Wednesday, May 23, 2012

நாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி!!! ஆன்மீக ஆதாரங்களுடன்!!!


எனது பால்ய நண்பனைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.அவன் பெயர் ராஜேந்திரன்.மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன்;சந்தர்ப்ப சூழ்நிலையால் மது,மாது,சூது என்று அனைத்து தீயப் பழக்கங்களுக்கு ஆளாகி,படிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது.இவனது பெற்றோர்கள்,இவனுக்கு திருமணம் செய்து வைத்தால்,திருந்திவிடுவான் என நம்பி,திருமணம் செய்துவைத்தனர்.ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையான பின்னரும்,அவன் திருந்த நான் செய்த முயற்சிகள் பலன்  தரவில்லை;இதற்கிடையில் அவனது தீயப்பழக்கங்களின் விளைவாக உடல்நலம் கெட்டு துன்பப்பட்டான்;இதனால் ஒரு நாள் அவனே மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலையும் செய்துகொண்டான்.


எனது ஆவியுலகத் தொடர்பின்போது ஒரு நாள் அவன் என்னிடம் பேசினான்; “நீ பகவான் சாயிபாபாவிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால் எனக்கும் பாப விமோசனம் கிடைத்தது.என் பெயரையே குறிப்பிட்டு எனக்காக பிரார்த்தனை செய்து வா” என்று என்னிடம் வேண்டினான்.
அவ்வாறே நானும் செய்து வந்தேன்.நான் செய்யும் பூஜைகளின் பலனை அவனுக்கு அர்ப்பணித்தேன்.சில காலம் கழித்து என் நண்பனின் ஆவி பேசியபோது, “நான் இப்போது பாவலோகத்திலிருந்து முற்றிலும் வெளியேறி புண்ணியலோகத்துக்கு புதிய சக்தியோடு மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறேன்” என்று உற்சாகமான குரலில் குறிப்பிட்டான்.


கேரளாவில் எங்களுக்கு ஏலக்காய் தோட்டம் இருக்கிறது.ஒரு நாள் தோட்டத்தில் நடந்து சென்ற போது திடீரென மழை பிடித்துக்கொண்டது.அப்போது என் நண்பன் ராஜேந்திரனை நினைத்து பிரார்த்தனை செய்தேன்.என்ன ஆச்சரியம்! உடனே மழை நின்றுவிட்டது.அடுத்த முறை என் நண்பனை அழைத்து கேட்டபோது, “அன்று நீ என்னை நினைத்தவுடன் மேகங்களைத் திசை திருப்பி உன்னை மழையில் நனையாமல் காப்பாற்றியது நான் தான்.இதற்கு இறைவன் உதவி செய்தார்” என்று கூறினான்.
அதற்குப் பிறகு என் மனதில் ஒரு விசித்திரமான ஆசை தோன்றியது.பூஜை அறையில் பகவான் பாபாவிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.


“சுவாமி,தாங்கள் என் நண்பனைப்  பாவலோகத்திலிருந்து விடுவித்து புண்ணிய லோகவாசியாக்கினீர்கள்.அதிலிருந்து இன்னும் உயர்ந்த நிலையை அவனுக்கு அளிக்க வேண்டும்”
சில காலம் கழித்து ராஜேந்திரன் பேசியபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.”நான் இப்போது தேவதையாக மாறப்போகிறேன்.அதற்கான சக்தி  எனக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.பிறகு உன்னை சந்திக்கிறேன்” என்று கூறினான்.


வீரராஜேந்திரப் பெருமானாக மாறிய ராஜேந்திரன்
அதன்பிறகு சென்ற ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று,மறுபடியும் பேசினான். “எல்லாம் முழுமை அடைந்துவிட்டன.இன்று முதல் யாம் வீர ராஜேந்திரப் பெருமான் என்ற பெயரில் காவல் தெய்வமாகி விட்டோம்.எம்மை வணங்கி வழிபடுபவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்திடுவோம்.ஆசிகள்” என்று கூறினான்.இன்று வரையிலும் பலவிதங்களில் வீரராஜேந்திரப்பெருமான் எனக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் வலிமை வாய்ந்தவை;உடனே பலன் தரக்கூடியவை என்பதை இதன் மூலமாக நான் உணர்ந்தேன்.

ஆதாரம்:ஆவி உலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும் பக்கம்23,24,25.

1 comment:

  1. என்ன கொடுமை சார்......பூமில பிரார்த்தனை செய்து எதாச்சும் சாதிசத சொல்லுங்க???அதை விட்டுண்டு செத்தவனக்கு பண்ணதை சொல்றிங்க????

    பெட்ரோல் விலை,மற்ற விலைகள் எல்லாம் பிரார்த்தனை செய்தால் குறையுமா?
    உங்க நண்பன் கிட்ட கேட்டு சொல்லுங்கோ?
    சீக்கிரம் உங்கள் பிரார்த்தனை மூலம் இந்த விலையை குறையுங்க?
    சிவ சிவ!!!!!

    ReplyDelete