Thursday, July 30, 2015

அளவற்ற புண்ணியமும்,அளவற்ற பாவங்களும்




நாம் இப்பிறவியில் செய்யும் ஒவ்வொரு பாவச் செயலும்,புண்ணியச் செயலும் நமது ஜாதகத்தில் லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் வரவு வைக்கப்படுகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது;இதை அப்படியே ஆராய்ந்தால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ,புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்றே அர்த்தம்;
எப்படி என்பதை கொஞ்சம் பார்ப்போமா?
இப்பிறவியில் ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறப்பவர்,அடுத்த ஜன்மத்தில் சிம்மத்திற்கு பத்தாம் இடமான ரிஷப லக்னத்தில் பிறப்பார்;மூன்றாம் பிறவியில் அவர் கும்பலக்னத்தில் பிறப்பார்;நான்காம் பிறவியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பார்;ஐந்தாம் பிறவியில் மீண்டும் சிம்ம லக்னத்தில் பிறப்பார்;
அளவற்ற புண்ணியம் செய்தவர்களுக்கு,கோடிக்கணக்கில் சொத்துக்களும்,சகல சுகபோகங்களும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்;அதேசமயம்,பாவம் செய்யத் தூண்டும் செல்வச் செருக்கும்;தன்னால் பணத்தால் எதையும் வாங்க முடியும் என்ற மமதையும் கூடவே உருவாகும்;
அளவற்ற பாவம் செய்தவர்கள் மிகவும் வறிய நிலையில் பிறந்து,தினசரி ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும்;
அளவற்ற புண்ணியம் செய்தாலும் சரி;அளவற்ற பாவம் செய்தாலும் சரி;புனரபி மரணம்;புனரபி ஜனனம் தான் அதாவது மீண்டும் மரணம்,மீண்டும் பிறப்பு என்ற பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கிக்கொள்வதுதான்;
இதில் இருந்து மீளும் வித்தையை முதலில் கற்றவர்களே சித்தர்கள் ஆவர்;
பாவமும் செய்யாமல்,புண்ணியம் செய்யாமல் நமது பாவ புண்ணியக் கணக்கு ஜீரோ பேலன்ஸ் ஆகும் போது நாம் சித்தராகிவிடுவோம்;அல்லது முக்தி அடைந்து மீண்டும் இந்த கர்ம பூமியில் பிறக்காத சூழ்நிலையை உருவாகிவிடும்;மனிதராக பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய இறுதி ஆன்மீக லட்சியமே இதுதான்;இதை உணர சில மனிதர்களுக்கு அடுத்த பத்து பிறவிகள் ஆகும்;பல மனித ஜன்மங்களுக்கு 30,000 மனித பிறவிகள் ஆகிவிடும்;
பிறப்பு,இறப்புச் சுழலில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன;அதில் சுலபமானது அருகில் இருக்கும் சிவாலயம் சென்று ஏதாவது ஒரு சிவமந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை அதிகபட்சம் 90 நிமிடங்கள் ஜபிப்பது ஆகும்;
சிவமந்திரங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன;ஒம் நமச்சிவாய,ஒம்சிவாயசிவ,ஒம்சிவசிவா,ஒம் நமசிவ,ஒம்நமசிவாயநம,ஒம்சிவசிவஒம்,ஒம்வசியநம என சொல்லிக் கொண்டே போகலாம்;
சித்தர்களின் மந்திரக்கலை என்று ஒருபுத்தகம் நமது ஊரில் கிடைக்கிறது;அதில் சுமாராக 1000 சிவமந்திரங்களும்,அதன் விளக்கங்களும் விவரிக்கப்பட்டுள்ளன;
ஒரு நாளுக்கு 108 முறை எதாவது ஒரு சிவமந்திரம்,பழமையான சிவாலயத்தினுள் ஜபிக்க வேண்டும்;அல்லது ஒன்றரை மணி நேரம் ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபிக்க வேண்டும்;இப்படி குறைந்தது 25 ஆண்டுகள் ஒரு நாள் விடாமல் ஜபிக்க வேண்டும்;இப்படிச் செய்தால் இப்பிறவியின் முடிவிலோ அல்லது அடுத்த பிறவியிலோ நமக்கு என்று ஒரு உண்மையான குரு கிடைப்பார்;
எட்வர்டு கெய்ஸி என்ற பெயரை இணையத்தில் ஆங்கிலத்தில் தேடினால் அவரது ஆராய்ச்சி முடிவுகள் புத்தகங்களாகவும்,வலைப்பூக்களாகவும்,தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்திருக்கின்றன;தைமூர் கேள்விப்பட்டுள்ளீர்களா? வரலாற்றில் பல நாடுகளைச் சூறையாடியவன்;இவனது படைத்தளபதி மறுபிறவி எடுத்து ஐரோப்பாவில் பிறந்தான்;இவன் பிறந்தது முதல் இறக்கும் வரை உடல் முழுவதும் ஊசியால் குத்துவது போலவே வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்ததாம்;இவனை எட்வர்டு கெய்ஸியிடம் அழைத்து வந்தார்கள் இவனது உறவினர்கள்;
அவர்,இவனை ஹிப்னாடிஸம் செய்து இவனது முற்பிறவிகளைப் பற்றி அறிந்து கொண்டார்;அதில்தான் இவன் தைமூரின் படைத்தளபதியாக இருந்து பலரை தனது வாள்வீச்சினால் கொன்றிருக்கிறான்;இவனால் எவ்வளவு ஆக்ரோஷமாக கொல்லப்பட்டார்களோ,அவர்களின் அத்தனை வேதனையான மரணங்களும், இவனது மறுபிறப்பில் அதே வேதனையை அனுபவிக்க வைத்திருக்கிறது;
ஏதோ நமது முற்பிறப்பு பூர்வ புண்ணியத்தால் இங்கே தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறோம்;யாரையும் துன்புறுத்த வேண்டாம்;யாரையும் நோகடிக்க வேண்டாம்;யாரையும் சித்திரவதைப் படுத்த வேண்டாம்;முடிந்தவரையிலும் பிறருக்கு நன்மை செய்யப் பார்ப்பது நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்க வழிசெய்யும்;
நாம் சித்தராவது இருக்கட்டும்;நாமும் நமது குடும்பத்தாரும் நிம்மதியாக வாழ வழியைப் பார்ப்பது உத்தமம்;
அதற்குரிய வழிமுறைகளைத்தான் எமது எழுத்துக்கள் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றன;சிவ வழிபாடு அல்லது நமது அனைத்து கர்மவினைகளையும் நீக்கி சிவத்துடன் கலக்கச் செய்யும் பைரவ வழிபாடு அல்லது வராகி வழிபாடு ஒன்றைப் பின்பற்றத் துவங்குவது அவசியம்;அவசரம்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment