Wednesday, June 22, 2016

வேண்டியதையெல்லாம் அருளும் ஸ்ரீவாராகி ஸகாயம்!


உங்களுடைய முற்பிறவிகள் ஐந்தின் கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

முற்பிறவிகள் ஐந்தில் நீங்கள் செய்த பாவச்சுமைகளே இப்பிறவியில் உங்களது கடனாக,நோயாக,துரோகமாக,அவமானமாக,நஷ்டமாக உங்கள் வாழ்க்கையை வழிநடத்துகின்றது;நீங்கள் ஏமாந்தாலும் அதுவும் இப்பட்டியலில் வரும்;


முற்பிறவிகள் ஐந்தில் நீங்கள் செய்த புண்ணியச்சுமைகளே இப்பிறவியில் உங்களது சொத்துக்களாக,புகழாக,திறமையாக,திறமையால் கிடைக்கும் சாதனையாக,வருமானமாக,கவுரவமாக,சுவை மிக்க உணவாக,வாகனங்களாக,சொகுசு வாழ்க்கையாக,மந்திர உபதேசமாக,கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதையாக இப்பிறவியில் அமைகின்றது;


பாவச்சுமையின் விளைவுகளும்,புண்ணியச் சுமையின் விளைவுகளும் உங்கள் மனத்தை பாதிக்காதவிதமாக எதிலும் பற்றற்று இருந்துவிட்டால் நீங்கள் சித்தராகத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்;அவமானம் வரும் போது அதனால் நிலைகுலையாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்;


புகழ் வரும் போது அதனால் திமிர்த்தனம்,அகங்காரம் வராமல் இருக்கப் பழகவேண்டும்;காம சுகங்களை அனுபவித்தப் பின்னர் அதை நினைத்து ஏங்காமல் இருக்கப் பழக வேண்டும்;இந்த மனோபாவம் உங்களுக்கு எப்போது உருவாகின்றதோ,அப்போது நீங்கள் உங்களின் பிறவிக் கணக்கினை குறைக்கத் துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்;


இந்த மனோபாவம் உருவாகிட ஒரு சுலபவழியை எமது ஆன்மீக குரு சிங்கம்புணரி முத்துவடுகநாதர் எமக்கு உபதேசித்துள்ளார்;அவரது அருளாசியினால் உங்களுக்கு போதிப்பதை எமது கடமையாகக் கொள்கின்றோம்;


ஏற்கனவே,பைரவ வழிபாடு செய்பவர்களும்,அன்னை வராகி மந்திரம் ஜபிப்பவர்களும் இதைப் பின்பற்றலாம்;வேகமான வாழ்க்கையில் தினமும் பைரவ மந்திர ஜபம் அல்லது வராகி மந்திர ஜபம் செய்பவர்களே ஈசனால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்;


பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே தொடர்ந்து ஜபித்து வரும் உங்களது அனைத்து கஷ்டங்களும் விரைவில் விலகிவிடும் என்பது வராகி சத்தியம்!


இந்த வராகி லிகிதத்தை வீட்டில் இருக்கும் பிறரைச் செய்ய வைப்பதுதான் நன்று;(நேரம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்ய?)


ஒரு பச்சைத் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்தவாறு,ஒரு மண் அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;இன்னொரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;


ஒரு கட்டுரை நோட்டில் தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பின்வரும் அன்னை வராகியின் மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்;


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா(ஒரு முறை மட்டும்)

ஸ்ரீ வாராகி ஸகாயம்(108 முறை)


இதுதான் அந்த சர்வசக்தி வாய்ந்த வராகி மந்திரம்;பச்சை நிற மையினால் எழுதுவது மிகவும் நன்று;


பல்வேறு வேலைகள் பார்ப்பவர்கள் நாடு முழுவதும் மட்டுமல்ல;உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றார்கள்;அனைவருக்கும் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் இந்த மந்திரத்தை எழுதுவது சாத்தியப்படாது தான்;அவரவர் தமது இரவு தூங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக இந்த மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்;தினமும் மேலே கூறியவாறு வராகி சித்தரின் பெயரை ஒருமுறையும்,அதற்குப் பிறகு, ஸ்ரீவாராகி ஸகாயம் என்ற மந்திரத்தை 108 முறையும் எழுதவேண்டும்;


எழுத ஆரம்பித்துவிட்டால்,108 முறை எழுதி முடிக்கும் வரையிலும் பாதியில் எழுந்து செல்லக் கூடாது;செல்போனில் பேசக் கூடாது;டிவி பார்த்துக் கொண்டே எழுதக் கூடாது;பூஜை அறையில் எழுதுவது மிகுந்த நன்மைகளைத் தரும்;


சிலரது வீடுகளுக்கு அருகில் பழமையான ஆலயங்கள் இருக்கலாம்;அது விநாயகர் ஆலயமாக இருந்தாலும்,சிவாலயமாக இருந்தாலும்;பெருமாள் ஆலயமாக இருந்தாலும்,அம்பாள் ஆலயமாக இருந்தாலும்,குலதெய்வ ஆலயமாக இருந்தாலும்,முனீஸ்வரன் ஆலயமாக இருந்தாலும்,ஆஞ்சனேயர் ஆலயமாக இருந்தாலும் சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதலாம்;(இரவு 9 மணிக்கு எப்படி இந்த கோவில்கள் திறந்திருக்கும்? நீ என்ன லூசாப்பா ? என்று நினைப்பது புரிகின்றது; அதனால் தான் முடிந்தால் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றோம்;மாலை 6 மணிக்கு மேல் இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்திற்குள் உங்களூக்கு வசதிப்படும் நேரத்தில் எழுதலாம்;அருகில் கோவில் இல்லாதவர்கள் தான் இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டில் எழுத வேண்டும்)

இன்று முதல் தினமும் 108 முறை ஸ்ரீவாராகி ஸகாயம் என்று குறைந்தது 1008 நாட்கள் எழுத வேண்டும்;அதிகபட்சமாக உங்கள் வாழ்நாள் முழுவதும் எழுதலாம்;


இதை எழுதிட வயது வரம்பு இல்லை;10 வயது முதல் 120 வயது வரை யார் வேண்டுமானாலும் எழுதலாம்;அனைத்து ஜாதி,மத,மொழியைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எழுதலாம்;


பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஐந்து நாட்களில் எழுதக் கூடாது;தீட்டுக்களில்(பிறப்பு,ருது மற்றும் இறப்பு) கலந்து கொண்டால் மூன்று வாரங்கள் வரை எழுதக் கூடாது;

தாங்கள் எழுத ஆரம்பித்த  3வது நாள் சில அதிசயங்கள் நடைபெறும்;30 நாட்கள் கடந்ததும் உங்கள் வாழ்க்கைமுறை எப்படி மாறுகின்றது? என்பதை உணருங்கள்;90 வது நாளுக்குப் பிறகு என்ன நடைபெறுகின்றது? என்பதை எமக்குத் தெரிவிக்கவும்;

அடுத்த சில பிறவிகளோடு முக்தியை அடைய விரும்புவோரால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து 1008 நாட்கள் அன்னை வராகியைச் சரணடைய முடியும் என்பது வராகி சித்தர் சிங்கம்புணரி முத்துவடுகநாதர் ஐயா அவர்கள் உபதேசித்த வராகி ரகசியங்களில் ஒன்று!!!


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!






No comments:

Post a Comment