Monday, May 21, 2018

அதிவேகமாக செல்வ வளம் தரும் ஸ்ரீசொர்ண வாராஹி வழிபாடு!


உலகின் குருவாக நமது பாரத நாடு இருந்து வருகின்றது;வெகு விரைவில் உலகின் வழிகாட்டியாகவும்,முதன்மை வல்லரசு நாடாகவும் மாற இருக்கின்றது;

நாம் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியில் பெரும் செல்வ வளம் அடைய தடையாக இருப்பது மூன்று:
1.குலதெய்வ வழிபாட்டினை அடிக்கடி செய்யாமல் இருப்பது
2.நமது ஜனன ஜாதகப்படி நமது கர்மவினைகளை அழிக்கும் வழிமுறையை கண்டறியாமல் இருப்பது;ஒருவேளை கண்டறிந்தாலும் அதை(உரிய பரிகாரங்கள்) செயல்படுத்தாமல் இருப்பது;
3.அண்ணாமலையில் துவாதசி திதி அன்று அன்னதானம் செய்யாமல் இருப்பது;

இவைகளில் ஏதாவது ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்ட குறைகள் இருப்பவர்கள் காலம் பூராவும் பண பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்;

நமது கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் தெய்வீக சக்திகள்;1.மஹாகால பைரவப் பெருமான்
       2.மஹாவராகி
       3.ஸ்ரீசரபேஸ்வரர்
       4.இவர்கள் மூவரையும் தோற்றுவித்த அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்

இவர்களில் ஒருவர் அல்லது இருவரை தினமும் ஜபித்து வருவதன் மூலமாக மூன்றே ஆண்டுகளில் நமது கர்மச்சுமைகள் நீங்கி வளமோடும்,நலமோடும் வாழ முடியும்;அப்படி வாழ்ந்து வருபவர்கள் இன்றும் நமது ஊரில் ஒரு சிலர் இருக்கின்றார்கள்;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை மஹா கால பைரவரையோ அல்லது மஹாவராகியையோ ஜபித்து வருவதன் மூலமாக இப்பிறவியில் அதிக கஷ்டங்கள்,சோதனைகள்,துயரங்கள்,சோகங்கள் இல்லாமல் வாழ முடியும்;அந்த மூன்று ஆண்டுகளும் அசைவம்,மது,போதைப் பொருட்களை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்;


இங்கே செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண வராகி வழிபாட்டினை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;அன்னை ஸ்ரீ மஹாவராகியின் அருளாசியோடும்,அனுமதியோடும் இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


செல்வ வளத்தை குறுகிய காலத்தில் அள்ளித் தரும் தெய்வீக சக்திகள் இருக்கின்றன;

ஹேரம்ப கணபதி,

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண கணபதி,

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;

ஸ்ரீ சொர்ண துர்கை என்று ஏராளமான தெய்வீக சக்திகள் இருக்கின்றன;முறைப்படி குருவருளால் இந்த தெய்வீக சக்திகளில் ஒன்றை மட்டும் உபாசனை செய்து இப்பிறவி முழுவதும் செல்வச் செழிப்போடு வாழலாம்;


இந்த தெய்வீக சக்திகளை நமது இருப்பிடத்திற்கு கொண்டு வரும் பூஜை முறைகள் இன்றைய கால கட்டத்தில் புத்தகங்களிலும்,இணையத்திலும் பலரால் எழுதப்பட்டிருக்கின்றன;

எழுதியவர்களை நேரில் சந்தித்து முறைப்படி பூஜை முறைகளை அறிந்த பின்னர்,இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே பலன் தரும்;


ஸ்ரீ சொர்ண வராகியின் அருளால் பெரும் செல்வ வளம் உண்டாக;


ஒரு வாழை இலையில் பச்சரிசி ஒரு படி எடுத்து வாழை இலை முழுவதும் பரப்ப வேண்டும்;அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய்கள் மூன்றினை(ஆறு முறிகள்) அதில் வைக்க வேண்டும்;முறிகளில் மஞ்சள்,குங்குமம் வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றவேண்டும்;(ஜெர்ஸிப்பசுவின் நெய்யையோ அல்லது எருமை நெய்யையோ ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது)
     தாமரை தண்டு திரியினால் தீபம் ஏற்ற வேண்டும்;சிகப்புத் தாமரை தண்டுத்திரியும்,வெள்ளைத் தாமரைத் தண்டுத் திரியும் கிடைக்கும்;எதுவாக இருந்தாலும் சரி;


இன்னொரு முறையும் உண்டு;அது என்னவெனில்,ஒரு வாழை இலையில் நெல் பரப்பி வைக்க வேண்டும்;நெல் ஒரு படி அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்;பரப்பி வைக்கப்பட்ட நெல் சமதளமாக பரப்பப் பட்டு இருக்க வேண்டும்;அதன் மீது,இன்னொரு வாழை இலையை விரித்து வைக்க வேண்டும்;சிறிய அல்லது மிகச் சிறிய வாழையிலையை பயன்படுத்தக் கூடாது;இரண்டாவது வாழை இலையின் மீது கோதுமையை ஒரு படி அளவுக்கு எடுத்து அதன் மீது பரப்பி சமதளமாக வைக்க வேண்டும்;


இரண்டாவது வாழை இலையின் ஓரங்களில் 27 மண் விளக்கால் ஆன தீபத்தை வைக்க வேண்டும்;அதில் தாமரை தண்டு திரியில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;ஒவ்வொரு மண் விளக்கு தீபத்தின் அருகிலும் ஒவ்வொரு சிகப்பு நிற மலர் ஒன்றை வைக்க வேண்டும்;சிகப்பு நிற மலர் காய்ந்து போயிருக்கக்கூடாது;புதிய மலரை மட்டும் வைக்க வேண்டும்;


 ஸ்ரீசொர்ண வராகி மந்திரம் ஒன்று உள்ளது;இணையத்திலும் இருக்கலாம்;அதை குருமுகமாக கேட்டு அறிந்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;புத்தகம்/இணையம் பார்த்து மனப்பாடம் செய்து முயற்சித்தவர்களுக்கு பலன் கிட்டவில்லை;


குரு அருள் இருந்தால்  தானே அன்னையின் அருள் கிட்டும்?


ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் இவ்வழிபாட்டினை ஆரம்பிக்க வேண்டும்;இந்த 90 நிமிடங்களுக்குள் 108 முறை ஸ்ரீசொர்ண வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அன்று முதல் ஒன்பது வாரங்களுக்கு,அதாவது 63 நாட்களுக்கு உரிய தொடர் முயற்சி இது;

1வது ஞாயிறு காலை 4.30க்குத் துவங்கி மறு நாள் முதல் ஒவ்வொரு நாளும் காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் 108 முறையும்;மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் 108 முறையும்,இரவு 8 மணி முதல் 9 மணி வரை 108 முறையும் ஸ்ரீ சொர்ண வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

ஒவ்வொரு நாளும் இப்படி மூன்று வேளைகளும் 108 முறை வீதம் ஒன்பது வாரங்களுக்கு தொடர்ந்து ஜபித்து வர வேண்டும்;

1ம் ஞாயிறு அன்று செவ்வரளி மாலையையும்
2ம் ஞாயிறு அன்று எலுமிச்சம் பழ மாலையையும்(புள்ளிகள் இல்லாமலும்,கனியாததையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்)எலுமிச்சை பழங்களை ஊசியில் கோர்க்கக் கூடாது;
3ம் ஞாயிறு அன்று துளசி மாலையையும்
4ம் ஞாயிறு அன்று வில்வ மாலையையும்
5ம் ஞாயிறு அன்று வெற்றிலை மாலையையும்
6ம் ஞாயிறு அன்று மரிக்கொழுந்து மாலையையும்
7ம் ஞாயிறு அன்று சிகப்பு நிற ரோஜா மாலையையும்
8ம் ஞாயிறு சம்பங்கி மாலையையும்
9ம் ஞாயிறு விரலி மஞ்சள் மாலையையும் அணிவிக்க வேண்டும்;
ஞாயிறு அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் அணிவித்துவிட்டு,மறு நாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் மாலைகளை எடுத்துவிடவும் வேண்டும்;


அதே போல பின்வரும் வரிசைப்படி,ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நைவேத்தியம் படையல் இட வேண்டும்;

1ம் ஞாயிறு அன்று சர்க்கரைப் பொங்கலையும்
2ம் ஞாயிறு அன்று எலுமிச்சை சாதத்தையும்
3ம் ஞாயிறு அன்று வெண்பொங்கலையும்(இதில் பாசிப்பருப்பினை அதிகம் சேர்த்திருக்க வேண்டும்)
4ம் ஞாயிறு அன்று புளியோதரையையும்(மிளகு சேர்த்திருக்க வேண்டும்)
5ம் ஞாயிறு அன்று பனங்கிழங்கு சாதத்தையும்(அல்லது வேறு கிழங்குகளில் எதுவாகவும் இருக்கலாம்)
6ம் ஞாயிறு அன்று தயிர்ச் சாதத்தையும்
7ம் ஞாயிறு அன்று வெண் மொச்சை சுண்டலையும்
8ம் ஞாயிறு அன்று கருப்பு உளுந்து வடையையும்
9ம் ஞாயிறு அன்று சீனிக்கிழங்கு என்ற சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வேக வைத்து எடுக்க வேண்டும்;எடுத்த பின்னர் சுத்தமான(கலப்படம் இல்லாத) தேனை சேர்க்க வேண்டும்;

இரவு முழுவதும் படையல் இட்டுவிட்டு,மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடவேண்டும்;

முற்பிறவிகளில் அன்னை மஹாவராகியை மட்டும் பூஜித்தவர்களுக்கு சிலபல அதிசயங்களை உணரலாம்;நைவேத்தியம் காணாமல் போயிருக்கும்;வெகு சிலருக்கு அன்னை மஹாவராகி கனவில் வந்து பேசுவாள்;


ஆன்மீக பூமியான நமது பாரத நாட்டில் பலவிதமான ரகசிய வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன;இன்றும் அரிதாக வெகு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன;



அன்னை மஹாவராகியின் திருவுள்ளம் யாருக்கு இருக்கின்றதோ,அவர்களுக்கு மட்டுமே இந்த செல்வ வளம் குவியும் முறை தேடி வரும்;

அன்னையின் கருணை இருந்தால் மட்டுமே இந்த வழிபாட்டுக்கு உரிய மந்திரம் கிடைக்கும்;

அன்னையின் ஆசிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஒன்பது வார முயற்சிகள் தங்கு தடையில்லாமல் ஜெயம் ஆகும்;

No comments:

Post a Comment