Friday, December 30, 2016

மஹாவராகியின் ஆட்சி பீடங்கள்



உலகம் தோன்றியது முதல் நல்ல சூட்சும சக்திகளும்,தீய சூட்சும சக்திகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன;நல்ல சூட்சும சக்திகள் மெதுவாகவும் அதே சமயம் வலுவாகவும் செயல்பட்டுவருகின்றன;தீய சூட்சும சக்திகள் படுவேகமாகவும்,அதேசமயம் விரைவான சுய அழிவில் அழிந்தும் போகின்றன;

கலியுகாதி 5117 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகின்றோம்;மிக மிக மிக பழமையான ஒலைச்சுவடி ஒன்று ஈசன் வரம் தரும் விதத்தை தெரிவிக்கின்றது;

தொடர்ந்து ஈசனை துதித்துக் கொண்டும்,அன்னதானம் செய்து கொண்டும் இருந்தால் ஈசன் வரம் தருவார்;அப்படித் தரும் போது அது மிகவும் வேகமாக நம்மை வந்து சேரும்;நமது சூட்சும உடலில் அது 100% ஆக பதிவாகாமல் போய்விடும்;85% அல்லது 99% ஆகத் தான் பதிவாகும்;இதை அருகில் இருந்து கவனிக்கும் அகிலாண்ட நாயகியும்,நமது பிரபஞ்ச அன்னையுமாகிய பார்வதி தேவி இதை நினைத்து வருத்தப்படுவாள்;இந்த குறைவான வரத்தை வைத்துக் கொண்டு இவன் அல்லது இவள் எப்படி சாதிப்பாள்? என்ற மனவருத்தம் அவளுக்கு உண்டாகும்;எனவே,தமது பங்காக மீதி 15% அல்லது 1% வரமாக கொடுத்து ஈசனின் வரத்தை முழுமைப் படுத்துவாள்;


இதே நிலைதான்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் துதிப்பவர்களுக்கும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தரும் வரத்தை முழுமைப்படுத்துபவள் அவரது தொடையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் சொர்ணதாதேவி என்ற அஜாமிளை!


இதே போல உன்மத்த பைரவரின் துணை சக்தியான உன்மத்த வராகியும் வரத்தை முழுமைப் படுத்துவதும் வழக்கம்;
இந்த தெய்வீக சூட்சுமத்தை உணர்ந்த சோழர்கள் வெளியுலகிற்குத் தெரியும் படியாக பைரவப் பெருமானையும்,சிவபெருமானையும் வழிபட்டுவந்தார்கள்;ஆனால்,பரம ரகசியமாக பிரபஞ்ச அன்னை மஹாவராகியை வழிபட்டுவந்தார்கள்;அன்னை மஹாவராகியை வழிபட்டு வந்தமையால் தான் தமிழ்நாட்டில் இதுவரை 24,000 விதமான நெல் ரகங்களை நமது முன்னோர்கள் விளைவித்துள்ளார்கள்;இதில் தற்போது சுமார் 3000 நெல் ரகங்களை மீண்டும் கண்டுபிடித்து தமிழ்நாடு முழுக்கவும் பரப்பி வருகின்றார்கள் இயற்கை வேளாண்மை விஞ்ஞானிகள்!


ரகசிய வழிபாடாக அன்னை மஹாவராகி வழிபாட்டினை சோழர்கள் பின்பற்றியதால்,இது தொடர்பாக ஆதாரங்களும்,ஒலைச்சுவடிகளும் மிக அரிதாகவே இருக்கின்றன;அவைகளும் இன்று வரை ஒருசில குடும்பத்தார்களால் பாதுகாக்கப்பட்டுவருகின்றன;அவர்கள் பரம்பரையில் பிறந்தவர்களைத் தவிரவேறு எவருக்கும் அதில் இருக்கும் வராகி ரகசியங்கள் வெளிப்படுவதில்லை;

உலகம் முழுவதும் சித்தர்கள் பிறந்துள்ளார்கள்;அவர்கள் இறுதியாக ஆன்மீகத்தில் உயர்ந்த தெய்வீக நிலையை அடைவதற்காக தேடிவந்து ஜீவசமாதி ஆனது நமது தமிழ்நாட்டில் மட்டும் தான்! அதே போல,சிவபக்தியை பரப்பிட சித்தர் பெருமக்கள் இருப்பது போல பைரவப் பெருமானது பக்தியை பரப்பிடவும் பைரவ சித்தர்கள் இருக்கின்றார்கள்;அன்னை மஹாவராகியின் பக்தியைப் பரப்பிட வராகி சித்தர்களும் இருக்கின்றார்கள்;


உத்திரகோசமங்கை என்ற சிற்றூர் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்றது;இங்கே இருக்கும் சிவாலயத்திற்கு சிறிது தொலைவில் சுயம்பு வராகி அருள்பாலித்துவருகின்றாள்;இந்த அன்னையை தொடர்ந்து உபாசனை செய்து தான் சிங்கம்புணரியில் முத்துவடுகநாதர் என்ற வாத்தியார் ஐயா ஜீவசமாதி ஆனார்;


உத்திரகோசமங்கையில் இருக்கும் சுயம்பு வராகி தோன்றி குறைந்த பட்சம் 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;கி மு 2000 வாக்கில் அதாவது இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே சுயம்பு வராகி பலருக்கு காட்சியளித்து தினமும் பேசியிருக்கின்றாள்;தற்போது 60 தமிழ்ஆண்டுகளில் முக்கிய இரண்டு தெய்வீக மனிதர்கள் மட்டும் தமிழ்நாட்டில் பிறக்கின்றார்கள்;அவர்களுக்கு மட்டுமே அன்னை மஹாவராகியிடம் பேசும் பாக்கியம் கிட்டுகின்றது;இவர்கள் ஒரு போதும் வெகு ஜனமீடியாக்களில் தோன்றுவதில்லை;


காசியை இந்துக்கள் தெய்வீகத் திருத்தலமாக போற்றுகின்றார்கள்;அதே சமயம்,இங்கே கங்கைக்கரையில் 64 படித்துறைகள் இருக்கின்றன;ஒவ்வொரு படித்துறைப் பகுதியிலும் 64 வித பைரவப் பெருமான்கள் ஆட்சிபுரிந்து வருகின்றார்கள்;இதுதான் நம்மில் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு தேடி வரும் பைரவ ரகசியம்;ஒவ்வொரு பைரவப் பெருமான் களின் ஆலயத்தை ஒட்டியும் 64 வித வராகி சக்திகளும் ஆட்சி புரிகின்றன என்பது நம்மில் பலர் அறியாத வராகி ரகசியம்;64 வராகிகளையும் தரிசித்தாலே அன்னை மஹாவராகியின் அருளுக்குப் பாத்திரமாகிவிடுவோம்;சில வராகி பீடங்கள் இங்கே வேற்றுமதத்தவர்களின் இருப்பிடத்தில் இருக்கின்றன;


காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சியும்,மதுரையில் அரசாளும் மீனாட்சியும்,திருவானைக்காவில் அருளாட்சிபுரிந்து கொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரியும் அன்னை மஹாவராகியின் வேறு வடிவங்கள் என்பது மானசீக உண்மைகள் ஆகும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா

No comments:

Post a Comment