Monday, October 22, 2012

அகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாறு







பொள்ளாச்சியிலிருந்து 28 வது கி.மீ.தூரத்தில் அப்புப்பிள்ளையூர் என்னும் கிராமம் கேரளாவில் இருக்கிறது.அங்கே பல ஆண்டுகளாக தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த அகத்திய மகரிஷியின் சீடரே வெள்ளாடைச் சித்தர் ஆவார்.
முந்தைய பிறவியில் தஞ்சாவூரில் இருந்த மன்னர் ஒருவரது ஆன்மீக குருவாக வாழ்ந்து வந்த இந்த வெள்ளாடை சித்தருக்கு இப்பிறவியில் சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷியின் தரிசனம் கிடைத்திருக்கிறது.


சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு பல ஆன்மீகத்தலைவர்களை சந்தித்து வெள்ளாடைச் சித்தர் தமது உள்ளார்ந்த ஆன்மீக சந்தேகங்களை கேட்டிருக்கிறார்.பலர் பதிலளிக்கவில்லை;வடகரை சிவானந்த பரமஹம்ச சுவாமிகள் இவரது சந்தேகங்களுக்கு  பதிலளிக்கும் விதமாக  வாசியோகத்தை  தீட்சையாக அளித்திருக்கிறார்.அதன்பிறகு,சில வருடங்களில்  குறிப்பிட்ட ஆன்மீக தவநிலையை எட்டியப்பின்னர்,பழனிக்குச் சென்று ஒரு பட்சம் வரையிலும்(14 நாட்கள்) அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கிறார்.அப்போது இவருக்கு போக சித்தரின் தரிசனமும்,நேரடிதீட்சையும் கிடைத்திருக்கிறது.அவரது தீட்சைக்குப்பின் தவத்தின் அடுத்த நிலையை எட்டியிருக்கிறார்.அந்த நிலையில் பல்லாண்டுகள் தவம் செய்தபின்னர்,இந்த உலகம் முழுவதையும் நடந்தே மூன்று முறை சுற்றியிருக்கிறார்.(இந்தத் தகவலை அவரே சொல்லியிருக்கிறார்!)


ஒரு கட்டத்தை எட்டியதும்,அகத்திய மகரிஷி இருப்பதாக நம்பப்படும் பொதிகை மலைக்குச் சென்றிருக்கிறார்.அங்கே கல்யாணி அருவி என்ற ஒன்று இருக்கிறது.தமது தவ ஆற்றலாலும் தமது குரு அகத்தியரை தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையாலும் சரியான பாதையை அங்கே கண்டறிந்திருக்கிறார்.அந்தப் பாதையை சாதாரண மனிதர்களாகிய நம்மால் கண்டறிய முடியாது.(வீண் முயற்சி செய்ய வேண்டாம்)சுமாராக இரண்டு கி.மீ.தூரத்துக்கு ஒரு இருண்ட குகை வழியாக ஊர்ந்தே பயணித்திருக்கிறார்;அதன்பிறகு ஒரு கி.மீ.தூரத்துக்கு தவழ்ந்தே பயணித்திருக்கிறார்.அந்த பயணத்தின் முடிவில் ஒரு பெரிய நீர்த்தடாகம் இருந்திருக்கிறது.அந்த நீர்த்தடாகத்தில் முதலை,பாம்பு முதலியன இருந்திருக்கின்றன.அந்த நீர்த்தடாகத்தின் மறுகரையில் அகத்திய மகரிஷி தமது சீடர்களுடன் தவம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.அந்த நீர்த்தடாகத்தை கடந்தால் தமது குருவை சந்தித்து ஆசி பெறலாம்.

அந்த கணத்தில் தமக்கு அருளிய அகத்தியரின் சீடரும்,தமது இரண்டாவது குருவுமாகிய போகரை நினைத்து வேண்டியிருக்கிறார்.மறு கணமே வெள்ளாடைச் சித்தர்,அந்த நீர்த்தடாகத்தின் மறுமுனைக்கு வந்துவிட்டார்;எப்படி வந்தார்? என்பது அவருக்கே ஆச்சரியளிக்கும் ரகசியம் ஆகும்.அங்கே அகத்தியரின் சீடர் ஒருவர் இவரிடம் 1000 கேள்விகளை கேட்க,அதற்கு பதிலளித்திருக்கிறார்.பிறகு,அந்த சீடர்,அகத்திய மகரிஷி கண்விழித்துப்பார்க்கும் ஒரு மந்திரத்தை உபதேசித்திருக்கிறார்.அந்த மந்திரத்தை வெள்ளாடை சித்தர் ஜபித்ததுமே,அகத்திய மகரிஷியின் அருட்பார்வை கிடைத்திருக்கிறது.பொன்னிற தேகத்தோடு,மிக நீண்ட தாடியோடு அகத்திய மகரிஷி,வெள்ளாடை சித்தரிடம்,
“நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டிருக்கிறார்.
“உங்களது அருளாசியால் வர முடிந்தது”என்று பணிவாக தெரிவித்திருக்கிறார்.

பிறகு,உங்களோடு இருந்துவிடவே வந்திருக்கிறேன்;தாங்கள் அருள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அகத்திய மகரிஷி “உனக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன.நீ உனது பூர்வீகத்துக்கே செல்வாயாக! யாமே அங்கே வருவோம்” என்று வரமளித்து வெள்ளாடை சித்தரை அனுப்பி வைத்திருக்கிறார்.இந்த சம்பவம் 1935களின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்கிறது.அவர் திரும்பி 
வந்த இடமே இந்த அப்புப் பிள்ளையூர் ஆகும்.திரும்பி வந்த வெள்ளாடை சித்தர் தமது குடும்பக் கடமைகளை நிறவேற்றிவிட்டு,இங்கேயே தமது 108 வது வயதில் ஜீவசமாதியாகியிருக்கிறார்.தற்போது ஒரு குடும்பத்தார் நிர்வகித்து வருகின்றனர்.அந்த குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.இவர்கள் அனைவரும் வெள்ளாடைச்சித்தருடன் பல ஆண்டுகள் பழகி,ஆசி பெற்றவர்கள்;


ஓம் அகத்தீசாய நமஹ என்று அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்று நாம் தினமும்  108 முறை எழுத வேண்டும்.ஓய்வு நேரம் அதிகம் இருப்பவர்கள் காலையில் 108 முறையும்,மாலை அல்லது இரவு 108 முறையும் எழுதி வர வேண்டும்.இவ்வாறு தினமும் எழுதி 15.12.2012க்குள் இவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.நாம் அனுப்பும் மந்திரங்களை அஸ்திவாரமாக வைத்து சிவலிங்கம் நிறுவ இருக்கிறார்கள்.இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்றோ அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்றோ ஒரு கோடி மந்திர லிகிதங்கள் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.மிகவும் புண்ணியம் தரும் இந்த சித்தர் சேவையில் நாமும் பங்கெடுப்போம்;ஏனெனில்,இவ்வாறு மந்திரங்களை எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே பலருக்கு அவர்களுடைய நீண்டகால பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன;நீண்டகால நியாயமான ஏக்கங்கள் நிறைவேறியிருக்கின்றன;பலருக்கு அகத்திய மகரிஷியின் ஆசி கனவில் கிடைத்திருக்கிறது.

வெள்ளாடை சித்தரின் ஜீவசமாதியில் இவரது வரலாற்றை படம்பிடித்திருக்கிறோம்.திரு.கே.முரளிதரன்என்பவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்து வருகிறார்.

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அகத்தியாய நமஹ

ஓம்சிவசிவஓம்

1 comment:


  1. இன்றும் அகத்தியர் பலருக்கு சூட்சும நிலையில் தரிசனம் தந்து கொண்டு தான் இருக்கிறார்.

    அய்யன் அகத்தியரின் சூட்சும வழிகாட்டுதல்,இன்றும் தகுதியுள்ள பலருக்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

    தீய கர்மவினைகளை முற்றிலும் விளக்கி,நற் கர்மாக்களை அதிகம் செய்யும் போது,அய்யன் அகத்தியரின் அன்பை நாமும் இப்பிறவியில் பெறலாம்.

    ஓம் அகத்தியர் திருவடிகளே சரணம் .


    சித்தர்களின் ஒளி உடல் ரகசியங்கள்

    ReplyDelete