Tuesday, February 19, 2013

5வது ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013


பலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்


பொதுவாக பெண்கள் பலமானவர்கள்தான். உடலை விட மனதால் பலமானவர்கள் என்றால் அது பெண்கள்தான். அப்படியான பெண்களை, இந்த சமுதாயம் பல்வேறு விஷயங்களால் பலவீனமாக்கி வைத்திருந்தது.
பொதுவாக பெண்கள் தலை குனிந்து நிலத்தைப் பார்த்து நடக்க வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்தே வளரும் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டது. இது சமுதாயம் பெண்கள் மீது ஏற்படுத்திய பலவீனமாகும். ஆனால், அந்த பார்வையால் பல விஷயங்களை நாம் வெளிப்படுத்திவிடலாம். ஒருவர் நம்மை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார் என்பதை நமது கோபமான பார்வையாலும், வெறுப்பான பார்வையாலும் தெரிவித்துவிடலாம். ஒருவர் நம்மை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது அதற்கு எதிரான கோபப் பார்வையை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் மூன்றாம் நபருக்குத் தெரியாமலேயே நாம் நமது எதிர்ப்பை உரியவருக்கு தெரிவித்து விடுவோம். இதன் மூலம் ஒரு பெண் தனது பார்வை என்ற பலவீனத்தை பலமாக்கிக் கொள்ளலாம்.
ஒரு பெண் நிமிர்ந்து பார்க்கும் போதுதான், அவளைச் சுற்றுயுள்ள சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும்.
அதேப்போல, முந்தைய காலத்தில் பெண்களுக்கு சொத்துக்கள் என்று எதுவும் இல்லை. எனவே அவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்களுக்கு என சொத்தாக தங்க நகைகளை அணிவித்தனர். ஆனால் தற்போது அந்த பாதுகாப்பற்ற நிலை பெண்களுக்கு இல்லை.
எனவே எளிமையாக இருங்கள். பெண்கள் பலரும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், அதற்காக தம்மை எப்போதும் ஒரு பார்வைக்குரிய பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் அந்நியப்பட நேரிடும். எனவே எப்போதும் இயல்பாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். பல நேரங்களில் அழகும், நகைகளும் தான் ஆபத்தாகி விடுகின்றன.
எதையும் மிகைப்படுத்தாதீர். அப்படி நடந்தது என்றால் அதனை இப்படி நடந்தது என்று கூறுவது பலரது இயல்பு. அவ்வாறு கூறும் போது சில விஷயங்களை மிகைப்படுத்திக் கூறுவார்கள். அது வேண்டாம். நடந்ததை நடந்தபடியேக் கூறாமல் மிகைப்படுத்திக் கூறுவதும் பொய்க்கு ஈடுதான். எனவே, பொய் கூறுவது எவ்வாறு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்துமோ அதுபோல மிகைப்படுத்திக் கூறுவதும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடக் கூடும்.
தொலைத்தொடர்பு கருவியாக இருக்க வேண்டாம்.. ஒரு பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கூறிவிட்டால் போதும் அது ஊருக்கே தெரிந்துவிடும் என்று சொல்வார்கள். அதுபோன்ற சூழ்நிலை தற்போது இல்லை என்றாலும், பெண்கள் பொதுவாக தேவையற்ற விஷயங்களைப் பேசவதைத் தவிர்ப்பது நலம். அது அவர்களுக்கும், அவர்களது சுற்றத்தாருக்கும் நல்ல பலனை அளிக்கும்.
சூழ்நிலைகளை சமயோஜிதமாக சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஓரிடத்துக்கு செல்லும் போது, அங்கிருந்து கிளம்ப தாமதமாகும் என்று தெரிந்தால், அதற்கு உரிய வழிகளை தயாராக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அங்கு போகாமல் தவிர்ப்பதை விட, உரிய நேரத்துக்கு சென்றுவிட்டு விரைவாக அங்கிருந்து கிளம்பி வந்து விடுவது நல்லது.
முன் யோசனையுடன் எதையும் செய்தால், பல மோசமான சந்தர்ப்பங்களை தவிர்க்க முடியும்.
மோசமான நண்பர்களை விலக்கி விடுங்கள். அவர்களுடன் நெருக்கமான பழக்கத்தை குறைத்துக் கொள்வது எப்போதுமே பெண்களுக்கு நல்லது. பலரும், தீய நட்பால்தான் தவறான வழிகளுக்குச் செல்வார்கள். எனவே, தீய வழியில் சென்று கொண்டிருக்கும் நண்பர்களுடன் ஏற்படும் பழக்கம், அவர்களை திருத்த பயன்படலாம். ஆனால் நாம் மாற எந்த வகையிலும் வழி ஏற்படுத்தி விடக் கூடாது.
எல்லோரிடமும் எல்லாவற்றையும் கூறாதீர்கள். பலருக்கும் இருக்கும் மிக முக்கிய பலவீனமே ரகசியத்தை பாதுகாக்க முடியாததுதான். பொதுவாக ரகசியம் என்பது, ஒரு விஷயம் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் தவறாகிவிடும் என்பதால் தான் அதனை ரகசியம் என்கிறோம். எனவே, ஒருவர் ஒரு விஷயத்தை ரகசியமாக வைக்க விரும்பினால், அதனை தான் ஒருவரிடமும் தெரியப்படுத்தக் கூடாது. இல்லை, எனக்கு நம்பிக்கையான தோழி ஒருவரிடம் மட்டும் இதனைக் கூறுவேன் என்று சொன்னால், அவள் அவளுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் இந்த விஷயத்தைக் கூறுவார். இதேப்போல ஒவ்வொருவரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதனை கூறும் போது நமது விஷயம் அனைவரும் அறிந்த ரகசியமாகப் போய்விடும். ரகசியத்தை நம்மாலேயே பாதுகாக்க முடியாத போது மற்றவர்கள் அதனை எப்படி ரகசியமாக வைப்பர் என்று யோசித்துப் பாருங்கள்.
எனவே, நாம் எளிதாக செய்யும் சில விஷயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறியாமல் இருக்கிறோம். இதனை மாற்றி நமது பலவீனங்களை பலமாக ஆக்கிக் கொண்டால், பலருக்கும் நீங்கள் வழிகாட்டியாகலாம்.

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்


தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.
படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது. இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.
சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள். அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலை நோண்டவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.
நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.
இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.
இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7


சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டு மகத்தான மனிதர்களானோர் பலர். அவர்களுள் சுவாமி சித்பவானந்தர் முதன்மையானவர்.
தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை முன்னெடுப்பதில் அவர் நிறுவிய ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பேரிடம் வகித்து  வருகிறது.
சுவாமி சித்பவானந்தர் தனது மானசீக குருவான சுவாமி விவேகானந்தரின் சரிதத்தை ‘ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’ என்ற அற்புதமான ஒரு நூலாக அருளி இருக்கிறார். அந்த  நூலில் இருந்து...


பரிவ்ராஜக பரமஹம்சர்:
1891ஆம் ஆண்டின் துவக்கத்தில் கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி, பரம்பொருள் ஒன்றையே துணையாகக் கொண்டு பரிவ்ராஜக பரமஹம்சராய் அவர் புறப்பட்டுவிட்டார்.
பணம் எதையும் கையாளுவதில்லை;, வலிய வருகிற உணவை புசிப்பது; நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை, பிரயாணம் செய்ய வேண்டியவிடத்து யாராவது புகைவண்டிக்குச் சீட்டு வாங்கிக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வது, ஏனைய நேரங்களில் கால்நடையாகவே போவது என்ற ஒரு வைராக்கியத்தை கருத்தினில் வைத்துக்கொண்டார்.
காசி:
சுவாமி விவேகானந்தர் கால்நடையாக காசி வந்து சேர்ந்தார். இப்புண்ணிய க்ஷேத்திரத்துக்குள் பிரவேசிக்கும்போதே அவரது உள்ளத்தில் அளவிளா ஆனந்தம் ததும்பியது.
புனிதம் பொலியும் புனல் கங்கை, பக்தகோடிகளின் பெருந்திரள், அல்லும் பகலும் செய்யும் வந்தனை, வழிபாடுகள் இவற்றைக்  காணலுற்ற சுவாமிகள் பரவசமடைந்திருந்தார்.
தினமும் கங்கையில் நீராடி, விசுவநாதர் தரிசனம் கண்டு நிஷ்டை புரிந்து வந்தார். அக்காலத்தில் காசியில் எழுந்தருளியிருந்த மஹான் த்ரைலிங்க சுவாமிகள், பாஸ்கரானந்த சுவாமிகள் முதலாயினோரை நமது ஞானசிங்கம் தாமே சென்று சேவித்து வந்தார்.
அயோத்தி:
தாம் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் வேறு பல இருப்பதை எண்ணி காசியினின்று புறப்பட்டு அயோத்தி போய்ச் சேர்ந்தார்.
அப்புண்ணிய க்ஷேத்திரத்திலும் இவரது மனத்தகத்தே அடங்காத ஆனந்த பரவசமுண்டாயிற்று. இவர் வழிபடும் கடவுளாகிய ராமபிரானின் அற்புதச் செயல்களையெல்லாம் கருதி களிப்புறுவாராயினர்.
பின்பு மொகலாய சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்திலே சீரும் சிறப்புமுற்று விளங்கிய நகரங்களாகிய ஆக்ரா, லக்ஷ்மணபுரி முதலிய இடங்களுக்குப் போனார்.
தாஜ்மஹாலில் சலவைக் கல்லில் செய்திருந்த சித்திர வேலையானது சுவாமிகளைத் திகைப்புறச் செய்தது. அக்கட்டடத்தின் எப்பகுதியைத் துருவி ஆராய்ந்தாலும் பேரரசன் ஒருவனது அன்பு அதனூடே மிளிர்வதைக் காணலாம் என்பது சுவாமிகளின் கருத்தாகும்.
பிருந்தாவனம்:
இப்புண்ணிய க்ஷேத்திரத்திற்கு வந்திருக்கையிலே சுவாமிகள் ஒருநாள் கோவர்த்தன கிரியைப் பிரதட்சிணம் பண்ணி வந்தார்.
கார்வண்ணனை கருத்தினில் வைத்தவராய் மலையை வலம் வந்துகொண்டிருக்கையில் பசியும் களைப்பும் அதிகரித்துவிட்டன. மழையும் வந்து சுவாமிகளை முற்றிலும் நனைத்துவிட்டது.
அதுபோழ்ந்து இவரை அழைக்கின்ற குரல் ஒன்று காதில் விழுந்தது. கூவி அழைத்த அன்பன் இவருக்கு ஆகாரம் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டே நெடுந்தூரம்   ஓடி வந்து அணுகினான்.
இது தெய்வாதீனமோ என்று வியந்து ஆராய்ந்தறிதல் பொருட்டு சுவாமிகள் விரைந்து ஓட ஆரம்பித்தார். அம்மனிதனும் ஒரு மைல் தூரம் பின்பற்றி ஓடி வந்து ஆகாரத்தை ஏற்குமாறு பணிந்து விண்ணப்பித்தான். சுவாமிகளும் போஜனம் பண்ணினார். அவரது உதரக்கனல் ஒடுங்கவே அம்மனிதனும் வனத்தினுட் சென்று மறைந்துபோய்விட்டான்.
வனாந்திரத்தில் நிகழ்ந்த இந்த அற்புத நிகழ்ச்சியை எண்ணி எண்ணிக் கண்ணீர் மல்கியவாறே சுவாமிகள் கண்ணனது கருணையைப் புகழ்ந்து வாழ்த்தினார்.
பவ ஆஹாரி பாபா:
அக்காலத்தில் காஜிப்பூர் என்னுமோர் ஊரிலே யோகி ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் உணவு ஏற்பது வழக்கம். அதலால் அவரை ‘பவ ஆஹாரி பாபா’ என்று அழைத்து வந்தார்கள். ‘காற்றைப் புசித்து வாழும் பெரியார்’ என்பது அப்பெயரின் கருத்து. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மாண்பனைத்தும் பவ ஆஹாரி பாபாவுக்கு முன்னமே தெரிந்திருந்தது. ஆகையால் அவருக்குகந்த சிஷ்யரை அன்புடன் வரவேற்றது இயல்பே.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
பாபாஜியின் அரும்பெரும் விஷயங்களைப் பற்றிய பேச்சின் வாயிலாக அவரின் ஞானமுதிர்ச்சியும், மேன்மையும் அறிந்துகொண்ட சுவாமிகள் உலக நன்மையின்பொருட்டு ஜன சமூகத்துடன் ஏன் தொடர்பு வைத்துக்கொள்ளலாகாது என்று கேட்டார். பாபாஜியும், “ஏன்? தேகத்தின் உதவியின்றி ஒரு மனம் மற்றொரு மனத்தைக் கவராதோ?” என்று திருப்பிக் கேட்டார்.
இதைக் கேட்டப் பின்பு விவேகானந்தர் ஓர் அரிய முடிவுக்கு வந்தார். உலக மக்களுக்கிடையிலே உபன்யாசங்கள் வாயிலாக அருள்விருந்தை வழங்கியவர்களைவிட அதிகமாக மௌனநிலையில் இருந்தவர்களே வழங்கியிருக்கிறார்கள். இது எல்லாருக்கும் விளங்குவதில்லை யென்றாலும் இது தான் உண்மை.
பாபாஜி பயின்று பூர்த்தி பண்ணியிருந்த சாதனங்களையெல்லாம் தாமும் ஏன் பயிலலாகாது என்று சுவாமிகள் சிந்தித்தார். தாம் யோக தீட்சை பெற விரும்புவதாக பாபாஜியிடம் தெரிவிக்கலாமென்று அவரது குகைக்குப் போனார். ஏனோ நடக்க கால் வரவில்லை. “நம் இறைவன் யார்? பரமஹம்ஸரா? பாபாஜியா?” என்று ஏக்கமுறுவாராயினர்.
மருட்சிக்கிடையே ஜோதியொன்று தென்பட்டது. பரிந்த முகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டார்! அதன் பிறகு சுவாமிகள் பவ ஆஹாரி பாபாவிடம் ஒரு தோழன் போல நடந்துகொண்டாரேயொழிய அவரைக் குருவாக ஏற்றுக்கொள்ளத் திரும்பக் கனவிலும் கருதவில்லை.
ஹிமாலய பர்வதம்:
ஹிமாலய பர்வதத்துக்கு யாத்திரை பண்ண விரும்பிய சுவாமிகள் உத்தர திசையை நோக்கிப் புறப்பட்டார். மலையின் அடிவாரத்தில் ஆங்காங்கு தவம் புரிந்துகொண்டிருந்த சகோதர சிஷ்யர்கள் அகண்டானந்தர், சாரதானந்தர் ஆகியவர்களைத் தற்செயலாகக் கண்டு மகிழ்ந்தார்.
சுமார் இருநூறு மைல் கடந்து பத்ரிகாஸ்ரமத்தை அணுகும்போது அகண்டானந்தருக்கு கடுஞ்ஜுரம் வந்துவிட்டது. அனைவரும் கீழ்நோக்கி வந்தனர். ஹிரிஷீகேசம் வந்தானதும் அகண்டானந்தருக்கு நோய் சொஸ்தமாயிற்று. ஆனால் விவேகானந்தருக்கு கடும் ஜுரம் வந்துவிட்டது.
என்ன செய்வதென்று அறியாமல் சகோதர சிஷ்யர்கள் ஏங்கியிருக்கையில் சன்னியாசி ஒருவர் திடீரென்று வந்தார். தேனில் ஏதோ மாத்திரையைக் குழைத்து சுவாமிகளது வாயினுள் செலுத்தினார்.
சிறிது நேரத்தில் அவர் தெளிவு பெற்றெழுந்து, “நான் மெய்மறந்து கிடந்தபோது உயர்ந்த அனுபவம் ஒன்று காணலானேன். நான் இவ்வுலகில் சாதிக்க வேண்டியது பல உள. ஏகாந்த குகை வாசம் நாடுவதெல்லாம் வீணே. நான் செய்து முடிக்க வேண்டிய காரியத்தின் பொருட்டு உலகில் உலவும்படி ஏதோ ஒரு சக்தி என்னை ஏவுகிறது” என்று சகோதர சிஷ்யர்களிடம் கூறினார்.
நல்ல தேகவலிவு பெற்றபின், அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற நாடுகளை காணத் தம் போக்கில் போனார்.
டெல்லி:
தென் திசையாகப் பிரயாணம் பண்ணி சொற்ப நாளில் டெல்லி போய் சேர்ந்தார். பார்த்தவிடமெல்லாம் பழைய கோட்டைகளும், மாளிகைகளுமே காணப்பட்டன. எத்தனையோ அரசர்களுக்குத் தலைமைப் பட்டணமாய்த் திகழ்ந்த இடம் இது.
முடி சார்ந்த மன்னர்களும் முடிவிலே ஒரு பிடி சாம்பலாய்ப் போய்விட்டார்கள் என்பதையே ஆங்காங்கு காணப்பட்ட குட்டிச் சுவர்களும் பாழுங்கட்டிடங்களும் ஞாபகமூட்டின.
ராஜபுதன சமஸ்தானம்:
டெல்லியினின்று ராஜபுதன சமஸ்தானங்களில் ஒன்றாகிய ஆள்வார் ராஜ்யத்தில் பிரசன்னமானார். அங்கே கடைத்தெருவிலேயிருந்த தர்மசாலை ஒன்றின் மேல் மாடியிலே அவர் தங்கினார்.
முகம்மதியப் பண்டிதர் ஒருவரும், டாக்டர் ஒருவரும் இவருக்கு முதன்முதலாக பழக்கம் ஆனார்கள். முகம்மதியர்கள் பலர் இவர் மீது பேரபிமானங்கொண்டு, தங்களுடைய இல்லங்களுக்கு இவரை அழைத்துச் சென்று இந்துக்களது ஆசாரத்துக்கு ஒப்ப உணவு சமைத்தளித்து உபசரித்தார்கள்.
ஆள்வார் சமஸ்தானத்தில் திவானாயிருந்த  சேனாதிபதி ராமசந்தர்ஜீ சுவாமிகளைத் தம் வீட்டுக்கு அடிக்கடி வரவேற்று நெருங்கி பழகி வந்தார். ஒரு நாள் திவான், ஆள்வார் மகாராஜாவுக்குத் தெரிவித்தார். அக்கோமகனும் ஒரு தினம் பிரதானிகள் புடைசூழ, சுவாமிகளது இருப்பிடம் சென்று பணிவுடன் அவரை வணங்கினார்.
கேத்திரி மகாராஜா:
பிறகு நெடுகப் பிரயாணம் பண்ணிக்கொண்டு ஜெய்ப்பூர், ஆஜ்மீர் போன்ற ஊர்களை பார்த்துவிட்டு கடைசியாக ஆபுமலைக்குச் சுவாமிகள் போய்ச்சேர்ந்தார். 13வது நூற்றாண்டிலே அளவிலாத தனம் செலவிட்டு அம்மலையின்மீது கட்டப்பட்டிருந்த ஜைன கோயிலின் அழகையும், சிற்ப அமைப்பையும் கண்டுகளித்தார்.
கேத்திரி மகாராஜா அம்மலைக்கு யாத்திரை வந்திருந்தார். சுவாமிகள் சிரமபரிகாரம் செய்துகொள்ள ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அரசரின் காரியதரிசி இவரை சோம்பேறி என்றெண்ணி பரிகாசம் செய்தற்பொருட்டு சுவாமிகளோடு உரையாட ஆரம்பித்தார். ‘இவர் சாமானியமானவர் அல்லர்’ என்பதை அறிந்து மகாராஜாவிடம் அறிமுகம் செய்துவைத்தார். கேத்திரி மகாராஜா படித்தவர்; ஈசுவர பக்தியுடையவர்.
ஆங்காங்கு பரிபக்குவம் அடைந்தவர்களைக் காணுந்தோறும் அவர்களுக்கு தீட்சை முதலியன தந்து சிஷ்யர்களாக அவர்களைச் சுவாமிகள் ஏற்று வந்தனர். ஆயுள் பரியந்தம் கேத்திரிக் கோமானானவர் சுவாமிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராகத் திகழ்ந்திருந்தார். அமெரிக்காவினின்று சுவாமிகள் விடுத்த மேலான கருத்துக்களடங்கிய கடிதங்களில் சில இம்மன்னருக்கு எழுதப்பட்டனவாம்.
இலிம்படி, ஜுனாகாட் மற்றும் சுதாமபுரி சமஸ்தானம்:
அதன் பிறகு அருள்வேந்தர் கூர்ஜர மாகாணத்தில் பல இடங்களில் பிரசன்னமானார். இலிம்படி மகாராஜா அரண்மனையைச் சார்ந்த பண்டிதர்களுடன் சிலருடன் சுவாமிகள் சொற்பநாள் அமர்ந்திருந்தார்.
பிறகு ஜுனாகாட் சமஸ்தானத்துக்கு அவர் செல்வாராயினர். அங்கே அரசருடனும், பிரமுகர்களுடனும் நெருங்கிப் பழகினது பேருக்கும், புகழுக்கும் அன்று. சமுதாயத்தில் பொறுப்பு மிக்கவர்களை சீர்த்திருத்திவிட்டால் அவர்களின் மூலம் ஆயிரக் கணக்கான பிரஜைகள் நன்மையடைவார்கள் என்பதே அவரது நோக்கம்.
கூர்ஜர மாகாணத்தில் சுதாமபுரி ராஜ்யம் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு மகாராஜாவுடன் ஒன்பது மாதகாலம் தங்கியிருந்து பண்டிதர்களுடன் கூடி வேதங்களையும், பல சாஸ்திரங்களையும் ஆராயந்தார். இந்த ஆராய்ச்சி பிற்காலத்தில் சுவாமிகளுக்கு மிகவும் பயன்பட்டது.
பம்பாய், பூனா: 
சுவாமிகள் பிரவேசித்த பட்டணங்களில் பிரதானமானது பம்பாய் நகரம். அவர் இருந்தது சில நாட்களே எனினும் பிரபலமானவர்கள் பலரைச் சந்தித்து பேச அவருக்குத் தருணம் விரைவில் வாய்த்தது.
சுவாமிகள் பின்னர் பூனாவிற்கு விஜயம் செய்தார். மகாபண்டிதரும், தேசாபிமானியெனவும் நாடெங்கும் பிரசித்தி பெற்றிருந்த பாலகங்காதர திலகருடன் சுமார் பத்து நாட்கள் தங்கியிருந்தார்.
நான்கு வேதங்களையும் கசடறக் கற்றவர் திலகர் பெருமான். பெல்காமினின்று தென்முகமாகப் புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தார்.
மைசூர் சமஸ்தானம்:
மைசூர் சமஸ்தான திவான் சேஷாத்ரி ஐயர் சுவாமிகளை தமதில்லத்திலேயே அதிதியாக அமர்ந்திருக்கச் செய்தார். சில நாட்களில் மகாராஜா ஸ்ரீ சாமராஜேந்திரா உடையார் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுவாமிகளின் பேரறிவையும், தேசாபிமானத்தையும் காணலுற்ற மகாராஜாவுக்கு அவர் மீது அன்பும், மரியாதையும் அதிகரித்தன.
அமெரிக்காவில் நடைபெறுதற்கிருந்த சர்வமத மகாசபைக்கு சுவாமிகள் விஜயம் செய்ய வேண்டுமென்றும், அதற்கான பொருளுதவி புரிய தாம் ஆயத்தமாயிருப்பதாகவும் உடையார் தெரிவித்தார். ‘ஈசுவர சங்கற்பப்படி ஆகுக’ என்று சுவாமிகள் பகர்ந்துவிட்டு ரயில் மார்க்கமாக கேரளம் சென்றார்.
ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம்:
கொச்சி, திருவனந்தபுரம் வழியாக மதுரை மார்க்கமாய் ராமநாதபுரம் போய், ராஜா பாஸ்கர சேதுபதிக்கு அறிமுகம் ஆனார்.
பக்திமானாகிய பாஸ்கர சேதுபதி சுவாமிகளின் மகிமைகளை அதிவிரைவில் அறிந்துகொண்டார்.
அவசியம் அமெரிக்கா போக வேண்டுமென்றும், அதற்காக தம்மால் இயன்ற பணிவிடைகளை செய்யத் தயாராக இருப்பதாக ராஜா பகர்ந்தார்.
சுவாமி உறுதிமொழி எதுவும் கூறாது, ‘இறைவனது திருவுளப்படி ஆகுக’ என்று நவின்றுவிட்டு ராமேஸ்வரம் ஏகினார்.
கொஞ்ச நாட்கள் விவேகானந்தர் வசித்திருந்தாலும் இவ்வூரை ‘தக்ஷிணகாசி’ என்றே சொல்லத்தகும் என்று போற்றினார்.
கன்னியாகுமரி:
கடைசியாக பாரதத் தாயின் திருவடியான கன்னியாகுமரிக்கு எழுந்தருளினார். இங்கே அவர் மனத்தகத்தே எழுந்த உயர்ந்த எண்ணங்களைக் கூறி முடியா.
வடக்கே 2000 மைல்களுக்கு அப்பாலுள்ள பத்ரிகாஸ்ரமத்தினின்று தென்கோடியிலிருக்கும் குமரிமுனை பரியந்தம் உள்ள பிரதேசம் அனைத்தும் சேர்ந்து ஒரே திருப்பதியென அவருக்குத் தென்பட்டது. குமரியில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஜகன்மாதாவை வாழ்த்தி வணங்கிவிட்டு சுவாமிகள் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
புதுச்சேரி:
சுவாமிகள் புதுச்சேரி போய் சேரும் வரை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. ஆனால் வழியெங்கும் தமிழ்நாட்டின் மாண்புகளை நேரே கண்டறிந்தார். சுவாமிகள் புதுச்சேரியில் வசித்திருந்தபோது புராதான வைதிக பண்டிதர் ஒருவருடன் நெடிய சம்வாதம் ஒன்று நடைபெற்றது.
வைதிக தர்மத்தில் எந்தவிதமான சீர்திருத்தமும் செய்யலாகாதென்றும், ஜாதி வேற்றுமைகள் இருக்கத் தான் வேண்டுமென்றும், இந்துக்கள் வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் பண்ணலாகாதென்றும், ஆங்கிலேயர்களுடன் பழகலாகாதென்றும் அப்பண்டிதர் வாதாடினார்.
அவருடைய கொள்கைகளெல்லாம் பண்டைக்காலத்துக்கே உரியன என்பதும், வைதிகமானது உள்வலிவை இழக்காமலே காலநிலைமைக்கு ஏற்றவாறு மாறவல்லது என்று சுவாமிகள் வாதாடினார்.
மேலும், அப்போதைக்கப்போது அவதரித்துள்ள ஆசாரிய புருஷர்கள் அங்ஙனமே செய்து சாதித்திருக்கிறார்கள் என்பதும், கால வேறுபாட்டிற்கு ஏற்றவாறு இந்துக்கள் வாழ்வு முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதும், அவ்வாறு செய்யாவிடில் உலக முன்னேற்றத்தில் இவர்களுக்கு இடமில்லாது போய்விடுமென்பதும் சுவாமிகளின் கடைந்தெடுத்த கொள்கையாகும். பண்டிதரின் பழங்கொள்கைக்கு அனுதாபம் காட்டினார்; ஆனால் ஆதரவு கொடுக்க சம்மதிக்கவில்லை.
சென்னை:
சென்னையில் சுவாமிகள் எழுந்தருளுதற்கு சில நாட்களுக்கு முன்னரே பேராற்றலுடைய பெரியார் ஒருவர் வருகிறார் என்ற செய்தி ஆங்கு எட்டியது. கல்லூரிகளினின்று மாணவர்களும், ஆசிரியர்களும் பெருங்கூட்டமாக அவரைக் காணச் சென்றார்கள்.
அமெரிக்காவில் கூடுதற்கிருந்த சர்வமத மகாசபைக்கு இந்து மதத்தின் பிரதிநிதியாகப் போகத் தகுந்தவர் நம் சுவாமிகள் தான் என்று சென்னை வாசிகளுள் பலர் தீர்மானித்தார்கள்.
ஊக்கம் ததும்பிய மாணவர்கள் உடனே வீடுவீடாய்ச் சென்று இரண்டு மூன்று நாட்களில் பிரயாணச் செலவுக்காக ரூபாய் ஐந்நூறு வசூலித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். ‘பணத்தைக் கையாளவேண்டி வந்துவிட்டதே’ என்று சுவாமிகள் சிறிது தயங்கினார்.
ஐதராபாத்:
ஐதராபாத்தை ஆளும் நைஜாம் உட்பட அறிஞர்கள் பலர் சுவாமிகளை ஐதராபாத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி அழைத்தனர். சுவாமிகளும் அதற்கிசைந்து ஆங்கு சென்றபோது அமெரிக்காவுக்குப் போக வேண்டிய அவசியத்தைப் பற்றி அவ்வூர்ப்பெருமக்களும் பலவாறு எடுத்தியம்பினர்.
குருதேவர் மற்றும் அன்னையாரின் அனுமதி:
ஒருவாறு இசைந்தவராக சுவாமிகள் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தார்.
தாம் இருக்குமிடம் இன்னதென்று தமது குரு சகோதரர்களுக்குத் தெரிவிக்காமலேயே இருந்தார் சுவாமிகள். இப்பொழுது அதை மறைக்க முடியவில்லை.
சுவாமி சாரதானந்தருக்கு அவர் ஒரு கடிதம் எழுத வேண்டியதாயிற்று. தாம் அமெரிக்கா போய் வருவதைக் குறித்து அன்னை சாரதா தேவியார் என்ன அபிப்பிராயம் கொள்கிறார் என்பதை அறிந்து தமக்கு தெரிவிக்க வேண்டுமென்பது அக்கடிதத்தின் உட்பொருளாகும்.
இப்படி இருக்கையில் ஒருநாள் தம்மை ஆட்கொண்ட பெம்மான் குருதேவர் ராமகிருஷ்ணர் திடீரென்று தம் எதிரே பிரசன்னமாவதைப் பார்த்தார். தம்மைப் பின்பற்றும்படி சைகையால் அன்னவர் அறிவித்துவிட்டுச் சமுத்திரத்தினுட் சென்று மறைந்தார்.
இந்த அருட்காட்சியைப் பெற்ற பின்பே, புறநாடு செல்வதைப் பற்றிய எண்ணத்தை அவர் ஊர்ஜிதப்படுத்தினார்.
தமக்கு உத்தரவு கிடைத்துவிட்டதென்று கருதி விவேகானந்த சுவாமிகளும் வெளிநாடு புறப்படச் சம்மதம் கொடுத்து சென்னை அன்பர்களைத் திருப்திப்படுத்தினார்.
இதற்குள்ளாக அன்னை சாரதாதேவியாரின் பூரண அனுமதியும், ஆசியும் அடங்கிய மறுமொழிக் கடிதமும் வந்து சேர்ந்தது.

(விவேகானந்தர் மீது பற்று கொண்ட அன்பர்களால் விவேகானந்தரின் 150 வது பிறந்த தினத்தை ஒட்டி தொடங்கப்பட்ட இணையம் விவேகானந்தம்-150 ல் இருந்து...

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6


செப்டம்பர் 20, 1893
நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும்.
பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.

Friday, February 15, 2013

தீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெளியிட்டது


வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை நேற்று வெளியிட்டது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, வி.ஐ.ஐ.ஆர்.எஸ். எனப்படும் செயற்கை கோள்வாயிலாக உலக வரைபடத்தினை துல்லியமாக படம் எடுக்கும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருகிறது. இந்த செயற்கை கோள் அமெரிக்க ராணுவ புவியியல் செயற்கை கோள் திட்டத்தின் (டி.எம். எஸ்.பி) கீழ் இந்தியாவின் வரைபடத்தினை நேற்று‌ வெளியிட்டது.
கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை படம் நேற்று பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை‌ ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன. 
இத குறித்து நாசா விஞ்ஞானி செர்ரீஸ் ஈல்விட்ஜ் கூறுகையில், இது போன்று துல்லியமான வரைபடத்தினை எடுப்பதற்கென கடந்த 2003-ம் ஆண்டு நாசா டி.எம்.எஸ்.பி. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தினை உருவாக்கினோம். அதன் மூலம் முதன்முதலாக இந்திய வரைபடத்தினை கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதியன்று எடுத்தோம். டி.எம்.எஸ்.பி. செயற்கை கோள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது. இந்தியாவில் 31 மிகப்பெரிய நகரங்களில் இந்துக்கள் கொண்டாடிய தீபாவளி பண்டிகையின் போது எடுக்கப்பட்டது. கருப்பு -வெள்ளையில் வெளியான இந்த புகைப்படம் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது என்றார்.
thanks:dinamalar

தினமணியின் காதலர் தின கருத்துப்படம்!!!