Saturday, April 28, 2012

சித்தர்களை தரிசிக்க உதவும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம்


21.3.2012 ஆம் தேதியன்று தினகரன் ஆன்மீக இணைப்பில் நாடி ஜோதிடம் பற்றி ஒருவர் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.அதில் இருந்த ஒரு வரியை வாசித்ததும்,நான் இன்ப அதிர்ச்சியடைந்தேன்;ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன்;ஆமாம்!!!


ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை ஒரு முகமாக ஒரு கோடி தடவை ஜபித்தால் சித்தர்கள் தரிசனம் கிடைக்கும் என நாடி தெரிவிக்கிறது = இதுவே அந்த ஒருவரிச் செய்தி.

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் சுமார் ஐந்து  முதல் பத்து ஆண்டுகள் வரை ஒரு நாள் விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிடும்.
சித்தர்களின் தரிசனம் சுலபமாகக் கிடைத்துவிடாது;நாம் நமது முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தரை வழிபட்டு இருந்தால்,அந்த சித்தரை வழிபாடு செய்யும் முறையானது நமக்கு இந்தப் பிறவியில் உபதேசமாகக் கிடைக்கும்.அல்லது நாம் கடந்த பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தரிடம் சீடராக இருந்திருந்தால்,அதே சித்தரின் ஆசி இந்த பிறவியில் நமக்கு மறைமுகமாகவோ,நேரடியாகவோ கிடைக்கும்.இந்த சித்தர் தரிசனம் அல்லது உபதேசம் அவரவரின் பிறந்த ஜாதகத்தைப்பொறுத்து அமையும்.
சித்தர் ஒருவரை தரிசித்தே ஆக வேண்டும் என்று விரும்புவோர்,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.


ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தேவையான பொருட்கள்:

ஐந்து முக ருத்ராட்சங்கள் இரண்டு,
ஒரு மஞ்சள் துண்டு,(மஞ்சள் பட்டுத்துண்டு எனில் மிகவும் நல்லது)
நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் நமது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு வாங்கப்பட்ட விபூதி கொஞ்சம்
ஒரு தனியறை(வீடானாலும்,நமது வேலை பார்க்கும் ஊராக இருந்தாலும்)
நமது வயது 21 ஐ கடந்திருக்க வேண்டும்;நாம் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்.

பெண்கள் எனில்,மாதவிலக்கு நாட்களில் ஐந்து நாட்கள் இந்த ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்யக் கூடாது;

ருதுவான வீட்டிற்குச் சென்றாலோ,குழந்தை பிறந்த வீட்டிற்குச் சென்றாலோ,துக்க வீட்டிற்குச் சென்றாலோ ஐந்து நாட்கள் இந்த ஓம்சிவசிவஓம் ஜபம்  செய்யக் கூடாது.

மறைந்தவர்கள் நமது நேரடி ரத்த உறவு எனில்,16 நாட்களுக்கு இந்த ஜபத்தை நிறுத்த வேண்டும்.

நெற்றியில் விபூதி பூச வேண்டும்;மஞ்சள் துண்டினை தனி அறையில் விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர வேண்டும்;இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொள்ள வேண்டும்;(எட்டு முகருத்ராட்சத்தை மட்டும் பயன்படுத்தக் கூடாது.அதை வீட்டில் ஒரு நாள் கூட வைத்திருக்கக் கூடாது)

மஞ்சள் துண்டில் அமரும்போது,நமது உடல் முழுவதும் மஞ்சள் துண்டுக்குள் இருக்க வேண்டும்.(ஏனெனில்,நமது உடலின் ஒரு பகுதி தரையில் படும் விதமாக அமர்ந்திருந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜபத்தின் பலன், பூமிக்குப் போய்விடும்.நமக்கு ஜபத்தின் பலன் கிடைக்காமல் போய்விடும்)

கண்களை மூடிக்கொண்டு,முதலில் நமது குல தெய்வத்தை வழிபட வேண்டும்.உதாரணமாக ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்.

பிறகு,ஓம்கணபதியே நமஹ என்று ஜபிக்க வேண்டும்.
பிறகு,நமது நியாயமான கோரிக்கை ஒன்றை வேண்ட வேண்டும்.(உதாரணமாக, எனது கடன்களை அனைத்தும் இந்த ஒரு வருடத்துக்குள் தீர்ந்துவிடவேண்டும்;)

பிறகு,ஓம்சிவசிவஓம் என மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.வாய்விட்டுச் சொல்லக் கூடாது.

ஒரு அமாவாசையன்று இந்த  ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;(வேறு நாட்களிலும் ஆரம்பிக்கலாம்;முடிந்த வரையிலும்,வளர்பிறை நாட்களில் ஆரம்பிப்பது நல்லது)
முதல் ஒரு மாதம் வரையிலும்,ஒரு நாளுக்கு 15 நிமிடம் மட்டும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;

அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளுக்கு 30 நிமிடமாக ஓம்சிவசிவஓம் ஜப நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

மூன்றாம் மாதத்திலிருந்து இதை 45 நிமிடமாக அதிகரிக்க வேண்டும்.

நான்காம் மாதத்தில்  இருந்து ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது,கால்கள் வலிக்கும்;உணர்விழந்து போகும்;அவ்வளவு நேரம் நாம் அமர்ந்த நிலையில் இருப்பதில்லை;எனவே, முதல் 30 நிமிடம் ஜபித்தபின்னர்,சுமார் 10 நிமிடம் ஓய்வு எடுக்கலாம்.(ஜபத்தை நிறுத்திவிட்டு,வேறு ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும்)10 நிமிடம் கழித்து,மீண்டும் அடுத்த 30 நிமிடம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;

இதையே வேறுவிதமாகவும் செய்யலாம்;காலையில் 30 நிமிடமும் மதியம் அல்லது மாலை அல்லது  இரவில் 30 நிமிடமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.

முதல் ஒருவாரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது நிறைய மனக்குழப்பம் உண்டாகத்தான் செய்யும்;தேவையற்ற சிந்தனைகள் வரத்தான் செய்யும்.அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.ஏனெனில்,இந்த ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் உங்களின் தலையெழுத்தை நீங்களே மாற்றிவிடும்;எப்போது? உங்களின் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய பிறகு!

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,உங்களின் ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும்.நமது உடலில் 72,000 நாடிகளும்,23,000 நரம்புமையங்களும் இருக்கின்றன.இந்த நாடி நரம்புகளில் தலா ஒரு ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் நிரம்பினாலே,நாம் ஒரு ருத்ரன் ஆகிவிடுகிறோம்.ருத்ரன் என்பது சிவனின் ஒரு சிறு அம்சம் ஆகும்.

நமது ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிய பின்னர்,ஒரு நாளுக்கு 15 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.அல்லது ஒரு நாளுக்கு 108 முறை ஓம்சிவசிவஓம் ஜபித்தால் போதுமானது.

சித்தரை தரிசிக்க விரும்புவோர்கள்,சிவதரிசனம் செய்ய விரும்புவோர்கள்(கடவுகளில் முருக தரிசனமும்,சிவதரிசனமும் கிடைப்பதற்கு பல ஆயிரம் மனிதப்பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!! மற்ற எந்தக் கடவுளையும் கொஞ்சம் சிரமப்பட்டாலே தரிசித்துவிடமுடியும்) ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னரும்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரலாம்.

அமாவாசை,பவுர்ணமி,கிரகணம்,தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் அதிகாலையில் (காலை 4.30 முதல் 6 மணி வரை) வீட்டில் உயரமான இடத்தில் அல்லது உயரமான மலைக்கோயில்களில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,விரைவான மந்திரசித்தி கிடைக்கும்.

ருத்ராட்சத்தைப் பொறுத்தவரையில் இலவசமாக வாங்குவது தவறு.நாம் இலவசமாக வாங்குவதாக இருந்தால் நமது குல குரு அல்லது ஆன்மீக குரு அல்லது ஆஸ்தான ஜோதிடர் அல்லது குடும்பத்து பெரியவர்களிடம் மட்டும் வாங்கலாம்;பிறரிடம் வாங்கி அதை மந்திர ஜபத்துக்குப் பயன்படுத்தினால்,நமது ஜபத்தின் ஒரு பங்கு நமக்கு ருத்ராட்சத்தை தானம் செய்பவர்களுக்குப் போய்ச்சேரும்;ருத்ராட்சத்தில் ஒரு முகம் முதல் 64 முகம் வரை இருக்கின்றன.இதில் சுலபமாக கிடைப்பது ஐந்து முக ருத்ராட்சம் தான்;அதையே பயன்படுத்துவது நல்லது.

ஓம்நமச்சிவாய என்ற மந்திரமே நம்மிடையே புழங்கும் சிவமந்திரம் ஆகும்;இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தாலோ எழுதினாலோ ஒரு சில வாரங்களில் உயர்ந்த துறவறத்துக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும்;இந்த மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன;60 வயதைக்கடந்திருக்க வேண்டும்;குடும்பக் கடமைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்;பூண்டு,வெங்காயம் போன்றவைகளை தவிர்த்திருக்க வேண்டும்;கோபம்,பொறாமை போன்றவைகளை  கைவிட்டிருக்க வேண்டும்;இவைகளை கைவிடாமல் ஓம்நமச்சிவாய என்று தினமும் 108 முறை ஜபித்தாலோ எழுதிவந்தாலோ பலவிதமான சிரமங்கள் நம்மைத் துரத்தும் என்பது அனுபவ உண்மை.

ஓம்சிவசிவஓம் மந்திரமானது இரண்டே இரண்டு கட்டுப்பாடுகளுடன் யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;முதல் கட்டுப்பாடு:21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இரண்டாவது கட்டுப்பாடு:அசைவம் சாப்பிடக்கூடாது.

பூமியில் மனிதர்களின் மத்தியில் 7,00,00,000 மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;இந்த ஏழு கோடி மந்திரங்களும் ஓம்சிவசிவஓம் மந்திரத்துக்குள் அடக்கம்;வேறு எந்த மந்திரமும் தேவையில்லை;(எல்லா மந்திரமும் இதற்குள்ளேயே இருக்கின்றதே!!!)இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்தாலே நமக்குத் தேவையான பணம்,செல்வ வளம்,வேலை வாய்ப்பு,புகழ்,பிரபலம்,சந்தைவாய்ப்பு,சொந்த வீடு,வாழ்க்கை லட்சியம் என அனைத்தையும் தந்துவிடும் என்பது அனுபவ உண்மை!!!

இந்த மந்திரத்தை நமக்கு உபதேசித்த திரு.மிஸ்டிக்  ஐயா அவர்களுக்கு  கூகுள் கோடி நன்றிகள்!!!
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment