Monday, January 30, 2012

கணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்ற வேண்டியவை


தம்பதியர் இருவரும் வேலைக்குப் போகும் இன்றைய கால கட்டத்தில் இருவரும் இணைந்து இருக்கும் நேரங்கள் குறைவு. அந்த சில மணி நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டிற்குள் என்னதான் தம்பதியர் மனமொத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதல் அரிதாகிவருகிறது! அவர்களின் புரிதலின்மையினால் சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விரிசல் உருவாகின்றன. இதற்கு காரணம் சரியான முறையில் அன்பை வெளிப்படுத்தாததுதான் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இல்லத்தரசிகள் சின்னச்சின்ன வழிகளை கையாண்டு கணவரிடம் அன்பை வெளிப்படுத்தினாலே வாழ்க்கை வசந்தமாகும் என்கின்றனர் அவர்கள். இருவரிடையே பிணைப்பை அதிகரிக்கும், உற்சாக ஐடியாக்களை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள். மகாராஜாவைப் போல மதியுங்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நமக்கான மதிப்பும், மரியாதையும் கிடைக்கவேண்டும் என்பது சராசரி மனித மனத்தின் எதிர்பார்ப்பு. அதிலும் இல்லத்தரசியிடம் கிடைக்கும் மதிப்புதான் கணவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அவார்டு. எனவே கணவரை மகாராஜா போல் நடத்துங்கள். 

வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். அப்புறம் பாருங்கள் இந்த மகாராணியை கேட்காமல் மகாராஜா ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார். மதிக்காத இடத்தை ஒதுக்கலாம் சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள். தோற்றுப் போவது நல்லது வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

 உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது. உடனுக்குடன் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுவது இருவருக்குமே நல்லது. நீங்களே முதல் தோழி உங்களவரை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவருடைய நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த தோழியாக நீங்கள் மாறிவிடுவீர்கள். அக்கறை அவசியம் உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள். ஒப்பிட தேவையில்லை உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இருக்கமுடியாது. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்! எனவே கணவரை உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட தப்பித்தவறி ஒப்பிட்டு பேச வேண்டாம்.

 நிதி மந்திரியாகுங்கள் உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும். மறதி நல்லதிற்கே உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள். நீங்களே தொடங்குங்கள் கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!! தன்னையே ரசிக்கலாம் உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். 

நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும். சந்தோச கூடாரம் வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். "ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்" என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள். உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்

2 comments:

  1. Superb&valuable tips.If a wife follows these things,their family will glow&grow!

    ReplyDelete
  2. nice tips but it is very difficult to follow.

    ReplyDelete