Wednesday, October 10, 2012

நமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும் வழுவூர் வீரட்டானம்!!!







உங்களுடைய பிறந்த லக்னம் ரிஷபம் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள் இந்தப் பிறவி முழுவதும் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்கள் அனைத்தும் ரிஷப லக்னத்துக்கு பத்தாமிடமான கும்பத்தில் பதிவாகிக்கொண்டே வரும்;இந்த ஜன்மம் முடிந்தப்பின்னர்,நீங்கள் செய்திருக்கும் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பூமிக்கு மேலே இருக்கும் உலகங்களில் ஏதாவது ஒன்றில் அல்லது பூமிக்கு கீழே இருக்கும் உலகங்களில் ஏதாவது ஒன்றில் சில வருடங்கள் அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்பீர்கள்.அப்படி பிறக்கும்போது உங்களுடைய ஜன்ம லக்னம் கும்பமாக அமையும்.



இரண்டாவது பிறக்கும் இந்த பிறவியில் கும்ப லக்னத்தில் பிறப்பதால்,இந்தப்பிறவியில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் விருச்சிகராசியில் பதிவாகிவரும்.எனவே,மூன்றாவது பிறவியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பீர்கள்;விருச்சிக லக்னத்தில் பிறக்கும் உங்களுடைய மூன்றாவது பிறவியில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் சிம்மலக்னத்தில் பதிவாகிவரும்;அதனாலேயே,உங்களுடைய நான்காவதுபிறவியில் நீங்கள் சிம்மலக்னத்தில் பிறப்பீர்கள்;அந்த நான்காவது பிறவியில் சிம்மலக்னத்தில் பிறப்பதால்,அதற்கு பத்தாவது ராசியான ரிஷபத்தில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் பதிவாகும்;எனவே,உங்களுடைய ஐந்தாவது பிறவியில் நீங்கள் பிறக்கும் லக்னம் ரிஷபம் ஆகும்.மறுபடியும் முதலில் இருந்து உங்களுடைய வாழ்க்கை வட்டம் ஜன்ம ஜன்மங்களாக அமையத்துவங்குகிறது.

எனவே தான் உங்களுடைய கடந்த நான்கு பிறவிகளில் நீங்கள் செய்திருக்கும் பாவ மற்றும் புண்ணியச்செயல்களை மொத்தமாக அனுபவிக்க இந்தப்பிறவி எடுத்துள்ளீர்கள்;ஒருவேளை அப்படி முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவானால் அடுத்தடுத்த பிறவிகளில் மீதியை விட்டகுறை;தொட்ட குறையாக அனுபவிக்க வேண்டியிருக்கும்;சிலருக்கு கடந்த மூன்று பிறவிகளில் யார் கணவன்/மனைவியோ அவரே இந்தப் பிறவியிலும் அமைவதுண்டு;இப்படி அமைவதை அவரவர் பிறந்த ஜாதகம் உறுதிப்படுத்தும்.

ஒரு நாட்டுக்கே அல்லது ஒரு மாநிலத்துக்கே தலைமைப்பதவிக்கு வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்;ஆனால்,இன்றைய கலியுகத்தில் அது அவ்வளவு சுலபமல்ல;இவர்கள் எடுக்கும் அரசியல் முடிவுகள் கோடிக்கணக்கான மக்களின் வேதனையை அதிகப்படுத்தினாலோ அல்லது லட்சக்கணக்கான மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்தாலே அதை அனுபவிக்கவே இவர்கள் பல ஆயிரக்கணக்கான மனிதப்பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
நமது ஆன்மீக குருநாதர்கள் மற்றும் ஜோதிட வழிகாட்டிகளிடம் பிடிவாதம்பிடித்து உங்களுக்காக இந்தப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.இந்தப்பதிவில் வெளியிடப்படும் அத்தனையும் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஜோதிட ரகசியம் ஆகும்.



நாம் கடந்த நான்கு அல்லது ஐந்து பிறவிகளில் செய்திருக்கும் புண்ணியச் செயல்களால் நமக்கு இந்தப்பிறவியில் இவ்வளவு செல்வ வளம்,வசதிகள்,வீடு,வாகன வசதி,வாழ்க்கைத்துணை மற்றும் காதலி/காதலன் கிடைத்திருக்கிறது.


அதே போல கடந்த நான்கு அல்லது ஐந்துபிறவிகளில் நாம் செய்திருக்கும் பாவச்செயல்களின் விளைவுகளே இந்தப்பிறவியில் நமது நோய்,கடன்,அவமதிப்பு,அரசதண்டனை,தனிமையின் கொடுமை,ஏதாவது ஒரு குறைபாடு,காமரீதியான அவமானங்கள் ஏற்படுகின்றன.


இந்தக் கலியுகத்தில் நாம் பாவம் மிகச் சுலபமாகச் செய்யமுடியும்;புண்ணியத்தை மிக எளிதாக சேர்க்கவும் முடியும்.நமது மனநிலையில் பொறாமை,கோபம்,அளவற்ற காம இச்சை,யாரையும் நம்பாத சுபாவம்,யாரையும் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் குணம்,தன்னைத் தவிர பிறரை மிகவும் இழிவாக நினைக்கும் குணம்,பிறரது சந்தோஷத்தைப் பார்த்து மனம் புழுங்கும் சுபாவம்,தன்னை விடவும் தனது மகன்/ள் பெயரும் புகழும் பெற்றுவிடக்கூடாது என்ற பொறாமைத்தீ போன்றவைகள் வராமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது;இப்படிப்பட்ட சுபாவங்கள் அல்லது குணங்கள் இருந்தாலும் இதிலிருந்து மீளமாட்டோமா? என்று ஏங்குபவர்கள் ஏராளம்.அப்படி ஏங்குபவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது!!!


ஏதாவது ஒரு அமாவாசையன்று ஒரு மஞ்சள் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.(மற்றவைகளை பயன்படுத்தக்கூடாது)செல்போன்,டிவி,ரேடியோ என அனைத்தையும் ம்யூட்டில் வைத்துவிட்டு,முதலில் உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஒருமுறை ஜபிக்கவும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒரே ஒருமுறை ஜபித்தால் போதுமானது)குல தெய்வம் தெரியாதவர்கள்,தங்களுடைய இஷ்ட தெய்வத்தை நினைத்து இதுபோல ஒருமுறை மட்டும் ஜபிக்க வேண்டும்;(மஞ்சள் துண்டினை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;மனம் ஒத்த தம்பதி எனில்,இருவரும் ஜபிக்க பயன்படுத்தலாம்)
அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;அடுத்தபடியாக நமது நியாயமான கோரிக்கை ஒன்றை மட்டும் வேண்ட வேண்டும்;(எனது அத்தனை கடன்களும் இன்னும் ஓராண்டில் தீர வேண்டும்/எனது மகளு/னுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்/நான் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்)பிறகு ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் என்று பத்து நிமிடம் வரையிலும் மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.இப்படி நாம் ஆரம்பித்த அமாவாசையில் இருந்து அடுத்த அமாவாசை வரையிலும் தினமும் 10 நிமிடம் வரை ஜபித்து வர வேண்டும்.



இரண்டாவது அமாவாசை முதல் ஒரு நாளுக்கு 20 நிமிடம் வரையிலும் ஜபிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் 30 நிமிடத்துக்கு ஜபிக்க வேண்டும்;நான்காவது மாதத்தில் இருந்து ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த நான்காவது மாதத்தில் இருந்து உங்களுடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்கள் தானாகவே அவிழ்ந்து,தினசரி வாழ்க்கை நீங்கள் நினைக்கும் விதமாக மாறத்துவங்கும்;இப்படி ஆறுமாதம் வரை நீங்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,உங்களது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிடும்.அப்படிக் கடந்ததும்,நீங்கள் சிவனது அருட்பார்வைக்குக் கட்டுப்பட்டவர் ஆவீர்கள்:உங்களை சிவனது சூட்சும அருள் சக்தி பாதுகாக்கத் துவங்கும்;நீங்கள் யார் மீது பாசமாக இருக்கிறீர்களோ,அவர்களையும் சேர்த்தே பாதுகாக்கத் துவங்கும்;வர வேண்டிய ஆபத்துக்களை இந்த மந்திர ஜபம் தடுத்துவிடும்.கிடைக்க வேண்டிய யோகங்களை இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகளவில் கிடைக்கச் செய்யும்.


ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தேவையான தகுதி இரண்டே இரண்டு மட்டுமே:=1)21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;
2)அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.
பெண்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;பெண்கள் இந்த மந்திரத்தை ஜபித்து வரும்போது மாத விலக்கு நாட்களில் ஐந்து நாட்கள் வரையிலும் ஜபிப்பதை நிறுத்த வேண்டும்;இந்த ஐந்து நாட்களிலும் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.(மாதவிலக்கு நாட்களில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூடுதலான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்;மேலும்,மன உறுதியை இழக்கிறார்கள்;தங்களுடைய தேஜஸ்ஸை இழக்கிறார்கள்)




ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது;ஆனால்,பல மந்திரங்களை ஜபிக்க மட்டுமல்ல;உபதேசம் பெறுவதற்கே பூரணமான பிரம்மச்சார்யம் பெற வேண்டும்;ஒருபோதும் மன்மத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.எனவேதான் நமது இந்து தர்மத்தின் பல மந்திரங்களும்,அதை பயன்படுத்தும் முறைகளும் குருமுகமாக மட்டுமே பிரபலப்படுத்தப்படுகின்றன.ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு குரு உபதேசம் கூடத் தேவையில்லை;வாசித்தாலே போதும்.தற்காலத்தில் பல மந்திரங்களை வார இதழ்களிலும்,மாத இதழ்களிலும்,ஜோதிட மற்றும் ஆன்மீக வெளியீடுகளிலும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவற்றில்பெரும்பாலானவை சமஸ்க்ருத மந்திரங்களும் உண்டு;இந்த மந்திரங்களை தகுதி உடையவர்கள் மட்டுமே ஜபிக்க வேண்டும்;அதுவும் குரு உபதேசம் பெற்றப்பின்னரே ஜபிக்க வேண்டும்.இது கூட நமக்குத் தெரிவதில்லை;இதுபோன்ற சமஸ்க்ருத மந்திரங்களை தினமும் அல்லது எப்போதும் ஜபித்துக்கொண்டே வருவதால் பலருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது;அல்லது முழுமையான துறவறத்தில் கொண்டு போய்விட்டிருக்கிறது.முறையான குருவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை;எங்குமே போலிகளும்,பந்தா செய்பவர்களும் ,சொந்த ஜாதிப்பாசம் உடையவர்களுமே இருக்கிறார்கள்.தகுதியை பார்க்கும் ஆன்மீக குருநாதர்கள் அருகிப்போய்விட்டனர்.

ஏன் நமது குலதெய்வத்தை முதலில் நினைக்க வேண்டும் தெரியுமா? இது ஒரு சக்தி வாய்ந்த அதே சமயம் மிக எளிதான மந்திரம் ஆகும்.ஓம்சிவசிவஓம் ஒரு அற்புதமான ஆச்சரியங்களை தனக்குள் வைத்திருக்கும் கலியுக மந்திரம் ஆகும்.இதை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 100 நாட்கள் வரையிலும் தினமும் நீங்கள் ஜபித்தால் இந்த மந்திரத்தின் வலிமை,சக்தி,வீச்சு,உள்ளார்ந்த ஆத்ம மதிப்பீட்டை உணருவீர்கள்.அதன்பிறகு,உங்களால் சும்மா இருக்க முடியாது;இந்த மந்திரத்தை நீங்களே பரப்ப ஆரம்பிப்பீர்கள்;யாம் பெற்ற இந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற தணியாத ஆன்மீக வேட்கை உருவாகும்;

பூர்வ புண்ணியம் வலுத்தவர்களும்,தங்களின் குலதெய்வத்தின் ஆசி உள்ளவர்களும்,முற்பிறவி ஒன்றில் ஆழ்ந்த தெய்வ பக்தி உள்ளவர்களும்,முறையற்ற உறவில் ஈடுபடாதவர்களும்,முறையற்ற உறவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தராதவர்களும் , இந்தப்பிறவியில் யாருக்கும் எப்போதும்(முடிந்தவரையிலும்) தீங்கு தராதவர்கள் மட்டுமே இந்த மந்திர ஜபத்தைச் செய்ய முடியும்.மற்றவர்களுக்கு இது ஒரு வார்த்தை அவ்வளவே!



குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த இரண்டு ஆண்டுகளும் ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டும்;ஆறு மாதத்துக்கு ஒரு லட்சம் தடவை வீதம் இரண்டு ஆண்டுகளில் நமது ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை நான்கு லட்சங்களைத் தாண்டியிருக்கும்.அப்படி நமது எண்ணிக்கை நான்கு லட்சங்களைத் தாண்டிய பிறகு,ஒரு நாள் திடீரென ஸ்ரீகாலபைரவர் மற்றும் சதாசிவனின் பெருமைகள் தகவல்களாக உங்களைத் தேடி வரும்.அட்டவீரட்டானம் பற்றிய பெருமைகள் உங்களை மனதுக்குள் காந்தம் போல இழுக்கும்;அப்போது தாங்கள் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் வழுவூர் என்னும் கிராமத்துக்குச் செல்வீர்கள்;ஸ்ரீகாலபைரவர் சிவலிங்க வடிவில் இருக்கும் அட்டவீரட்டானங்களில் ஆறாவது வீரட்டானம் இது!



இந்த வழுவூர் வீரட்டானத்துக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்;ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரநாளன்றும் இங்கே வர வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து எட்டுஇ திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு வர வேண்டும்;அப்படி வந்து,திருவாதிரை நாளில் வரும் இராகு காலத்தில் இங்கே வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்;நைவேத்தியமாக வெண்பொங்கல் வைக்க வேண்டும்;வில்வதளங்கள்,மஞ்சள் பொடி,நல்லெண்ணெய்,அரிசிப்பொடி,விபூதி,தேன் இவைகளால் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;அப்படி அபிஷேகம் நடக்கும்போதும்,மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;அவ்வாறு ஜபிக்கும்போது சில அரிய காட்சிகளைக் காண்பீர்கள்;சிலருக்கு அபிஷேகம் முடிந்து பிரகாரத்தைச் சுற்றி வரும்போது அரிய சிவ காட்சிகள் தெரியும்;இன்னும் சிலருக்கு வழிபாடு முடிந்து தமது தங்குமிடத்துக்குச் சென்று,இரவில் தூங்கும்போது அரிய,அதே சமயம் இதுவரை கனவில் வராத காட்சி தென்படும்.




இந்த பதிவினை வாசித்துவிட்டு,ஆர்வக் கோளாறில்(இரண்டு ஆண்டுகள் ஓம்சிவசிவஓம் ஜபிக்காமல்) வழுவூருக்குச் செல்பவர்களுக்கு எதுவும் தெரியாது;வெறும் கோவிலுக்குச் சென்று வந்த உணர்வு மட்டுமே மிஞ்சும்;சிவலிங்க வடிவில் இங்கே ஸ்ரீகாலபைரவர் வசித்துவருகிறார்;இவரது திருவிளையாடல் இங்கே நடந்திருப்பதால்,நமது வாழ்க்கையில் இம்மைக்கும்,மறுமைக்கும் தேவையான சிலபல ரகசியங்களை அறியும்முறையை விவரித்துவிட்டோம்.முறைப்படி முயற்சி செய்பவர்கள் ஜன்மாந்திர ரகசியங்களை அடைவார்கள்: பைரவரின் தரிசனம் பெறுவார்கள்:பிறப்பின் நோக்கமறிவார்கள்!!!

ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. மிக அற்புதமான தகவல் .
    கையில் ருத்ராக்ஷமின்றியும் ஜபிக்கலாமா ?
    ஏதாவது கோவில் அல்லது ஜீவ சமாதியில் மட்டுமே ஜபிக்க வேண்டுமா ?
    தயவு செய்து விளக்கம் தரவும் . நன்றி !

    ReplyDelete
  2. ருத்ராட்சம் இன்றியும் ஜபிக்கலாம்.ருத்ராட்சத்தில் ஐந்து முகம்மட்டும் ஜபிக்க ஏற்றது.கோவிலில் அல்லது ஜீவசமாதியில் அல்லது நமது வீட்டிலும் கூட ஜபிக்கலாம்.முழுமையான விளக்கம் அறிய www.omshivashivaom.blogspot.in ஐ வாசிக்கவும்.இதில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் வாசித்துவிட்டு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.

    ReplyDelete
  3. ருத்ராட்சம் இன்றியும் ஜபிக்கலாம்.ருத்ராட்சத்தில் ஐந்து முகம்மட்டும் ஜபிக்க ஏற்றது.கோவிலில் அல்லது ஜீவசமாதியில் அல்லது நமது வீட்டிலும் கூட ஜபிக்கலாம்.முழுமையான விளக்கம் அறிய www.omshivashivaom.blogspot.in ஐ வாசிக்கவும்.இதில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் வாசித்துவிட்டு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.

    ReplyDelete