Tuesday, March 15, 2016

கடவுளும் மனிதனின் சிந்தனையும்


இந்த உலகில் நான் மட்டும் துன்பத்தை அனுபவிக்கவில்லை;கோடி கோடியான மக்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;ஆனால்,ஒவ்வொருவரும் தான் மட்டும் வாழ்வில் துன்பத்தை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு வாழ்கின்றனர்;

ஆனால்,ஈசனுக்குத் திருவிளையாடலும் கிடையாது;தொழிலும் கிடையாது;

இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஈசனாகிய இறைவன்!

ஏனென்றால், மெய்,வாய்,கண்,மூக்கு,செவி,கரணங்கள்,கருவிகள் அனைத்தையும் கொடுத்து,நம் கையில் பணத்தையும் கொடுத்து,தொழிலையும்(அல்லது வேலையையும்) கொடுத்து,
“இது நல்லது;இது கெட்டது;யுக தர்ம நியதிகளுக்குத் தக்கவாறு சற்று மாறுபடும்;இதை வைத்து நீ பிழைத்துக் கொள்: என்று மட்டும் ஈசன் கூறுகின்றான்;

இறைவன் கொடுத்த விஷயங்களை வைத்துக் கொண்டு முறையாக வாழ நமக்குத் தெரியவில்லை;அவ்வாறு வாழத் தெரியாமல்,அனைத்தையும் கொடுத்த ஈசனையே நிந்திக்கிறோம்;


Tuesday, March 8, 2016

நமது பொருளாதாரத் தன்னிறைவை எட்ட வைக்கும் தேய்பிறை சிவராத்திரி (அண்ணாமலை) கிரிவலம்!!!


மஹாசிவராத்திரியில் இருந்து தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரிகளுக்கு அண்ணாமலை கிரிவலம் சென்றால்,நமது ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கும் எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நசிந்து போய்,பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிவிடுவோம்;அண்ணாமலையாரின் அருட்பார்வை அப்பேர்ப்பட்ட சக்தியுடையது;

அசைவம் சாப்பிடுவதால்,நாம் செய்யும் வழிபாடு,மந்திரஜபம்,அன்னதானம்,ருத்ராட்சதானம்,கோதானம்,
உழவாரப்பணி போன்றவைகளின் பலன் நம்மை வந்து சேராது;மது அருந்துவதாலும்,தொடர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் இதே நிலைதான்;

இவைகளைக் கைவிட்டுவிட்டு,தேய்பிறை சிவராத்திரி கிரிவலம் செல்வது அவசியம்;

அடுத்த ஒராண்டுக்கான தேய்பிறை சிவராத்திரி நாட்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்;இவைகளை பிரிண்ட் அல்லது சேவ் செய்து கொண்டு விடாமுயற்சியாக அண்ணாமலை சென்று கிரிவலம் முடிக்கவும்;
இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இரண்டு தேங்காய்களை சூறைத் தேங்காயாக விட்டுவிட்டு,அவர்களை(இரண்டு விநாயகர்கள் அல்லவா?) வழிபட்டுவிட்டு,தேரடி முனீஸ்வரர் ஆலயத்திற்கு வரவேண்டும்;அவரை வழித்துணைக்கு அழைத்துக் கொண்டு(மனதால் நினைத்து அவரிடம் வேண்டவேண்டும்) கிழக்குக் கோபுர வாசலில் நின்று அண்ணாமலையாரிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்;பிறகே கிரிவலம் செல்லவேண்டும்;பூத நாராயணப் பெருமாள் கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;இது ஒரு கிரிவல முறை;


சித்தர்கள் கூறும் கிரிவலமுறை: தெற்குக் கோபுர வாசலில் அருகில் அமைந்திருக்கும் பிரம்ம லிங்கத்தில் கிரிவலத்தைத் துவங்க வேண்டும்;

தெற்குக் வாயில் வழியாக வெளியே வரவேண்டும்;கிரிவலம் வந்து,அனைத்து லிங்கங்களையும் 15 நிமிடம் வரையில் மனப்பூர்வமாக வழிபடவேண்டும்;அனைத்து லிங்கங்களின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசித்து நமது கோரிக்கைகளை நினைத்துக் கொள்ள வேண்டும்;பூத நாராயணப் பெருமாள் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;(இந்த கோவில் இரட்டைப் பிள்ளையார் கோவிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது)

கிரிவலத்தை முடித்தப் பின்னர்,கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும்;அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும்;அதன் பிறகே,அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மாளையும் தரிசிக்க வேண்டும்;இப்படிச் செய்தால்,துர்வாசரின் அருள் நமக்குக் கிட்டும்;

கிரிவலம் வராமல் அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்தால்,முழுப்பலன் கிட்டாது;

சில நாட்களில் தேய்பிறை சிவராத்திரி பகல் பொழுதிலேயே தோன்றி இரவுப் பொழுது வரும் முன்பே நிறைவாகி விடும்;அந்த நாளில் பகலில் தான் கிரிவலம் செல்ல வேண்டும்;

5.4.16 செவ்வாய் இரவு 9.48 முதல் 6.4.16 புதன் இரவு 7.38 வரை;(செவ்வாய் இரவு கிரிவலம் செல்லலாம்;அல்லது புதன் இரவு 7.38க்குள் கிரிவலத்தை நிறைவு செய்துவிடவேண்டும்)

5.6.16 வியாழன்

3.6.16 வெள்ளி

2.7.16 சனி இரவு 9.10 முதல் 3.7.16 ஞாயிறு இரவு 7.26 வரை

1.8.16 விடிகாலை 4.16 முதல் நள்ளிரவு(பின்னிரவு)3.48 வரை

29.8.16 திங்கள் மாலை 4.05 முதல் 30.8.16 செவ்வாய் மாலை 3.16 வரை

28.9.16 புதன் பின்னிரவு(வியாழன் அதிகாலை)3.46 முதல் 29.9.16 வியாழன் பின்னிரவு(வெள்ளி அதிகாலை) 4.28 வரை

28.10.16 வெள்ளி இரவு 7.35 முதல் 29.10.16 சனி இரவு 9.05 வரை

27.11.16 ஞாயிறு மதியம் 1.44 முதல் 28.11.16 திங்கள் மதியம் 3.52 வரை

27.12.16 செவ்வாய் காலை 9.18 முதல் 28.12.16 புதன் காலை 11.12 வரை

26.1.17 வெள்ளி

24.2.17 வெள்ளி இரவு 9.12 முதல் 25.2.17 சனி இரவு 9.14 வரை

26.3.17 ஞாயிறு

கிரிவலம் துவங்கியதில் இருந்து,கிரிவலம் நிறைவு செய்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்து முடிக்கும் வரையிலும் ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தையோ ஜபித்துக் கொண்டே வரவேண்டும்;

ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை ஜபித்தால்,3,00,00,000 முறை ஒம் நமச்சிவாய ஜபித்தைமைக்கான புண்ணியம் கிட்டும் என்பது அண்ணாமலயாரின் வாக்கு!!!


Tuesday, March 1, 2016

ஸ்ரீலஸ்ரீதுர்கைச்சித்தர் அருளியிருக்கும் ரோக நிவாரண அஷ்டகம்!


நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இணையமும்,அலைபேசியும் பரவலாகியப் பின்னர் மனதில் இருக்கும் பக்தியும் வற்றிவிட்டது;விசுவாசமான சீடன் கிடைத்தாலும்,அவனைச் சீராட்டும் தன்னலம் கருதாத குருதத்துவம் பொருந்திய குரு அமைவது அரிதிலும் அரிதாகிவிட்டது;எங்கும் எதிலும் பணமே ஆட்சிபுரிகின்றது;

இந்நிலையில் கோடிக்கணக்கான அப்பாவி+ நேர்மையான மக்களுக்கு பக்தியும்,பக்திப் பாடலைப் பாடுவதுமே சிறந்த குருவாக அமைந்துவருகின்றது;

மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக தினமும் அன்னை ஆதி வராகியை வழிபடுதல்;
மாதம் ஒருமுறை அண்ணாமலைக்குப் பயணித்தல்;
மாதம் ஒருமுறை உள்ளூரில் இருக்கும் சிவாலயத்தில் அன்னதானம் செய்தல்;(வசதியும் மனமும் உள்ளவர்கள் தினமும் அன்னதானம் செய்யலாம்!
ஒரு மஹாவில்வம் கன்று மற்றும் சில தெய்வீகக் கன்றுகள் நட்டு தினமும் பராமரித்தல்
மாதம் ஒருமுறை கண்டிப்பாக குலதெய்வ வழிபாட்டை,குலதெய்வம் கோவிலுக்குச் சென்று பின்பற்றுதல்
இவைகளை முறையாகச் செய்தாலே போதும்;இப்பிறவி முழுவதும் நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்;ஜெயிக்கலாம்;


தாம்பரம் அருகில் அமைந்திருக்கும் கிராமம் படப்பை;இங்கே அருள்மிகு ஜெயதுர்கா பீடத்தை அமைத்து பக்தியைப் பரப்பிக் கொண்டிருந்தவர்தான் அருள் நிறைச் செல்வர் ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர்;இவருக்கு உபாசனா குலபதி என்ற பட்டம் உண்டு;இவரது எழுத்துக்களில் இவரது ஆன்மீக அனுபவங்கள் அப்படியே நிரம்பியிருக்கின்றன;நேரில் இருந்து நமக்கு வழிகாட்டுவது போலவே இருக்கின்றன;அவரது நூல்கள் மூலமாக நமக்கு மானசீக குருவாக இருந்து நம்மை வழிநடத்தி வருபவர்;அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்;

பகவதி தேவி பர்வத தேவி
   பலமிகு தேவி துர்க் கையளே
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
   சங்கரி யுன்னைப் பாடி டுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
   தளிர்ந்திடுஜோதி யான வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா! (1)

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
   கட்கினி தேவி துர்க் கையளே
தந்தன தான தனதன தான
   தாண்டவ நடன ஈஸ்வரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
   முனிவர்கள் தேவி மணித் தீவி
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(2)

காளினி நீயே காமினி நீயே
   கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி
   நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
   மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா(3)

நாரணி மாயே நான்முகன் தாயே
   நாகினி யாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுறை தாயே
   ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
   கானக யாயே காசி னியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
  தாபநிவாரணி ஜெய துர்க்கா!(4)

திருமகளானாய் கலைமகளானாய்
   மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதி யானாய் பேரறி வானாய்
   பெருவலி வானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய்
   நந்தினி யானாய் நங்கை யளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(5)

வேதமும் நீயே வேதியள் நீயே
   வேகமும் நீயே துர்க் கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
   நாணமும் நீயே நாய கியே
மாதமும் நீயே மாதவம் நீயே
   மானமும் நீயே மாய வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாபநிவாரணி ஜெய துர்க்கா!(6)

கோவுறை ஜோதி கோமள ஜோதி
   கோமதி ஜோதி துர்க் கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
   நாட்டிய ஜோதி நாச்சி யளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
   பூதநற் ஜோதி பூரணையே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(7)


ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
  சாரிணி சந்த்ர கண்டி னியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
  மாதினி காத்யா யன்ய யளே
ஜெய ஜெய கால ராத்திரி கெளரி
  ஸித்திதா ஸ்ரீநவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
  தாப நிவாரணி ஜெய துர்க்கா!(8)

நீண்டகாலமாக நோய் அல்லது கடன் இவைகள் உள்ளவர்கள் தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இந்தப் பாடலை பாடிவருவது அவசியம்;

அவரவர் பூர்வபுண்ணிய வினைக்கு ஏற்ப ஒராண்டு முதல் மூன்றாண்டு வரைப் பாடி வர கடன் தீரும்;நோய் விலகும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!



ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய அண்ணாமலையார் அஷ்டகம்


அண்ணாமலையார் சன்னதியில் தினமும் பாடவேண்டிய அஷ்டகம் இது;அண்ணாமலைக்கு சென்று வர ஆசைப்படுபவர்கள் இதை தொடர்ந்து 108 நாட்கள் பாடி வந்தால் அண்ணாமலைக்குச் செல்லும் பாக்கியமும், அண்ணாமலையாரின் அதிசய தரிசனமும் கிட்டும்;


தவிர,நமது ஊர்களில் அமைந்திருக்கும் சிவாலயங்களில் மாலை 4.30 முதல் 6 க்குள் இப்பாடலைப் பாடுவதும் சிவனருளை அள்ளித் தரும்;


ஏனென்றால்,ஒருமுறை அண்ணாமலை என்றோ அருணாச்சலம் என்றோ கூறினால் 3,00,00,000 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அண்ணாமலை புராணத்தில் அந்த ஈசனே தெரிவித்திருக்கிறார்;

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகத்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்

பொங்கிவரு கங்கையான பொன்னி யானவன்
பொன்னுடனே பொருளளித்த பொதிகை யானவன்
தங்கிநின்ற யிங்குவந்த தந்தை யானவன்
தவமளித்த இன்பமான தருண னானவன்
சங்கெடுத்து இசையளித்த சதுர னானவன்
சத்தியத்தின் சபையளித்த சடைய னானவன்
நங்கை யுமை அன்னைமகிழ் நம்ப னானவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே         (1)


அழலெடுத்து ஆடுகின்ற அண்ணாமலையானே
அங்குமிங்கு மெங்குமாக அருகில் நின்றவா
நிழலெடுத்து நிறைவுகாட்டி நித்தம் காத்தவா
நின்றுநின்று நினைப்பளித்து நிதியும் தந்தவா
விழலிடத்து முகிலுமாகி விளைவு மானவா
விந்தையான தமிழினோடு விளக்கு மானவா
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்கண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!          (2)

வளங்களோடு வையவாழ்வு வகுத்துத் தந்தவன்
வறுமைதீரப் பொறுமையோடு வழிகள் தந்தவன்
விளங்கனியில் சுவைமடுத்த விளைவும் தந்தவன்
விண்ணுமண்ணும் ஒன்றுமான வேதம் தந்தவன்
அளங்களெங்கும் நெற்குவித்து அளந்து தந்தவன்
அன்பர் வாழ மண் நடந்து அருளும் தந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (3)


காட்சிதந்து காத்துநிற்கக் கயிலை விட்டவன்
காலமெல்லாம் காவலாகக் காக்க வந்தவன்
மாட்சிபொங்கக் கொன்றையான மாலை யிட்டவன்
மாதவத்தர் உள்ளம்பாட மயங்கி வந்தவன்
ஆச்சியான காளியோடு ஆட்ட மிட்டவன்
ஆறுமுகன் யானையோடு ஆக்க வந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (4)


செண்டு கொண்ட சாத்தனையும் செகத்திற்க் கீந்தவன்
சென்மபாபம் யாவுந்தீரச் செபமும் சொன்னவன்
கண்டுகொள்ள வந்தபேர்க்குக் கண்கள் ஈந்தவன்
கவலைதீரக் கடுமைபோகக் கவிதை சொன்னவன்
தண்டெடுத்துத் தொல்லையோட்டி தண்மை ஈந்தவன்
தயவுசெய்து தலங்கள் தோறும் தங்கி நின்றவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்கண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!             (5)


மறைகளான தமிழில்பாட மகிழ்வு கொண்டவன்
மங்கலத்து வாழ்வு ஆன மன்னர் மன்னவன்
நிறைவுகொண்டு கோயில் தங்க நெஞ்சம் கொண்டவன்
நியமமான நந்திமகிழ நிருத்தம் செய்தவன்
இறைவனென்ற பெயருக்கேற்ற இனிமை கொண்டவன்
இன்றுபோல என்றுமென்றும் இளமை யானவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!            (6)


அரவெடுத்துக் கங்கணமாய் அணிந்து பார்த்தவன்
அய்யனாகி அண்ணாமலை அமர்ந்து பார்த்தவன்
துறவு போன்ற வறுமை நோயைத் துடைத்துப் பார்த்தவன்
துதிக்கை கொண்ட தும்பி தோலைத் துணித்துப் பார்த்தவன்
உறவு கொண்டு நஞ்சையுண்டு உலகைப் பார்த்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!           (7)

பூதநாதன் வேதநாதன் பூமிநாதனே
பூழிசூடி புன்மைதீர்த்த பூவை பாகனே
தாதனாகித் தாபம் போக்கு தாயுநாதனே
தாரகத்தின் பொருள்மடுத்த தாணு நாதனே
நாதநாத நாதநாத நாத நாதனே
தாதமோடு நாடுபாடு நாக நாதனே
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்

எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!!!            (8)

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை




ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

*****************************************************************

நாம் உண்டு,நமது வேலை உண்டு இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் பொறாமையும்,நயவஞ்சகமும் பதவி உயர்வு கிடைக்கவிடாமல் தடுக்கின்றது;


குடும்பத்தில் இந்த பொறாமை நிம்மதியாக வாழவிடாமல் தடுக்கிறது;சில குடும்பங்களில் சுமுகமாக சொத்துக்களை பிரிக்கவிடாமலும் தடுப்பதால் நேர்மையாக வாழ முடியாமல் தவித்து வருபவர்கள் கோடிக்கணக்கானவர்கள்;


இப்படிப்பட்டவர்கள் இந்தப் பாடலை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில்/கோவிலில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள் தான்! வாய்விட்டு அல்ல)

அப்படிச் செய்ய ஆரம்பித்த  3வது நாளில் இருந்து இவர்களுக்கு எதிரான சூழ்நிலை (அது நயவஞ்சகமாக இருந்தாலும் சரி;பில்லி ஏவல் சூனியமாக இருந்தாலும் சரி) மாறத் துவங்கும்;90 நாட்கள் தொடர்ந்து பாடி வர மன நிலையில் மாற்றம் உண்டாகும்;120 நாட்கள் தொடர்ந்து பாடி வர துணிச்சலும்,பொருளாதாரத்தில் முன்னேற்றமும்(பண வருவாய் அதிகரிக்கும்) உண்டாகும்;1008 நாட்கள் தொடர்ந்து பாடி வர இப்பிறவி முழுவதும் எந்த ஒரு தீய பாதிப்பும் இன்றி நிம்மதியாகவும்,வலிமையோடும் வாழலாம்;


ஜின் மாந்திரீகத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே!!!


 ஏனெனில்,பாரதமாதா என்பது அன்னை அரசாலை(வராகி)யே! அவளைத் துதிக்கும் போது அவளின் அருள் நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும்,நமது குலதெய்வத்திற்கும்,நமது நாட்டிற்கும் கிடைக்கும்;

இந்தப் பாடலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடலாம்;பாடுபவர்கள் அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முட்டை,புரோட்டா,ஆம்லெட்,ஆப்பாயில் இவைகளும் அசைவமே!!!

ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம்!


கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!

யார் கடந்த மூன்று பிறவிகளாக ஈசனை மட்டும் வழிபட்டு வந்தார்களோ,அவர்களும்;
யார் கடந்த மூன்று பிறவிகளுக்குள் ஒரே ஒரு பிறவியிலாவது சித்தர் ஒருவரிடம் சீடராக இருந்தாரோ அவர்களும்;
மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பது சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் சித்தரின் வாக்கு ஆகும்;

அசைவம் சாப்பிடுவதும், மது அருந்துவதும்,புகை,போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தெய்வீக முயற்சிகளையும் தகர்த்துவிடும்;சுலபமாக பிறரின் பொறாமை அல்லது கருமார்க்கத்தின்(மாந்திரீகம்) தாக்குதலுக்குள் வர வாய்ப்புக்கள் அதிகம்;

எனவே,யார் இவைகளை நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும் பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;

தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.