Thursday, November 15, 2012

நந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!




அண்ணாமலை தீபம் ஏற்றப்படும் மாதம் கார்த்திகை மாதம் ஆகும்.சூரியன் என்ற ரவி உச்சமாகும் நட்சத்திரம் கார்த்திகை.இந்த நட்சத்திரம் மேஷம் மற்றும் ரிஷப ராசியில் பரவியிருக்கிறது.இந்த நட்சத்திரத்தில் மதி என்ற சந்திரன் பவுர்ணமியாக பரிணமிப்பது கார்த்திகை மாதத்தில் தான்!!பதினான்கு உலகத்திலும் வாழும் உயிர்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்ததும் இந்த கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் தான்! (கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தோன்றினார்!!!)

சூரியன் உச்சமாகும் நட்சத்திரத்தில் சந்திரன் பவுர்ணமியாக காட்சியளிப்பதால்,கார்த்திகை மாதம் வெகுவான சிறப்புள்ள மாதமாகிறது.
இந்த நந்தன வருடத்தின் கார்த்திகை மாதம்,16.11.12 வெள்ளிக்கிழமை அன்று உதயமாகிறது.இந்த நாளில்,
இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள் இன்று காலையில் 4.30 முதல் ஆறு  மணிக்குள் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க இயலாமல் சிலபல காரணங்களால் இடையில் நிறுத்தியவர்கள்,இன்று முதல் மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.

நமது ஆன்மீக குரு அடிக்கடிச் சொல்வது போல, “இல்லறமில்லாமல் துறவறமில்லை” இதற்கு அர்த்தம் என்னவெனில், இல்லறக்கடமைகளை நிறைவு செய்யாமல் துறவறத்துக்கு வரக் கூடாது என்பதே! எனவே,நீங்கள் என்ன வேலை பார்த்தாலும்,எந்தத்தொழில் செய்தாலும்,அந்த கர்மாவை(வேலை/தொழில்) தொடர்ந்து செய்தவாறே தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய இந்தப் பிறவியில் நீங்கள் அடுத்த கட்ட ஆன்மீகப் பதவி உயர்வினை எட்டுவீர்கள் என்பது சர்வ நிச்சயம்.(40 அல்லது 50 வயதுக்குப்பிறகு ஆன்மீகவாதியாகிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடவாது;ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?)

நாம் வாழும் யுகமோ துன்பங்கள் மற்றும் துயரங்களை மட்டுமே தரும் கலியுகம் ! நாம் வாழும் காலமோ அதிகபட்சம் நூறு ஆண்டுகளே!! ஆனால்,கலியுகத்தில் மட்டுமே மந்திர ஜபம் வெகு விரைவாக நம்மை ஆத்மபரிசுத்தம் செய்துவிடும்.
ஒவ்வொரு நாளும் இன்று ஒரு நாள் தான்.வெறும் ஒரு மணி நேரம் தான்! முடியாவிட்டால் வெறும் 15 நிமிடங்கள் தான்.நமது ஆன்மீக முயற்சியில் அடுத்த கட்டத்தை எட்டிட என்று எண்ணுங்கள்.நாளைக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொள்ளலாம் என்று தொடர்ந்து ஓரிரு நாட்கள் தள்ளிப் போட,அதுவே ஜபிக்க முடியாத தடையாகிவிடுகிறது.நாமும் பிறரை விடவும் ஆன்மீக முயற்சியில் பின் தங்கிவிடுகிறோம்.

இந்த ஒரே ஒரு மந்திரஜபத்தை தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடமும் அதிகபட்சம் ஒரு மணி நேரமும் ஜபித்துவர பின்வரும் நன்மைகள் நம்மை 24 மணி நேரமும் பின் தொடர்ந்து கொண்டே வரும்:

1.நம்மைச் சுற்றிலும் பல எதிர்மறை சக்திகள்(பொறாமை,கோபம்,வறுமை,மாந்திரீகத்தினால் நம்மை முடக்கிப் போட விரும்பும் உறவினர்/நட்பு வட்டம்/தொழில் வட்டம்/உடன் பணிபுரிவோர்/பக்கத்துவிட்டார்) இருக்கின்றன.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்தையும்,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்காதபோது,இந்த எதிர்மறை சக்திகள் தடுக்கின்றன;சீர்குலைக்கின்றன;நமது மனதில் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன.(இந்த சூழல் மாநகரங்களில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே இந்த மோசமான சூழ்நிலையில் இருக்கிறது;)இதிலிருந்து தப்பிக்க நாம் தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடம் ஓம்சிவசிவஓம் ஜபித்தே ஆக வேண்டும்.

2.நமது ஒவ்வொரு எண்ணங்களுக்கும் சக்தி உண்டு.எண்ணங்களில் நமக்கு மகிழ்ச்சி தரும் விதமாக உருவாகி,அவை நமது வளர்ச்சியைத் தடை செய்யும் எண்ணங்களும் உண்டு.(விகாரமான எண்ணங்கள்,பொறாமை எண்ணங்கள்,நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைப்பது,நம்மைப் பற்றி மிகவும் உயர்வாக நினைப்பது,பிறரின் புகழ்ச்சியால் நமது வழக்கமான கடமைகளை மறந்துவிடுவது,பிறரின் மட்டம் தட்டும் சுபாவத்தால் நாம் நிலை தடுமாறுதல்,நமது ஆரோக்கியம் அல்லது எதிர்காலம் பற்றிய பயம் கலந்த எண்ணங்கள்)இந்த எண்ணங்களைச் சீராக்கி,நம்மை ஆக்கபூர்வமாக மாற்றும் சக்தி தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு உண்டாகும்.இதை எதிர்கால விஞ்ஞானம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும்.

3.நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு,சம்பள உயர்வு,புகழ்,பெருமைகள் போன்றவை சரியான நேரத்தில் கிடைக்க ஒரு நாள் கூட விடாமல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.


4.மழைக்காலம்,கடுமையான குளிர்காலம்,உடல்நலக்கோளாறு,மன அதிர்ச்சிகள்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,மனக் குழப்பம் என்று ஏதாவது ஒரு காரணத்தினால் தொடர்ந்து ஜபிக்க முடியாத போது நமது முன்னேற்றத்தை நாமே தடுத்துவிடுகிறோம்.நாம் எப்போது ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிக்கிறோமோ,அப்போது நமது மன உறுதி அதிகரித்துவிடும்.நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் வலிமையிழக்கத் துவங்கும்.நமது ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் இன்னும் அதிகமாக செயல்படத்துவங்கும்.நமது தனிப்பட்ட திறமைகள் இன்னும் கூர்மையாகி,மகத்தான சாதனைகள் செய்யத் துவங்குகிறோம்.(ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் வேகமாக ஒப்பிப்பது போல ஜபிக்கக் கூடாது;ஒரு லட்சம் தடவை ஜபித்து முடிக்க வேண்டுமே? என்று பதட்டப்படக் கூடாது;ஆகா,நமது எல்லாப் பிரச்னைகளும் தீர ஒரு லட்சம் தடவை ஜபித்தாலே போதுமே என்று பேராசைப் படக் கூடாது;எத்தனையோ பேர்கள் ஒரு லட்சம் தடவை ஜபித்து முடித்திருப்பார்களே,நாம் எப்போது அவ்வாறு முடிப்பது என்று அவநம்பிக்கை இழக்கக் கூடாது;நிதானமாக,நிறுத்தி ஜபித்தாலே போதுமானது;தானாகவே அந்த ஒரு  லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜப அளவைக் கடக்கும்போது அந்த சாதனை நமக்கு ஒரு சாதனையாகவே தெரியாது;ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்ற பக்குவ மனநிலையை நாம் எட்டிட வேண்டும்)

5.இரண்டு லட்சம் தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிக்கும்போது,நாம் என்ன நினைக்கிறோமோ,அது மட்டுமே நமது தினசரி வாழ்க்கையில் நிகழுகின்றது என்பது ஆச்சரியமான உண்மை ஆகும்.

6.பலருக்கு விஸ்வரூபமாக வர வேண்டிய பிரச்னைகள்,அவர்களால் சமாளிக்கும் விதமாக சாதாரணமாக மாறியிருக்கின்றன.பலர் அவர்களுடைய முன்னோர்களாகிய சித்தர்கள்,மகான்களை தரிசித்திருக்கிறார்கள்.பலர் மிகவும் மகிழ்ச்சியாக,இன்னும் அதிகமான சம்பளத்துடன்,இன்னும் நிறைவான மனநிலையுடன்,சிறிதும் எதிர்பாராத ஆச்சரியங்களுடன் தினசரி வாழ்ந்து வருகிறார்கள்.இதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை;ஒவ்வொரு அனுபவங்களையும் ஒவ்வொரு குறும்படமாக எடுத்து வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.


முயலுவோமா?


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment