமானாலும்,சுவாதி நட்சத்திர தினத்தன்று இந்த மஹானின் ஜீவசமாதிக்கு வர வேண்டும்.ஒரு மணி நேரம் வரை மனப்பூர்வமாக தியானிக்க வேண்டும்;அவர்கள் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை;

பல துறவிகளுக்கு ஞானத்தையும்,முக்தியையும் வழங்கிய அற்புதமான சுவாமிகள் இவர்!!!

அல்லது

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரில்(தமிழ்நாட்டில் பல ராஜபாளையம் ஊர்கள் இருக்கின்றன) சஞ்சீவிமலை அடிவாரத்தில் சாந்தானந்தா சுவாமிகள் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;

கோதை மங்கலத்தில் (பழனி அருகில்) மானூர் சுவாமிகள் ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பரணியில் பிறந்தவர்கள் விசாகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை வழிபட வேண்டும்;
ஸ்ரீதர் சுவாமிகள்,மம்சாபுரம் பேரூராட்சி,
,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ;(சித்திரை மாதத்தில் வரும் விசாகம்)


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் அடிபணிய வேண்டும்;
காஞ்சிப் பெரியவா,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இவரது ஜீவசமாதி இருக்கின்றது;(மார்கழி மாதத்தில் வரும் அனுஷம் அன்று ஜீவசமாதி ஆனார்)

அல்லது

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுகா,விஜயாபதி என்ற கடலோர கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் தவம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியை அடிக்கடி வந்து(அனுஷம் நாளன்று) ஜபிக்க வேண்டும்;

அல்லது

பூண்டி மகான் ஐயா அவர்களின் ஜீவசமாதி சென்னை கலசப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது;இவர் அனுஷம் அன்று ஐக்கியமானவர்! இவரது வரலாறு மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது;

அல்லது

ஆவுடையப்பர் ஐயா அவர்கள் மார்கழி மாத அனுஷம் அன்று திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்.இன்றைய திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய மூவர் ஜீவசமாதிக்கும் பின்புறம்(தெற்கு பக்கம்) இவரது ஜீவசமாதி இருக்கிறது;


ரோகிணியில் பிறந்தவர்கள்,கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்,திருப்பரங்குன்றம்;(புரட்டாசி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்)
வியாசர் ஆடி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்;


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவர்களில் ஒருவரை தினமும் வழிபட வேண்டும்;
ஆனி மாதத்தின் மூலம் அன்று அருணகிரிநாதர் அண்ணாமலையில் ஐக்கியமானார்;
ஐப்பசி மாத மூலம் அன்று கசவனம்பட்டி சுவாமிகளும்
அதே ஐப்பசி மாத மூலம் அன்று மணவாளமாமுனிகளும்
மார்கழி மாத மூலம் அன்று மூக்குப்பொடி சுவாமிகள் அண்ணாமலையிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூராடம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும்,யாகோபு சித்தர் மெக்காவிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
உத்திராடம் நட்சத்திரத்தில் கொங்கண சித்தர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;

அல்லது

சென்னை திருவொற்றியூர் நகரில் பட்டினத்தார் சுவாமிகள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார்;


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஒரு திருவோண நாளன்று மாயம்மாள்,சேலத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
சித்திரை மாத ஓணம் அன்று அம்மணி அம்மாள் சித்தர் பழனி கிரிவலப் பாதையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;விஜய பைரவர் கோவிலுக்கு அருகில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;
வைகாசி மாத ஓணம் அன்று சாக்கடை சித்தர் பழனியில் ஐக்கியமாகி இருக்கின்றார்;


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அவிட்டம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அவிட்டம் அன்று மாதவானந்த சுவாமிகள்,பாம்புக் கோவில் சந்தையிலும் (சங்கரன் கோவில் அருகில்) ஐக்கியமாகி உள்ளார்கள்;ராஜபாளையம் டூ தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கின்றது;ரயில் நிலையம்:பாம்புக்கோவில் சந்தை

அல்லது

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஊர் பசுவந்தனை;இங்கே ஒரு ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் அன்று சங்கு சுவாமிகள் ஜீவ ஐக்கியமாகி இருக்கிறார்;


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சதயம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன கெளபாலரை தினமும் வழிபட வேண்டும்; அல்லது
மதுரை அழகர்கோவிலில் இருந்து சத்திரப்பட்டி(ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பெயரில் ஊர்/கிராமம் இருக்கிறது) செல்லும் வழியில் இருக்கும் ஏரியா சிங்கப்பூர் நகர்;இங்கே சதயம் நட்சத்திரத்தன்று முனீஸ்வர சுவாமிகள் ஐக்கியமாகி இருக்கிறார்.


பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூரட்டாதி அன்று ஜீவசமாதி ஆனவர் சிவப் பிரபாகர்;கேரளா மாநிலம் ஓமலூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இவர் 723 ஆண்டுகள் வாழ்ந்தவர்;பாம்பாட்டி சித்தரின் முதல் சீடர்!!!


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன டமருகரை தினமும் வழிபட வேண்டும்;


அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் பின்புறம் இருக்கும் மூவர் சமாதியில் ஒரு மகான் ரேவதியில் ஜீவசமாதி ஆகியுள்ளார்;


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அசுபதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அசுபதியில் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் அருகில் இருக்கும் மூவர் சமாதியில் ஒருவர் ஐக்கியமாகி இருக்கின்றார்;
ஐப்பசி மாதம் வரும் அசுபதி அன்று திருமூலர் சிதம்பரம் கோவிலுக்குள் ஐக்கியமாகி இருக்கின்றார்;


சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பரணியில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாதம் வரும் பரணி அன்று போகர் பழனியிலும்,
பங்குனி மாதம் வரும் பரணி அன்று சங்கரானந்தர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்(ஸ்ரீவி.சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிர்ப்புறம் இருக்கும் சாலியர் சமுதாய இடுகாட்டுக்கு அருகில் ஐக்கியமாகி இருக்கின்றார்.)

புரட்டாசி மாதத்தின் பரணி அன்று சத்ரு சம்ஹாரமூர்த்தி அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்;


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத கார்த்திகை அன்று குருசாமி,ராஜபாளையத்திலும்(அம்பலபுளி பஜார் என்ற பகுதியில் இருக்கும் ப்ரம்மாண்டமான ஆலயம்)
ஆவணி மாத கார்த்திகை அன்று ரோமரிஷி எறும்பீஸ்வரர் கோவில் வளாகத்திலும்
சித்திரை மாத கார்த்திகை அன்று சித்த ராஜசுவாமிகளும் ஐக்கியமாகி உள்ளார்கள்;

ஆடி மாத கார்த்திகை அன்று இலஞ்சி அருகில் அமைந்திருக்கும் ஜீவநல்லூர் என்ற ஊரில் திரு.கண்ணப்பசுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இங்கே சென்று சிவசிவ மந்திரம் 1 மணி நேரம் வரை ஜபித்து வந்தால்,வீண் பழியில் இருந்தும்,நாக தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்;இது அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்;


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணியில் ஜிவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத ரோகிணி அன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மிருகசீரிட நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத மிருகசீரிடத்தில் பாம்பாட்டி சித்தர் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவாதிரையில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடர் அண்ணாமலையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
மாசி மாத புனர்பூசம் அன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
புரட்டாசி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று வள்ளியம்மை திருச்செந்தூர் கடற்கரையில் தனது குருவாகிய ஆவுடையப்பர் ஜீவசமாதிக்கு அருகிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
மார்கழி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று சேஷாத்திரி சுவாமிகள் அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கிறார்;

அல்லது

ஸ்ரீமத் லிங்குசுவாமிகள்,சின்னாளப்பட்டி,திண்டுக்கல் அருகில் ஒரு புனர்பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமாகி இருக்கின்றார்;

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாத பூசம் அன்று வல்லநாட்டு சுவாமிகளும்
ஆவணி மாத பூசம் அன்று யூகிமுனியும்
தைப்பூசம் அன்று ராமலிங்க அடிகளாரும் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்;அல்லது

சேர்மன் அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வரலாம்;இவர் 27.7.1908 அன்று காலை 11 மணி க்கு ஆடி அமாவாசை அன்று பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமானார்;இவரது ஜீவசமாதி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் தென் திருப்பேரை செல்ல வேண்டும்;அங்கிருந்து விசாரித்து சென்றால்,ஏரல் நகரில் தாமிரபரணி நதிக்கரையில் இவரது ஜீவசமாதியைச் சென்றடையலாம்;


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத ஆயில்யம் அன்று கோரக்கர்,வடக்குப் பொய்கை நல்லூரிலும்
மாசி மாத ஆயில்யம் அன்று இன்னொரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்திலும்
இன்னொரு ஆயில்யம் அன்று மிஸ்டிக் செல்வம் அவர்கள் தூத்துக்குடி அருகிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்கள்;


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
முனியாண்டி சுவாமிகள்,மூவர் சமாதி,சாலியர் சமுதாய இடுகாடு அருகில்,ஸ்ரீவில்லிபுத்தூரிலில் சித்திரை மாத மகம் அன்று ஜீவசமாதி ஆனார்;இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு ஆலமரம் வளர்ந்து வருகின்றது;

அல்லது

திருச்செந்தூர் கடற்கரையில் பங்குனி மாதத்தின் மகம் அன்று ஐயம்பட்டி சங்கரசுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று அவரது தம்பியான யாழ்ப்பாணம் சுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று சூழைவா சுவாமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள்:திருச்செந்தூரில் இருக்கும் ஐயா வைகுண்டர் கோவிலுக்கு அருகில் இந்த மூவர் சமாதி அமைந்திருக்கிறது;

அல்லது

சிவராஜயோகி சுவாமிகளை வழிபடலாம்;இவரது ஜீவசமாதி கரிவலம் வந்த நல்லூர் அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது;இவர் 1945 ஆம் ஆண்டு மாசி மாதம் வரும் மகம் அன்று ஐக்கியமாகி இருக்கிறார்;இங்கே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரம் நட்சத்திரத்தில்ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி பூரம் அன்று சண்டிகேஸ்வரரும்;

ஸ்ரீஜெயராம சுவாமிகள் ஆவணி மாத பூரம் அன்று திருத்தணி வட்டம்,ஆற்காடுகுப்பம் என்ற கிராமத்தில் ஐக்கியம் ஆனார்;
மாசி பூரம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும் ஐக்கியமாகி உள்ளார்கள்;


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
காகபுஜண்டர் உத்திரம் நாளன்றும்;

ஒரு புரட்டாசி மாத உத்திரம் நட்சத்திர தினத்தன்று,அருள்மிகு குமராண்டி சுவாமிகள் ராஜபாளையம் நகரில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;இவரது ஜீவசமாதி பார்க் ஸ்டாப் அருகில் ஒரு தெருவின் முனையில் அமைந்திருக்கின்றது;

புரட்டாசி மாத உத்திரம் அன்று சிவப்பிரகாசம் சுவாமிகள்,முதலியார் பட்டித் தெரு,சிவகாசி சாலை,ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத அஸ்தம் அன்று கரூவூர் சித்தர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஜீவசமாதி ஆனார்;

சத்குரு சுவாமிகள் பழனிமலை அடிவாரத்தில் ஒரு அஸ்தம் நட்சத்திரத்தன்று ஐக்கியமாகி இருக்கின்றார்;


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சித்திரை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை நட்சத்திரத்தில் புண்ணாக்கீஸர்,திருவாரூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


இது முதன்மைப் பட்டியல் தான்;இதில் சில தவறுகள் இருக்கலாம்;சரியான தகவல்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.


உங்கள் ஊரில் ஐக்கியமான மகானின் பெயர்;முகவரி,ஜீவசமாதி ஆன நட்சத்திரத்தை ஆதாரத்தோடு தெரிவித்தால்,அடுத்த பட்டியலில் இணைத்துவிடுவோம்;
உங்கள் வழிகாட்டும் குருவின் படத்தை அல்லது பிறந்த ஜாதகத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்;


ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,உங்கள் வழிகாட்டும் குருவின் ஜீவசமாதி ஆன நட்சத்திர தினத்தன்று ஜீவசமாதி ஆன இடத்திற்குச் சென்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்துவாருங்கள்;அப்போது அவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்;


இதில் சண்டிகேஸ்வரர்,டமருகர்,கெள்பாலர்,வியாசர்,சுந்தரர் =இவர்களுடைய ஜீவசமாதி பூமியில் கிடையாது;உங்கள் ஊர் சிவாலயம் அல்லது வசிக்கும் ஊரின் சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகமும் அன்னதானமும் செய்ய வேண்டும்;


வளமோடும் நலமோடும் வாழ்க!!!
எல்லாப் புகழும் அருணாச்சலேஸ்வரருக்கே அர்ப்பணம்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment