Thursday, May 17, 2012

ரிஷப குருப் பெயர்ச்சிப் பலன்கள்( மே 2012 முதல் மார்ச் 2013 வரை)


ரிஷப ராசியினை குரு ஒரு வருடமாக கடக்க இருக்கிறார்.இந்த ஒரு வருடத்தில்,அதாவது மே 2012 முதல் மார்ச் 2013 வரையிலான ஒரு வருடத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சி என்று எடுத்துக்கொண்டால்,ராகு கேது பெயர்ச்சியானது 2.12.2012 அன்று ஏற்படப்போகிறது; இந்த நாளிலிருந்து 18 மாதங்களுக்கு கேது மேஷ ராசியிலும்,ராகு துலாம் ராசியிலும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள்.இதையும்  கன்னிராசியில் வக்கிரமாகி இருந்த சனிபகவான் 12.9.2012 முதல் மீண்டும் துலாம் ராசியில் சஞ்சரிப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் சொல்ல வேண்டும்.மிகுந்த கவனத்தோடு என்னதான் குருப்பெயர்ச்சிப் பலன்களை கணித்து எழுதினாலும்,அவரவரின் பூர்வ புண்ணியமும்,மன உறுதியும்,இதுவரை செய்து வந்த புண்ணியச் செயல்களும் ஒவ்வொருவரின் ஜாதகப்படி நன்மைகளை அதிகப்படுத்தவும்,தீமைகளை குறைக்கவும் செய்யும்.

21.12.2011 முதல் துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சியாகி இருக்கிறார்.அவர் சுமார் 1.1.2015 வரை துலாம் ராசியைக் கடப்பார்;ஆனால்,ஜனவரி 2012 முதலே சனிபகவான் வக்கிரமாகி மீண்டும் கன்னிராசிக்குள் நுழைந்திருக்கிறார்.இந்த சூழ்நிலையில்,குருப்பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.
ஏனெனில்,குரு பகவான் ஒருவரின் பிறந்த ராசிக்கு நல்ல இடத்துக்கு வரும்போது நன்மைகளை அள்ளித் தருவார்;கெட்ட இடத்துக்கு வரும்போது நன்மைகளை குறைத்துக்கொள்வார்;தீமைகளைத் தரமாட்டார்;
ஆனால்,சனியோ ஒருவரின் பிறந்த ராசிக்கு நல்ல இடத்துக்கு வரும்போது தீமைகளை அள்ளியும்,கெட்ட இடத்துக்கு வரும்போது நன்மைகளான வேலை அல்லது தொழிலை உறுதியாகத் தருவார்;இவர் தரும் தீமைகளை நம்மால் தாங்கவே முடியாது;26.6.2009 முதல் 21.12.2011 வரை கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரிந்த நட்புவட்டத்தில் கேட்டுப்பாருங்கள்.இதே வேதனை,கஷ்டங்களை இப்போது 21.12.2011 முதல் 1.1.2015 வரை துலாம் ராசிக்கும்,மீன ராசிக்கும் தரத் துவங்கியிருக்கிறார்;இப்படி தருவதற்கு சனிபகவான் ஒன்றும் கல்நெஞ்சக்காரர் அல்ல;அவரவர் பிறருக்குச் செய்த நன்மை தீமைகளைப் பொறுத்து,அதன் பலன்களை ஜன்மச்சனியிலும்,அஷ்டமச்சனியிலும் திருப்பித் தருகிறார்.

ரிஷபத்துக்கு வந்திருக்கும் குருபகவான்,விரையச்சனியில் சிரமப்பட்டுவரும் விருச்சிக ராசிக்கு மிகுந்த நன்மைகளைத் தருவார்;வீண் செலவுகள் குறையும்;வருமானம் அதிகரிக்கும்;மன உளைச்சலும்,உடல் அசதியும் தீரும்;பண் நெருக்கடிகள் விலகிவிடும்.கல்யாண வயதில் இருக்கும் விருச்சிகராசிக்காரர்களுக்கு திடீர்க் கல்யாணம் நடக்கும்;குரு ஏழாம் ராசிக்கு வந்திருப்பதால்,குருவின் முழுப்பார்வையும் விருச்சிகராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது.எனவே,விருச்சிக ராசிக்காரர்களே,மார்ச் 2013க்குள் உங்களின் முக்கியமான கடன்களைத் தீர்த்துவிடுங்கள்;ஏனெனில்,அதன்பிறகு நீங்கள் பொருளாதாரத்தில் சுபிட்சமடைய குறைந்தது ஐந்து அல்லது ஒன்பது வருடங்கள் ஆகும்.

வாக்குச் சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் கன்னிராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு குரு வந்துவிட்டதால்,இனி ஏழரைச்சனியின் துன்பங்கள் காணாமல் போய்விடும்;புறக்கணிப்பு,அவமானம்,எதிலும் உடனே வேலை முடியவில்லையே என்ற எரிச்சல் போன்றவைகள் காணாமல்போய்விடும்;ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்ற பழமொழி முற்றிலும்  தவறானது;நிஜ வாழ்க்கையில் ஒன்பதாம் இடத்துக்கு குரு வரும்போது அந்த ராசிக்காரரின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கிவிடுவார்.எனவே,விருப்பமான வேலை அல்லது தொழில் இந்த ஒரு வருடத்துக்குள் அமைந்துவிடும்;வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முயற்சி செய்வோர் விசாவும்,ஒர்க் பர்மிட்டும் பெறுவார்கள்;பிரிந்த கணவனும் மனைவியும் மீண்டும்  ஒன்று சேர அடிக்கடி சந்தர்ப்பங்கள் அமையும்;உங்களின் பழைய தவறுகள் மறக்கப்படும்;திடீர் பண வரவு வந்து உங்கள் கவுரவத்தைக்காப்பாற்றும்.

மகர ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வந்துவிட்டதால்,நிரந்தரமான வேலை அல்லது தொழிலைப்  பெறுவார்கள்;இழந்த அனைத்தும் திரும்பக் கிடைக்கத் துவங்கும்;உங்களை மட்டம்தட்டி,உங்கள் முன்னேற்றத்தை தடை செய்தவர்கள் அனைவருமே உங்களுக்கு பக்கபலமாக இருக்கத் துவங்குவது,உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

திருமணத்துக்குக்காத்துக்கொண்டிருக்கும் மேஷ ராசியினருக்கும்,மிதுனராசியினருக்கும் திடீரென  திருமணம் உறுதியாகிவிடும்.மாணவ,மாணவியர் விருப்பமான படிப்பை சுலபமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது;பலர் சொந்தமாக வீடு அல்லது ப்ளாட் வாங்குவார்கள்;மேஷ ராசியினருக்கு ரத்தினக்கற்கள் வாங்குவார்கள்;

கடக ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வந்திருப்பதால் நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்;ஆமாம்,மூன்றாம் இடத்தில் இருந்து தொழிலைத் தர வேண்டிய சனி,தற்போது குருவுடன் சேர்ந்து வாழ்க்கையை செட்டில்  ஆக்கிவிடுவார்.

கும்பராசிக்காரர்களுக்கு நிச்சயமான வேலை மாற்றம் அல்லது தொழில் மாற்றம் உண்டு.மீனம் ராசிக்காரர்களுக்கு 12.9.2012 முதல் அஷ்டமச்சனியின் தாக்கம் அதிகமாகத் துவங்கும்;சிம்மராசிக்காரர்களுக்கு ஏதாவது ஒரு பதவி பறிபோகும்;

விருச்சிகராசியில் ராகு இருப்பதால்,அவர்கள் இதுவரையிலும் சிக்கியிருந்த ப்ளாக் மெயிலில் இருந்து மீண்டு விடுவார்கள்;வீண் விரயங்கள் குறையத் துவங்கும்;விருச்சிகராசியை மே 2012 முதல் 12.9.2012 வரை ஒரே நேரத்தில் சனி  மூன்றாம் பார்வையாகவும்,குரு ஏழாம் பார்வையாகவும் பார்ப்பதால் விருச்சிக ராசியினருக்கு வாழ்க்கையிலேயே ஒரு  முக்கியமான திருப்பம் உண்டாகும்.
விருச்சிக ராசியை இந்த நான்கு மாதங்களுக்கு சனியும்,குருவும் பார்ப்பதால் விருச்சிகம் தர்ம கர்மாதிபதி யோகத்துக்க்குள்ளாகிறது.இந்த தர்ம கர்மாதிபதியோகமானது,ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைத் திருப்புமுனையைத் தரத்துவங்கும்;
எப்படியெனில்,மிதுனராசியினர் இந்த நான்கு மாதங்களுக்கு கடன் வாங்கினால்,அதை சுலபமாக தீர்க்க முடியாது ;அல்லது ஒரு நிரந்தரமான நோய் அல்லது எதிரி உண்டாகும்;அல்லது மாமனார்/மாமன் வர்க்கத்திடம் கவுரவக்குறைச்சல் ஏற்படும்.

துலாம் ராசியினருக்குத் திடீர் வருமான அதே சமயம் திடீர் நிரந்தர வருமான வாய்ப்பு உண்டாகும்.சிலருக்கு குடும்பம் அமையும். கன்னிராசியினருக்கு புதிய காதல்/தொழில் லாபம்/வாழ்க்கைத் துணை அமையும்.சிம்மராசியினர் வீடு கட்டத் துவங்குவார்கள் அல்லது புதிய வாகனம் வாங்குவார்கள் அல்லது புதிய படிப்பில் சேருவார்கள்;இந்த படிப்பு இவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும்.

கடகராசியினருக்கு பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீர்ந்துவிடும்;பல கடகராசியினர் பெற்றோராக மாறுவர்;ரிஷபராசியினர் நிரந்தரமான தொழில் அல்லது வாழ்க்கைக் கூட்டாளியைப் பெறுவார்கள்.மேஷராசியினர் பரிபூரணமான ஆரோக்கியத்தை பெறுவார்கள்.மீன ராசியினருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெறும்.கும்பராசியினருக்கு உழைக்காமலேயே வருமானம் கிடைக்கும் ஒரு தொழில் அமைந்துவிடும்.மகர ராசியினருக்கு இழந்த அல்லது ஏமாந்த அனைத்தும் திரும்பக் கிடைக்கும்;தனுசு ராசியினர் பெற்றோராவார்கள்.


துலாம் ராசிக்காரர்கள்:திருமணம் செய்வதாக இருந்தால்,12.9.2012க்குள் முடிப்பது நல்லது;அல்லது 1.1.2015 வரை காத்திருக்கவும்.ஏழரைச்சனியில் ,ஜன்மச்சனி நடைபெறும்போது  திருமணம் செய்பவர்கள்,ஏழரைச்சனியால் திருமண பந்தத்தை வெறுத்துவிடுகின்றார்கள்;ஏழரைச்சனி முடிந்ததும்,தனது வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்துவிடுகிறார்கள்.ஆனால்,இந்தமுறை குடும்பம் அமைந்தால்,அப்படி பிரிய வாய்ப்பு இல்லை;சீக்கிரம் நல்ல முடிவு எடுங்கள்.

துலாம் ராசி,மீனராசி,சிம்மராசி,தனுசு ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி ஓரளவே இதுவரை  இருந்துவந்த பணப்புழக்கம் குறையும்.பிற ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்;சுபகாரியங்களால் மனம் குதூகலிக்கும்.


இவையெல்லாம் பொதுப்பலன்களே! அவரவரின் பிறந்த ஜாதகப்படியும்,நடப்பு திசைபுக்திப்படியும் பெருமளவு வித்தியாசம் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் மாறுபடும்.

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. என்னைப்போல ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்களுக்கு எப்படி இருக்கும் (கடக ராசி )

    ReplyDelete
  2. குருபலம் இல்லாத கடகராசிக்காரர்களுக்கும் ரிஷப குரு அளவற்ற நன்மைகளை மட்டுமே வழங்குவார் என்பது சர்வ நிச்சயம்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete