Saturday, August 12, 2017

திருஅதிகை வீரட்டானம் திருவடித் திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்
1.அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி- திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
2. கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்து
அடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி;
படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து
எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி;
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல்
வையம் காப்பான் கருதும்(ம்) அடி;
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி- நிறை
கெடில வீரட்டம் நீங்கா அடி.
3.வைது எழுவார் காமம், பொய், போகா அடி;
வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி;
கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி;
கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி;
நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள்
விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி;
தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;
4.அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி;
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி;
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி;
சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி;
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி;
பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி;
திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி
5. ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
6. திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி;
பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்)
அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி;
உரு என்று உணரப்படாத(வ்)அடி;
திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
7.உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால்
உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள்
தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம்
அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி-கமழ்
வீரட்டானக் காபாலி(ய்) அடி;
8.நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய்
உலகம் நாடு ஆய(வ்) அடி;
செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி;
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி;
மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும்
தந்திரமும் ஆய(வ்) அடி;
செறி கெடில நாடர் பெருமான் அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
9.அணியனவும் சேயனவும் அல்லா அடி;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி;
பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி;
பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி;
மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி;
தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி-தகை
சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;
10. அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment