Saturday, June 22, 2013

அனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும்!!!





மூவுலகிற்கும் பயணித்துக் கொண்டே இருப்பவர் நாரதமஹரிஷி! அவருக்கு ஒரு இரும்புக்குண்டு கிடைத்தது;அந்த இரும்புக்குண்டு எந்த பத்தினிப்பெண்ணின் கையில் வைத்தாலும்,அந்த இரும்புக்குண்டு உடனே உண்ணும் பொரியாக மாறிவிடும்;எனவே,நாரதர் நேராக பிரம்மலோகத்திற்குச் சென்றார்;அந்த இரும்புக் குண்டின் மகத்துவத்தை தனது தாயான கலைவாணியிடம் கூறி,அதை அவரிடம் கொடுக்கிறார்.அந்த இரும்புக் குண்டு மாறவில்லை;
பிறகு,வைகுண்டத்திற்குச் செல்கிறார்.அங்கே,மஹாலட்சுமியிடம் அந்த இரும்புக்குண்டு பற்றிய அதிசயத்தைக் கூறியவாறு,அதை அவரிடம் கொடுக்கிறார்.இரும்புக்குண்டு மாறவில்லை;இதே போல,சிவலோகத்திற்குச் சென்று அங்கே இருக்கும் மலைமகள்(பார்வதி) மூலமாகவும் சோதித்து அறிகிறார்.இரும்புக் குண்டு மாறவில்லை;
முடிவாக,பூலோகம் எனப்படும் நாம் வாழ்ந்துவரும் கர்மபூமிக்கு வருகிறார்;பல ஆசிரமங்களுக்குச் சென்று அங்கே இருக்கும் ரிஷிபத்தினிகளிடம் விளக்கம் சொல்லி,ஒவ்வொருவரிடமும் அந்த இரும்புக் குண்டினைத் தருகிறார்,அது அப்படியே இருக்கிறது;பொரியாக மாறவில்லை;


அதேபோல,அத்திரிமகரிஷி-அனுசியா தேவி தம்பதியர் வாழ்ந்துவரும் வனப்பகுதிக்கு வருகிறார்.அனுசுயா தேவியிடமும் இந்த இரும்புக் குண்டு பற்றிய விளக்கம் சொல்லி,அவரிடமும் தருகிறார்.உடனே,அந்த இரும்புக் குண்டு,பொரியாக மாறிவிடுகிறது.அந்த பொரியை நாரதமகரிஷி சாப்பிட்டுவிட்டு,அனுசுயாவிடம் ஆசி வாங்கிவிட்டுப் போய்விடுகிறார்.
நேராக,பிரம்ம லோகம் என்ற சத்திய லோகம்,வைகுண்டம்,திருக்கையிலாயம் என்ற சிவலோகத்துக்குப் பயணித்து,அனுசுயாதேவியின் கற்புத்திறத்தை விளக்குகிறார்.முப்பெரும்தேவியரான கலைமகள்,அலைமகள்,மலைமகள் மூவரும் ஒன்று கூடி ஒரு முடிவெடுக்கின்றனர்.தங்களுடைய கணவன்மார்களை அத்திரி மகரிஷி அனுசுயா தேவி வசிக்கும் ஆசிரமப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.எதற்காக?
தங்களை விடவும் பூலோகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்தினியாக இருப்பதை இம்மூவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை;எனவே,அந்த பெண்ணின் கற்புத்திறன் சிறிதாவது பழுதடையவேண்டும்.


மும்மூர்த்திகளும்(பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்) துறவி வேடம் பூண்டு அத்திரி மகரிஷி ஆசிரமத்தை அடைகின்றனர்; அதிதி தேவோ பவ: என்ற வேதவாக்கியத்தின் படி(இதற்கு அர்த்தம்:அதிதி=விருந்தினர்;விருந்தினர் கடவுளுக்குச் சமம்)வந்திருக்கும் மூன்று துறவிகளையும் அனுசுயாதேவி வரவேற்று உபசரிக்கிறாள்.அந்த சமயத்தில்,அத்திரிமகரிஷி அங்கே இல்லை;அந்த மூன்று துறவிகளுக்கும் தலைவாழை இலை போட்டு,அறுசுவைஉணவுகளைப் பரிமாறுகிறாள் அனுசுயாதேவி.

ஆனால்,அந்த மூன்று துறவிகளும் உண்ணும் இடத்தில் அமர்ந்தார்களே தவிர,சாப்பிட ஆரம்பிக்கவில்லை;மூன்று துறவிகளுமே ஒரே குரலில் அனுசுயா தேவியிடம், “நீ உனது கையால் உணவு ஊட்ட வேண்டும்.அவ்வாறு ஊட்டினால்தான் நாங்கள் சாப்பிடுவோம்”என்று கூறிவிட,ஒருகணம் அனுசுயாதேவி திடுக்கிட்டுப்போனார்.
உடனே,சமையலறைக்குச் சென்று,தனது தனது தவ ஆற்றலால் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதையும்,அவர்கள் எதற்காக வந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்கிறாள்.எனவே,தான் தவம் செய்யும் போது பயன்படுத்தும் கமண்டல நீரை எடுத்து,தனது கணவர் அத்திரிமகரிஷியை நினைத்து,அந்த மூன்று துறவிகள் மீதும் தெளிக்கிறாள்.அந்த மூவருமே ஒரு வயது குழந்தைகளாக உருமாறிவிடுகிறார்கள்.


இப்போது அந்த மூன்று குழந்தைகளுக்குமே தனது கையால் உணவு ஊட்டிவிடுகிறாள்.(நீங்கள் இந்த இடத்தில் வேறுவிதமாக படித்திருப்பீர்கள்;அதுதான் உண்மை!)
தத்தம் கணவன்மார்கள் பூமிக்குச் சென்று வெகு காலம் ஆகியும் திரும்பவில்லை என்பதை அறிந்து கலவரப்பட்ட மனதோடு கலைமகளாகிய சரஸ்வதி,அலைமகளாகிய மஹாலட்சுமி,மலைமகளாகிய பார்வதி மூவருமே அத்திரிமகரிஷி ஆஸ்ரமத்தை அடைகின்றனர்;அங்கே தமது கணவன் குழந்தையாக இருப்பது கண்டு திகைத்து,மூவருமே அனுசுயாதேவியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.அந்த கணத்தில் அந்த மும்மூர்த்திகளுமே ஒன்றிணைந்து உருவாக்கிய தெய்வமே ஸ்ரீதத்தாத்தரேயர்.


இந்த கதை புராணங்களில் வருகிறது.இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில்,பொறாமை உணர்ச்சியும்,தான் என்ற அகங்காரமும்(திமிரும்) ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உண்டு;அதைக் கைவிட முறையான பயிற்சி எடுக்க வேண்டும்;


தினசரி ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீகால பைரவரை வழிபட்டு வருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வருவதாலும் நமது ஆத்ம சக்தி அதிகரிக்கும்;குரு அருள்,திரு அருள்,சிவ அருள் கிட்டும்;அதே சமயம்,நமது மனம் கொஞ்ச காலம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும்;பிறகு,நம்மைவிட ஆன்மீகத்தில் முன்னேறியவர்களைக் கண்டு பொறாமைப்படும்;நம்மை விட ஆன்மீகத்தில் பின் தங்கியிருப்பவர்களைக் கண்டு திமிர் கொள்ளும்;பேராசைக்காரனும்,பொறாமைப்பிடித்தவனும் தான் நினைத்ததைச் சாதிக்க எதையும் செய்யத் தயங்க மாட்டான் என்பது சாணக்கிய நீதி சொல்லும் சத்திய வாசகம் ஆகும்.


நமது வேலை அல்லது தொழிலைச் செய்து கொண்டே ஆன்மீக முயற்சிகளில் படிப்படியாக முன்னேறும் போது இரண்டே இரண்டு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;ஒன்று முறையான தாம்பத்தியத்தை இறைவனே அனுமதிக்கிறார்;(இல்லறமல்லாமல் துறவறம் இல்லை;என்பதன் அர்த்தம் இதுதான்!)இரண்டு=நானே பெரியவன் என்ற அகங்காரம் வராமல் நமது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்;இந்த இரண்டும் நமது ஒவ்வொரு பிறவியிலும் நம்மோடு வந்தால் அடுத்த சில பிறவிகளிலேயே காம ஆசையே இல்லாத ஞானியாக(ஸ்ரீரமணமகரிஷி/சுவாமி விவேகானந்தர்) பிறக்கும் அளவுக்கு ஆன்மீகத்தில் முன்னேறிவிடுவோம்;அவ்வாறு முன்னேறிவிட்டால்,மறுபிறவி இல்லாத முக்தியை நம்மால் எட்டிவிட முடியும்.





Tuesday, June 18, 2013

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.



ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.


பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.



அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 

1) முன் மடல் (frontal lobe) 



2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)



தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!




நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.





ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!


இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!
 
 
நன்றி:

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை

தமிழில்ச.நாகராஜன்

Saturday, June 15, 2013

நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 6





வேட்டி கட்டும் பழக்கம் இன்னும் கிராமம் மற்றும் சிறுநகரங்களில் பரவலாகக் காணப்படுகிறது.பேண்ட் அணிபவர்கள் கொஞ்சம் நாகரீகம் மிக்கவர்களாகவும்,ஜீன்ஸ் அணிபவர்கள் ‘யூத்’களாகவும் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்ற ஆடை பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளே! பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்,கைலி கட்டும் பழக்கத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்தனர்.அவர்களைக் கூட பேண்ட்,ஜீன்ஸ் அணிய வைத்த புண்ணியவான்கள் நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்களே!

தாம் இயக்கும் திரைப்படங்களில் கதாநாயகன் படிக்காதவனாக இருந்தால் கூட அவனுக்கு பேண்ட் அணிவித்து, ‘அழகு’ பார்க்க ஆரம்பித்தனர்.இந்தப் பழக்கம் 1991களில் சின்னத்தம்பி முதலான திரைப்படங்களில் துவங்கியது.இன்றோ கைலியையும் காணவில்லை;வேட்டியையும் காணவில்லை;திருமண மாப்பிள்ளையாக ஆகும் தமிழ் இளைஞர்கள் கூட தமிழ்நாட்டில் வேட்டி கட்டுவதில்லை;காரணம் அவர்களுக்கு வேட்டி கட்டத் தெரியாது;நமது தமிழ்ப் பண்பாட்டையும்,இந்து தர்மத்தையும் பாதுகாக்க விரும்பினால் வேட்டி கட்டும் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும்;கைலி அணிவது இஸ்லாமியர்களின் பண்பாடு ஆகும்.பேண்ட் குளிர்ப்பிரதேச நாடுகளில் இருக்கும் பழக்கம் ஆகும்.இது கூட பல இளைஞர்களுக்குத் தெரியவில்லை;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம்.அதுதான் நாகரீகம் என்றும் நம்புகிறோம்.ஆனால்,ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது அடிமைத்தனத்தின் உச்சம் என்பதை நாம் உணருவதில்லை;அந்த அளவுக்கு மேல் நமது தமிழ் மொழியின் பெருமைகள்,இந்து தர்மத்தின் சாதனைகள் நம்மிடமிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன.தமிழ் மொழியின் பெருமைகளை அறிய சாண்டில்யன் எழுதிய கடல்புறா,விலைராணி போன்ற வரலாற்று நாவல்களை வாசிக்க வேண்டும்;தமிழ் மொழியில் இருக்கும் தெய்வீக ரகசியங்கள் உலகில் வேறு எந்த மொழி இலக்கியங்களிலும் இல்லை;தமிழ் மொழியே ஒரு மந்திர மொழி!இந்தியாவின் தாய்மொழி சமஸ்க்ருதம்;இந்தியாவின் தந்தை மொழி நமது தமிழ் மொழி!!! 

சமஸ்க்ருதம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்ற கருத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரப்பப் பட்டிருக்கிறது.ஆனால்,அது முழுப்பொய் ஆகும்.நமது பாரத நாடு சுதந்திரம் அடைந்த போது 56 நாட்டு ராஜாக்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதுவரையிலும் இரண்டு பாரத நாட்டின் ராஜாக்கள் சந்திக்கும் போது சமஸ்க்ருதத்திலேயே பேசிக்கொண்டனர்.சுமாராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும்(இன்றைய இந்தியா,திபத்,சீனா,பாகிஸ்தான்,வங்காளதேசம்,மலேஷியா,சிங்கப்பூர்,  இலங்கை,ஆஸ்திரேலியா)பரவியிருந்தது;தமிழ் மொழிக்கு நிகராகவும் சமஸ்க்ருத மொழி பரவியிருந்தது;

இந்து தர்மத்தின் பெருமைகளை நாம் அறிந்து கொண்டோமோ இல்லையே நமது எதிரியான கிறிஸ்தவ ஆங்கிலேயன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.அதனால்,நமது நாட்டு மக்களுக்குள்ளாக பிரிவினையை உருவாக்கிட ஏராளமான பொய்களையும்,புரட்டுக்களையும் விதைத்தான்;அது இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து ஜாதிக் கட்சிகளாகவும்,மாநில வெறியாகவும்,மாநில சுயநலமாகவும்,வட்டார கட்டைப்பஞ்சாயத்தாகவும்,அரசுப் பணிகளில் ஜாதிப் பாசமாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறது.



இன்னும் நாம் நமது இந்து தர்மத்தின் பெருமைகளில் பத்து சதவீதம் கூட உணரவில்லை;அதற்குரிய புத்தகங்களை அறிந்து கொள்ளவில்லை;ஓஷோ எழுதிய நான் நேசிக்கும் இந்தியா,ஓஷோவின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் மறைந்திருக்கும் உண்மைகள்,கவியரசு கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்;காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் தெய்வத்தின் குரல்;விவேகானந்த கேந்திரம்,கன்னியாக்குமரி வெளியிட்டிருக்கும் விழிமின் எழுமின்;ஸ்ரீராமக்ருஷ்ணமிஷன்=சென்னை வெளியிட்டிருக்கும் சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்;திருஅண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியின் வெளியீடுகள்;சக்தி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் இந்து தர்மத்தின் விஞ்ஞானச் சாதனைகள்(இவை மறுபதிப்பாக வெளிவரவில்லை;);Hindu Vedic World Heritage, The Rising and Falling of Great Power of this World(Oxford University Press);Yuwa Bharathi=Monthly Magazine from Chennai.பால் பிராண்டன் எழுதிய ரமணமகரிஷி பற்றிய சில ஆங்கில புத்தகங்கள்,எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய கூடு என்ற நாவல்;தாமரை நூலகம் வெளியீடுகள்,நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் செயல்பட்டுவந்த திராவிடப் பதிப்பக வெளியீடுகள்,இன்றைய நர்மதா பதிப்பகம்,இந்து பப்ளிகேஷன்ஸ் மற்றும் வேறு சில பதிப்பகத்தின் ஆன்மீகம் மற்றும் பக்தி சார்ந்த வெளியீடுகளில் புதைந்து கிடக்கின்றன;நாகப்பட்டிணத்தில்  சில ஆண்டுகள் முன்பு வரை செயல்பட்டுவந்த குமரிப் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் நமது பெருமைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தன;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


எங்காவது பாழடைந்த சிவங்கம் கிடந்தால்,அதை ஒருசிலர் முறையாகப்பராமரித்து வருகின்றனர்;சிலர் சொந்தமாக சிவாலயமே கட்டி வழிபட்டுவருகின்றனர்;எப்படிப் பார்த்தாலும்,அப்படி பராமரிப்பதற்கே பல ஜன்மங்களாக பூர்வபுண்ணியம் வேண்டும்;பராமரிக்க ஆரம்பிக்கும் போது நமது கர்மவினைகள் சிவ வழிபாட்டை தொடர்ந்து செய்யவிடாமல் தடுக்கும் என்ற பொய்யான நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக பரப்பப் பட்டிருக்கிறது;சிவனை நெருங்க,நெருங்க நமது மன உறுதி அதிகரிக்கும்;ஆத்மபலமும் அதிகரிக்கும்;என்பதே உண்மை.
வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வபுண்ணியத்தாலோ,விதிவசத்தாலோ கிராமங்களில்,தொலைதூர காட்டுப் பகுதிகளில் இருக்கும் சிவன் கோவிலுக்கு பூசாரியாக சிலபலர் வந்துவிடுகின்றனர்.அவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது;


சிவலிங்கத்திற்கு அருகில் செல்லும் பாக்கியம் கிடைத்தாலும் சரி;சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் பாக்கியம்(பூசாரி) கிடைத்தாலும் சரி:பின்வரும் விதமாகத் தான் சிவலிங்க அபிஷேகம் செய்ய வேண்டும்;முதலில் நீரால் அபிசேகம் செய்ய வேண்டும்;பிறகு பால்,தயிர்,மஞ்சள்,திரவியப்பொடி,பஞ்சாமிர்தம்,நார்த்தங்காய்ச் சாறு,விபூதி,அரிசிமாவு,சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பொருளாலும் அபிஷேகம் செய்யும் போது சிவமந்திரங்களை/சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை(அபிஷேகம் செய்பவரும்) மனதுக்குள் ஜபிப்பது அவசியம்;உதாரணமாக,ஓம்நமச்சிவாய என்ற மந்திரத்தையோ,ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தையோ ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்து முடித்ததும் தண்ணீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.இறுதியாக ருத்ராட்சத்தால் அபிஷேகம் செய்யலாம்;பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் இருந்திருக்கிறது.தற்போது,தமிழ்நாட்டில் ஒருசில ஆலயங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ருத்ராட்ச அபிஷேகம் செய்துவருகின்றனர்.


இதைத் தொடர்ந்து கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை என்ற அமைப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு ஓரிரு முறை எப்படி பூஜை வைப்பது? என்பதற்கான பயிற்சி முகாம்களை தமிழ்நாட்டில் நடத்திவருகின்றனர்;அதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்;அல்லது ஆதீனங்கள் நடத்தும் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம்களிலும் கலந்து கொள்ளலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நமது ஐம்புலன்களில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளுமே!!! இந்த இரண்டையும் நமது மனவலிமையால் கட்டுப்படுத்த பழகிக் கொண்டால்,மற்ற மூன்றுமே தாமாகவே கட்டுக்குள் வந்துவிடும்; யார் என்ன சொன்னாலும் நம்பி அதன் அடிப்படையில் இறங்கிச் செயல்படும் அப்பாவிகளே தமிழ்நாட்டில் அதிகம்;இதனால் தான் ஏமாற்றுபவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்;ஆக,காது தான் பிறர் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் ‘கேட்டு’ நமது மனதுக்குள் செலுத்துகிறது;எனவே, ‘கேட்பதில்’ கவனமாக இருக்கப் பழக வேண்டும்;
அடுத்து கண்கள்!!!


நமது மனம் செயல்படுவதே கண்களைக்கொண்டுதான்! மனம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கின்றன;ஒன்று மேல் மனம்,அடுத்தது ஆழ்மனம்! ஒரு நாளில் நாம் குறைந்த பட்சம் 17 மணி நேரமும்,அதிகபட்சம் 20 மணி நேரமும் விழித்திருந்து பலவிதமான வேலைகள்,தொழில் செய்துவருகிறோம்;இந்த விழித்திருக்கும் நேரத்தில் நமது ஆழ்மனம் அவ்வப்போது விழிக்கும்;எப்போது விழிக்கும் என்பதை மனம் சார்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்;அப்படி விழிக்கும் நேரத்தில் நாம் பார்க்கும் காட்சிகளை நமது கண்கள் மூலமாக மனதினுள் வழியாக ஆழ்மனமானது உள்வாங்கிக் கொள்கிறது.இப்படி உள்வாங்கும் காட்சிகள் பிற்காலத்தில் கனவுகள் உருவாகவும்;பகல் கனவாகத் தோன்றவும் செய்கின்றன;ஏக்கங்கள் தோன்றவும்;நமது வாழ்க்கை லட்சியத்தின் மீது வெறியாகவும் மாறுகிறது.பழிவாங்கும் உணர்ச்சியும்,பாச உணர்ச்சியும்,காமக் கிளர்ச்சியும்,விட்டுக்கொடுத்தலும்,உற்சாகமும் தோன்ற கண்களே காரணம்.ஆதிகாலத்தில் மனிதன் இருந்த நிலையை இன்று நினைக்கும்போதெல்லாம் பார்க்கும் சூழ்நிலையை இணையத் தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டது;அவ்வாறு ஆதிகால ஆண்,ஆதிகால பெண் வடிவத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனமானது கிளர்ந்தெழுந்து ஆழ்மனதை தட்டியெழுப்பிவிடுகிறது;ஏனெனில்,ஆதிகால ஆண்,பெண் வடிவம் மனதோடு நெருங்கிய தொடர்புடைய வடிவம் ஆகும்.இன்னொரு உயிரைப் படைக்கவே  ‘தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்ளும் குணத்தை’ நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய உணர்வுகளுக்குள் புதைத்திருக்கிறான் இறைவன்.அதை அதற்கு மட்டுமா இன்று நாம் பயன்படுத்துகிறோம்?


அடுத்து வரக்கூடிய அனைத்துப் பிறவிகளிலும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் பாவத்தை இதன்மூலம் சேமிக்கிறோம்;இருக்கும் கொஞ்சநஞ்ச ஆன்மீகத்தேடலையும் இதன் மூலமாக குழிதோண்டி புதைத்துவிடுகிறோம்;இயல்பான ‘சிருஷ்டிப்புத்திறனை’ இந்தச் செயல்பாடு அழித்துவிட்டு, உணர்வுப்பேராசை பிடித்த மிருகமாக மாற்றிவிடுகிறது.இதன் மூலமாக,நமது வீட்டில்/குடியிருப்பில் நாம் செய்துவரும் ஜபத்தின் பலனையும்,கோவிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக நமது வீட்டைச் சுற்றிலும்,நம்மைச் சுற்றிலும் உருவான தெய்வீக சூட்சுமப் பாதுகாப்பை நாமே தகர்த்துவிடுகிறோம்;ஒருபோதும் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முடியாத ஒரு முட்டுக்கட்டையை நாமே உருவாக்கிவிடுகிறோம்.


‘சாட்சி இல்லாத உண்மை’ என்பது தாம்பத்தியம் மட்டுமே! அதையும் இணைய வெளியில் பரப்பும்போது அது நமது அனைத்து ஜாதக யோகங்களையும் அழித்துவிடுகிறது;எதிர்காலத்தில் நாம் எவ்வளவு சம்பாதிக்க இருக்கிறோமோ,அதில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு சம்பாதிக்கும் விதமாக யோகங்களைக் குறைத்துவிடுகிறது.ஏன் தெரியுமா?
இந்து தர்ம சாஸ்திர நூல்களான விதுரநீதி,சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்,மனு சாஸ்திரம் போன்றவைகளில் இருந்து எடுக்கப்பட்ட உண்மைகளில் ஒருசிலவற்றை உங்களுக்குத் தருகிறோம்:ஒரு ஆண்,தனது வாழ்க்கைத்துணையான மனைவிக்கு ஏக்கத்தைத் தரக் கூடாது;ஒரு மனைவி தனது கணவனிடம் தூங்குமிடத்தில் தாசியாக நடந்து கொள்ள வேண்டும்;ஏங்க வைத்தால்,அது கேமத்துருவ தோஷமாக மாறும்;பெண் சாபமாகவும்,ஆண் சாபமாகவும் அடுத்த ஏழு மனிதப் பிறவிகளுக்கு அந்த தோஷமும்,சாபமும் தொடரும்;


சாட்சி இல்லாத உண்மையை ஊரறிய திரைப்படம் போல (இணையம்,செல்போன்,டிவி மூலமாக) ஒளிபரப்பும்போது அது பல கோடி மனிதர்களைச் சென்றடைந்து கொண்டே இருக்கும்;அதைப் பார்க்கும் அனைத்து மனிதர்களிடம் ஏக்கத்தை உருவாக்கும்;அந்த ஏக்கமானது கேமத்துருவ தோஷமாகவும்,சாபங்களாகவும்,பிரம்மஹத்தி சாபங்களில் ஒன்றாகவும் மாறிவிடும்;


தனது கணவனுக்குத் துரோகம் செய்யும் மனைவியும்,தனது மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவனும் அடுத்த பிறவிகளில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளாகப் பிறந்து இனப்பெருக்க உறுப்புகள் சிதைக்கப்படும்;அவ்வாறு சிதைக்கப்பட்டப் பின்னர் படைப்பு உணர்ச்சியால் பல ஆண்டுகள் ஏங்கித் தவிக்க வேண்டும்; அடுத்தவரின் ஒழுக்கம் சார்ந்த அவமானங்களை நீங்கள் பிறருக்குச் சொல்லாதீர்கள்;எழுதாதீர்கள்;பரப்பாதீர்கள்;இந்த அவமானம் ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து ராசிகளையும் தாக்கத்தான் செய்கிறது;இவையெல்லாம் பரிகாரத்திற்கு உட்படாத தோஷங்களுக்குள் வருகின்றன;


யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணும்,பெண்ணும் செய்வதைப் பதிவு செய்து பரப்புவதைப் போல பாவமே கடுமையான பாவம் ஆகும்.இதற்கு மிஞ்சியபாவம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை;கலியுகத்தில் இயற்கைச் சமநிலை கெட்டுப்போவதற்கு முக்கியக் காரணமே இது தான்;
 இந்த பாவம் உலகமயமாகிவிட்டதால் தான் அடிக்கடி ஆழிப்பேரலை(சுனாமி) உருவாகிறது;பூகம்பங்கள் ஏற்படுகின்றன;கலியுகம் 4,32,000 ஆண்டுகள் கொண்டது;இதில் கலியுகம் தோன்றி 5114 ஆண்டுகள் ஆகின்றன; “அசையும் நிழற்படத்தை மனிதன் கண்டறிவான்;அது அவனுக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈஸ்வர பக்தியை அழிக்கும்;ஒழுக்கம் கானல்நீராகிவிடும்;ஒருவன் மனைவி இன்னொருவனுக்கு மனைவியாக இருப்பாள்” என்று 400 ஆண்டுகளுக்கு முன்பே ஆந்திரமாநிலத்தில் பிறந்த வீரப்பிரம்மம் அவர்கள் எழுதியிருக்கிறார்.இது தொடர்பாக ஏற்கனவே ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறோம்;

எனவே,கண்களுக்கும்,காதுகளுக்கும் கிளுகிளுப்பு தரும் எதையும் பார்ப்பதைத் தவிர்க்கவும்;நமது கர்மவினைகள் தீரவும்,நமது சந்ததியினர் செல்வச் செழிப்புடனும்,நிம்மதியுடனும் வாழவும் பக்தியை வளர்க்கவும்;ஆன்மீகக்கடலில் சொல்லப்படும் ஆன்மீக ரகசியங்கள் ஒரு லட்சம் கோடிகளில் ஒரு பங்குதான்.



Monday, June 10, 2013

சனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு!!!


நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வின் குறிப்பிட்ட விஷயங்களை நிர்ணயம் செய்யும் சக்திபடைத்தவை! நமது வாழ்க்கையில் திருமணம்,குழந்தை,சம்பாதிக்கும் பணம்,சுபகாரியங்கள் அனைத்திற்கும் குருபகவானே பொறுப்பு!! நமது துணிச்சல்,வாங்கும் நிலம் மற்றும் வீடு,ரத்தத்தில் இருக்கும் ஆரோக்கியம் போன்றவைகளுக்கு செவ்வாய் பகவான் பொறுப்பு!!! நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதற்கும்,நமது அம்மாவுக்கும் நமக்குமான இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவது சந்திரன் பொறுப்பு!!! நமக்கு அரசுப்பணி கிடைக்குமா? நமது அப்பாவுக்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதைத் தீர்மானிப்பது சூரியபகவானின் பொறுப்பு!!! நமது நகைச்சுவைக் குணம்,எழுத்தாற்றல்,நரம்பு மண்டலம்,காதலில் நமது சாமர்த்தியம்,நமது புத்தியை சிந்திக்க வைப்பது போன்றவைகள் புதனின் பொறுப்பில் வருகின்றன;நமது இந்த ஜன்மத்தையும்,அடுத்த ஜன்மத்தையும்,நாம் அனுபவிக்கும் சுகங்கள்,சுக போகங்கள்,யோகங்கள்,நமது மனம் மற்றும் உடல் சார்ந்த கவர்ச்சிகளுக்கு சுக்கிரனே பொறுப்பாகிறார்;நமது ஒழுக்கம்,நாம் கற்கவிரும்பும் சரசக்கலை,மாந்திரீகத்தால் நாம் பாதிக்கப்படுவோமா? அல்லது நாம் பிறரை மாந்திரீகத்தால் பாதிக்க வைப்போமா? என்பதைப் பற்றியும், நமது புலனாய்வுத்திறன்,நமது அப்பாவின் முன்னோர்கள் பற்றிய அறிய நமது பிறந்த ஜாதகத்தில் ராகுவின் இருப்பிடத்தைக் கொண்டு அறியலாம்;நமக்கு இந்தப் பிறவியில் கிடைக்க இருக்கும் ஞானம்,தியான முயற்சிகள்,ஆன்மீக முயற்சிகள் பற்றி அறிய நமது பிறந்த ஜாதகத்தில் கேதுவின் அமைவிடத்தைக் கொண்டே புரிந்து கொள்ளமுடியும்.


நமது ஆயுள் மற்றும் நாம் செய்ய இருக்கும்,செய்து வரும் வேலை அல்லது தொழிலை நிர்ணயம் செய்வது சனிபகவானே!!!
இந்த ஒன்பது கிரகங்களும் சுயமாக நமது தலைவிதியை நிர்ணம் செய்வதில்லை;நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள்,தீயச் செயல்களின் தொகுப்பைப் பொறுத்தே,நமது இந்தப் பிறவியில் இணைந்தும்,பிரிந்தும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு விநாடியையும் நிர்ணயம் செய்கின்றன.
இந்த நவக்கிரகங்களையும் ஸ்ரீகால பைரவப்பெருமான் தனது சுவாசத்தால் செயல்பட வைக்கிறார்;ஆமாம்! ஸ்ரீகால பைரவப் பெருமானின் சுவாசமே பஞ்சாங்கமாக விரிவடைகிறது;பஞ்சாங்கம் நவக்கிரகங்களின் சுழற்சியின் அடிப்படையில் உருவாகிறது;


இந்த சூழ்நிலையில்,நாம் செய்த தவறுகளுக்குப் பிராயச் சித்தமே கிடையாது என்று இருந்தால்,உலக இயக்கத்தில் சுவாரசியமே இல்லாமல் போய்விடும்;மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் திருந்தவும்,மனம் வருந்தவும் இறைவழிபாடு தோன்றியது.அதில் மிக எளிய அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு ஸ்ரீகாலபைரவப் பெருமான் வழிபாடு ஆகும்.ஓரிரு முறைகள் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டதுமே நமது மனப்பூர்வமான வேண்டுதல்களை ஏற்றுக் கொண்டு நமக்கு முழுப் பாதுகாப்பு அருள்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்.அனுபவத்தில் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஸ்ரீபைரவப் பெருமான் வழிபாட்டின் மூலமாக இதை உணர்ந்திருக்கிறார்கள்.


சனிபகவானின் வாதநோயை நீக்கியவர் ஸ்ரீகால பைரவப்பெருமான் ஆவார்.சனிபகவானின் குருவாக ஸ்ரீகால பைரவப்பெருமான் இருக்கிறார்.சனிபகவானுக்கு நவக்கிரகப் பதவியைத் தந்தவரே ஸ்ரீகால பைரவப் பெருமானே! எனவே,யார் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு சனிபகவானின் தாக்கம் சிறிதும் இராது;மேலும்,தனது குருவான ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதால்,சனிபகவான் தனது உக்கிரத்தை பெருமளவு குறைத்து நிம்மதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடரச் செய்வார்.இது பல யுகங்களாகத் தொடரும் உண்மை ஆகும்.சனியின் தாக்கம் தீர நிஜமான பரிகாரம் ஸ்ரீகால பைரவப்பெருமான் வழிபாடு மட்டுமே!



விரையச்சனி இருப்பவர்கள் 16.12.2014 வரை(விருச்சிகராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை அவரது சன்னதியின் முன்பாக நின்றவாறு சுமாராக பத்துநிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30க்குள் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இந்த நேரம் முழுவதும் மேற்கூறிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்,ஜவ்வாது போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து வர வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;இதன் மூலமாக விரையச்சனியின் தாக்கம் தீரும்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருள் கிட்டும்.

ஜன்மச்சனி இருப்பவர்கள் 16.12.2014 வரை(துலாம் ராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப்பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சுமார் பத்துநிமிடம் ஜபிக்க வேண்டும்.மேலும்,எலுமிச்சை பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;

ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30 வரையிலான காலத்தில் வீட்டில் அல்லது ஸ்ரீகாலபைரவப் பெருமான் சன்னதியின் முன்பாக மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;எழுதலாம்;(பெண்கள் அந்த நாட்களில் மட்டும் எழுத/ஜபிக்கக் கூடாது)
மண் அகல்விளக்கில் கறுப்பு வண்ணம் பூச வேண்டும்;அதில் பாதி நெய்,பாதி இலுப்பை எண்ணெய் கலந்து அத்துடன் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் வரும் ராகு காலத்தில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளைக் கொண்டு ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அபிசேகம் நடைபெறும் ஸ்ரீகால பைரவப் பெருமான் சன்னதியில் நின்றவாறு/அமர்ந்தவாறு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

வாக்குச்சனி  இருப்பவர்கள் 16.12.2014 வரை(கன்னி ராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு(நிற்க முடியாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்;அவருக்கு நேராக அமரக்கூடாது)ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலமான காலை 9 மணி முதல் 10.30க்குள் சாம்பல்பூசணியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஜவ்வாது,அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் போன்றவைகளுடன் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகம் நடைபெறும் போது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அஷ்டமச்சனி இருப்பவர்கள் 16.12.2014 வரை(மீனராசிக்காரர்கள்):தினமும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அப்போது குறைந்தது பத்து நிமிடங்கள் வரையிலாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.30 முதல் 9.30 க்குள் புனுகு பூச வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்;படையலாக கறிவேப்பிலைச் சாதம் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு வைக்க வேண்டும்;அர்ச்சனை செய்தப்பின்னர்,அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதை உண்ணலாம்;ஒவ்வொரு மாதந்திர சனிக்கிழமை தோறும் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு கறுப்புப் பட்டு சாத்த வேண்டும்;
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகத்துக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி,சந்தனாதித்தைலம்,பால் போன்றவைகளை வாங்கித் தர வேண்டும்.

கண்டச்சனி இருப்பவர்கள் 16.12.2014 வரை(மேஷ ராசியினர்);தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.அவரது சன்னதியின் முன்பாக சுமார் பத்து நிமிடம் வரையிலும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்.

கண்டச்சனியின் தாக்கம் தீர,திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் ஸ்ரீகால பைரவப்பெருமானுக்கு அல்லிமலர் மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;சாம்பற்பூசணியில் விளக்கேற்ற வேண்டும்;பாகற்காய் சாதம் படையலிட வேண்டும்;நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகால் பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்; அல்லது அதில் கலந்து கொள்ள வேண்டும்.அந்த நேரத்தில் மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.அபிஷேகத்திற்கு புனுகு,ஜவ்வாது,அத்தர்,சந்தனாதித்தைலம்,செவ்வரளி,பால் போன்றவைகளைத் தர வேண்டும்.

அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் 16.12.2014 வரை(கடகராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சுமாராக பத்து நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

அர்த்தாஷ்டமச்சனியின் தாக்கம் தீர,வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு வெள்ளைத் தாமரை மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;வெள்ளைப் பூசணி கலந்த சாம்பார் கலந்த சாதத்தைப் படையலாக வைத்து,நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அந்த படையலை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்;

ஓவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அல்லது கலந்து கொள்ள வேண்டும்.சந்தனாதித்தைலம்,ஜவ்வாது,புனுகு,அத்தர்,செவ்வரளி போன்றவைகளை அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.

பொதுக் கருத்துக்கள்;பழமையான சிவாலயங்களில் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானத்தான் வழிபட வேண்டும் என்று இல்லை;பல அம்மன் கோவில்களிலும்,குல தெய்வக் கோவில்களும் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;

தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான ஆலயங்களில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள்,அபிஷேகங்கள் துவக்கப்படவில்லை;எனவே,உங்கள் ஊரிலும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கலாம்;நீங்கள் அதை மாற்றி ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருளைப் பெறுங்கள்;

இந்த வழிபாடுகள் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;அப்படிக் கைவிட்டப் பின்னரே,இந்த வழிபாட்டைத் துவங்கிட வேண்டும்.


நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட,வழிபட நமது குலதெய்வத்தின் சக்தி அதிகரிக்கும்;நமது கர்மவினைகள் கரையத் துவங்கும்;இதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும்,நாம் விரும்பும் லட்சியத்தை அடையவும் முடியும்.

தொலைதூர மாநிலங்கள்,நாடுகளில் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வந்தாலே போதும்.நடக்க முடியாதவர்கள்,கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இவைகளைப் பின்பற்றிக் கொண்டே,உங்கள் ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வதன் மூலமாக,அடுத்த தேய்பிறை அஷ்டமி வரையிலும் பணம் சார்ந்த பிரச்னைகள் குறையும்;தொல்லைகள் இராது;அவ்வாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் அருகில் இல்லாவிடில்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;



ஓம்சிவசிவஓம்