Monday, March 8, 2010

தமிழர்களின் தேசிய உணவு பனங்கிழங்கு




இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் .

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் .

பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.

பனம் பழம்
சரி . இனி பனம் கிழங்கு எவ்வாறு உருவாகின்றது ? பனையில் இருந்து விழும் பனம் பழத்தின் விதை தான் பின்பு பனம் கிழங்காக வருகின்றது . பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும்வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்காக உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.

ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது.

பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது.

இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு , கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும்.

புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல் மாவை காலை உணவாக உண்ணலாம் . அதற்க்குள் சீனியும் , தேங்காய் பூவும் போட்டு குழைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் . வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் இறந்துவிடும் .




பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை மிகவும் பிரபலமான உணவுகள்.


இப்போது எல்லா இடங்களிலும் பனம் கிழங்கு விற்பனை சூடு பிடித்து இருக்கிறது . ஒரு கிழங்கு 5 ரூபாய்க்கு கிடைக்கிறது . வெளிநாட்டவர்கள் பலர் விரும்பி வாங்கி புளுக்கொடியலாக வாங்கி வெளிநாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் .

பனையின் பயன்கள் ஏராளம் . அதன் ஒருபகுதி பனம் கிழங்கு மட்டும் தான் நான் சொல்லி இருப்பது .

No comments:

Post a Comment