Monday, January 13, 2020

திருமணத் தடை நீக்கும் சுய பரிகாரங்கள்


திருமணத் தடை நீக்கும் சுய பரிகாரங்கள்

உங்களுக்கு அல்லது உங்களுடைய வாரிசுகளுக்கு திருமணம் நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்றதா?

ஆண் எனில் 30 வயதுக்குள்ளாகவும்,பெண் எனில் 27 வயதுக்குள்ளாகவும் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும்;லிவ்விங் டுகெதர் நமது பண்பாட்டை நாசமாக்கும் பழக்கமாகும்;ஒருவனுக்கு ஒருத்தி என்றால் என்னவென்றே தெரியாத மேல்நாடுகளில் இருந்து நமது ஆன்மீக பூமிக்குள் புகுந்த விஷக் கருத்து தான் லிவ்விங் டுகெதர்!


உலக வரலாற்றைப் பார்த்தால்,பெண் சுதந்திரம்,லிவ்விங் டுகெதர்,பஃபே சிஸ்டம்,மோட்டல் உணவுப் பழக்கம்,வீட்டிற்கே வந்து உணவு சப்ளை செய்வது,ஜீன்ஸ் அணிவது,ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்று எண்ணுவது,பஃப் கலாச்சாரம் அனைத்துமே ஆன்மீக பூமியின் ஆன்மீக வளத்தைச் சிதைக்கும் சாத்தானின் நடைமுறைகள்! இதில்,மேற்கு நாடுகளின் வருமானச் சுயநலமும் மறைந்திருக்கின்றது;


ஒரு பெண்ணுக்கு 27 வயதிற்குள் திருமணம் நடைபெறாவிட்டால்,அவள் அருள்மிகு மங்களாம்பிகை திருக்கோவில்,கூகூர் என்ற ஆலயத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை அன்று செல்ல வேண்டும்;திருச்சி லால்குடிக்கு அருகில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;அவளது வயது என்னவோ அத்தனை எண்ணிக்கையில் நெய்தீபம் ஏற்றி மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;அதன்பிறகு,அங்கே ஒரே ஒரு சாதுவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதைச்செய்ய  இயலாதபட்சத்தில்,அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பி,அடுத்த 3 நாட்களுக்குள் சொந்த ஊரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் ஒரே ஒரு சாதுவுக்கு அன்னதானம் ஒரு வேளை செய்ய வேண்டும்;

ஒரு ஆணுக்கு 30 வயதிற்குள் திருமணம் ஆகாவிட்டால்,திருமண தோஷம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்;அவர் ஏதாவது ஒரு அமாவாசை அல்லது பவுர்ணமி அன்று மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் (பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில்) திருவீழிமிழலைக்குச் செல்ல வேண்டும்; அருள்மிகு திருவீழி நாதரை வழிபட வேண்டும்; தனது வயது எண்ணிக்கையில் உள்பிரகாரத்தை வலம் வர வேண்டும்;வலம் வரும் போது “சிவாய நம” என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர்கள்,ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தர வேண்டும்;ஈசனின் கிழமையான திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது வியாழக் கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மூலவராகிய அருள்மிகு வைத்தியநாத சுவாமிக்கும்,அதே சன்னதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு மனோன்மணித் தாயாருக்கும் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;

இப்படி 6 திங்கட்கிழமை அல்லது 6 வியாழக்கிழமை செய்தாலே திருமணத் தடை நீங்கிவிடும்;விரைவில் திருமணம் நடைபெறும்;திருமணம் நடைபெற்ற பின்னர்,ஓராண்டுக்குள் தம்பதியாக வருகை தர வேண்டும்;வந்து,அருள்மிகு வைத்திய நாத சுவாமிக்கும்,அருள்மிகு மனோன்மணி அன்னைக்கும் (மனதார) மனதார நன்றி தெரிவிக்க வேண்டும்;

No comments:

Post a Comment