Monday, July 6, 2015

சிவலோகப் பேறு தரும் கோ பூஜை



இப் பூவுலகில் பிறக்கும் அனைத்துவகை உயிர்களுக்கும் மேலான பெருமையும் தெய்வத்தன்மையும் உடையன பசுக்களாகும் வேதங்களும் சிவாகமங்ககளும் பசுக்களின் சிறப்பினை பலவாறு எடுத்துப் போற்றியுள்ளன 

பசுக்களின் அங்கங்களில் எல்லாம் வல்ல சிவபிரானும் உலகையெல்லாம் ஈன்ற நம்பெருமாட்டி உமையம்மையும் சிவகணநாதர்களும் எல்லா புண்ணிய தீர்த்தங்களும் முனிவர்களும் ரிஷிகளும் ஏனைய தேவர்களும் என்றும் பிரியாது வீற்றிருக்கின்றனர் என்பதே நம் ஞான நூல்கள் உணர்த்தும் உண்மை ஆகும்

நம் சிவபெருமான் உகந்து திருமஞ்சனம் செய்வதற்கு உரியதான தூய பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ( சாணம்) என்னும் பஞ்ச கவ்யத்தினை தரும் உரிமையுடையன இந்த பசுக்களாகும்

சீலம் உடைய இப்பசுக் குலங்கள் உலகம் அனைத்தையும் காக்கின்ற முழுமுதற் காரணராம் நம் சிவபெருமான் திருமேனியில் விளங்கிடும் திருநீறு தோன்றுவதற்கு மூலமான மூர்த்தியாய் இருப்பவை என்றால் இதனை விட சிறந்த புண்ணியப் பேறு ஏதும் இல்லை என்பதை நாம் அறிகிறோம்

மேலும் உயிர்களுக்கு அருளினை வழங்க நம் சிவபெருமான் தம் அருட்சக்தியாம் உமையம்மையுடன் எழுந்தருளும் விடை தேவரின் குலமல்லவா இப்பசுக் குலங்கள் எனவே இத்தகைய பெருமையுடைய பசுக்களை வழிபடுதல் பாதுகாத்தல் பேணி வளர்த்தல் சிவலோக வாழ்வு தரும் பெரும் புண்ணியமாகும்

இதுவே மன்றுள் ஆடும் சேவடியார் வழுத்து நெறியாகும் என்று பெரிய புராணத்தில் வரும் எம்பிரான் சண்டேச நாயனார் புராணம் நமக்கு தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகின்றது

கோ பூஜையில் கலந்து கொண்டு பசுக்களை வழிபட்டால் ஒருவன் தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் நீங்கியவனாகிறான் என்று சிவ தருமோத்திரம் கூறுகின்றது

பரியாது பகையாளர் பணியாது பழியாளர்
எரிவாய நிரை வீழும் எளியார்கள் அரியார்கள்
பரிவார்கள் பணிவார்கள் பதம் மீது பரமான
அரிது ஆய சிவலோகம் எளிதாக அடைவாரே
1111 வது பாடல் சிவதருமோத்தரம்

இங்கும் இன்சுவை ஈயும் இறைஞ்சுவார்க்கு
அங்கும் இன்பம் அடைகைக்குக் காரணம்
பொங்கு தண்புனல் உண்டுபுல் தின்றுநல்
மங்கலம் தரும் கோ என்னும் வான் பொருள்
1115 வது பாடல் சிவதருமோத்தரம்

சிவதருமோத்தரத்தில் பசுக்களுக்காக 53 பாடல்களை கொண்டுள்ளது ஆகும்

பசுக்கள் ஐந்து வகை

1. நந்தை - கருமை கலந்த பொன் நிறம்

2. சுபத்தரை - கருமை நிறம்

3. சுரபி - வெண்மை நிறம்

4. சுசீலை - கருஞ்சிவப்பு நிறம்

5. சுமனை - செம்மை நிறம்

பசுக்களில் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யம்

1. பால்

2. நெய்

3. தயிர்

4. கோமயம்

5. கோசலம் ( சாணம்)

பசுக்களை வலம் வருபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூறும் சிவதருமோத்தரம் பாடல்

வலம் செய்து ஆக்களை வாழ்த்தி வணங்கியே
நலம் செய்தார் புல்லும் நாவில் கொடுத்து உடல்
விலங்கை விட்டும் விமலன் புரத்து உள்ளே
இலங்கிச் சுற்றத்தோடும் இருப்பார்கள்
1112 வது பாடல் சிவதருமோத்தரம்

பசுவின் உடலில் தங்கியிருப்போர்கள்

1. சிரம் - சிவபெருமான்

2. நடுநெற்றி - உமையம்மை

3. கண்கள் - சூரியன் சந்திரன்

4. கொம்பு நுனி - கோதாவரிமுதலிய தீர்த்தங்கள்

5. கொம்பு அடி - திருமால் அயன்

6. காதுகள் - அஸ்வினி தேவர்கள்

7. மூக்கு நுனி - முருகப்பெருமான்

8. உள்மூக்கு - இந்திரன் முதலாய அட்டதிக்கு பாலர்கள்

9. பசுமடி - பெருங்கடல்கள் - தேனுமுத்திரை - ஈசானமுகம்

10. காம்புகள் நான்கு - தத்புருஷம் வாமதேவம் அகோரம் சத்யோஜாதம்

11. கோசலம் - ஆகாய கங்கை

12. கோமயம் - யமுனை தீர்த்தம்

13. கண்ணங்கள் - யமன் இயக்கர்கள்

14. பற்கள் - வாயு

15. நாக்கு - வருணன்

16. உதடு - அதிதெய்வங்கள் ( கால நிலைக்கேற்ப)

17. கழுத்து - இந்திரன்

18. மார்பு - சாத்தியர் ( தேவர் பிரிவு)

19. இதயம் - கலைமகள்

20. முதுகு தண்டு - உருத்திரர்

21. கால் நுனி குளம்பு - நாகர்கள்

22. கால் நடுப் பகுதி - கந்தவர்கள்

23. கால் மேற் பகுதி - தேவ கணணிகைகள்

24. வயிறு - பூமாதேவி

25. அரைப்பகுதி - பிதிர் தேவர்கள்

26. குதம் - திருமகள்

27. வாலின் அடிப்பகுதி - எண்ணிறைந்த தேவர்கள்

28. வால்முடி - சூரிய ஒளிக்கற்றை

29. இடை - அருக்க தேவர்கள்

30. கால்கள் நான்கு - அனில வாயு / நான்கு வேதம் ( இருக்கு யசுர் சாம அதர்வன)

31. முழங்கால் - மருத்துக்கள்

32. கால் இடைசந்து பகுதி - வசுக்கள்

33. பகம் ( யோனி) - சப்த கன்னியர் ( அபிராமி மகேசுவரி கௌமாரி நாராயணி வராகி இந்திராணி காளி)

34. வயிறு - ஆகவனியம்

35. இதயம் - தக்ஷீனாக்னி

36. முகம் - காருகபத்யம்

இந்த மூன்றும் சேர்ந்து முத்தி ஆகும்

ஆகவே எல்லா உறுப்புகளிலும் கற்புடைய மாதர்கள் உள்ளனர் என்பது ஆகும்

திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment