Saturday, August 12, 2017

ஊர்த்தொகை


திருச்சிற்றம்பலம்
1. காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! 
கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!
மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
2.கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்! குழகா! குற்றாலா!
மங்குல்-திரிவாய்! வானோர் தலைவா! வாய்மூர் மணவாளா!
சங்கக் குழை ஆர் செவியா! அழகா! அவியா அனல் ஏந்திக்
 கங்குல் புறங்காட்டு ஆடீ! அடியார் கவலை களையாயே!
3.நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே!
மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே!
மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே!
இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!
4.ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே!
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே!
பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே!
 பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாரூர் அம்மானே!
5.மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே!
 அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே!
கருகல் குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே!
பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே!
6.தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே!
நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே!
பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!
7.தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்!
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே!
ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே!
ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.
8.துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா!
பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்;
திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா!
அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
9.புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா!
பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே!
வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ!
 கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!
10.கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி-
தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment