Saturday, August 12, 2017

கோயில் திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்
1.பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?
2.பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்,
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
3.தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்,
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்,
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
4. “வைச்ச பொருள் நமக்கு ஆகும்” என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
5. செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
 கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
6.ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
7.தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
8.சுற்றும் அமரர், சுரபதி, “நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம்” என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்,
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன்,
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
9.சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
10.தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
 வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment