Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Wednesday, November 10, 2010

ஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது

கேரளா மாநிலத்தில் கண்ணனூர் அருகில் உள்ள திருவரங்காடு என்ற ஊரில் அச்சுதன்நம்பி,சந்திராவதி தம்பதியரின் மகன் சந்தீப்.இவர் நிதிநிர்வாகத் துறையில்மேற்பட்டம் பெற்றவர்.இவர் வளைகுடா நாடு ஒன்றில் நல்ல வேலையில் இருந்தவர்.சந்தீப்புக்கு வயது 30.இவர் ஷார்ஜாவிலிருந்து கேரளாவில் உள்ள பிரபல சோதிடரிடம் தன்னுடைய எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார்.அந்த சோதிடர் சந்தீப்பிடம், “உங்களது வாழ்க்கை மிகவும் துன்பமயமாக இருந்துகொண்டே இருக்கும்.உங்களது ஆயுளும் குறைவு” என கூறியுள்ளார்.இதையே சந்தீப் வேதவாக்காக எடுத்துக்கொண்டு சந்தீப் தற்கொலை செய்துகொண்டார்.

சந்தீப்புக்கு சோதிடம் சொன்ன அந்த சோதிடரிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டி எடுத்து அவரது வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டன.இந்த விஷயம் வளைகுடாநாடுகளிலும் பரவி,அங்குள்ள பத்திரிகைகள் சோதிடக்கலையைப் பற்றி மிகவும் தரக்குறைவாக எழுதித் தள்ளிவிட்டன.இந்தச் செய்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப்பதிப்பில் 21.12.2005 ஆம் வெளியீட்டில் 7 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

எல்லாத்துறைகளிலும் போலிகள் ஊடுருவி விட்டதைப்போல் ஜோதிடத்துறையிலும் போலிகள் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்தச் சம்பவத்தின் மூலம் ஜோதிடர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை ஜோதிடர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஜோதிடரும் நடுநிலை மனநிலையோடு செயல்பட வேண்டும்;நல்ல மனநிலையில் மட்டுமே ஜோதிடத் தொழிலை செய்ய வேண்டும்;இடம் பொருள் ஏவல் பார்த்து பலன் சொல்ல வேண்டும்;சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து ஜோதிடப்பலன்களை கூறிட வேண்டும்;முதல் சந்திப்பிலேயே எல்லா நெகடிவ் விஷயங்களையும் சொல்லிவிடுவது மாபெரும் தவறு.

எனது அனுபவத்தில் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகத்தில் இருக்கும் கஷ்டங்களை மட்டுமேகூறுகின்றனர்.அந்த கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது? என்று கூறுபவர்கள் வெகு விரைவில் பிரபலமடைந்துவிடுகிறார்கள்.

ஜோதிடரையே பரிகாரம் செய்யச் சொல்லி வற்புறுத்துவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது தவறு.அவரவர் கர்மத்தை அவரவரேதான் குறைக்க வேண்டும்;முடிந்தால் அழிக்க வேண்டும்.பரிகாரத்துக்கு ஜோதிடர்கள் பணம் வாங்குவது மாபெரும் தவறு.

எனது மானசீககுரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள் அடிக்கடி கூறுவது என்னவெனில்,ஒவ்வொரு ஜோதிடரும் ஒரு மனநல மருத்துவருக்குச் சமம்.உளநலசிகிச்சையாளரை(Psycotherobist)ப்போல செயல்படவேண்டும்.ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு,அவர்களின் அப்போதைய மனநிலையறிந்து பலன்களைக்கூற வேண்டும்.

ஒரு வேலை அல்லது தொழில் வாய்ப்பு பற்றிக்கூறும்போது,அவர்களின் குணநலன்கள்,எதிர்காலநிலை,அடிப்படைசுபாவம் இதற்கேற்றார்போல் தொழிலை பரிந்துரைக்க வேண்டும்.

ஜோதிடம் கேட்க வருவோரும்,நிதானமாக அதிக நேரம் ஒதுக்கி,ஒரேதடவையில் தனது வாழ்க்கையில் அடுத்த ஓராண்டு வரை எடுக்க வேண்டிய முடிவுகளைப் பற்றி தெளிவாக சிந்தித்து கேள்விகளைக் கேட்க வேண்டும்.ஜோதிடம் ஒரு மாபெரும் வழிகாட்டி!எனவே,மேலே கூறப்பட்டுள்ள சம்பவத்திற்காக ஆன்மீகக்கடல் வருந்துகிறது.